புதன், அக்டோபர் 02, 2013

சித்தர் பாடல்கள் (அழுகணி சித்தர்)

அழுகணி சித்தர் பாடல்கள்





மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்

மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ!


எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா! 
நிலைகடந்து வாடுறண்டி!


முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தா மிதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா! 
கோலமிட்டுப் பாரேனோ!


சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா! 
தின்றுகளைப் பாரேனோ!


பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ!


எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!


கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிற
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!


ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!


வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!


பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ!


மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ!


அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!


காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ!


உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி!


மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி!


காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ!


தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்!


பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ!


கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ?


கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே!


சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி!


பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி!


கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ!


பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ?


ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேன்டி  
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேன்டி!


தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேன்டி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ?


அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ!


உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ?


காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ?


சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ!


புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ?


வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ!


என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி


முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்துரைக்க லாகாதோ!



எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன் 
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி 
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்குஏவல் செய்யாரோ!



என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய்.



ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ.



கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ?









கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்குறண்டி.



பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
பொற்பூவும் வாசனை
யும் என் கண்ணம்மா
புலன்கள் தெரியவேண்டி.


ஆதிமதி என்னும் அதின் விடாய் தானடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நா
மெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ.



ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுது
ம் கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மைபெற்று வாழ்வார்கள்.



மூலம்நடுவீதி ஆத்தாளே மும்மண்டலத்து அமர்ந்த
நீலகண்ட வத்துவைத்தான் - ஆத்தாளே
     நின்மலனைப் போற்றுவனே.



மேகத்தான் விந்தாச்சு - ஆத்தாளே
     விசயரவிச் சுண்ணாம்பாம்
ஆகச் சிவநீரால் - ஆத்தாளே
     அட்டசித்தி அவள்சக்தி.



இரவி முகத்தாலே - ஆத்தாளே
     ஈசன் என்ற உப்பாச்சு
வருகங்கை தன்னாலே - ஆத்தாளே
     மயமாகச் சுத்தம் செய்தே.



முந்தின உப்பிரண்டும் - ஆத்தாளே
     முழுக்கல்லுப் பொன்னாகத்

தொந்திக்க இவ்விடைக்க - ஆத்தாளே
     சூழ்சீனங் கால்சேர்த்து.



ஆறுதலச்செயநீர் - ஆத்தாளே
     அதிலேகற் சுண்ணாம்பாம்
மீறுமிந்தச் சுண்ணாம்பில் - ஆத்தாளே
     வீரமுடன் கற்பூரம்.



சாரநீரால் அரைத்து - ஆத்தாளே
     தனிக்கவச மேபூசி
ஆறுவகைச் செயநீரால் - ஆத்தாளே
     அதன்மேலே சுத்திவைக்க.



உப்பென்று அறியாரே - ஆத்தாளே
     உலகத்தி லுள்ளோர்கள்
உப்பல்லோ சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     ஊர்க்குள் விலைகூறுதடி.



சவ்வீரம் முப்புச்சுண்ணம் - ஆத்தாளே
     தனிப்பூரம் மேற்பூசி
ஒவ்வாத பான்முகத்தில் - ஆத்தாளே
     ஊடுருவச் சுண்ணாம்பாம்.



காரமிதில் ஏற்றலடி - ஆத்தாளே
     கருஅறியார் தண்ணீரைச்
சீருடனே குத்தியடி - ஆத்தாளே
     தீமுகத்தில் வாட்டிவிடு.



கற்பூரச் சுண்ணமடி - ஆத்தாளே
     கடுங்காரச் சுண்ணமடி
வெற்பாக வைத்தானே - ஆத்தாளே
     வேதைகவர் கோடியடி.



எண்ணெண் சரக்குமடி - ஆத்தாளே
     இப்பூரச் சுண்ணமடி
கண்ணத்தில் வீரர்
     கசதில் சுண்ணாம்பாம்.



அக்காரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     ஆகரெண்டு சுண்ணமதை
உக்காரம் மேற்பூசி - ஆத்தாளே
     உலையிலே வைத்தூத.



எண்ணெய் எல்லாம் போக்குமடி
     இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேற்கவசம் - ஆத்தாளே
     சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம்.



கற்பூரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     கலந்திருந்த இண்டு மடி
செப்பமுள்ள செயநீரால் - ஆத்தாளே
     சேர்த்தாட்டி வீரமிட்டு.



வழமலைக்கு - ஆத்தாளே
     வளமாய்ப் பொதிந்தபின்பு
தழலிலே தானாட்டி - ஆத்தாளே
     சற்குருவாம் உப்பாலே.



உப்புச் சுண்ணங் கற்பூரம் - ஆத்தாளே
     உண்மை சவுக்காரம்
செப்பமுடன் மூன்றுசுண்ணம் - ஆத்தாளே
     சேர்த்துரவியில் இட்டு.



இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே
     எடுத்துத் துருசில் இட்டு
முக்கியமுடன் மேற்கவசம் - ஆத்தாளே
     முன்பூசி வெயிலில் வைக்க.



சுண்ணாம்பு தங்கியிது - ஆத்தாளே
     துடிதாளகம் வெளுக்கும்
சுண்ணாம்பு வங்கமடி - ஆத்தாளே
     துடிலிங்கம் கைமாட்டும்.



சாதிலிங்கச் சுண்ணாம்பு - ஆத்தாளே
     தனிலோகச் சுண்ணாம்பாம்

நாதாந்தச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     நாகமிதிற் சுண்ணாம்பாம்.



சுண்ணாந்தா னாகவடி - ஆத்தாளே
     துடிகெந்த கம்வெளுப்பாம்
சுண்ணாம்பாங் கெந்தகந்தான் - ஆத்தாளே
     துடியானை பட்டுவிடும்.



சூதனடி பட்டாண்டி - ஆத்தாளே
     சூழ்ந்து அங்கந் தான்சேர்க்க
வேதை சவ்வீரனடி - ஆத்தாளே
     மீறும்வகை மூன்றுமொன்றாய்.



சேர்ந்திருக்க வேமணியாம் - ஆத்தாளே
     செம்புவெள்ளி சேர்ந்தேதான்
நூத்துக்கொரு மாவிடவே - ஆத்தாளே
     நூத்தெட்டு மாத்தாகும்.



இத்தங்கம் செந்தூரம் - ஆத்தாளே
     இந்த மணியாலே
சத்தபேதி யாகுமடி - ஆத்தாளே
     தான்பரிச பேதியிதாம்.



மண்டலம் பேதிக்குமடி - ஆத்தாளே
     மலையும் பழுக்குமடி
அண்டத்தை தொட்டாட்ட - ஆத்தாளே
     அடங்காப் பொருளாகும்.



மண்ணேது கல்லேது - ஆத்தாளே
     மரமேது இவ்வேதை
ஒண்ணாது வொண்ணாது - ஆத்தாளே
     ஒடுங்கும் பொருளைப்பேண்.



தாளகம் வெள்ளியிலே - ஆத்தாளே
     தப்பாது பத்தரையும்
பாளித்த லோகச்சுண்ணம் - ஆத்தாளே
     பத்தரையாம் வங்கமதில்.



வீரச்சுண்ணம் வெள்ளியதாம் - ஆத்தாளே
     வெள்ளிபதி னெட்டாகும்
பூரச்சுண்ணஞ் சேர்க்கவடி - ஆத்தாளே
     பொன்வயதோ எண்ணான்காம்.



சிலபற்பம் செம்பினிலே - ஆத்தாளே
     சேர்க்கவய எட்டரையாம்
துலையாக் கவர்கோடி - ஆத்தாளே
     சொன்னார் திருமூலர்.



பார்த்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
     பாசங் குருபாதம்
காத்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
     கைமுறையாம் என்னூல்தான்.



கருவை ஒளியாமல் - ஆத்தாளே
     காசினியில் உள்ளோர்க்குக்
குருவைநாம் காண்பித்தோம் - ஆத்தாளே
     குணமான வாதவித்தை.



உண்டென்ற பேர்க்குமடி - ஆத்தாளே
     உண்டாய் இருக்குமடி
சண்டாளன் ஆனாக்கால் - ஆத்தாளே
     தான்லபிக்க மாட்டாதே.



லபிக்க வழி சொல்லுகிறேன் - ஆத்தாளே
     நந்திதிரு மூலரையும்
லபிக்கக் கா லாங்கியையும் - ஆத்தாளே
     நாதாந்தப் போகரையும்.



சத்தி சிதம்பரமும் - ஆத்தாளே
     சட்டைமுனி பூசைசெய்வாய்
உத்தமக் கொங்கணரை - ஆத்தாளே
     உசிதமாய்ப் பூசைசெய்வாய்.



