செவ்வாய், ஜூலை 11, 2017

சித்தர் பாடல்கள் ..

          ஞானச் சித்தர்   குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் .



இறைவனை அடைய நற்றவம் இயற்ற வேண்டும் என்பதை தெளிவு பட கூறுகிறார் குணங்குடியார் . நிறைய பாடல்களை பதிவிட முடியாத காரணத்தினால் சில பாடல்கள் மட்டுமே பதிவிடுகிறேன்  . நிறைய பாடல்களில் மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்களை நினைவு படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது .


ஓடியலைந்து மிவ்வைய முற்று முழன்றுழன்றுந் 
தேடியெடுத்த திரவியம் யாவையுஞ் செத்தபின்பு 
நாடி எடுப்பது முண்டோ மறந்து நடக்குநெஞ்சே 
வாடியிறந்தறஞ் செய்வாய் குணங்குடி வாய்த்திடுமே .

பெண்ணாசை யென்கின்றபேய் பிடித்தாடிய பேதைநெஞ்சே 
கண்ணாலதில் வருங்கன்மங்கள் யாவையுங் கண்டிலையோ 
எண்ணதா பாவங்களெண் ணாமற்செய்யுமிப் பேருடம்பு 
மண்ணாக நற்றவஞ் செய்வாய் குணங்குடி வாய்த்திடுமே .  

எஞ்சாணு யரத்திருக்கும் பனையினிறக் கியுண்ணும் 
பஞ்சாக்கர மெனும் பாரிய கள்ளினைப் பாய்ந்தெடுத்துத் 
தஞ்சாவூராளு மகராசன் பாதந் தனைப் பணிந்தால் 
கெஞ்சாக் குணங்குடி கொள்வாயிது புத்திகேள் நெஞ்சமே .

நாட்டமென்றேயிரு வுன்னிரு பாதத்தினன் னிலையின் 
ஓட்டமென்றேயிரு வொன்றான வக்கிர மோதியதின் 
ஆட்டமென்றேயிரு தோற்ற மெவையு மலிபுடைய 
நீட்டமென்றேயிரு நெஞ்சே குணங்குடி வாய்த்திடுமே .

உற்றாரிந்தென்ன பெற்றாரிருந்தென் னுனக்குதவி 
சற்றாயினுமில்லை  சொன்னேன் சொன்னேனிது சத்தியமாய்ச் 
செற்றாலும் வைத்தடி வாங்காம னிற்கிற் செயம்பெறலாங் 
கற்றார் குணங்குடி கொண்டிடுவாய் மனக் கண்மணியே .


                     குணங்குடி சித்தர் பாடல்கள் தொடரும் ..  

           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!   சித்தர்களை போற்றுவோம் !!







வெள்ளி, ஜூலை 07, 2017

சித்தர் பாடல்கள் ........


         ஞானச் சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்




 மனோன்மனிக் கண்ணிகள் என்று மனோன்மணியம்மையை போற்றி யோகம் , வாசி , ஞானம் என்று அனைத்தையும் உள்ளடக்கி நூறு கண்ணிகளாக இயற்றியுள்ளார் .


                  உமையாள் பாதம் காப்பு 

ஆதியந்தங் கடந்தவுமையாள் தன் பாதம்  
     அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் 
சோதியந்தங் கடந்தகண பதியின் பாதம்
      தொழுதிறைஞ்சிக் கரங்குவித்துப் போற்றி செய்து 
வாதியந்தங் கடந்தநந்தி பாதம் என்றும்  
         வாலைமனோன் மணியம்மை பாதம் என்றும்
ஓதியந்தங் கடந்தண்டம் இரண்ட தாக 
         ஒன்றுமறி யாவறி ஞனுரை செய்தானே .  


          மனோன்மணி கண்ணி

மெய் தொழவு மேலும் நந்திகேஸ்வரனைக்
கைதொழவுங் கனவு கண்டேன் மனோன்மணியே  .          1

கோப்பாகவும் உனையான் கொண்டாடிப் பாடவும் நீ
காப்பாக வுங் கனவு கண்டேன் மனோன்மணியே     .         2

பெண்கள் நிர்த்தத் தொடுடையான் பிரியா மனம் புனரக்
கண்களுறங் காக்கனவு கண்டேன் மனோன்மணியே  .   3

மலர்ந்திருக்கும் பொற்கமல மணவறையில் இருவருங்கை
கலந்திருக்கவுங் கனவு கண்டேன் மனோன்மணியே         4

மெய்மஞ்சட் குளிப்புங்கண் விழிப்புமெக் களிப்புமெனைக் 
கைமிஞ்ச வுங்கனவு கண்டேன் மனோன்மணியே              5

மைதீட்ட வுங்கயற்கண் மலரின் மலர்முலையிற் 
கைபூட்ட வுங்கனவு கண்டேன் மனோன்மணியே               6

மெய்தழு வுமிருவர் மெய்யோடு மெய்நெருங்கக் 
கைதெழுவ வுங்கனவு கண்டேன் மனோன்மணியே           7

வாமப் பாலைப் பெருக மறுவாலி பம்வருக
காமப் பாலுண்ணக் கனவு கண்டேன் மனோன்மணியே    8

பாலனா கவுங்கான்ற பாலுணவும் என்னைவிட்டுக் 
காலனே கவுங்கனவு கண்டேன் மனோன்மணியே              9  

வடியா அருளமிர்தம் வடியவடி யக்குணங் 
குடியா ரொடு கனவிற் குடித்தேன் மனோன்மணியே         10


                              குணங்குடியார் பாடல்கள் தொடரும்  ....



                       சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !!    சித்தர்களை போற்றுவோம்  !! 

ஓம் ஸ்ரீ பட்டினத்தாரே சரணம் !!