வெள்ளி, ஆகஸ்ட் 04, 2023

சித்தர் பாடல்களில் இருந்து ....

                  மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .




வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே 

வெட்டாத சக்கரம்
பேசாத மந்திரம்
வேறொருவர்க்கு எட்டாத புட்பம்
இறையாத தீர்த்தம்
இனி முடிந்து கட்டாத லிங்கம்
கருதாத நெஞ்சம்
கருத்தினுள்ளே முட்டாத பூசை 
அன்றோ குருநாதன் மொழிந்ததுவே .



உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு சக்கரங்கள் , தியானத்தில் கிடைக்கும் பேசா நிலை நிற்சிந்தனை இன்றி இருக்கும் பெரும் மௌனம் , தியானத்தில் தோன்றும் துரிய மலர், உள்ளே அண்ணாக்கில் சுரக்கும் அமுதம் , துணி முடிந்து கட்டாத அண்டம் என்னும் லிங்கம், எண்ணத்தில் அலைபாயாத நெஞ்சம், கருத்தில் செய்யும் பூசை ஆகியவற்றை எல்லாம் உரைத்தார் என் குருநாதர் என்கிறார் பட்டினத்தார் .  

                 சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!



  

வியாழன், பிப்ரவரி 09, 2023

 அம்பாள் வாலையரசி  பூசை .....


வாலையைப் பூசிக்க சித்தரானார் 

வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார் 

வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார் 

இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே !

                        -கொங்கணச்சித்தர் வாலைக்கும்மி .

    

                  அண்டமத்தனையும் இயக்கும் சக்தி வாலையே , எல்லா உயிர்க்கும் புவனம் அனைத்திற்கும் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவளும் அவளே அன்பிலே குழந்தை வடிவாய் ஆற்றலிலே மனோன்மணியாய் அனைத்துயிர்கட்கும் அருள்பவள் என் அன்னை வாலையே .

     ஆதிசக்தியின் குழந்தை வடிவமே வாலை இவளை பூசிக்காமல் சித்தி என்பது சத்தியமாய் சாத்தியமில்லை . பத்து வயது சிறுமியாய் இவளை பூஜித்து பூசையை ஆரம்பித்து படிப்படியாக சித்தி பெற்று பின் அன்னை மனோன்மணி தெய்வமாக பூசை முடித்து அவள் அருளாலே அப்பன் அருள் பெற்று மெய்யான நிலையை அடைந்தார்கள் சித்தர் பெருமக்கள் .


                 வாலையே அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கும் ஆதிசக்தி அவளை அறிந்து அகப்பூசை செய்து சித்தி , முத்தி பெற்றவர்கள் சித்தர்கள் . வாலையை பூசிக்காத சித்தர் இல்லை . எல்லா சித்தர்களும் அவளை பூசித்து பாடல் பாடி பாடலிலே மறைபொருளாக அவளை வைத்து பாடியிருக்கிறார்கள் . நாமும் அன்னையை வணங்கி மாயையை வென்று அவளை நமக்குள் உணர்ந்து அவளின் அருளைப்பெறுவோம் . 

         இன்றைக்கிருப்பதும் பொய்யல்லவே - வீணே 
         நம் வாழ்க்கையென்பதும் பொய்யல்லவே 
         அன்றைக்கெழுத்தின் படி முடியும் - வாலை 
        ஆத்தாளைப் போற்றடி ஞானப்பெண்ணே !
                                             -  கொங்கணச்சித்தர் .

                       சிவமேஜெயம்   - திருவடி முத்துகிருஷ்ணன் 


         சிவத்தை போற்றுவோம் !!!     சித்தர்களை போற்றுவோம் !!!


 

 

 

வெள்ளி, ஜனவரி 13, 2023

                                  அடியேன் எழுதிய பாடல்கள் ....








                                          சிவமேஜெயம்


குருவே துணை       பட்டினத்தாரே சரணம்      குருவே சரணம்

                                 
                                   குரு வணக்கம்

காசினிமுற்றாகி னுங்கைக்குள் வந்தாலுந்தூ சேனுவாராதென்று
ஊசியாலுலக நிலையாமையுணர்ந்த உத்தமராமெம் குருநாதர்
பட்டினத்தார் பதமதை நாயேன் கருத்தில் நிறுத்தி யெங்கள்
பட்டில்பெரு மானுக்கு பாடல் யானியற்றுவனே . 

                             
                                  வில்வேஸ்வரர் வணக்கம்

வணங்குகிறேன் வானுமண்ணும ளந்தவன்காணாத் திருவடியை
வணங்குகிறேன் அண்டம்பலக டந்துமயன்காணாச் சடைமுடியை
வணங்குகிறேன் தொண்டருள்ளத் துறைந்தருளும் வில்வேஸ்வரனை
வணங்கி பட்டில்பெருமானுக்கு பாடலியற்றுவனே .


                               வாலை துதி

காலை கதிரவன் கண்ணியவளொரு கண்ணாம்
மாலை வருமதியும் மாதவள் மறு கண்ணாம்
மேலை யொருகண்ணோடு கண்மூன்று டையவளாம்
வாலை திரிபுரையின் பொற்பதமது காப்பு .


                             விநாயகர் வணக்கம்

மதயானை முகத்தவன் மனத்தால் நினைக்க வருபவன்
முதல்வீட்டி லருள்பவனருகம் புல்லிலகமகிழ் பவன்வினை
யகற்றிடும் நாயகன்மூஷிக மேறிடும் விநாயகன்பதம் பணிந்தீ
தகற்றிடும் திருவாகீசனுக்கு பாடலியற்றுவனே .


                                 சுப்ரமண்யர் வணக்கம்

அருணகிரி நாதருக்கு முதலடி யெடுத்துக் கொடுத்தானப்பன்
பரமனுக்கு பிரணவவிளக் கங்கொடுத்தா னலையாழிமால்
மருகனழகு முருகன்சுப்ர மன்யன்குகனை நாயேன்பணிந்து
திருவாகீச பெருமானுக்குப் பாடலியற்றுவனே .

                     திருவாகீசன் பாடல்கள்


அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங்
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்களீசனே .

அஞ்சுபுலனை யுமடக்கும்வகை யறியேன்பஞ்ச பூதநாயகா
செஞ்சடையை நினையேன் பஞ்சனையை மறவேன் மாயையில்
துஞ்சிவீழ்ந் தின்னுமோர் கருப்பைக்கிருப் பவனைவில்வேசா
அஞ்சேலென் றபயமளித்தாட் கொள்ள வேண்டுமையா .

ஆற்றை யணிந்த தும்பை தலையன்
நீற்றை புணைந்த செந்நிற மேனியன்
கூற்றை பணிகொள் கூத்தன் பேரின்ப
பேற்றை யளிப்பவன் திருவாகீசனே .

வில்லடி பட்டான்பாசுபத மளித்திட்டா னன்பால்
கல்லடி பட்டான்கருணை பொழிந்திட்டா னற்றமிழால்
சொல்லடி பட்டான் கவர்ந்த பொருட் கொடுத்திட்டான்
அல்லற் படுமேழைக் கென்செய் வானோ ஒற்றியூரான்  .

மாயவன் தங்கைக்கு தன்னில் பாதி கொடுத்த
தூயவன் பிறந்திறந் தல்லற்படுத்துந்  தீராபெரும்
நோயதை தீர்ப்பவன் காலனுக்குங் காலனால
வாயன் வீற்றருள் செய்யும் விஜயாபதி .


