சனி, ஆகஸ்ட் 22, 2015



அடியேன் எழுதிய பாடல்கள் ....







நாய்செய் தநல்வினை யான்செய்ய விலையோபிறவி 
நோய்தீர்ப் பவனேசங்கர ராமேஸ்வரா நின்னாலயத்துள் அந் 
நாயுறங்க என்னதவம் செய்ததோ இந்நாய்மனம்  நோகுதையா ஆல 
வாயண்ணலே அடிநாய்க் கருள் செய்யே .



அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப 
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங் 
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே 
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்கள் வாக்கீசனே .


                               சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் .


      சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

சித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி ........ (பதிவு 2 )






   
    ஞானகுரு ஸ்ரீ பட்டினத்தார் தன்னுடைய பூரணமாலையில்   
வாலையை எண்ணாது இருந்து விட்டேனே என்று பாடுகிறார் .       

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே
 !



        புண்ணாக்குச் சித்தர் தமது பாக்களில் வாலையை மனோன்மணி என்று குறிப்பிடுகிறார் .


தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
     தாவித்திரந்தேளே - ஞானம்மா
     சரணம் சரணம் என்றே.




சித்தர் கருவூராரும் தன்னுடைய பாடல்களில் வாலையை

பின் வருமாறு போற்றுகிறார் .

ஆதியந்தம் வாலையவ ளிருந்தவீடே
   ஆச்சர்ய மெத்த மெத்த அதுதான் பாரு 
சோதியந்த நடுவீடு பீடமாகிச் 
   சொகுசுபெற வீற்றிருந்தாள் துரைப் பெண்ணாத்தாள்  

வீதியந்த ஆறுதெரு அமர்ந்த வீதி 
    விளையாடி நின்றதிரு மாளி கண்டாய் 
பாதி மதி சூடியே யிருந்த சாமி 
    பத்துவய தாகுமிந்த வாமி தானே .


அவளுக்கு வயது பத்து என்று கருவூரார் தெளிவாக கூறுகிறார் . அவள் கருணை இல்லாமல் முக்தி நிலை பெற முடியாது . உள்ளுக்குள் நம்மை இயக்கிடும் சக்தி இந்த வாலை தான் . நாம் அவளை அன்போடு அழைத்தால் ஓடி நம் அருகே வந்து அமர்வாள் அத்துணை கருணை .
அவளை போற்றி நாமும் மெய்யான நிலை அடைவோம் .



                           ஓம் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி !
                           ஓம் ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி !
                           ஓம் ஸ்ரீ வாலை திருவடிகள் போற்றி !
                           ஓம் ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி !
                            
சிவசோதி சங்கமித்த சித்தர் பெருமக்கள் அனைவர் பொற்பாதங்கள் போற்றி !! போற்றி !!


                          சிவமேஜெயம்-திருவடி முத்துகிருஷ்ணன்

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!  





 

                      






             

வியாழன், ஆகஸ்ட் 13, 2015

சித்தர்கள் நோக்கில் .....

                                             ஞானம் பெற குரு அவசியமா ?



                       


           பிறந்து இறக்கும் இந்த பிறவியை முடிவுக்கு கொண்டு வர குருவருளால் மட்டுமே முடியும் . அவர் மூலமே ஞானம் பெற முடியும் .

இதை சித்தர் இடைக்காடர் தன்னுடைய பாடல்களில் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் .

அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு
அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே.


     அவித்த விதை மீண்டும் முளையாது என்றும் அதே போல நல்ல குருவினை அடையாதவர் நற்கதியாகிய வீடு பேற்றினை அடைய முடியாது என்றும் கூறி இருக்கிறார் .



நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் அறிவார்?
நாலு மறைமுடியும் அகப்பேய்
நற்குரு பாதமடி!


          என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நான்கு வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார்.


குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.


குருமார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொய்க் குருமார்களை நம்பி அவர்கள் பின் செல்பவர்கள் எவ்வாறு மெய்யான சிவ பதத்தை அடைய முடியும் ? அதைத்தான் திருமூலர் குருடர்க்கு வழி காட்டும் குருடரும் , அவரை அழைத்துச் செல்லும் குருடரும் குழி வீழ்வார் என்று பொய்க் குருமார்களை தோலுரித்துக் காட்டும் திருமூலர் ,
உண்மையான குரு எப்படி என்று சொல்கிறார் . 
             
கறுத்த இரும்பே கனகம தானான்
மறிந்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே
.

 பொன் மண்ணுக்குள் இருந்து வெட்டி எடுக்கையிலே கறுத்து இரும்பை போல இருக்கும் , பின் பொற்கொல்லர் தன்னுடைய தொழிலால் அதை தங்கம் ஆக்கிய பின் மீண்டும் கறுக்காது அதை போல மனமானது பக்குவ நிலை அடைந்த பின் குருவருள் கிடைக்கும் அந்த குருவருளால் மீண்டும் பிறந்து இறக்கும் நோயை தீர்த்து பிறவா நிலையை அடைந்து இருப்பார் 
உண்மை குருவை  அடைய பெற்றோர்.
   

பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே.




     பாம்பாட்டியாரும் தனது பங்குக்கு உண்மையான குரு அவசியத்தை உணர்த்துகிறார் . கண்டவர்கள் பின் சுற்றாது ஈசனே கதி என்று அவனையே சிந்தித்து இருந்தோமென்றால் நம்மை கடைத்தேற்றும் குருவை அவன் நமக்கு அளிப்பான் . அந்த குருவருளால் நாம் அப்பன் ஈசன் பதத்தை அடையலாம் . குரு பக்தியே சிறந்தது அப்பனை அடைவதற்கு  .


                              சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


     சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!