வெள்ளி, மே 27, 2011

பாரதியார் பாடல்கள்


 மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே!


பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்
செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.


உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக