வெள்ளி, மே 27, 2011

தாயுமானவர் பாடல்கள் 3


பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1.

தன்ன தென்றுரை சாற்று வனவெலாம்
நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்
இன்னம் என்னை யிடருறக் கூட்டினால்
பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2.

ஆவி யேயுனை யானறி வாய்நின்று
சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன்
பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ
கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3.

கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
கால மெந்தை கதிநிலை காண்பதே. 4.

காணுங் கண்ணிற் கலந்தகண் ணேயுனைச்
சேணும் பாருந் திரிபவர் காண்பரோ
ஆணும் பெண்ணும் அதுவெனும் பான்மையும்
பூணுங் கோலம் பொருந்தியுள் நிற்கவே. 5.

நிற்கும் நன்னிலை நிற்கப்பெற் றார்அருள்
வர்க்க மன்றி மனிதரன் றேஐயா
துர்க்கு ணக்கடற் சோங்கன்ன பாவியேற்
கெற்கு ணங்கண் டென்பெயர் சொல்வதே. 6.

சொல்லை யுன்னித் துடித்த தலால் அருள்
எல்லை யுன்னி எனையங்கு வைத்திலேன்
வல்லை நீ என்னை வாவென் றிடாவிடின்
கல்லை யாமிக் கருமி நடக்கையே. 7.

கையும் மெய்யுங் கருத்துக் கிசையவே
ஐய தந்ததற் கையம் இனியுண்டோ
பொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப் பூரண
மெய்ய தாம்இன்பம் என்று விளைவதே. 8.

என்றும் உன்னை இதய வெளிக்குளே
துன்ற வைத்தன னேஅருட் சோதிநீ
நின்ற தன்மை நிலைக்கென்னை நேர்மையாம்
நன்று தீதற வைத்த நடுவதே. 9.

வைத்த தேகம் வருந்த வருந்திடும்
பித்த னானருள் பெற்றுந் திடமிலேன்
சித்த மோன சிவசின்ம யானந்தம்
வைத்த ஐய அருட்செம்பொற் சோதியே. 10.

செம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு
வம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி
இம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்
நம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே. 11.

செய்யுஞ் செய்கையுஞ் சிந்திக்குஞ் சிந்தையும்
ஐய நின்னதென் றெண்ணும் அறிவின்றி
வெய்ய காம வெகுளி மயக்கமாம்
பொய்யி லேசுழன் றேனென்ன புன்மையே. 12.

புன்பு லால்நரம் பென்புடைப் பொய்யுடல்
அன்பர் யார்க்கும் அருவருப் பல்லவோ
என்பொ லாமணி யேஇறை யேஇத்தால்
துன்ப மன்றிச் சுகமொன்றும் இல்லையே. 13.

இல்லை உண்டென் றெவர்பக்க மாயினுஞ்
சொல்ல வோஅறி யாத தொழும்பன்யான்
செல்ல வேறொரு திக்கறி யேன்எலாம்
வல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே. 14.

வேண்டுஞ் சீரருள் மெய்யன்பர்க் கேயன்பு
பூண்ட நானென் புலம்அறி யாததோ
ஆண்ட நீஉன் அடியவன் நானென்று
தூண்டு வேனன்றித் தொண்டனென் சொல்வதே. 15.

எனக்கு ளேஉயி ரென்னஇருந்தநீ
மனக்கி லேசத்தை மாற்றல் வழக்கன்றோ
கனத்த சீரருட் காட்சி யலாலொன்றை
நினைக்க வோஅறி யாதென்றன் நெஞ்சமே. 16.

நெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்
கஞ்ச லென்ற அருளறிந் தேஐயா
தஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்
செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே. 17.

வாரி ஏழும் மலையும் பிறவுந்தான்
சீரி தானநின் சின்மயத் தேஎன்றால்
ஆரி லேயுள தாவித் திரளதை
ஓரி லேன்எனை ஆண்ட ஒருவனே. 18.

ஒருவ ரென்னுளத் துள்ளுங் குறிப்பறிந்
தருள்வ ரோஎனை ஆளுடை அண்ணலே
மருள னேன்பட்ட வாதை விரிக்கினோ
பெருகு நாளினிப் பேச விதியின்றே. 19.

இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே. 20.

வாழ்த்து நின்னருள் வாரம்வைத் தாலன்றிப்
பாழ்த்த சிந்தைப் பதகனும் உய்வனோ
சூழ்த்து நின்ற தொழும்பரை யானந்தத்
தாழ்த்து முக்கண் அருட்செம்பொற் சோதியே. 21.

சோதி யேசுட ரேசுக மேதுணை
நீதி யேநிச மேநிறை வேநிலை
ஆதி யேஉனை யானடைந் தேன்அகம்
வாதி யாதருள் வாய்அருள் வானையே. 22.

வானைப்போல வளைந்துகொண் டானந்தத்
தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்தமெய்ஞ்
ஞானத் தெய்வத்தை நாடுவன் நானெனும்
ஈனப் பாழ்கெட என்றும் இருப்பவனே. 23.

இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறெனைத்
திரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக்
கரும்பைத் தந்துகண் ணீர்கம் பலையெலாம்
அரும்பச் செய்யென தன்னையொப் பாமனே. 24.

அன்னை யப்பனென் ஆவித் துணையெனுந்
தன்னை யொப்பற்ற சற்குரு என்பதென்
என்னைப் பூரண இன்ப வெளிக்குளே
துன்ன வைத்த சுடரெனத் தக்கதே. 25.

தக்க கேள்வியிற் சார்ந்தநற் பூமியின்
மிக்க தாக விளங்கும் முதலொன்றே
எக்க ணுந்தொழ யாவையும் பூத்துக்காய்த்
தொக்க நின்றுமொன் றாய்நிறை வானதே. 26.

ஆன மான சமயங்கள் ஆறுக்குந்
தான மாய்நின்று தன்மயங் காட்டிய
ஞான பூரண நாதனை நாடியே
தீன னேன்இன்பந் தேக்கித் திளைப்பனே. 27.

தேக்கி இன்பந் திளைக்கத் திளைக்கவே
ஆக்க மாயெனக் கானந்த மாகியே
போக்கி னோடு வரவற்ற பூரணந்
தாக்கி நின்றவா தன்மய மாமதே. 28.

அதுவென் றுன்னும் அதுவும் அறநின்ற
முதிய ஞானிகள் மோனப் பொருளது
ஏதுவென் றெண்ணி இறைஞ்சுவன் ஏழையேன்
மதியுள் நின்றின்ப வாரி வழங்குமே. 29.

வாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப்
பாரிற் கண்டவை யாவும் பருகினை
ஓரிற் கண்டிடும் ஊமன் கனவென
யாருக் குஞ்சொல வாயிலை ஐயனே. 30.

ஐய மற்ற அதிவரு ணர்க்கெலாங்
கையில் ஆமல கக்கனி யாகிய
மெய்ய னேஇந்த மேதினி மீதுழல்
பொய்ய னேற்குப் புகலிடம் எங்ஙனே. 31.

எங்ங னேஉய்ய யானென தென்பதற்
றங்ங னேயுன் அருள்மய மாகிலேன்
திங்கள் பாதி திகழப் பணியணி
கங்கை வார்சடைக் கண்ணுத லெந்தையே. 32.

கண்ணிற் காண்பதுன் காட்சிகை யாற்றொழில்
பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
மண்ணொ டைந்தும் வழங்குயிர் யாவுமே
அண்ண லேநின் அருள்வடி வாகுமே. 33.

வடிவெ லாநின் வடிவென வாழ்த்திடாக்
கடிய னேனுமுன் காரணங் காண்பனோ
நெடிய வானென எங்கும் நிறைந்தொளிர்
அடிக ளேஅர சேஅருள் அத்தனே. 34.

அத்த னேயகண் டானந்த னேஅருட்
சுத்த னேயென உன்னைத் தொடர்ந்திலேன்
மத்த னேன்பெறு மாமலம் மாயவான்
கத்த னேகல்வி யாதது கற்கவே. 35.

கற்றும் என்பலன் கற்றிடு நூன்முறை
சொற்ற சொற்கள் சுகாரம்ப மோநெறி
நிற்றல் வேண்டும் நிருவிகற பச்சுகம்
பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. 36.

பெருமைக் கேயிறு மாந்து பிதற்றிய
கருமிக் கைய கதியுமுண் டாங்கொலோ
அருமைச் சீரன்பர்க் கன்னையொப் பாகவே
வருமப் பேரொளி யேயுன்ம னாந்தமே. 37.

உன்ம னிக்குள் ஒளிர்பரஞ் சோதியாஞ்
சின்ம யப்பொரு ளேபழஞ் செல்வமே
புன்ம லத்துப் புழுவன்ன பாவியேன்
கன்ம னத்தைக் கரைக்கக் கடவதே. 38.

கரையி லின்பக் கடலமு தேஇது
வரையில் நானுனை வந்து கலந்திலேன்
உரையி லாஇன்பம் உள்ளவர் போலஇத்
தரையி லேநடித் தேனென்ன தன்மையே. 39.

மையு லாம்விழி மாதர்கள் தோதகப்
பொய்யி லாழும் புலையினிப் பூரைகாண்
கையில் ஆமல கக்கனி போன்றஎன்
ஐய னேஎனை ஆளுடை அண்ணலே. 40.

அண்ண லேஉன் னடியவர் போலருட்
கண்ணி னாலுனைக் காணவும் வாவெனப்
பண்ணி னாலென் பசுத்துவம் போய்உயும்
வண்ண மாக மனோலயம் வாய்க்குமே. 41.

வாய்க்குங் கைக்கும் மெளனம் மெளனமென்
றேய்க்குஞ் சொற்கொண் டிராப்பக லற்றிடா
நாய்க்கும் இன்பமுண் டோநல் லடியரைத்
தோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே. 42.

தூய தான துரிய அறிவெனுந்
தாயும்நீ இன்பத் தந்தையும் நீஎன்றால்
சேய தாம்இந்தச் சீவத் திரளன்றோ
ஆயும் பேரொளி யான அகண்டமே. 43.

அகண்ட மென்ன அருமறை யாகமம்
புகன்ற நின்தன்மை போதத் தடங்குமோ
செகங்க ளெங்குந் திரிந்துநன் மோனத்தை
உகந்த பேருனை ஒன்றுவர் ஐயனே. 44.

ஐய னேஉனை யன்றி யொருதெய்வங்
கையி னால்தொழ வுங்கரு தேன்கண்டாய்
பொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த
மெய்ய னாம்உனக் கேவெளி யாகுமே. 45.

வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய
ஒளியில் நின்ற ஒளியாம்உன் தன்னைநான்
தெளிவு தந்தகல் லாலடித் தேஎன்று
களிபொ ருந்தவன் றேகற்ற கல்வியே. 46.

கல்லை யுற்ற கருத்தினர் கார்நிறத்த
தல்லை யொத்த குழலினர் ஆசையால்
எல்லை யற்ற மயல்கொள வோஎழில்
தில்லை யில்திக ழுந்திருப் பாதெனே. 47.

திருவ ருள்தெய்வச் செல்வி மலைமகள்
உருவி ருக்கின்ற மேனி யொருபரங்
குருவை முக்கணெங் கோவைப் பணிநெஞ்சே
கருவி ருக்கின்ற கன்மம்இங் கில்லையே. 48.

கன்ம மேது கடுநர கேதுமேல்
சென்ம மேதெனைத் தீண்டக் கடவதோ
என்ம னோரதம் எய்தும் படிக்கருள்
நன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே. 49.

நாத கீதன்என் நாதன்முக் கட்பிரான்
வேத வேதியன் வெள்விடை யூர்திமெய்ப்
போத மாய்நின்ற புண்ணியன் பூந்திருப்
பாத மேகதி மற்றிலை பாழ்நெஞ்சே. 50.

மற்று னக்கு மயக்கமென் வன்னெஞ்சே
கற்றை வார்சடைக் கண்ணுத லோன்அருள்
பெற்ற பேரவ ரேபெரி யோர்எலாம்
முற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே. 51.

உரையி றந்துளத் துள்ள விகாரமாந்
திரைக டந்தவர் தேடுமுக் கட்பிரான்
பரைநிறைந்த பரப்பெங்ஙன் அங்ஙனே
கரைக டந்தின்ப மாகக் கலப்பனே. 52.

கலந்த முத்தி கருதினுங் கேட்பினும்
நிலங்க ளாதியும் நின்றெமைப் போலவே
அலந்து போயினம் என்னும் அருமறை
மலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் சோதியே. 53.

சோதி யாதெனைத் தொண்டருட் கூட்டியே
போதி யாதவெல் லாமெளப் போதிக்க
ஆதி காலத்தி லுன்னடிக் காந்தவம்
ஏது நான்முயன் றேன்முக்கண் எந்தையே. 54.

எந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே. 55.

கண்ண கன்றஇக காசினியூடெங்கும்
பெண்ணொ டாண்முத லாமென் பிறவியை
எண்ண வோஅரி தேழை கதிபெறும்
வண்ண முக்கண் மணிவந்து காக்குமே. 56.

காக்கு நின்னருட் காட்சியல் லாலொரு
போக்கு மில்லையென் புந்திக் கிலேசத்தை
நீக்கி யாளுகை நின்பரம் அன்பினர்
ஆக்க மேமுக்கண் ஆனந்த மூர்த்தியே. 57.

ஆனந் தங்கதி என்னவென் னானந்த
மோனஞ் சொன்ன முறைபெற முக்கண்எங்
கோனிங் கீந்த குறிப்பத னால்வெறுந்
தீனன் செய்கை திருவருட் செய்கையே. 58.

கையி னால்தொழு தேத்திக் கசிந்துளம்
மெய்யி னாலுனைக் காண விரும்பினேன்
ஐய னேஅர சேஅரு ளேயருள்
தைய லோர்புறம் வாழ்சக நாதனே. 59.

சகத்தின் வாழ்வைச் சதமென எண்ணியே
மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன்
அகத்து ளாரமு தாமைய நின்முத்திச்
சுகத்தில் நான் வந்து தோய்வதெக் காலமோ. 60.

கால மூன்றுங் கடந்தொளி ராநின்ற
சீல மேநின் திருவரு ளாலிந்த்ர
சால மாமிச் சகமென எண்ணிநின்
கோல நாடுத லென்று கொடியனே. 61.

கொடிய வெவ்வினைக் கூற்தைத் துரந்திடும்
அடிக ளாம்பொரு ளேருனக் கன்பின்றிப்
படியி லேழைமை பற்றுகின் றேன்வெறும்
மிடியி னேன்கதி மேவும் விதியின்றே. 62.

விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட
மதியை யும்விதித் தம்மதி மாயையில்
பதிய வைத்த பசுபதி நின்னருள்
கதியை எப்படிக் கண்டு களிப்பதே. 63.

கண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப்
பண்டும் இன்றுமென் பால்நின் றுணர்த்திடும்
அண்ட னேயுனக் கோர்பதி னாயிரந்
தெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே. 64.

வேண்டும் யாவும் இறந்து வெளியிடைத்
தூண்டு வாரற்ற சோதிப் பிரான்நின்பால்
பூண்ட அன்பர்தம் பொற்பணி வாய்க்குமேல்
ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே. 65.

எடுத்த தேகம் இறக்குமு னேஎனைக்
கொடுத்து நின்னையுங் கூடவுங் காண்பனோ
அடுத்த பேரறி வாயறி யாமையைக்
கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. 66.

குன்றி டாத கொழுஞ்சுட ரேமணி
மன்று ளாடிய மாணிக்க மேயுனை
அன்றி யார்துணை யாருற வார்கதி
என்று நீயெனக் கின்னருள் செய்வதே. 67.

அருளெ லாந்திரண் டோர்வடி வாகிய
பொருளெ லாம்வல்ல பொற்பொது நாதஎன்
மருளெ லாங்கெடுத் தேயுளம் மன்னலால்
இருளெ லாம்இரிந் தெங்கொளித் திட்டதே. 68.

எங்கு மென்னை இகலுற வாட்டியே
பங்கஞ் செய்த பழவினை பற்றற்றால்
அங்க ணாவுன் னடியிணை யன்றியே
தங்க வேறிட முண்டோ சகத்திலே. 69.

உண்ட வர்க்கன்றி உட்பசி ஓயுமோ
கண்ட வர்க்கன்றிக் காதல் அடங்குமோ
தொண்ட ருக்கெளி யானென்று தோன்றுவான்
வண்த மிழ்க்கிசை வாக மதிக்கவே. 70.

மதியுங் கங்கையுங் கொன்றையும் மத்தமும்
பொதியுஞ் சென்னிப் புனிதரின் பொன்னடிக்
கதியை விட்டிந்தக் காமத்தில் ஆனந்தஎன்
விதியை எண்ணி விழிதுயி லாதன்றே. 71.