             அண்டம் படைத்தவனாம்  - என் அப்பன்
                ஆலகால விடமுண்டவனாம்
           இன்னல் தவிர்ப்பவனாம்    - என் அப்பன்
                ஈடு இணை இல்லாதவனாம்
            உமையொரு பாகனாம்     -  என் அப்பன்
              ஊழ் வினை அறுப்பவனாம்
          எங்கும் நிறைந்தவனாம்     - என் அப்பன்
                     ஏகமாக நின்றவனாம்
            ஐயம் தீர்ப்பவனாம்           -  என் அப்பன்
                    ஒளிர்கின்ற மெய்ச் சுடராம்
           ஓங்காரப் பரம்பொருளாம் - என் அப்பன்
                   ஔடதமாய் பிணி தீர்ப்பவனாம்
             அஃகாது அவனருளை அளிப்பான் வில்வேஸ்வரன்  .

தங்கத்தை பழித்திடுஞ் செஞ்சடைதன்னில் வளர்பிறையுங்
கங்கையுஞ் சூடியகோல மென்ன ! சுட்டெரிக்கும் செந்தீயை
தங்கையி லேந்தியாடிடும் நின்நடமென்ன !பிற வாநிலையருளும்
எங்கள்குல தெய்வமேதிரு வாகீசா ஏழையெம்மை கண்டுகொள்ளே .

வேண்டேன்  சிந்தைதனில் உனையன்றி வேறோர் சிந்தனையை
வேண்டேன் யான்கைதொழ உனையன்றி வேறோர் தெய்வத்தை
வேண்டேன் நின்னடியார்நட் பல்லாமல்வே றோர்நட்பையென்றும்
வேண்டுவேன் திருவாகீசன் மலரடியை  யணைந்திருக்க .

ஒன்றான தன்னுள்ள யனைத்தையு மடக்கினான்
நன்றாக தொழுவோர்தம் தீவினையை முடுக்கினான்
குன்றாத பெருஞ்சுடரா யனைத்துங்கடந் துநின்றான்பத
மொன்றாத மூடனெனக் கருள்வானோ திருவாகீசன் .

ஒப்பிலொ ருவனைவுமை யொருபாகனைவே டன்கண்ணெடுத்
தப்பியபின் னருள்செய்தவ னைதாருவனமு னிவர்களேவிய
கப்பியகரி வுரிபோர்த்தவனை பட்டிலூரானை திருவாகீசனை
அப்பினில் உப்பெனவே கலந்திரு நன்னெஞ்சே .

விளக்கிட விலகிடுந் துன்பமெல்லாங் கதிர்பட்ட பனிபோற்றிறு
விளக்கிட அகன்றிடுந் தீவினையெல்லாம் பட்டிலூரானுக்குத்திரு
விளக்கிட குறைவிலாது பெருகிடுஞ்செல்வ மெலாம்வாகீசனுக்கு
விளக்கிடு மடியவர் வழியெலாம் வாழுமிது சத்தியமே .

திருப்பணி பலசெய்தான் வீரராஜேந்திரன் பட்டிலூர்பதிக்கு
திருப்பணி செய்திடுமடியவர் குறைதீருமென்றான் வாகீசனுக்கு
திருப்பணி செய்பவர்வம் சந்தழைத்தோங்கு மென்றான் பட்டிலூருக்கு
திருப்பணி செய்பவர்பதந் தன்தலைமேலென்று செப்பேடு செய்தானே .


                  

                        - திருவடி முத்து கிருஷ்ணன்

                       

                            
                                அடியேன் எழுதிய பாடல்கள் ...






                     சோதிக் கண்ணிகள்

அண்டம் படைத்த சோதி ஆதியந்த மில்லா சோதி
தாயுந் தந்தையுமான சோதி தாயுந்தந்தையுமில்லா சோதி

தானே உருவான சோதி தனக்கு நிகரற்ற சோதி
கண்டம் கருத்த சோதி அண்டமெல்லாம் நிறைந்த சோதி

அருவுருவாய் நின்ற சோதி குருவுக்குங் குருவான சோதி
பட்டிலூர் ஆளும் சோதி பட்டினத்தார்க் கருளிய சோதி

கழுமர மெரித்த சோதி கடுவெளி நின்ற சோதி
வறுமையை யகற்றும் சோதி பொறுமையை அளிக்கும் சோதி

பிள்ளையாய் வந்த சோதி தொல்லை தனை தீர்த்த சோதி
வொற்றியூர் உறைந்த சோதி குருநாதர் கலந்த சோதி

பிறவா நிலையருளும் சோதி பிறவிக்கு மருந்தான சோதி
வில்லடி பட்ட சோதி வில்வேஸ்வரனாய் நின்ற சோதி

கல்மிதக்க வைத்த சோதி கல்லடி பட்ட சோதி
பிள்ளைக்கறி கேட்ட சோதி தில்லையுள் ளெழுந்த சோதி

அயனு மாலுமறியா சோதி மயக்கம் தீர்க்கும் மகா சோதி
ஆலகால முண்ட சோதி ஆலமரத்தமர் அருஞ் சோதி

ஆனையுரி போர்த்த சோதி அயன்தலை பறித்த சோதி
கங்கை யணிந்த சோதி சங்கடங்கள் தீர்க்கும் சோதி

மூன்று புரமெரித்த சோதி முக்கண்ணுடைய முதற் சோதி
வளர் பிறையை பூண்ட சோதி மலர்கொன்றை சூடிய சோதி

எலிக்கருள் செய்த சோதி புலித்தோல் தரித்த சோதி
நந்திவிலக பணித்த சோதி நந்தனார்க் கருளிய  சோதி

நவகோள்கள் நடுங்கும் சோதி நடு நாயகமாய் நின்ற சோதி
பிட்டுக்கு மண்சுமந்த சோதி பட்டிலூ ரருளும் பரஞ்சோதி

வானுமண்ணுங் கடந்த சோதி ஆணும்பெண்ணுமான சோதி
வன்றொண்டர் போற்றும் சோதி தொண்டர்க்கு தூது சென்ற சோதி

திருவாசகம் எழுதிய சோதி திருவாகீசனாய் நின்ற சோதி
நரியை பரியாக்கிய சோதி உரிதிருடிக் கருளிய  சோதி

வேடன்கண் வாங்கிய சோதி வேடனை கண்ணப்பராக்கிய சோதி
முனிமைந்தனுக் கருளிய சோதி கூற்றுவனை யுதைத்த சோதி

காமத்தை கடந்த சோதி காமனை எரித்த சோதி
ஐம்பூதமாய் ஆன சோதி ஐம்புலன்களை அடக்கும் சோதி

சித்தம்தெளிய அருளும் சோதி சித்தருக்கருளிய சோதி
தொட்டிலூரை தடுக்கும் சோதி பட்டிலூர் உறைந்த சோதி

பந்தபாச மறுக்கும் சோதி வந்தவினை போக்கும் சோதி
குயவனை சோதித்த சோதி குவலயத்துள் நற்பேறளித்த சோதி

வெள்ளை விடையேறும் சோதி கொள்ளை பாவம்போக்கும் சோதி
கடையேனுக் கருளும் சோதி திருவிடைமருதூ ரமர்ந்த சோதி

திங்கள்முடி சூடிய சோதி எங்கள் பட்டிலூர் அமர்ந்த சோதி
வடலூர் வாழும் சோதி வள்ளலார் பார்த்த சோதி

முன்னை எரிக்கும் சோதி பின்னை தவிர்க்கும் சோதி
ஆடிப் படைக்குஞ் சோதி ஆடிக் காத்தழிக்கும் சோதி

தக்கன் வேள்வி தகர்த்த சோதி ஒக்கயெதுவும் இல்லா சோதி
வேதன் தலை பறித்த சோதி வேத நாயகனாய் நின்ற சோதி

அண்டமெல்லாம் கடந்த சோதி அண்டமெல்லா மாளும் சோதி
தொண்டருள்ளம் உறையும் சோதி விண்டவர் காணா சோதி

செல்வமெல்லாம் அருளும் சோதி பட்டிலூர் உறைந்த சோதி
வினையெல்லாம் தீர்க்கும் சோதி திருவாகீசனா யமர்ந்த சோதி .


  - திருவடி முத்து கிருஷ்ணன்