கருவூரா னானந்தர் - ஆத்தாளே
     கண்டு வழிதெரிந்தோர்

ஒருநெறியாய் இவர்களையும் - ஆத்தாளே
     உண்மையுடன் பூசைசெய்.



சண்டாளன் ஆனாலும் - ஆத்தாளே
     தான்வேதை காண்பானே
கண்டசெய்தி சொன்னோன்நான் - ஆத்தாளே
     கற்பவகை சொல்லுபவனே.



சொல்லுகிறேன் கரிப்பான் - ஆத்தாளே
     சுத்த இலைபரித்துச்
செல்லும் பழச்சாற்றில் - ஆத்தாளே
     செம்பழத் தளவரைத்து.



அரைத்தாவின் நெய்யதனில் - ஆத்தாளே
     அதுசிவக்கக் காய்ந்த
திரமாயோர் பீங்கானில் - ஆத்தாளே
     செப்பமுடன் வைத்தேதான்.



பதனமாய் வண்டுகட்டி - ஆத்தாளே
     பரமென்று நம்பியேதான்
திதிபூரு வந்தனிலே - ஆத்தாளே
     செயல்பொருந்தும் நாள்பார்த்தும்.



அமுதயோ கம்பார்த்து - ஆத்தாளே
     ஆனதொரு கற்பதைக்
குமுதவொலி உண்ணாக்கில் - ஆத்தாளே
     குலாவுகின்ற வாசலிலே.



பெருவிரலால் அதைத்தொட்டு - ஆத்தாளே
     பேதைமனம் எண்ணாமல்
ஒரு நெறியாய் நாலுதரம் - ஆத்தாளே
     உயரவலம் சுற்றிடவே.



நாலுதரம் சுத்திசெய்தால் - ஆத்தாளே
     நன்றாய் அகக்கதவில்
ஆலமுண்டோன் தன்னாணை - ஆத்தாளே
     அஞ்சுகத வுந்திறக்க.



நாற்பதுநாள் கொள்வாரேல் - ஆத்தாளே
     நற்கதவு ஐஞ்சுந் திறக்கும்
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் - ஆத்தாளே
     தேகம் வச்ரகாயமதாம்.



மறவாமற் கற்பவகை - ஆத்தாளே
     மனசாரத் தின்றுவிட்டால்
இறவாமல் அட்டசித்தி - ஆத்தாளே
     இக்கற்பங்கொண்ட பின்பு.



உற்றதொரு கற்பமதை - ஆத்தாளே
     உணவாகத் தின்றுவிட்டால்
செத்திறந்து போவதில்லை - ஆத்தாளே
     திடமா யிருக்குமடி.



கெதிபெற வேணுமென்றால் - ஆத்தாளே
     கேளாம லேகேட்டு
மதியமுதம் கொண்டபின்பு - ஆத்தாளே
     மறுகற்பம் கொண்டிடுவாய்.



வேதாள கற்பமதை - ஆத்தாளே
     விதுவளரும் அட்டமிநாள்
மாதாவிம் மூலிகைக்கு - ஆத்தாளே
     மயமாய்நெய் வேத்யமிட்டு.



நமக்கரித்துத் தரம்நோக்கி - ஆத்தாளே
     நயமாக வாங்கிவந்த
நமக்கார சித்தியுடன் - ஆத்தாளே
     நன்றாய் நிழலுலர்த்தி.



சூரணஞ் செய்தேதான் - ஆத்தாளே
     சுயமான நாள்பார்த்து
மீரும் வெருகடியாய் - ஆத்தாளே
     வேண்டுந்தேன் நெய்சேர்த்து.



கொள்ளவே மண்டலந்தான் - ஆத்தாளே
     கூறுமட்ட சித்தியுண்டாம்

தெள்ளும் அவர்களுக்கு - ஆத்தாளே
     தேவ வருடமதில்.



பதினா யிரவருடம் - ஆத்தாளே
     பண்பாய் இருப்பனடி
ரதிவேதப் பெண்முதலாய் - ஆத்தாளே
     நன்மையுடன் மேவுவர் பார்.



பூலோக மாதர்களை - ஆத்தாளே
     புகலவே ஆகாது
மேலோகப் பெண்கள்சித்தி - ஆத்தாளே
     மேவுதற்குந் தானாகும்.