அன்றெ னச்சொல ஆமேன அற்புதம்
நன்றெ னச்சொல நண்ணிய நன்மையை
ஒன்றே னச்சொன ஒண்பொரு ளேயொளி
இன்றெ னக்கருள் வாய்இரு ளேகவே. 72.

இருவ ரேபுகழ்ந் தேத்தற் கினியராம்
ஒருவ ரேதுணை என்றுண ராய்நெஞ்சே
வருவ ரேகொடுங் காலர்கள் வந்தெதிர்
பொருவ ரேயவர்க் கென்கொல் புகல்வதே. 73.

புகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா
அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே
சுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங்
ககன மேனியைக் கண்டன கண்களே. 74.

கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே. 75.

தெய்வம் வேறுள தென்பவர் சிந்தனை
நைவ ரென்பதும் நற்பர தற்பர
சைவ சிற்சிவ னேயுனைச் சார்ந்தவர்
உய்வ ரென்பதும் யானுணர்ந் தேனுற்றே. 76.

உற்ற வேளைக் குறுதுணை யாயிந்தச்
சுற்ற மோநமைக் காக்குஞ்சொ லாய்நெஞ்சே
கற்றை வார்சடைக் கண்ணுதல் பாதமே
பற்ற தாயிற் பரசுகம் பற்றுமே. 77.

பற்ற லாம்பொரு ளேபரம் பற்றினால்
உற்ற மாதவர்க் குண்மையை நல்குமே
மற்றும் வேறுள மார்க்கமெ லாமெடுத்
தெற்று வாய்மன மேகதி எய்தவே. 78.

 19. ஆரணம்

ஆரண மார்க்கத் தாகம வாசி
      அற்புத மாய்நடந் தருளுங்
காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங்
      கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
பூரண அறிவிற் கண்டிலம் அதனாற்
      போற்றிஇப் புந்தியோ டிருந்து
தாரணி யுள்ள மட்டுமே வணங்கத்
      தமியனேன் வேண்டிடத் தகுமே. 1.

இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட்
      டெவ்வுல கத்தையு மீன்றுந்
தடமுறும் அகில மடங்குநா ளம்மை
      தன்னையு மொழித்துவிண் ணெனவே
படருறு சோதிக் கருணையங் கடலே
      பாயிருட் படுகரிற் கிடக்கக்
கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக்
      கவர்ந்தெனை வளர்ப்பதுன் கடனே. 2.

வளம்பெறு ஞான வாரிவாய் மடுத்து
      மண்ணையும் விண்ணையுந் தெரியா
தளம்பெறுந் துரும்பொத் தாவியோ டாக்கை
      ஆனந்த மாகவே யலந்தேன்
களம்பெறு வஞ்ச நெஞ்சினர் காணாக்
      காட்சியே சாட்சியே அறிஞர்
உளம்பெறுந் துணையே பொதுவினில் நடிக்கும்
      உண்மையே உள்ளவா றிதுவே. 3.

உள்ளமே நீங்கா என்னைவா வாவென்
      றுலப்பிலா ஆனந்த மான
வெள்ளமே பொழியுங் கருணைவான் முகிலே
      வெப்பிலாத் தண்ணருள் விளக்கே
கள்ளமே துரக்குந் தூவெளிப் பரப்பே
      கருவெனக் கிடந்தபாழ் மாயப்
பள்ளமே வீழா தெனைக்கரை யேற்றிப்
      பாலிப்ப துன்னருட் பரமே. 4.

பரம்பர மாகிப் பக்குவம் பழுத்த
      பழவடி யார்க்கருள் பழுத்துச்
சுரந்தினி திரங்குந் தானகற் பகமே
      சோதியே தொண்டனேன் நின்னை
இரந்துநெஞ் சுடைந்து கண்துயில் பெறாம
      லிருந்ததும் என்கணில் இருட்டைக்
கரந்துநின் கண்ணால் துயில்பெறல் வேண்டிக்
      கருதினேன் கருத்திது தானே. 5.

கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங்
      காரணங் கண்டுசும் மாதான்
வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம்
      வருந்தினேன் மதியின்மை தீர்ப்பார்
ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர்
      உலகவர் பன்னெறி எனக்குப்
பொருத்தமோ சொல்லாய் மெளனசற் குருவே
      போற்றிநின் பொன்னடிப் போதே. 6.

அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும்
      அறிந்திடின் நிர்க்குண நிறைவும்
முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும்
      மொழிந்திடிற் சுகமன மாயைக்
குடிகெட வேண்டிற் பணியற நிற்றல்
      குணமெனப் புன்னகை காட்டிப்
படிமிசை மெளனி யாகிநீ யாளப்
      பாக்கியம் என்செய்தேன் பரனே. 7.

என்செய லின்றி யாவுநின் செயலென்
      றெண்ணுவேன் ஒவ்வொரு காலம்
புன்செயல் மாயை மயக்கின்என் செயலாப்
      பொருந்துவே ன·தொரு காலம்
பின்செயல் யாது நினைவின்றிக் கிடப்பேன்
      பித்தனேன் நன்னிலை பெறநின்
தன்செய லாக முடித்திடல் வேண்டுஞ்
      சச்சிதா னந்தசற் குருவே. 8.

குருவுரு வாகி மெளனியாய் மெளனக்
      கொள்கையை உணர்த்தினை அதனால்
கருவுரு வாவ தெனக்கிலை இந்தக்
      காயமோ பொய்யெனக் கண்ட
திருவுரு வாளர் அநுபவ நிலையுஞ்
      சேருமோ ஆவலோ மெத்த
அருவுரு வாகி அல்லவாய்ச் சமயம்
      அளவிடா ஆனந்த வடிவே. 9.

வடிவிலா வடிவாய் மனநினை வணுகா
      மார்க்கமாய் நீக்கருஞ் சுகமாய்
முடிவிலா வீட்டின் வாழ்க்கைவேண் டினர்க்குன்
      மோனமல் லால்வழி யுண்டோ
படியிரு ளகலச் சின்மயம் பூத்த
      பசுங்கொம்பை யடக்கியோர் கல்லால்
அடியிலே யிருந்த ஆனந்த அரசே
      அன்பரைப் பருகும்ஆ ரமுதே. 10.

 20. சொல்லற்குஅரிய

சொல்லற் கரிய பரம்பொருளே
      சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே
வெல்லற் கரிய மயலிலெனை
      விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன்
கல்லிற் பசிய நாருரித்துக்
      கடுகிற் பெரிய கடலடைக்கும்
அல்லிற் கரிய அந்தகனார்க்
      காளாக் கினையோ அறியேனே. 1.

அறிவிற் கறிவு தாரகமென்
      றறிந்தே, அறிவோ டறியாமை
நெறியிற் புகுதா தோர்படித்தாய்
      நின்ற நிலையுந் தெரியாது
குறியற் றகண்டா தீதமயக்
      கோதி லமுதே நினைக்குறுகிப்
பிரிவற் றிறுக்க வேண்டாவோ
      பேயேற் கினிநீ பேசாயே. 2.

பேசா அநுபூ தியை அடியேன்
      பெற்றுப் பிழைக்கப் பேரருளால்
தேசோ மயந்துந் தினியொருகாற்
      சித்தத் திருளுந் தீர்ப்பாயோ
பாசா டவியைக் கடந்தஅன்பர்
      பற்றும் அகண்டப் பரப்பான
ஈசா பொதுவில் நடமாடும்
      இறைவா குறையா இன்னமுதே. 3.

இன்பக் கடலில் புகுந்திடுவான்
      இரவும் பகலுந் தோற்றாமல்
அன்பிற் கரைந்து கரைந்துருகி
      அண்ணா அரசே எனக்கூவிப்
பின்புற் றழுஞ்சே யெனவிழிநீர்
      பெருக்கிப் பெருக்கிப் பித்தாகித்
துன்பக் கடல்விட் டகல்வேனோ
      சொரூபா னந்தச் சுடர்க்கொழுந்தே. 4.

கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்
      கோவே மன்றிற் கூத்தாடற்
கெழுந்த சுடரே இமயவரை
      என்தாய் கண்ணுக் கினியானே
தொழும்தெய் வமும்நீ குருவும்நீ
      துணைநீ தந்தை தாயும்நீ
அழுந்தும் பவம்நீ நன்மையும்நீ
      ஆவி யாக்கை நீதானே. 5.

தானே யகண்டா காரமயந்
      தன்னி லெழுந்து பொதுநடஞ்செய்
வானே மாயப் பிறப்பறுப்பான்
      வந்துன் அடிக்கே கரங்கூப்பித்
தேனே என்னைப் பருகவல்ல
      தெள்ளா ரமுதே சிவலோகக்
கோனே எனுஞ்சொல் நினதுசெவி
      கொள்ளா தென்னோ கூறாயே. 6.

கூறாநின்ற இடர்க்கவலைக்
      குடும்பக் கூத்துள் துளைந்துதடு
மாறா நின்ற பாவியைநீ
      வாவென் றழைத்தால் ஆகாதோ
நீறார் மேனி முக்கணுடை
      நிமலா அடியார் நினைவினிடை
ஆறாய்ப் பெருகும் பெருங்கருணை
      அரசே என்னை ஆள்வானே. 7.

வானே முதலாம் பெரும்பூதம்
      வகுத்துப் புரந்து மாற்றவல்ல
கோனே என்னைப் புரக்கும்நெறி
      குறித்தா யிலையே கொடியேனைத்
தானே படைத்திங் கென்னபலன்
      தன்னைப் படைத்தா யுன்கருத்தை
நானே தென்றிங் கறியேனே
      நம்பி னேன்கண் டருள்வாயே. 8.

கண்டார் கண்ட காட்சியும்நீ
      காணார் காணாக் கள்வனும்நீ
பண்டா ருயிர்நீ யாக்கையுநீ
      பலவாஞ் சமயப் பகுதியும்நீ
எண்தோள் முக்கட் செம்மேனி
      எந்தாய் நினக்கே எவ்வாறு
தொண்டாய்ப் பணிவா ரவர்பணிநீ
      சூட்டிக் கொள்வ தெவ்வாறே. 9.

சூட்டி எனதென் றிடுஞ்சுமையைச்
      சுமத்தி எனையுஞ் சுமையாளாக்
கூட்டிப் பிடித்து வினைவழியே
      கூத்தாட் டினையே நினதருளால்
வீட்டைக் கருதும் அப்போது
      வெளியாம் உலக வியப்பனைத்தும்
ஏட்டுக் கடங்காச் சொப்பனம்போல்
      எந்தாய் இருந்த தென்சொல்வேன். 10.

 21. வம்பனேன்

வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய
உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர்
தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவிலேனே. 1.

குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத்
துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள்
உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த
இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. 2.

இருநில மாதி நாதம் ஈறதாம் இவைக டந்த
பெருநில மாய தூய பேரொளிப் பிழம்பாய் நின்றுங்
கருதரும் அகண்டா னந்தக் கடவுள்நின் காட்சி காண
வருகவென் றழைத்தா லன்றி வாழ்வுண்டோ வஞ்ச னேற்கே. 3.

வஞ்சனை அழுக்கா றாதி வைத்திடும் பாண்ட மான
நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக் குருகப் பண்ணி
அஞ்சலி செய்யுங் கையும் அருவிநீர் விழியு மாகத்
தஞ்சமென் றிரங்கிக் காக்கத் தற்பரா பரமு னக்கே. 4.

உனக்குநா  னடித்தொண் டாகி உன்னடிக் கன்பு செய்ய
எனக்குநீ தோற்றி அஞ்சேல் என்னுநா ளெந்த நாளோ
மனக்கிலே சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் றோங்குந்
தனக்குநே ரில்லா ஒன்றே சச்சிதா னந்த வாழ்வே. 5.

வாழ்வென வயங்கி என்னை வசஞ்செய்து மருட்டும் பாழ்த்த
ஊழ்வினைப் பகுதி கெட்டிங் குன்னையுங் கிட்டு வேனோ
தாழ்வெனுஞ் சமய நீங்கித் தமையுணர்ந் தோர்கட் கெல்லாஞ்
சூழ்வெளிப் பொருளே முக்கட் சோதியே அமர ரேறே. 6.

ஏறுவாம் பரியா ஆடை இருங்கலை உரியா என்றும்
நாறுநற் சாந்த நீறு நஞ்சமே அமுதாக் கொண்ட
கூறருங் குணத்தோய உன்றன் குரைகழல் குறுகி னல்லால்
ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல் தானே. 7.

தானமும் தவமும் யோகத் தன்மையும் உணரா என்பால்
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்கு வாயோ
பானலங் கவர்ந்த தீஞ்சொற் பச்சிளங் கிள்ளை காண
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தி னானே. 8.

நடத்திஇவ் வுலகை யெல்லாம் நாதநீ நிறைந்த தன்மை
திடத்துட னறிந்தா னந்தத் தெள்ளமு தருந்தி டாதே
விடத்திர ளனைய காம வேட்கையி லழுந்தி மாயைச்
சடத்தினை மெய்யென் றெண்ணித் தளரவோ தனிய னேனே. 9.

தனிவளர் பொருளே மாறாத் தண்ணருங் கருணை பூத்த
இனியகற் பகமே முக்கண் எந்தையே நினக்கன் பின்றி
நனிபெருங் குடிலங் காட்டு நயனவேற் கரிய கூந்தல்
வனிதையர் மயக்கி லாழ்ந்து வருந்தவோ வம்பனேனே. 10.

 22. சிவன்செயல்

சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும்
அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங்
கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ
பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1.

பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ்
சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ
சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2.

இடைந்திடைந் தேங்கி மெய்புள கிப்ப
      எழுந்தெழுந் தையநின் சரணம்
அடைந்தனன் இனிநீ கைவிடேல் உனக்கே
      அபயமென் றஞ்சலி செய்துள்
உடைந்துடைந் தெழுது சித்திரப் பாவை
      யொத்துநான் அசைவற நிற்பத்
தொடர்ந்துநீ எனைஆட் கொள்ளுநா ளென்றோ
      சோதியே ஆதிநா யகனே. 3.

ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
      யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
      தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
      புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
      வாயிலோ தீயினுங் கொடிதே. 4.

வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர்
      வந்தெனை யீர்த்துவெங் காமத்
தீயிலே வெதுப்பி உயிரொடுந் தின்னச்
      சிந்தைநைந் துருகிமெய்ம் மறந்து
தாயிலாச் சேய்போல் அலைந்தலைப் பட்டேன்
      தாயினுங் கருணையா மன்றுள்
நாயக மாகி யொளிவிடு மணியே
      நாதனே ஞானவா ரிதியே. 5.

ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
      நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
      மார்க்கமே மருளர்தாம் அறியா
மோனமே முதலே முத்திநல் வித்தே
      முடிவிலா இன்பமே செய்யுந்
தானமே தவமே நின்னைநான் நினைந்தேன்
      தமியனேன் தனைமறப் பதற்கே. 6.

மறமலி யுலக வாழ்க்கையே வேண்டும்
      வந்துநின் அன்பர்தம் பணியாம்
அறமது கிடைக்கின் அன்றியா னந்த
      அற்புத நிட்டையின் நிமித்தந்
துறவது வேண்டும் மெளனியாய் எனக்குத்
      தூயநல் லருள்தரின் இன்னம்
பிறவியும் வேண்டும் யானென திறக்கப்
      பெற்றவர் பெற்றிடும் பேறே. 7.

பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே
      பெருகிய கருணைவா ரிதியே
நற்றவத் துணையே ஆனந்தக் கடலே
      ஞாதுரு ஞானஞே யங்கள்
அற்றவர்க் கறாத நட்புடைக் கலப்பே
      அநேகமாய் நின்னடிக் கன்பு
கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
      கண்டிடும் பொருட்டன்றோ காணே. 8.

அன்றுநால் வருக்கும் ஒளிநெறி காட்டும்
      அன்புடைச் சோதியே செம்பொன்
மன்றுள்முக் கண்ணுங் காளகண் டமுமாய்
      வயங்கிய வானமே என்னுள்
துன்றுகூ ரிருளைத் துரந்திடும் மதியே
      துன்பமும் இன்பமு மாகி
நின்றவா தனையைக் கடந்தவர் நினைவே
      நேசமே நின்பரம் யானே. 9.

யானெனல் காணேன் பூரண நிறைவில்
      யாதினும் இருந்தபே ரொளிநீ
தானென நிற்குஞ் சமத்துற என்னைத்
      தன்னவ னாக்கவுந் தகுங்காண்
வானென வயங்கி யொன்றிரண் டென்னா
      மார்க்கமா நெறிதந்து மாறாத்
தேனென ருசித்துள் அன்பரைக் கலந்த
      செல்வமே சிற்பர சிவமே. 10.

