திங்கள், மே 30, 2011

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்



                       



காசி:காசியே சிவனின் தலைமைக்காவலரான பைரவரின் பிரதான தலமாகும்.  காசி விஸ்வநாதர் கோயிலின் வடக்கே பைரவநாத்தில் உள்ள காலபைரவர் சன்னதியே பைரவரின் தலைமையிடம் ஆகும். இந்த சன்னதி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காசியில் இறப்பவர்களின் பாவபுண்ணியக்கணக்குகளை சித்ரகுப்தன் எழுதாமல், காலபைரவரே எழுதி பலன்களை அளிக்கின்றாராம்.


ராமகிரி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி கால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. இந்த பைரவ ஆலயத்தில் கால பைரவர் தனது சக்தியான காளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


திருவொற்றியூர்: சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.


சீர்காழி சட்டநாதர் ஆலயம்: சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் அவதரித்த  மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.


காஞ்சிபுரம் வைரவேச்சுரம்: திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.


க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்: பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.


தில்லையாடி கால பைரவ விநாயகர்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.


அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர். தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.


வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.


சென்னிமலை: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.


திருப்பத்தூர் யோக பைரவர்: யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.


இலுப்பைக்குடி வடுக பைரவர்: காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார். புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.






ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்: திருப்பதி
ஏழுமலையான் சக்கரம் ஸ்வர்ண ஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது.


சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார்.


விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார்.


ஆடுதுறை: ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.


தபசுமலை: புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.


காரைக்குடி: இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.


படப்பை: தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.


தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.


அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.


தாடிக்கொம்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ÷க்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.


பஞ்சமுக பைரவர்: முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.


                 முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:


வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.


திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.


பைரவபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.


சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.


எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.


காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.


மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும்,  கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.


திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.


திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.


பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.


சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.


முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.


திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.


திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.


திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில்  உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.


நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.


கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.


காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.


பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.


சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.


சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.


திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.


இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.


அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.


காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.


திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.




 இறை பணியில் : திருவடி முத்துகிருஷ்ணன்  

1 கருத்து:

  1. ஆடுதுறை சுவர்ணபைரவரை சித்த பெருமாடன் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அரிய வரம் பல பெற்றார்.

    பதிலளிநீக்கு