செவ்வாய், நவம்பர் 24, 2015

63 நாயன்மார்கள் 




இயற்பகை நாயனார் வரலாறு 





          வளமிகுந்த சோழமண்டலத்திலே, காவேரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே , திரு அவதாரஞ் செய்தவர் இயற்பகையார் . இவர் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு இல்லை எனாது அவர்கள் கேட்பதை நிறைந்த மனதோடு கொடுத்து சிவ நெறியில் இருந்து பிறழாது இனிய இல்லறம் நடத்தி வந்தார் .  அப்படி இருக்கும் காலத்தில் ஈசனார் அடியாரது கொடைத்தன்மையை உலகத்தார் அறிய திருவுளம் கொண்டார். 
                           
                  ஒரு நாள் கங்கை சூடியவர் அந்தணர் வடிவந்தாங்கி கண்டவர் கண் கூசும்படி உள்ள தங்கத் திருமேனியிலே முழுநீறு பூசி உருத்திராக்கம் தாங்கி இயற்பகையார் இல்லம் எழுந்தருளினார் . இயற்பகையார் அடியாரை வணங்கி உபசரித்து , ஐயனே , அடியேன் செய்த நற்பேறு தாங்கள் இங்கு எழுந்தருளியது என்று பணிந்து நின்றார் . நம்பெருமான் அடியாரை நோக்கி , சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறாது முக மலர்ச்சியுடன் அவர் கேட்டதை கொடுக்கும் உமது தொண்டை கேள்விப்பட்டு உம்மிடம் ஒரு பொருளை கேட்கவே இங்கு வந்தேன் நீர் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தால் அது என்ன பொருள் என்பதை கூறுவேன்  என்று கூறினார் . அதைக்கேட்ட இயற்பகையார் பெருமானே , சிவபெருமான் அருளால் என்னிடத்தில் அந்தப் பொருள் இருந்தால் அது எம்பெருமான் அடியவர்களுக்கு உரிய பொருளே ஆகும் ஆதலால் நீங்கள் யோசிக்க வேண்டாம் என்ன பொருள் என்று கூறுங்கள் என்று கூறி பணிவோடு நின்றார் . 

                                அதற்கு சிவபெருமான் உமது இல்லாளை விரும்பி இங்கு வந்தேன் என்று கூற , இயற்பகையார் பெருமகிழ்வு கொண்டு அடியேனிடத்து  இருக்கும் பொருளை  விரும்பியது எளியேனின் பாக்கியம் என்று அவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று கற்பில் சிறந்த தம் மனைவியாரை நோக்கி , உன்னை இந்த அடியார் கேட்க கொடுத்து விட்டேன் என்று சொல்ல , அதைக்கேட்ட அவர் மனமிக கலங்கி , பின் தெளிந்து கணவன் சொல் காக்க அடியாருடன் செல்ல சம்மதம் தந்தார்  . உடனே தம் மனையாளை சிவனடியாருக்கு கரம் பற்றி கொடுத்தார் , அவரும் அந்தணருக்கு நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் . இதைக்கண்ட இயற்பகையார் மனமகிழ்ந்து ஐயனே , இன்னும் அடியேன் செய்ய வேண்டிய பணி யாதும் உளதோ என்று வினவ , அந்தணர் உருவில் இருந்த பெருமானும் இந்தப் பெண்ணை யாம் அழைத்துப் போம்போது உமது சொந்த பந்தங்கள் உமக்கு இணக்கமாய் உள்ளவர்கள் , ஊர்க்காரர்கள் , அனைவர்களும் எமக்கு இடையூறு செய்யாத வண்ணம்  இந்த ஊர் எல்லையை யாம் கடக்கும் வரை நீர் துணையாக வரவேண்டும் என்று கூறினார் . அதைக்கேட்ட இயற்பகையார் இந்த செயலை அடியார் சொல்லும் முன் தாம் சிந்திக்க தவறி விட்டோமே என்று வருந்தி போர் வேடந்தாங்கி அந்தனரையும் தம் மனையாளையும் முன்னே விட்டு அவர்களுக்கு காவலாக பின்னே நடக்கலானார் .  

                                   இதைக்கண்ட இயற்பகையார் சுற்றத்தவர்கள் சிவத்தொண்டு என்று தம் மனையாளை இயற்பகை கொடுத்தாலும் மாற்றான் மனைவியை இன்னொருவன் கொண்டு செல்வது மரபா என்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று அந்தனரை நோக்கி , எங்கள் குலப்பெண்ணை விட்டுவிட்டு போ , இது என்ன செயல் என்று ஆவேசமாக அவரை நெருங்க அந்தனர் உருவில் இருந்த ஈசனும் பயம் கொள்வது போல இயற்பகை மனைவியாரை  நோக்க ஐயனே கலக்கம் வேண்டாம் இயற்பகை நாயனார் இவர்களை வெல்லுவார் நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றார் . இயற்பகை நாயனாரும் அங்கு வந்த தம் சுற்றத்தாரை பார்த்து , அடியாரை போக விடுங்கள் இல்லை என் வாளுக்கு இரை ஆவீர்கள் என்று ஆவேசம் போங்க அவர்களை எச்சரிக்கை செய்தார் . அவர்களும் , நீ அறிவிழந்து செய்யும் இந்த செயலைக் கண்டு நாங்கள் போவோம் என்று நினைத்தாயா , ஊரார் நம்முடைய மரபைக் கண்டு நகைக்கும் இச்செயலை வெட்கம் இல்லாமல் செய்யத் துணிந்த உன்னையும் இந்த அந்தனரையும் கொல்வோம் அல்லாது நாங்கள் அனைவரும் மடிந்தாலும் நன்மையே என்று , அடியாரையும் அந்தனரையும் கோபமாக நெருங்க , இயற்பகையார் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து தெறிக்கும் அக்னி போல கோபங் கொண்டவராக உங்கள் அனைவரையும் கொன்றாகினும் அவ்வந்தனரை தடை இன்றி போகச் செய்வேன் என்று யுத்தம் செய்ய தொடங்கினார்.

                          அனைவரையும் வென்று தன்னை எதிர்க்கவும் சுவாமியை தடுக்கவும் ஒருவரும் இல்லை என்றதும் , இயற்பகையார் எம்பெருமானை நோக்கி சுவாமி , நீங்கள் அஞ்ச வேண்டாம் இந்தக் காட்டை தாங்கள் கடக்கும் வரையில் அடியேன் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்றார் . திருச்சாய்க்காடு என்னும் சிவத்தலத்திற்கு அருகில் வந்ததும் சிவபெருமான் அவரிடத்து , இயற்பகையாரே இனி நீர் திரும்பி போகலாம் என்று சொல்ல நாயனாரும் அவர் திருவடிகளை வணங்கி திரும்பினார் . அப்போது , இயற்பகையாரே இங்கே வாரும் என்று சுவாமி சத்தம் போட்டார் . ஏதும் இடையூறு வந்ததோ என்று கோபத்துடன் வாளை எடுத்து அடியேன் வந்துவிட்டேன் என்று ஓடிவர அந்தனர் வேடத்தில் இருந்தவர் மறைந்தருளினார் . மனைவி மாத்திரம் அங்கு நிற்க அந்தனரைக்கானாது திகைத்து நிற்க ஆகாயத்திலே இடப வாகனத்தில் உமா தேவியாருடன் கைலாய மூர்த்தி எழுந்தருளினார் . 

             இயற்பகையாரும் அவர்தம் மனையாளும் ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் அப்படியே மண் மீது விழுந்து வணங்கினார்கள் . சிவபெருமானார் அவர்களை நோக்கி , நம் அடியார்களிடத்து கொண்ட அன்பினால் எதையும் கொடுத்து தன் துணையாளையும் கொடுக்கத் துணிந்த இயற்பகையே ! நீவிர் நம்முடனே வாருங்கள் என்று இயற்பகையாரையும் அவர் மனைவியாரையும் தம் திருவடி நீழலில் இருக்க செய்தார் . இருவரும் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வீட்டில் வாழ்ந்திருந்தார்கள் யுத்தத்திலே மாண்டவர்களும் சிவன் அருளால் சொர்க்கத்தை அடைந்திருந்து இன்புற்று இருந்தார்கள்  . 

                                     
                                     சிவனடியார் பொருட்டு எதையும் கொடுக்கத் துணிந்த இயற்பகையார்  அடியாரிடத்து கொண்ட அன்பின் திறம் அளவிடற்கரியது . அவருடைய பக்தியை போற்றி அவர்தம் புகழினை போற்றுவோம் . 


                           இனி வரும் பதிவுகளை நம்முடைய 

                  sivamejeyam.com என்கிற வலைப்பதிவில் காணுங்கள் 

                      நன்றி .

                                 - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 

     சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!