 23. தன்னையொருவர்

தன்னை யொருவர்க் கறிவரிதாய்த்
      தானே தானாய் எங்குநிறைந்
துன்னற்கரிய பரவெளியாய்
      உலவா அமுதாய் ஒளிவிளக்காய்
என்னுட் கலந்தாய் யானறியா
      திருந்தாய் இறைவா இனியேனும்
நின்னைப் பெருமா றெனக்கருளாம்
      நிலையைக் கொடுக்க நினையாயோ. 1.

நினையு நினைவுக் கெட்டாத
      நெறிபெற் றுணர்ந்த நெறியாளர்
வினையைக் கரைக்கும் பரமஇன்ப
      வெள்ளப் பெருக்கே நினதருளால்
மனைவி புதல்வர் அன்னைபிதா
      மாடு வீடென் றிடுமயக்கந்
தனையும் மறந்திங் குனைமறவாத்
      தன்மை வருமோ தமியேற்கே. 2.

வரும்போம் என்னும் இருநிலைமை
      மன்னா தொருதன் மைத்தாகிக்
கரும்போ தேனோ முக்கனியோ
      என்ன என்னுள் கலந்துநலந்
தரும்பே ரின்பப் பொருளேநின்
      தன்னை நினைந்து நெக்குருகேன்
இரும்போ கல்லோ மரமோஎன்
      இதயம் யாதென் றறியேனே. 3.

அறியுந் தரமோ நானுன்னை
      அறிவுக் கறிவாய் நிற்கையினால்
பிறியுந் தரமோநீ என்னைப்
      பெம்மா னேபே ரின்பமதாய்ச்
செறியும் பொருள்நீ நின்னையன்றிச்
      செறியாப் பொருள்நான் பெரும்பேற்றை
நெறிநின் றொழுக விசாரித்தால்
      நினக்கோ இல்லை எனக்காமெ. 4.

எனதென் பதும்பொய் யானெனல்பொய்
      எல்லா மிறந்த இடங்காட்டும்
நினதென் பதும்பொய் நீயெனல்பொய்
      நிற்கும் நிலைக்கே நேசித்தேன்
மனதென் பதுமோ என்வசமாய்
      வாரா தைய நின்னருளோ
தனதென் பதுக்கும் இடங்காணேன்
      தமியேன் எவ்வா றுய்வேனே. 5.

உய்யும் படிக்குன் திருக்கருணை
      ஒன்றைக் கொடுத்தால் உடையாய்பாழ்ம்
பொய்யும் அவாவும் அழுக்காறும்
      புடைபட் டோடும் நன்னெறியாம்
மெய்யும் அறிவும் பெறும்பேறும்
      விளங்கு மெனக்குன் னடியார்பால்
செய்யும் பணியுங் கைகூடுஞ்
      சிந்தைத் துயருந் தீர்ந்திடுமே. 6.

சிந்தைத் துயரென் றொருபாவி
      சினந்து சினந்து போர்முயங்க
நிந்தைக் கிடமாய்ச் சுகவாழ்வை
      நிலையென் றுணர்ந்தே நிற்கின்றேன்
எந்தப் படியுன் அருள்வாய்க்கும்
      எனக்கப் படிநீ அருள்செய்வாய்
பந்தத் துயரற் றவர்க்கெளிய
      பரமா னந்தப் பழம்பொருளே. 7.

பொருளைப் பூவைப் பூவையரைப்
      பொருளென் றெண்ணும் ஒருபாவி
இருளைத் துரந்திட் டொளிநெறியை
      என்னுட் பதிப்ப தென்றுகொலோ
தெருளத் தெருள அன்பர் நெஞ்சந்
      தித்தித் துருகத் தெவிட்டாத
அருளைப் பொழியுங் குணமுகிலே
      அறிவா னந்தத் தாரமுதே. 8.

ஆரா அமிர்தம் விரும்பினர்கள்
      அறிய விடத்தை அமிர்தாக்கும்
பேரா னந்தச் சித்தனெனும்
      பெரியோய் ஆவிக் குரியோய்கேள்
காரார் கிரக வலையினிடைக்
      கட்டுண் டிருந்த களைகளெலாம்
ஊரா லொருநாட் கையுணவேற்
      றுண்டால் எனக்கிங் கொழிந்திடுமே. 9.

எனக்கென் றிருந்த உடல்பொருளும்
      யானும் நினவென் றீந்தவண்ணம்
அனைத்தும் இருந்தும் இலவாகா
      அருளாய் நில்லா தழிவழக்காய்
மனத்துள் புகுந்து மயங்கவுமென்
      மதிக்குட் களங்கம் வந்ததென்னோ
தனக்கொன் றுவமை அறநிறைந்த
      தனியே தன்னந் தனிமுதலே. 10.

 24. ஆசையெனும்

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்
      செனவும்மன தலையுங் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்
      டதுந்தூர்ந்து முத்திக் கான
நேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்
      கொடுமைபற்றி நிற்பர் அந்தோ
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே
      நிராசையின்றேல் தெய்வமுண்டோ. 1.

இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட்
      டருள்செயென ஏசற் றேதான்
புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல்
      எங்குநிறை பொருளே கேளாய்
மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட்
      டிரங்கெனவே மெளனத் தோடந்
தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோ
      பராபரமே சகச நிட்டை. 2.

சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்
ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமே
தேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்
விட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே. 3.

தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்
      ஞானமெனுந் தன்மை பேச
உன்னெஞ்ச மகிழ்ந்தொருசொல் உரைத்தனையே
      அதனைஉன்னி உருகேன் ஐயா
வன்னெஞ்சோ இரங்காத மரநெஞ்சோ
      இருப்புநெஞ்சோ வைரமான
கன்னெஞ்சோ அலதுமண்ணாங் கட்டிநெஞ்சோ
      எனதுநெஞ்சங் கருதிற் றானே. 4.

வாழி சோபனம் வாழிநல் லன்பர்கள்
சூழ வந்தருள் தோற்றமுஞ் சோபனம்
ஆழி போல்அருள் ஐயன் மவுனத்தால்
ஏழை யேன்பெற்ற இன்பமுஞ் சோபனம். 5.

கொடுக்கின் றோர்கள்பால் குறைவையா தியானெனுங் குதர்க்கம்
விடுக்கின் றோர்கள்பால் பிரிகிலா துள்ளன்பு விடாதே
அடுக்கின் றோர்களுக் கிரங்கிடுந் தண்டமிழ் அலங்கல்
தொடுக்கின் றோர்களைச் சோதியா ததுபரஞ் சோதி. 6.

உலக மாயையி லேஎளி யேன்றனை
      உழல விட்டனை யேஉடை யாய்அருள்
இலகு பேரின்ப வீட்டினில் என்னையும்
      இருத்தி வைப்பதெக் காலஞ்சொ லாய்எழில்
திலக வாள்நுதற் பைந்தொடி கண்ணிணை
      தேக்க நாடகஞ் செய்தடி யார்க்கெலாம்
அலகி லாவினை தீர்க்கத் துசங்கட்டும்
      அப்பனே அருள் ஆனந்த சோதியே. 7.

முன்னிலைச்சுட் டொழிதியெனப் பலகாலும்
      நெஞ்சேநான் மொழிந்தே னேநின்
தன்னிலையைக் காட்டாதே என்னையொன்றாச்
      சூட்டாதே சரண்நான் போந்த
அந்நிலையே நிலையந்த நிலையிலே
      சித்திமுத்தி யனைத்துந் தோன்றும்
நன்னிலையீ தன்றியிலை சுகமென்றே
      சுகர்முதலோர் நாடி னாரே. 8.

அத்துவிதம் பெறும்பேறென் றறியாமல்
      யானெனும்பேய் அகந்தை யோடு
மத்தமதி யினர்போல மனங்கிடப்ப
      இன்னம் இன்னம் வருந்து வேனோ
சுத்தபரி பூரணமாய் நின்மலமாய்
      அகண்டிதமாய்ச் சொரூபா னந்தச்
சத்திகள்நீங் காதவணந் தன்மயமாய்
      அருள்பழுத்துத் தழைத்த ஒன்றே. 9.

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே. 10.

காதில் ஓலையை வரைந்துமேற்
      குமிழையுங் கறுவிவேள் கருநீலப்
போது போன்றிடுங் கண்ணியர்
      மயக்கிலெப் போதுமே தளராமல்
மாது காதலி பங்கனை
      யபங்கனை மாடமா ளிகைசூழுஞ்
சேது மேவிய ராமநா
      யகன்தனைச் சிந்தைசெய் மடநெஞ்சே. 11.

அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவிலாத
      ஆருயிர்க் கோருயிராய் அமர்ந்தாயானால்
கண்டவரார் கேட்டவரார் உன்னாலுன்னைக்
      காண்பதல்லால் என்னறிவாற் காணப்போமோ
வண்டுளப மணிமார்பன் புதல்வனோடும்
      மனைவியொடுங் குடியிருந்து வணங்கிப்போற்றும்
புண்டரிக புரத்தினில்நா தாந்தமெளன
      போதாந்த நடம்புரியும் புனிதவாழ்வே. 12.

பொறியிற் செறிஐம் புலக்கனியைப்
      புந்திக் கவராற் புகுந்திழுத்து
மறுகிச் சுழலும் மனக்குரங்கு
      மாள வாளா இருப்பேனோ
அறிவுக் கறிவாய்ப் பூரணமாய்
      அகண்டா னந்த மயமாகிப்
பிறிவுற் றிருக்கும் பெருங்கருணைப்
      பெம்மா னேஎம் பெருமானே. 13.

உரையுணர் விறந்து தம்மை உணர்பவர் உணர்வி னூடே
கரையிலா இன்ப வெள்ளங் காட்டிடும் முகிலே மாறாப்
பரையெனுங் கிரணஞ் சூழ்ந்த பானுவே நின்னைப் பற்றித்
திரையிலா நீர்போல் சித்தந் தெளிவனோ சிறிய னேனே. 14.

கேவல சகல மின்றிக் கீழொடு மேலாய் எங்கும்
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பந்
தாவிட இன்பா தீதத் தனியிடை யிருத்தி வைத்த
தேவெனும் மெளனி செம்பொற் சேவடி சிந்தை செய்வாம். 15.

நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம்
ஆற்றிலேன் அகண்டா னந்த அண்ணலே அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறிய னேனே. 16.

போதம் என்பதே விளக்கொவ்வும் அவித்தைபொய் இருளாந்
தீதி லாவிளக் கெடுத்திருள் தேடவுஞ் சிக்கா
தாத லால்அறி வாய்நின்ற இடத்தறி யாமை
ஏது மில்லையென் றெம்பிரான் சுருதியே இயம்பும். 17.

சுருதி யேசிவா கமங்களே உங்களாற் சொல்லும்
ஒருத னிப்பொருள் அளவையீ தென்னவா யுண்டோ
பொருதி ரைக்கடல் நுண்மணல் எண்ணினும் புகலக்
கருத எட்டிடா நிறைபொருள் அளவையார் காண்பார். 18.

மின்னைப் போன்றன அகிலமென் றறிந்துமெய்ப் பொருளாம்
உன்னைப் போன்றநற் பரம்பொருள் இல்லையென் றோர்ந்து
பொன்னைப் போன்றநின் போதங்கொண் டுன்பணி பொருந்தா
என்னைப் போன்றுள ஏழையர் ஐயஇங் கெவரே. 19.

தாயுந் தந்தையும் எனக்குற வாவதுஞ் சாற்றின்
ஆயும் நீயும்நின் அருளும்நின் அடியரும் என்றோ
பேய னேன்திரு வடியிணைத் தாமரை பிடித்தேன்
நாய னேஎனை ஆளுடை முக்கண்நா யகனே. 20.

காந்தமதை எதிர்காணிற் கருந்தாது
      செல்லுமக் காந்தத் தொன்றா
தோய்ந்தவிடம் எங்கேதான் அங்கேதான்
      சலிப்பறவும் இருக்கு மாபோல்
சாந்தபதப் பரம்பொருளே பற்றுபொரு
      ளிருக்குமத்தாற் சலிக்குஞ் சித்தம்
வாய்ந்தபொருள் இல்லையெனிற் பேசாமை
      நின்றநிலை வாய்க்கு மன்றே. 21.

பொற்பு றுங்கருத் தேயக மாயதிற் பொருந்தக்
கற்பின் மங்கைய ரெனவிழி கதவுபோற் கவினச்
சொற்ப னத்தினுஞ் சோர்வின்றி யிருந்தநான் சோர்ந்து
நிற்ப தற்கிந்த வினைவந்த வாறென்கொல் நிமலா. 22.

வந்த வாறிந்த வினைவழி யிதுவென மதிக்கத்
தந்த வாறுண்டோ வுள்ளுணர் விலையன்றித் தமியேன்
நொந்த வாறுகண் டிரங்கவும் இலைகற்ற நூலால்
எந்த வாறினித் தற்பரா உய்குவேன் ஏழை. 23.

சொல்லாலும் பொருளாலும் அளவை யாலுந்
      தொடரவொண்ணோ அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே யிருக்க வைத்தாய்
      நன்னர்நெஞ்சந் தன்னலமும் நணுகு வேனோ
இல்லாளி யாயுலகோ டுயிரை யீன்றிட்
      டெண்ணரிய யோகினுக்கும் இவனே என்னக்
கல்லாலின் கீழிருந்த செக்கர் மேனிக்
      கற்பகமே பராபரமே கைலை வாழ்வே. 24.

சாக்கிரமா நுதலினிலிந் திரியம் பத்துஞ்
      சத்தாதி வசனாதி வாயு பத்தும்
நீக்கமிலந் தக்கரணம் புருட னோடு
      நின்றமுப் பான்ஐந்து நிலவுங் கண்டத்
தாக்கியசொப் பனமதனில் வாயு பத்தும்
      அடுத்தனசத் தாதிவச னாதி யாக
நோக்குகர ணம்புருடன் உடனே கூட
      நுவல்வர்இரு பத்தைந்தா நுண்ணி யோரே. 25.

கழுத்திஇத யந்தனிற்பி ராணஞ் சித்தஞ்
      சொல்லரிய புருடனுடன் மூன்ற தாகும்
வழுத்தியநா பியில்துரியம் பிராண னோடு
      மன்னுபுரு டனுங்கூட வயங்கா நிற்கும்
அழுத்திடுமூ லந்தன்னில் துரியா தீதம்
      அதனிடையே புருடனொன்றி அமரும் ஞானம்
பழுத்திடும்பக் குவரறிவர் அவத்தை ஐந்திற்
      பாங்குபெறக் கருவிநிற்கும் பரிசு தானே. 26.

இடத்தைக் காத்திட்ட சுவாவெனப் புன்புலால் இறைச்சிச்
சடத்தைக் காத்திட்ட நாயினேன் உன்னன்பர் தயங்கும்
மடத்தைக் காத்திட்ட சேடத்தால் விசேடமாய் வாழ
விடத்தைக் காத்திட்ட கண்டத்தோய் நின்னருள் வேண்டும். 27.

வாத னைப்பழக் கத்தினான் மனம்அந்த மனத்தால்
ஓத வந்திடும் உரையுரைப் படிதொழி லுளவாம்
ஏதம் அம்மனம் யாயைஎன் றிடிற்கண்ட எல்லாம்
ஆத ரஞ்செயாப் பொய்யதற் கையமுண் டாமோ. 28.

ஐய வாதனைப் பழக்கமே மனநினை வதுதான்
வைய மீதினிற் பரம்பரை யாதினும் மருவும்
மெய்யில் நின்றொளிர் பெரியவர் சார்புற்று விளங்கிப்
பொய்ய தென்பதை யொருவிமெய் யுணருதல்போதம். 29.

குலமி லான்குணங் குறியிலான் குறைவிலான் கொடிதாம்
புலமி லான்தனக் கென்னவோர் பற்றிலான் பொருந்தும்
இலமி லான்மைந்தர் மனைவியில் லான்எவன் அவன்சஞ்
சலமி லான்முத்தி தரும்பர சிவனெனத் தகுமே. 30.

கடத்தை மண்ணென லுடைந்தபோ
      தோவிந்தக் கருமச்
சடத்தைப் பொய்யெனல் இறந்தபோ
      தோசொலத் தருமம்
விடத்தை நல்லமிர் தாவுண்டு
      பொற்பொது வெளிக்கே
நடத்தைக் காட்டிஎவ் வுயிரையும்
      நடப்பிக்கும் நலத்தோய். 31.

நானெனவும் நீயெனவும் இருதன்மை
      நாடாமல் நடுவே சும்மா
தானமரும் நிலையிதுவே சத்தியஞ்சத்
      தியமெனநீ தமிய னேற்கு
மோனகுரு வாகியுங்கை காட்டினையே
      திரும்பவுநான் முளைத்துத் தோன்றி
மானதமார்க் கம்புரிந்திங் கலைந்தேனே
      பரந்தேனே வஞ்ச னேனே. 32.