கையான்சங் காயளவு - ஆத்தாளே
     கறிமிளக திற்பாதி
செய்யாதி மண்டலமே - ஆத்தாளே
     தின்றால் நரைகளில்லை.



திரையில்லை அட்டசித்தி - ஆத்தாளே
     தேகமது எவ்வர்ணமாய்
வரைவச்ர காயமதாம் - ஆத்தாளே
     வயதுமுந் நூறிருப்பன்.



கொடுப்பையிலை லேசாக - ஆத்தாளே
     கொள்வாயோர் மண்டலமே
நடுக்கமில்லை தான் பகலில் - ஆத்தாளே
     நட்சத் திரந்தோன்றும்.



பத்தியம் பச்சரிசி - ஆத்தாளே
     பாலிட்ட சோறாகும்
மத்தொன்றும் ஆகாதே - ஆத்தாளே
     வண்மையுடன் இக்கொடுப்பை.



சமூலம் கழுவிநன்றாய் - ஆத்தாளே
     தயவாய் நிழல் உலர்த்தி
சமூலம் இடித்துநன்றாய் - ஆத்தாளே
     சதிராகச் சூரணஞ்செய்.



பாலில் வெருகடியாய் - ஆத்தாளே
     பதிமண்ட லம்கொளவே
மேலும் வச்ரகாயமடி - ஆத்தாளே
     வேதையுமி நீராலே.



பழுக்கும் நவலோகம் - ஆத்தாளே
     பரமட்ட சித்தியுண்டாம்
அழுக்கெடுத்து வெள்ளீயம் - ஆத்தாளே
     அதில் ஈய நீர்வாங்கும்.



சித்திபெற்ற கற்பமடி - ஆத்தாளே
     தேவ வருடமதில்
அத்தியின் தன்பிலமாய் - ஆத்தாளே
     ஆயிரம் வயதிருப்பாய்.



உத்தமர்க்குச் சொன்னேன்நான் - ஆத்தாளே
     உயர வெளிகண்டதெல்லாம்
பத்தியுள்ள பத்தர்கட்கு - ஆத்தாளே
     பலிக்கும்பார் கண்டாயே.



பத்தியுடன் செய்துவந்தாள் - ஆத்தாளே
     பரம்பொருளுந் தோன்றுமடி
சித்தி அடைந்தவர்க்கு - ஆத்தாளே
     தெரியுமே சோதியுந்தான்.



மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாளே
     மருவிய சோதிதனைப்
பேணித் தொழும்அடியார் - ஆத்தாளே
     பேசாப் பிரமமடி.



அன்றுமுதல் இன்றளவும் - ஆத்தாளே
     அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாக - ஆத்தாளே
     இருந்த ரகசியந்தான்.



ஓங்காரங் கொண்டு - ஆத்தாளே
     உள்மூலந் தான்தெரிந்து

உள்ளுணர்வாய் நின்றிருக்கும் - ஆத்தாளே
     ஓங்காரம் தன்னையுமே
 .

எள்ளுளவா கிலுந்தான் - ஆத்தாளே
     ஏத்தித் துதிப்பாயே.





பாவிகள் தங்களுக்கு - ஆத்தாளே 
     பரிவாக இந்நூலைத்
தாவிக் கொடுக்காதே - ஆத்தாளே
     சண்டாளர் தங்களுக்கே.



அனுபோக கற்பசித்தி - ஆத்தாளே
     ஆகுமிதைப் படித்தோர்
மனுவிக்யா னந்தெரிந்து - ஆத்தாளே
     வாழ்வார் வெகுகோடி.



ஆறாதாரம் 


ஞானநூல் கற்றால் எவன் தற்றுறவு பூண்டால் என்
மோன சமாதி முயன்றால் என் - தானாகி
எல்லாக் கவலையும் ஆற்று இன்புற் றிருப்பதுவே
சொல்லாரும் முத்தி சுகம்.



மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக்
கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம்
சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி
மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே
     முதலெழுத்தைப் போற்றி செய்தேன்.



மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக்
கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம்
சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி
மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே
     முதலெழுத்தைப் போற்றி செய்தேன்.



துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து
மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப்
பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து
செய்யவட்ட மாகியடி - என் ஆத்தாளே
     சீமுல மாச்சுதடி.



நவ்வோடே மவ்வாகி நாலிதழின் மேற்படர்ந்து
உவ்வோடே சவ்வாகி உயர்வுன்னி யூடெழுந்து
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற காலாகி
இவ்வோ டுதித்தாண்டி - என் ஆத்தாளே
     இலங்குகின்ற திங்களடி.



கதிரங்கி யாகியடி கருணையினில் விந்திரங்கி
உதிரம் திரட்டியபடி ஓமென் றதனிலுன்னி
சதுரமது மண்ணாகிச் சதுர்முகனார் வீடாகி
மதுரம் பிறந்துதடி - என் ஆத்தாளே
     வையகனாய் வந்தாண்டி.



மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதிற்பரந்து
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில்முளைத்துச்
செப்பார் இளமுலையார் சீருடனே தானிருந்து
அப்பாலே மாலாகி - என் ஆத்தாளே
     ஆனந்த மானதடி.



உன்னியப்பு மேலேயடி ஓங்கிக் கதிர்பரந்து
மின்னியதில் தான்முளைத்து மேவுகின்ற சீயாகிப்
பன்னிவரு முக்கோணப் பதியதனி லேமுளைத்து
வன்னியென்னும் பேராகி - என் ஆத்தாளே
     மருவுகின்ற ருத்ரனடி.



வீரான வன்னியதன் மேல்நாளந் தான்முளைத்து
ஓராறு கோணமதாய் உள்ளேஓர் காலாகிப்
பேராகி நின்றுதடி பெருங்கிளையாங் கூட்டமதில்
மாறாமல் மாறியடி - என் ஆத்தாளே
     வையத் துதித்தாண்டி.



உதையாமல் என்னைஇப்போது உதைத்தவனும்கீழிறங்கி
மதியான மூலமதில் வந்திருந்துக் கொண்டான்டி
நிதியாம் மிரண்டெலும்பு நீளெலும்பிரண்டாகி
முதியாத மாங்கிசமும் - என் ஆத்தாளே
     மூடி யதிலிருந்து.

மாதவளைக் குள்ளேயடி வந்தவது கீழ்ப்படர்ந்து
போதத்தின் முட்டியடி புகழ்நரம்பை உண்டுபண்ணி
நீதம தாகவிந்த நீள்நிலத்தி லேதிரியப்
பாதமாய் உன்னியடி - என் ஆத்தாளே
     பதியாய் வளர்ந்ததடி.

இருகண்ணின் மேலேயடி இருந்தநரம் பூடுசென்று
பெருநரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி
தரிநரம்பும் ஈரெலும்பாய்த் தான்ஒன்பது எலும்பாய்
விரிநரம்பு போலாக - என் ஆத்தாளே
     மேலாய் நுழைந்ததடி.

இட்ட எழுத்திரண்டில் ஏங்கியதில் மேற்படர்ந்து
எட்டமதி போலெலும்பு வளர்ந்து கவிந்ததடி
எட்டிரண்டும் ஒன்றாகி இருந்தவர்க்கு வீடாச்சு
வெட்டவெளி யானதடி - என் ஆத்தாளே
     மெய்யாய் இருந்துதடி.

அகார உகாரத்தில் ஆசூனி யம்பிறந்து
அகாரந் தனில்இரங்கி அரிமூலம் தன்னில்வந்து
உகாரத்துள் ஆவேறி ஓடி உலாவுவதற்கு
நிகரற்ற நாதனடி - என் ஆத்தாளே
     லிங்கமாய் வந்தான்டி.

கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ
குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
திருவாகி வந்தானோ - என் ஆத்தாளே
     சீர்திருத்த வந்தானோ.

 மெய்ஞ்ஞானம் 


ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணுமென்று
தங்காமல் வந்தொருவன் - என் ஆத்தாளே
     தற்சொரூபங் கொண்டாண்டி.



உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
     காரணமாய் வந்தாண்டி.



ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோ ரட்சரமும்
சூதானக் கேட்டையெல்லாம் - என் ஆத்தாளே
     சுட்டான் துருசாலே.



என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனித்தேனே - என் ஆத்தாளே
     தானிருக்க மாட்டேண்டி.



கல்லில் ஒளியானைக் கருத்தி விளியாளைச்
சொல்லி அழுதாலொழிய - என் ஆத்தாளே
     துயரம் எனக்கு ஆறாதே.



மண்முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேன்டி
விண்முதலாய் ஐம்பொறியும் - என் ஆத்தாளே
     வெந்துவிடக் கண்டேன்டி.



ஆங்காரந் தான்கெடவே ஆறடுக்கு மாளிகையும்
நீங்காப் புலன்களைந்தும் - என் ஆத்தாளே
     நீறாக வெந்துதடி.



போற்றும்வகை எப்படியோ பொறிபேத கம்பிறந்தால்
ஆத்தும தத்துவங்கள் - என் ஆத்தாளே
     அடுக்கழிய வெந்ததடி.



வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி
சுத்துவித்தை அத்தனையும் - என் ஆத்தாளே
     சுட்டான் துருசறவே.



கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன் - என் ஆத்தாளே
     பதியில் இருந்தாண்டி.



எல்லோரும் போனவழி இன்னவிட மென்றறியேன்
பொல்லாங்கு தீரவடி - என் ஆத்தாளே
     பொறிஅழியக் காணேன்டி.



உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்கமடிந்தார்கள்
இக்கோட்டைக் குள்ளாக - என் ஆத்தாளே
     எல்லோரும் பட்டார்கள்.



உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தாக்கால்
கற்கோட்டை எல்லாம் - என் ஆத்தாளே
     கரிக்கோட்டை ஆச்சுதடி.



தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசறவே
கண்ணேறு வாறாமல் - என் ஆத்தாளே
     கருவருக்க வந்தான்டி.



ஓங்காரம் கேட்குதடி உள்ளமெல்லாம் ஒக்குதடி
ஆங்காரம் பட்டுவிழ - என் ஆத்தாளே
     அடியோடு அறுத்தாண்டி.



முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னையறிந்து - என் ஆத்தாளே
     தானொருத்தி யானேன்டி.



என்னை எனக்கறிய இருவினையும் ஊடறுத்தான்
தன்னை அறியவாடி - என் ஆத்தாளே
     தனித்திருக்கல் னேன்டி.



இன்னந் தனியேநான் இங்கிருக்க மாட்டேன்டி
சொன்னசொற் றிரவடிவு - என் ஆத்தாளே
     சுட்டான் துருசறவே.



வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யாச்சுதடி
காட்டுக்கு எரித்தநிலா - என் ஆத்தாளே
     கனாவாச்சு கண்டதெல்லாம்.



நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டலவோ
பகையாரோ விண்டவர்கள் - என் ஆத்தாளே
     பாசம் பகையாச்சே.



என்னையிவன் சுட்டாண்டி எங்கே இருந்தான்டி
கன்னி அழித்தாண்டி - என் ஆத்தாளே
     கற்பைக் குலைத்தான்டி.



உள்ளுரையிற் கள்ளனடி உபாயம் பலபேசிக்
கள்ளக்கண் கட்டியடி - என் ஆத்தாளே
     காலைப் பிடித்தான்டி.



பற்றத்தான் பற்றுவரோ பதியி லிருந்தான்டி
எற்றத்தான் என்றவரோ - என் ஆத்தாளே
     என்னை அறிந்தான்டி.



கண்டாருக்கு ஒக்குமடி கசடுவித்தை அத்தனையும்
பெண்டாக வைப்பனென்று - என் ஆத்தாளே
     பேசாது அளித்தான்டி.



மால்கோட்டை இட்டுமென்னை வசையிலாக் காவல்வைத்
தோல்கோட்டை இட்டடியோ - என் ஆத்தாளே
     தடுமாறச் சொன்னான்டி.



எந்தவித மோஅறியேன் இம்மாயஞ் செய்தான்டி
சந்தைக் கடைத்தெருவே - என் ஆத்தாளே
     தடுமாறச் சொன்னான்டி.



சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்தூடே
பாலத்தில் ஏறியடி - என் ஆத்தாளே
     பங்கம் அளித்தான்டி.



பண்டிவனை நானறியேன் பலகாலம் வந்தான்டி
அண்டி இருந்தான்டி - என் ஆத்தாளே
     ஆகலத்தில் வைத்தான்டி.



பத்தினியாய் என்நாளும் பாடறிந்து சூடாமல்
மத்தியா னத்தில் என்னை - என் ஆத்தாளே
     வாசிரிக்கச் சொன்னான்டி.



வாடைதனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல்
ஆடை குலைத்து எமையும் - என் ஆத்தாளே
     அலங்கோலஞ் செய்தான்டி.



கற்புக் கரசிஎன்ற காரப்பேர் விட்டுஅகலப்
பொற்புக் குலைத்து எமையும் - என் ஆத்தாளே
     போதம் இழந்தனடி.



என்ன வினைவருமோ இன்னதெனக்கு என்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் - என் ஆத்தாளே
     சொல்லறவே வெந்ததடி.



கங்குல்பகல் அற்றிடத்தே காட்டிக் கொடுத்தான்டி
பங்கம் அழித்தான்டி - என் ஆத்தாளே
     பாதகனைப் பார்த்திருந்தேன்.



ஓதியுணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி
சாதியில் கூட்டுவரோ - என் ஆத்தாளே
     சமையத்தாற் குள்ளாமோ.



என்னகுற்றஞ் செய்தேனோ எல்லவருங் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம் - என் ஆத்தாளே
     அறியாரோ அம்புவியில்.



பொய்யான வாழ்வெனக்குப் போதமெனக் கண்டேன்டி
மெய்யான வாழ்வெனக்கு - என் ஆத்தாளே
     வெறும்பாழாய் விட்டுதடி.



சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையென்று
எல்லாருங் கண்டிருந்தும் - என் ஆத்தாளே
     இப்போது அறியார்கள்.



கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேன்டி
உன்மாயம் இட்டவனை - என் ஆத்தாளே
     உருவழியக் கண்டேன்டி.



என்னசெய்யப் போறேன்நான் இருந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு - என் ஆத்தாளே
     காரணமாய்க் காய்த்ததடி.



அந்தவிடம் அத்தனையும் அருளாய் இருந்துதடி
சொந்தம் இடமெல்லாம் - என் ஆத்தாளே
     சுகமாய் மணக்குதடி.



இந்தமணம் எங்கும் இயற்கைமணம் என்றறிந்து
அந்தச் சுகாதீதம் - என் ஆத்தாளே
     அருட்கடலில் மூழ்கினன்டி.



அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே - என் ஆத்தாளே
     சச்சுபலங் கொண்டான்டி.



உள்ளத்தொளி யாகவடி ஓங்காரத்து உள்ளிருக்கும்
கள்ளப் புலன் அறுக்க - என் ஆத்தாளே
     காரணமாய் வந்தான்டி.



கணக்கனார் வாசலது கதவுதான் தாள்திறந்து
பிணக்காத பிள்ளையென்று - என் ஆத்தாளே
     பீடமிடம் பெற்றேன்டி.



மூன்று சுழிவழியே முன்னங்கால் தான்மடித்து
ஈன்று சுழிவழியே - என் ஆத்தாளே
     இசைந்திருந்த மந்திரமும்.



தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே
மூன்றுவழி போகவடி - என் ஆத்தாளே
     முதியமன ஆச்சுதடி.



சுத்த மத்தமற்றே தொண்டராய்த் தொண்டருடன்
அத்திவித்தின் போலே - என் ஆத்தாளே
     அதிகம் அளித்தேன்டி.



வித்துருவத் தோடே விநாயகனைத் தாள்தொழுது
அத்துருவம் நீக்கிபடி - என் ஆத்தாளே
     அறிய அளித்தேன்டி.



மின்னார் விளக்கொளிபோல் மேவுமிதே யாமாகில்
என்னாலே சொல்லவென்றால் - என் ஆத்தாளே
     எழும்புதில்லை என் நாவு.



அரூபமாய் நின்றானை அகண்டபரி பூரணத்தைச்
சொரூபமாய் நின்றிடத்தே - என் ஆத்தாளே
     தோன்றிற்றுத் தோன்றுமடி.



அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும்
சட்சமையம் ஆனதுவும் - என் ஆத்தாளே
     தணலாக வெந்ததடி.



சமையஞ் சமையமென்பார் தன்னைஅறியாதார்
நிமைக்குள் உளுபாயமென்பார் - என் ஆத்தாளே
     நிலமை அறியாதார்.



கோத்திரம் கோத்திரமென்பார் குருவை அறியாதார்
தோத்திரஞ் செய்வோமென்பார் - என் ஆத்தாளே
     சொரூபம் அறியாதார்.



உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி
பெற்றார் இணக்கமடி - என் ஆத்தாளே
     பேரில் பிணக்கமடி.



தேய்ந்த இடத்திருக்கச் சிந்தைஅறியுமனம்
ஆய்ந்த இடமெல்லாம் - என் ஆத்தாளே
     அவசமனம் வீசுதடி.



பேதிச்சு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி
சாதிஇவன் அன்றெனவே - என் ஆத்தாளே
     சமையத்தார் ஏசுவரே.



நல்லோ ருடன்கூடி நாடறிய வந்ததெல்லாம்
சொல்லவாய் உள்ளவர்கள் - என் ஆத்தாளே
     சொல்லி நகைப்பாரோ.



இன்பமுற்று வாழ்ந்ததடி என்மாயம் ஆச்சுதடி
தம்பறத் தள்ளிவிடி - என் ஆத்தாளே
     தனம்போன மாயமடி.



வல்லான் வகுத்தவழி வகையறிய மாட்டாமல்
இல்லான் இருந்தவழி - என் ஆத்தாளே
     இடம் அறியாது ஆனேன்டி.



கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி
மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே
     மலவாசல் மாண்டுதடி.



ஆசாபாசம் அறியா தன்பு பொருந்தினபேர்
ஏசாரோ கண்டவர்கள் - என் ஆத்தாளே
     எவரும் நகையாரோ?



இன்பமுற்ற பேர்கடனை எல்லோரும் பேசுவரோ
துன்பமுற்ற பேர்கடனை - என் ஆத்தாளே
     சொல்லி நகையாரோ?



விண்ணைஎட்டிப் பாராமல் விதத்தை உற்றுப்பாராமல்
மண்ணையெட்டிப் பார்த்தொருவர் - என் ஆத்தாளே
     வலுப்பேசி ஏசுவரோ.



என்னையிவன் கொண்டான்டி இருவினையும் கண்டான்டி
சன்னைசொல்ல விண்டான்டி - என் ஆத்தாளே
     சமையம்பிணக் கானேன்டி.



இந்நிலத்திற் கண்காண ஏகாத மானிடத்தே
கன்னி அழித்தாண்ட - என் ஆத்தாளே
     கற்பைக் குலைத்தாண்டி.



சுத்தத்தார் பார்த்திருக்கச் சூதுபலபேசிப்
பத்தாவாய் வந்திருந்தான் - என் ஆத்தாளே
     பாசமதைத் தாண்டி.



அண்டத்தைக் கட்டியடி ஆசையறுத்தான்டி
தொண்டராய்த் தொண்டருக்கு - என் ஆத்தாளே
     தோற்றம் ஒடுக்கமடி.



கற்பனையும் மூன்றுவிதம் காரமாய்க் கொண்டேன்டி
ஒப்பனையும் அல்லவடி - என் ஆத்தாளே
     ஒடுக்கம் அறியேன்டி.



பாருக்குள் மாயையடி பார்க்கவெள்ளை பூத்ததடி
மேருக்குள் வெண்ணெய்யைப்போல் - என் ஆத்தாளே
     முழங்கிக் கலந்திடவே.



உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு
விண்ணிலே போச்சுதடி - என் ஆத்தாளே
     வெகுபேரைப் பார்த்திருந்தேன்.



இரும்பில்உறை நீர்போல் எனவிழுங்கிக் கொண்டான்டி
அரும்பில் உறை வாசமும்போல் - என் ஆத்தாளே
     அன்றே இருந்தாண்டி.



அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டதுபோல்
மக்கனப் பட்டுள்ளே - என் ஆத்தாளே
     மருவி இருந்தான்டி.



கங்குகரை இல்லான்டி கரைகாணாக் கப்பலடி
எங்கும்அள வில்லான்டி - என் ஆத்தாளே
     ஏகமாய் நின்றான்டி.



தீவரம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயங்காண்
பாவகம் ஒன் றில்லான்டி - என் ஆத்தாளே
     பார்த்திட எல்லாம்பரங்காண்.



உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
     காரணமாய் வந்தான்டி.



அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தான்காண்
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் - என் ஆத்தாளே
     மேவி இருந்தான்டி.



நீரொளிபோல் எங்கும் நிறைந்த நிராமயங்காண்
பாரொளிபோல் எங்கும் - என் ஆத்தாளே
     பரந்த பராபரன்காண்.



நூலால் உணர்வறியேன் நுண்ணிமையை யான்அறியேன்
பாலாறு சர்க்கரைதேன் - என் ஆத்தாளே
     பார்த்தறிந்த பூரணன்காண்.



   அழுகணி சித்தர் பாடல்கள் முற்றிற்று .
 

                               - திருவடி முத்துகிருஷ்ணன்