தன்மயஞ் சுபாவம் சுத்தந் தன்னருள் வடிவஞ் சாந்தம்
மின்மய மான அண்ட வெளியுரு வான பூர்த்தி
என்மயம் எனக்குக் காட்டா தெனையப கரிக்க வந்த
சின்மயம் அகண்டா காரந் தட்சிணா திக்க மூர்த்தம். 33.

சிற்ற ரும்பன சிற்றறி வாளனே தெளிந்தால்
மற்ற ரும்பென மலரெனப் பேரறி வாகிக்
கற்ற ரும்பிய கேள்வியால் மதித்திடக் கதிச்சீர்
முற்ற ரும்பிய மெளனியாய்ப் பரத்திடை முளைப்பான். 34.

மயக்கு சிந்தனை தெளிவென இருநெறி வகுப்பான்
நயக்கு மொன்றன்பால் ஒன்றிலை யெனல்நல வழக்கே
இயக்க முற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம்
பயக்க வல்லதோர் தெளிவுடை யவர்க்கெய்தல் பண்போ. 35.

அருள்வடி வேழு மூர்த்தம்
      அவைகளசோ பான மென்றே
சுருதிசொல் லியவாற் றாலே
      தொழுந்தெய்வம் எல்லாம் ஒன்றே
மருளெனக் கில்லை முன்பின்
      வருநெறிக் கிவ்வ ழக்குத்
தெருளினமுன் னிலையாம் உன்னைச்
      சேர்ந்தியான் தெளிகின் றேனே. 36.

எத்தனைப் பிறப்போ எத்தனை இறப்போ
      எளியேனேற் கிதுவரை யமைத்து
அத்தனை யெல்லாம் அறிந்தநீ யறிவை
      அறிவிலி அறிகிலேன் அந்தோ
சித்தமும் வாக்குந் தேகமும் நினவே
      சென்மமும் இனியெனால் ஆற்றா
வைத்திடுங் கென்னை நின்னடிக் குடியா
      மறைமூடி யிருந்தவான் பொருளே. 37.                                             

வான்பொரு ளாகி எங்குநீ யிருப்ப
      வந்தெனைக் கொடுத்துநீ யாகா
தேன்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை
      இருவினை வாதனை யன்றோ
தீன்பொருளான அமிர்தமே நின்னைச்
      சிந்தையிற பாவனை செய்யும்
நான்பொரு ளானேன் நல்லநல் அரசே
      நானிறந் திருப்பது நாட்டம். 38.

நாட்டமூன் றுடைய செந்நிற மணியே
      நடுவுறு நாயக விளக்கே
கோட்டமில் குணத்தோர்க் கெளியநிர்க் குணமே
      கோதிலா அமிர்தமே நின்னை
வாட்டமில் நெஞ்சங் கிண்ணமாச் சேர்த்து
      வாய்மடுத் தருந்தினன் ஆங்கே
பாட்டாளி நறவம் உண்டயர்ந் ததுபோற்
      பற்றயர்ந் திருப்பதெந் நாளோ. 39.

என்னுடை உயிரே என்னுளத் தறிவே
      என்னுடை அன்பெனும் நெறியாம்
கன்னல்முக கனிதேன் கண்டமிர் தென்னக்
      கலந்தெனை மேவிடக் கருணை
மன்னிய உறவே உன்னைநான் பிரியா
      வண்ணமென் மனமெனுங் கருவி
தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத்
      தண்ணருள் வரமது வேண்டும். 40.

 25. எனக்கெனச் செயல்

எனக்கெ னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்
தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்
மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீ
நினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். 1.

உளவ றிந்தெலாம் நின்செய லாமென வுணர்ந்தோர்க்
களவி லானந்தம் அளித்தனை அறிவிலாப் புன்மைக்
களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்
தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். 2.

என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழை
தன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய்
பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர்
நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். 3.

ஏது மின்றித்தன் அடியிணைக் கன்புதான் ஈட்டுங்
காத லன்டர்க்குக் கதிநிலை ஈதெனக் காட்டும்
போத நித்திய புண்ணிய எண்ணரும் புவன
நாத தற்பர நானெவ்வா றுகுய்வேன் நவிலாய். 4.

வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும்
பாத நித்திய பரம்பர நிரந்தர பரம
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும்
நீத நிர்க்குண நினையன்றி ஒன்றும்நான் நினையேன். 5.

நெறிகள் தாம்பல பலவுமாய் அந்தந்த நெறிக்காஞ்
செறியுந் தெய்வமும் பலபல வாகவுஞ் செறிந்தால்
அறியுந் தன்மையிங் காருனை அறிவினால் அறந்தோர்
பிறியுந் தன்மையில் லாவகை கலக்கின்ற பெரியோய். 6.

பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்ததிற் பிறங்கும்
உரிய பல்லுயிர் எத்தனை அமைத்தவைக் குறுதி
வருவ தெத்தனை அமைத்தனை அமைத்தருள் வளர்க்கும்
அரிய தத்துவ எனக்கிந்த வணைமேன் அமைத்தாய். 7.

கணம் தேனுநின் காரணந் தன்னையே கருத்தில்
உணரு மாதவர்க் கானந்தம் உதவினை யொன்றுங்
குணமி லாதபொய் வஞ்சனுக் கெந்தைநிர்க் குணமா
மணமு லாமலர்ப் பதந்தரின் யாருனை மறுப்பார். 8.

கன்னல் முக்கனி கண்டுதேன் சருக்கரை கலந்த
தென்ன முத்தியிற் கலந்தவர்க் கின்பமா யிருக்கும்
நன்ன லத்தநின் நற்பதந் துணையென நம்பச்
சொன்ன வர்க்கெனா லாங்கைம்மா றில்லைஎன் சொல்வேன். 9.

தந்தை தாய்தமர் மகவெனும் அவையெலாஞ் சகத்தில்
பந்த மாம்என்றே அருமறை வாயினாற் பகர்ந்த
எந்தை நீஎனை இன்னமவ் வல்லலில் இருத்தில்
சிந்தை தான்தெளிந் தெவ்வணம் உய்வணஞ் செப்பாய். 10.

துய்யன் தண்ணருள் வடிவினன் பொறுமையால் துலங்கும்
மெய்யன் என்றுனை ஐயனே அடைந்தனன் மெத்த
நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றைநூ றாக்கும்
பொய்ய னென்றெனைப் புறம்விடின் என்செய்வேன் புகலாய். 11.

ஒன்ற தாய்ப்பல வாய்உயிர்த் திரட்கெலாம் உறுதி
என்ற தாய்என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய
நின்ற தாய்நிலை நின்றிடும் அறிஞஎன் நெஞ்சம்
மன்ற தாய்இன்ப வுருககொடு நடித்திடின் வாழ்வேன். 12.

தனியி ருந்தருட் சகசமே பொருந்திடத் தமியேற்
கினியி ரங்குதல் கடனிது சமயமென் னிதயக்
கனிவும் அப்படி யாயின தாதலாற் கருணைப்
புனித நீயறி யாததொன் றுள்ளதோ புகலாய். 13.

திருந்து சீரடித் தாமரைக் கன்புதான் செய்யப்
பொருந்து நாள்நல்ல புண்ணியஞ் செய்தநாள் பொருந்தா(து)
இருந்த நாள்வெகு தீவினை யிழைத்தநாள் என்றால்
அருந்த வாவுனைப்பொருந்துநாள் எந்தநாள் அடிமை. 14.

பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரிய
தென்னுந் தன்மையாய் எவ்வுயிர்த் திரளையும் இயக்கி
மன்னுந் தண்ணருள் வடிவமே உனக்கன்பு வைத்துந்
துன்னும் இன்னல்ஏன் யானெனும் அகந்தையேன் சொல்லாய். 15.

மின்னை யன்னபொய் வாழ்க்கையே நிலையென மெய்யாம்
உன்னை நான்மறந் தெவ்வணம் உய்வணம் உரையாய்
முன்னை வல்வினை வேரற முடித்தென்று முடியாத்
தன்னைத் தன்னடி யார்க்கருள் புரிந்திடும் தக்கோய். 16.

எம்ப ராபர எம்முயிர்த் துணைவஎன் றிறைஞ்சும்
உம்பர் இம்பர்க்கும் உளக்கணே நடிக்கின்றாய் உன்றன்
அம்பொன் மாமலர்ப் பதத்தையே துணையென அடிமை
நம்பி னேன் இனிப் புரப்பதெக் காலமோ நவிலாய். 17.

பாடி யாடிநின் றிரங்கிநின் பதமலர் முடிமேல்
சூடி வாழ்ந்தனர் அமலநின் னடியர்யான் தொழும்பன்
நாடி யேஇந்த உலகத்தை மெய்யென நம்பித்
தேடி னேன்வெறுந் தீமையே என்னினிச் செய்வேன். 18.

களவு வஞ்சனை காமமென் றிவையெலாங் காட்டும்
அளவு மாயைஇங் காரெனக் கமைத்தனர் ஐயா
உளவி லேஎனக் குள்ளவா றுணர்த்திஉன் அடிமை
வளரும் மாமதி போல்மதி தளர்வின்றி வாழ்வேன். 19.

வான நாயக வானவர் நாயக வளங்கூர்
ஞான நாயக நான்மறை நாயக நலஞ்சேர்
மோன நாயக நின்னடிக் கன்பின்றி முற்றுந்
தீன னாய்அகம் வாடவோ என்செய்வேன் செப்பாய். 20.

ஏத மற்றவர்க் கின்பமே பொழிகின்ற இறையே
பாத கக்கருங் கல்மனங் கோயிலாப் பரிந்து
சூத கத்தனா யாதினும் இச்சைமேல் தோன்றும்
வாத னைக்கிட மாயினேன் எவ்வணம் வாழ்வேன். 21.

தெளிவொ டீகையோ அறிகிலான் அறிவிலான் சிறிதும்
அளியி லான்இவன் திருவருட் கயலென அறிந்தோ
எளிய னாக்கினை என்செய்வேன் என்செய்வேன் எல்லா
ஒளியு மாய்நிறை வெளியுமாய் யாவுமாம் உரவோய். 22.

கண்ணி னுள்மணி யென்னவே தொழும் அன்பர் கருத்துள்
நண்ணு கின்றநின் அருளெனக் கெந்தநாள் நணுகும்
மண்ணும் விண்ணும்மற் றுள்ளன பூதமும் மாறாப்
பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய். 23.

சகமெ லாந்தனி புரந்தனை தகவுடைத் தக்கோர்
அகமெ லாநிறைந் தானந்த மாயினை அளவில்
மகமெ லாம்புரிந் தோரைவாழ் வித்தனை மாறா
இகமெ லாமெனைப் பிறந்திடச் செய்ததேன் எந்தாய். 24.

ஏய்ந்த நல்லருள் பெற்றவர்க் கேவலாய் எளியேன்
வாய்ந்த பேரன்பு வளர்க்கவுங் கருணைநீ வளர்ப்பாய்
ஆய்ந்த மாமறை எத்தனை அத்தனை அறிவால்
தோய்ந்த பேர்கட்குந் தோன்றிலாத் தோன்றலாந் தூயோய். 25.

தக்க நின்னருட் கேளவியோ சிறிதின்றித் தமியேன்
மிக்க தெய்வமே நின்னின்ப வெள்ளத்தில் வீழேன்
ஒக்கல் தாய்தந்தை மகவெனும் பாசக்கட் டுடனே
துக்க வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என்செய்வான் துணிந்தேன். 26.

பவம்பு ரிந்திடும் பாவியேற் கருள்நிலை பதியத்
தவஞ்செ யும்படித் தயவுசெய் தருள்வதே தருமம்
அவம்பு ரிந்திடார்க் கானந்த அமிர்தத்தை அளிக்க
நவங்கொள் தத்துவத் திரையெறி கடலெனும் நலத்தோய். 27.

உற்று ணர்ந்தெலாம் நீயல தில்லையென் றுனையே
பற்று கின்றனர் எந்தைநின் னடியர்யான் பாவி
முற்று மாயமாஞ் சகத்தையே மெய்யென முதல்தான்
அற்றி ருந்திடத் தொழில்செய்வான் தனிநிக ரானேன். 28.

 26. மண்டலத்தின்

மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தை
      அகோவெனவும் வார ணாதி
அண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில்
      நிறுத்துமவ தானம் போல
எண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன்
      அருள்வெளியில் இலக வைத்துக்
கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும்
      நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1.

ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங்
      கடந்தேழாம் யோக பூமி
நின்றுதெளிந் தவர்பேசா மெளன நியா
      யத்தைநிறை நிறைவைத் தன்னை
அன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும்
      தான்முதலாய் அசல மாகி
என்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்ற
      சாந்தபத இயற்கை தன்னை. 2.

பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலான
      ஞானபதப் பரிசு காட்டிச்
சதமாகி நிராலம்ப சாட்சியதாய்
      ஆரம்பத் தன்மை யாகி
விதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக்
      கீண்டெழுந்து விமல மாகி
மதமாறுங் காணாத ஆனந்த
      சாகரத்தை மெளன வாழ்வை. 3.

வாழ்வனைத்துந் தந்தஇன்ப மாகடலை
      நல்லமிர்தை மணியைப் பொன்னைத்
தாழ்வற என் உளத்திருந்த தத்துவத்தை
      அத்துவித சாரந் தன்னைச்
சூழ்பெரும்பே ரொளியையொளி பரந்தபர
      வெளியை இன்பச் சுகத்தை மாறா
தேழுலகுங் கலந்தின்றாய் நாளையா
      யென்றுமாம் இயற்கை தன்னை. 4.

தன்னையறிந் தவர்தம்மைத் தானாகச்
      செய்தருளுஞ் சமத்தை லோகம்
மின்னைநிகர்த் திடஅழியாச் சொரூபானந்
      தச்சுடரை வேத மாதி
என்னையறி வரிதென்னச் சமயகோ
      டிகளிடைய இடையறாத
பொன்னைவிரித் திடுமுலகத் தும்பரும்இம்
      பரும்பரவும் புனித மெய்யை. 5.

பரவரிய பரசிவமாய் அதுவெனலாய்
      நானெனலாய்ப் பாச சாலம்
விரவிநின்ற விசித்திரத்தை ஐக்யபதத்
      தினிதிருத்த விவேகந் தன்னை
இரவுபகல் நினைப்புமறப் பெனுந்தொந்தம்
      அறியார்கள் இதயம் வேதச்
சிரமெனவாழ் பராபரத்தை ஆனந்தம்
      நீங்காத சிதாகா சத்தை. 6.

அத்துவித அநுபவத்தை அனந்தமறை இன்னம்
      இன்னம் அறியேம் என்னும்
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத்
      தன்னருளால் நினைவுக் குள்ளே
வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாக
      எந்நாளும் வளர்த்துக் காக்குஞ்
சித்தினைமாத் தூவெளியைத் தன்மயமாம்
      ஆனந்தத் தெய்வந் தன்னை. 7.

தன்னிலே தானாக நினைந்துகனிந்
      தவிழ்ந்துசுக சமாதி யாகப்
பொன்னிலே பணிபோலும் மாயைதரு
      மனமேஉன் புரைகள் தீர்ந்தாய்
என்னினோ யான்பிழைப்பேன் எனக்கினியார்
      உன்போல்வார் இல்லை இல்லை
உன்னிலோ திருவருளுக் கொப்பாவாய்
      என்னுயிர்க்கோர் உறவு மாவாய். 8.

உறவுடலை எடுத்தவரில் பிரமாதி
      யேனும்உனை யொழிந்து தள்ளற்
கறவுமரி தரிதன்றோ இகபரமும்
      உன்னையன்றி ஆவ துண்டோ
வறிதிலுன்னை அசத்தென்னல் வழக்கன்று
      சத்தெனவும் வாழ்த்து வேனென்
சிறுமைகெடப் பெருமையினின் சென்மதே
      யத்தினில்நீ செல்லல் வேண்டும். 9.

வேண்டியநாள் என்னோடும் பழகியநீ
      எனைப்பிரிந்த விசாரத் தாலே
மாண்டுகிடக் கினும்அந்த எல்லையையும்
      பூரணமாய் வணக்கஞ் செய்வேன்
ஆண்டகுரு மெளனிதன்னால் யானெனதற்
      றவனருள்நான் ஆவேன் பூவிற்
காண்டகஎண் சித்திமுத்தி எனக்குண்டாம்
      உன்னாலென் கவலை தீர்வேன். 10.

தீராத என்சனன வழக்கெல்லாந்
      தீருமிந்தச் சனனத் தோடே
யாரேனும் அறிவரிய சீவன்முத்தி
      யுண்டாகும் ஐய ஐயோ
காரேனுங் கற்பகப்பூங் காவேனும்
      உனக்குவமை காட்டப் போமோ
பாராதி யாகஏழு மண்டலத்தில்
      நின்மகிமை பகர லாமோ. 11.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக