திங்கள், அக்டோபர் 31, 2011

தியானம்

ஈஷாவின் கிரியா தியானம் 


 கிரியா தியானம் என்பது மிகவும் எளிமையான எல்லோரும் செய்யக்கூடிய ஒரு தியானம் . இந்த தியானம் உங்கள் உடலையும் மனதையும் வேறுபடுத்தி ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் .மனதை நாம் நான் என்று நினைப்பதால் மட்டுமே தொல்லைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது .உங்கள் உடல் வேறு மனம் வேறு நான் என்பது எதுவும் இல்லை என்று உணர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தோடு ஒன்றிப் போய்விட முடியும் . அப்போது அனைத்து சக்திகளும் உங்களுக்கு உள்ளேயே அடங்கும் . பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் வாழ்க்கை அருள் நிறைந்ததாய் , ஆனந்தமயமானதாய் , குருவருளால் நிரம்பப் பெறும் .

    தியானத்திற்கான குறிப்புகள் 

  கண்களை மூடி கால்களை குறுக்காக வைத்து கிழக்கு பார்த்து அமரவும் , உள்ளங்கைகளை மேல் நோக்கி ( கடவுளிடம் யாசகம் கேட்பது போல் ) உங்கள் தொடைகளின் மேல் வைக்கவும் தலை நிமிர்த்தி மேல் முகமாக இருக்க வேண்டும் உங்கள் கவனத்தை புருவ மத்தியில் நிறுத்த வேண்டும் 

மூன்று நிலைகளில் தியானம் ..

   முதல் நிலை 

    உள்மூச்சும் வெளிமூச்சும் மிகவும் மெதுவாக மென்மையாக இருக்க வேண்டும் .

ஒவ்வொரு உள்மூச்சின் போதும் " நான் உடலும் அல்ல " என மனதுக்குள்ளே கூறிக்கொண்டு மூச்சை மெதுவாக உள்வாங்கவும் .

அதே போல வெளிமூச்சின் போதும் " நான் மனமும் அல்ல " என மனதுக்குள்ளே கூறிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளிவிடவும் .

மூச்சு இருதுவாரங்களிலும் சீராக நடக்குமாறு பார்த்துக் கொள்ளவும் இப்படியே ஒரு எழு நிமிடம் முதல் பதினோரு நிமிடம் வரை செய்யுங்கள் .

     இரண்டாம் நிலை 
   
  வாயை முழுமையாக திறந்து " ஆ " என சப்தம் உங்கள் அடிவயிற்றிலிருந்து எழுமாறு உச்சரிக்க வேண்டும் மிகவும் சப்தமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உடலில் அதிர்வு உணரும் வகை , மூச்சு முழுவதும் வெளியேறும் வரை இந்த சப்தத்தை உச்சரிக்கவும் ஏழு முறை உச்சரியுங்கள் .

  மூன்றாம் நிலை 

 முகத்தை மேல் முகமாக வைத்து புருவ மத்தியில் கவனத்தை செலுத்தி ஆறு நிமிடம் இருக்கவும் 

அனைத்தி நிலைகளும் சேர்ந்து மொத்தம் பதினெட்டு நிமிடங்கள் ஆகும் பழகப் பழக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் .

உங்கள் உடலிலோ மனதிலோ என்ன நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மனதை வெறுமனே வைத்துக் கொண்டு அமருங்கள் பயிற்றி செய்யும் போது இடையிடையே நிறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஏனெனில் சக்திகள் ஒருங்கினைவதில் பாதிப்புகள் ஏற்படலாம் 

யார் வேண்டுமானாலும் இந்த தியானத்தை செய்யலாம் . எந்த குறிப்பையும் மாற்றாமல் அப்படியே பின்பற்ற வேண்டும் மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கிரியா தியானம் 

பயிற்றி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் " நான் உடலும் அல்ல " நான் மனமும் அல்ல " என்பதை நாளின் எந்த வேளையிலும் நீங்கள் மனதளவில் நினைவில் வைத்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் .

இந்த தியானத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு கண்டிப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் . ஒரு நாளைக்கு பனிரெண்டு நிமிடங்கள் வீதம் காலை மாலை இருவேளையும் செய்து வந்தால் மனம் லேசாகும் எந்த முடிவும் திடமாகும் நான் என்பது மறைந்து ஆனந்தமான மனிதராக மாறிவிடுவீர்கள் . இதுவே நீங்கள் குருவிற்கு செய்யும் குருதட்சனை ஆகும் . தியானம் செய்வோம் மனநிறைவுடன் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம் .

  நன்றி 

சத்குரு ஆசியுடன் 

உங்கள் அன்பன் விவேகானந்தன் .   






வெள்ளி, அக்டோபர் 21, 2011

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)2

                 சித்தர் சிவவாக்கியர் அருளிய                       
                               சிவவாக்கியம் 

அக்கர மனாதியோ ஆத்துமா வனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவ மனாதியோ
மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே.


ஒன்பதான வாசல்தான் ஒழியுநா ளிருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமவென்னு நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்துநோ யடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந் திருப்பதே.



அள்ளிநீரை யிட்டதேது கங்கையில் குழைத்ததேது
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள்
கள்ளவேட மிட்டதேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்.



அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமோ
உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதுந் தூமைகாணும் பித்தரே.



அழுக்கறத் தினங்குளித் தழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த தவ்விடம் அழுக்கிலாத தெவ்விடம்

அழுக்கிருந்த தவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகிவாழ லாகுமே.



அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்
மணுப்பிறந் தோதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதேது சாவதேது தாபரத்தி னூடுபோய்
நினைப்பதேது நிற்பதேது நீர்நினைந்து பாருமே.


ஆதியாகி அண்டரண்டம் அப்புறத் தப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை யில்லையே.



ஆக்கைமூப்ப தில்லையே ஆதிகார ணத்திலே
நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி வூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே.



அஞ்சுமஞ்சு மஞ்சுமஞ்சு மல்லல்செய்து நிற்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சுமஞ்சு மும்முளே அமர்ந்ததே சிவாயமே.



அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்துநின்ற தேதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு நீசெபிப்ப தேதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவ தேதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரிந்துரைக்க வேண்டுமே.



உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவ தேதடா உடம்பதாவ தேதடா
உயிரையும் உடம்பையு மொன்றுவிப்ப தேதடா
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா.



சுழித்தவோர் எழுத்தையுஞ் சொன்முகத் திருத்தியே
துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான வக்கரம் அடங்கியுள் ளெழுப்பியே
ஆறுபங்கயம் கலந் தப்புறத் தலத்துளே.



உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்து நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குருத்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடுங் குருக்களே



எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென் றணுகிலார்
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேத மன்றியே உண்மை ரெண்டு மில்லையே.



அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே.



வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினஞ்செபிக்கு மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன்வந் தியங்குமே



அகாரகா ரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகா ரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகா ரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகா ரணத்தி
லே தெளிந்ததே சிவாயமே.



அவ்வெழுத்தில் உவ்வுவந் தகாரமுஞ் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றை யொன்றி நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வை யொத்த ஞானிகாள் விரித்து ரைக்க வேணுமே.



ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே.



வானிலாத தொன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத தொன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்

நானிலாத தொன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத தொன்றுமே தயங்கியாடு கின்றதே.



சுழித்ததோர்எழுத்தையுன்னி சொல் முகத்திருத்தியே
துன்பஇன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயங் கடந் தப்புறத்து வெளியிலே.



விழித்தகண் குவித்தபோ தடைந்து போயெழுத்தெலாம்
விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.



நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே
எல்லமஞ் சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்து ளாடுமே.



உயிரகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிரகாரம் ஆயிடும் உடலுகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்ப தச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன்.



அண்டமேழும் உழலவே அணிந்த யோனி உழலவே
பண்டுமால் அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்டிசை கடந்துநின்ற இருண்டசத்தியு உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்ட மாடுமே.



உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூடரே
கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக வும்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே



பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபே ருரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுன்னுமே



நாலதான யோனியுள் நவின்றவிந்து மொன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.



அருவமா யிருந்தபோது அன்னையங்கு அறிந்திலை
உருவமா யிருந்தபோது உன்னைநா னறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரம்ம மானதே.



பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீட டங்குமே.



கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே.



ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே.



எள்ளிரும்பு கம்பிளி யிடும்பருத்தி வெண்கலம்
அள்ளியுண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான மீதிரால்
மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ் சிவாயமே.



ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே.



மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லிரேல்

குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.



அன்னைகர்ப்ப அறையதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.



உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்று நல்கவேணுமே.



பிடித்ததெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோல மத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே.



சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனுநீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலுநீ மூவரான தேவர்நீ
அத்திறமும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.



சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டையேது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டையேது சொல்லிரே பாதகக் கபடரே.



உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீர தானதும்
தண்மையான காயமே தரித்துருவ மானதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.



வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ் செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.



காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகாள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.



பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதிபூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.



மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த திட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.



ஆதிகூடு நாடியோடி காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம்
பேதபேத மாகியே பிறந்துடல் இறந்ததே.



பாங்கினோ டிருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நாருரித்து மூச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே.



பண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.



அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன்ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்றவுண்மை உண்மையே.



அண்ண லாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
தண்ண லான வந்தவன் சகலபுராணங் கற்றவன்

கண்ண னாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ண தாவது ஏதடா உண்மையான மந்திரம்.



உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேணும் அப்பனே.



ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேரவந்து போயிந்த தேகமேது செப்புமே.



என்னகத்துள் என்னை நானெங்குநாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நானறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நானறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாது மொன்றுமில்லையே.



விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்று எண்ணுமீச ன்என்ன கத்துஇருக்கையில்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவி லாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்த தில்லையே.



அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினிம் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினுங் கிலேசம் வந்திருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங்கு ஒலிக்குமே.



மட்டுலாவு தண்டுழாய் அலங்கலாய் புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே.



ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தியன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி யாகிநின்ற தென்கொலாதி தேவனே.



மூன்றுமுப்பத்து ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்றுசோதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த தென்கொலோ நம்ஈசனே.



ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.

ஆறும்ஆறும்ஆறுமாய் ஓரைந்துமைந்தும் ஐந்துமாய்
ஏறுசீரிரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறுமோசை யாய்அமர்ந்த மாயமாய மாயனே.

எட்டும்எட்டும் எட்டுமாய் ஓரேழும்ஏழும் ஏழுமாய்
எட்டுமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சிநின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே.

பத்தினோடு பத்துமாய் ஓரேழினோடும் ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.

வாசியாகி நேசமொன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரராகல் ஆகுமே.

எளியதான காயமீது எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியுங் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.

அஞ்செழுத்து மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் அல்ல காணு மப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் அவ்வுபாயஞ் சிவாயமே.

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே.

ஒன்றையொன்று கொன்றுகூட உணவுசெய் திருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

மச்சகத்துளே இவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்தி கொண்டபின்
இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே.

வயலிலே முளைத்த செந்நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் உய்யுமாற துஎங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே.

ஆடுகின்ற எம்பிரானை அங்குமெங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்த தொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே.

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும்அப் பரத்துளே.

ஏழுபார் ஏழுகடல் இபங்களெட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே.

கயத்துநீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துள்ஈரங் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும் நீயும்நானும் ஒன்றலோ

நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரையுன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழும்
சீரையுன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே.

பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கர
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்தசித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே.

அணுவினோடும் உண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கின் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலையொன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.

மூலமான அக்கர முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ.

முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுர மாகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கு மந்திரத்தின் உண்மையே சிவாயமே.

வண்டலங்கள் போலுநீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும்உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே.

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூரிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே.

பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்த உலாவுகின்ற கோலமென்ன கோலமே.

அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய்பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோக மாதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே.

ஈரொளிய திங்களே இயங்கிநின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டொணா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத் துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின்உட்பயன்
விள்ளொணாத பொருளைநான் விளம்பு மாறது எங்ஙனே.

வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்,
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்க நோக்க நோக்கிடில்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே.

உள்ளினும் புறம்பினும் உலகம்எங்க ணும்பரந்து
எள்ளில் எண்ணெய்போலநின்று இயங்கு கின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்த மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே.

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.

சாணிரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே
பேணியப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சுமோர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே.

அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த வெண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.

ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூல ம்ஆதலால்
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும்அஞ் செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே.

மூலவாசல் மீதுளே முச்சதுர மாகியே
நாலுவாசல் எண்விரல் நடுவுதித்த மந்திரம்
கோலமொன்று மஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே.

சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்தவாதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்தஅஞ் செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே.

சுற்றமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவதுஉம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரானிருந்த கோலமே.

மூலமென்ற மந்திரம் முளைத்தஅஞ் செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலமுண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்
ஓலமென்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே.

தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமு நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

மூன்றுபத்து மூன்றையும் முன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்றலை
ஏன்றுவைத்த வைத்தபின் இயம்பும்அஞ் செழுத்தையும்
தோன்றவோத வல்லிரேல் துய்யசோதி காணுமே.

பூவிலாய ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறு வேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே.

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தவப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே.

மனவிகார மற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவரோதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே.

இட்டகுண்டம் ஏதடா இருக்குவேதம் ஏதடா
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.

நீரிலே முளைத்தெழுந்த தாமரையின்ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே.

உறங்கிலென் விழிக்கிலென்உணர்வுசென் றொடுங்கி லென்,
சிறந்தஐம் புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்,
புறம்புமுள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய்,
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேனும் இல்லையே.

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதமென்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதமொன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யானுணர்ந்த நேர்மையே.

பொங்கியே தரித்தஅச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமாது ளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே.

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாது எங்ஙனில்
கண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.

ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்று அறிமினோ அனாதிநின்ற ஆதியே.

உதித்தமந் திரத்தினும் ஒடுங்குமக் கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ
மதித்தமண் டலத்துளே மரித்துநீ ரிருந்தபின்
சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே.

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்தசீடனும்
பருத்திட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்
மேருவுங் கடந்தஅண்ட கோளமுங் கடந்துபோய்
எழுத்தெலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே
யானுநீயு மேகலந்த தென்ன தொன்மை ஈசனே.

ஓம்நமோ என்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானுநீயும் உண்டடா நலங்குலம் அதுண்டடா
ஊனுமூணும் ஒன்றுமே உணந்திடாய் எனக்குளே.

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நம்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ
ஐம்புலனை வென்றிடா தவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதுங் கொடுப்பதும் அவத்தமே.

ஆணியான ஐம்புலன்கள் அவையுமொக்குள் ஒக்குமோ
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல்
ஊணுறக்க போகமும் உமக் கெனக்கும் ஒக்குமே.

ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.

புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரு தாமியங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.

மவுன அஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானு மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமையென்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானுநீயும் கண்டதே.

வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே.

ஆகிகூவென் றேஉரைத்த அக்ஷரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கும் இங்குமாய்
ஏகமேக மாகவே இருப்பர்கோடி கோடியே.

கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்
தேடிதேடி தேடிதேடி தேகமும் கசங்கியே
கூடிக்கூடி கூடிக்கூடி நிற்பர் கோடிக்கோடியே.

கருத்திலான் வெளுத்திலான் பரனிருந்த காரணம்
இருந்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டு மாகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்திற்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.

வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதியூதி ஊதியூதி ஒளிமயங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடையெருப் பொறுக்குவோன்
சாதிசாதி சாதிசாதி சாகரத்தைக் கண்டிடான்.

ஆண்மையாண்மை ஆண்மையாண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதிரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே.

மிங்குவென்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகுமேகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி.

சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சமுங் கண்டறிந்தோன் ஞானியே

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.

சூக்ஷமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீக்ஷையான தீவிலே சிறந்ததே சிவாயமே.

பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும்
தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமுந்
கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுட ர்உதித்ததே சிவாயமே.

உதித்தெழுந்த வாலையும் உசங்கிநின்ற வாலையும்
சதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹு வுங் ஹீயுமானதே.

கூவுங்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள் போல் பொருந்திநின்ற பூரணம்
ஆவியாவி ஆவியாவி அன்பருள்ளம் உற்றதே.

ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியைக்
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.

ஆவியாவி ஆவியாவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.

வித்திலே முளைத்தசோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே யொளிவதாகி மோனமான தீபமே
நத்திலோ திரட்சிபோன்ற நாதனை யறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.

மாலையோடு காலையும், வடிந்து பொங்கும், மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.

மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகமென்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயாமே.

உச்சிமத்தி வீதியில்ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின் றுலாவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே.

அஞ்சிகொம்பில் நின்றநாத மாலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பரந்துநின்ற மோனமே.

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரனிருந்த ஹூவிலே
இடுதியென்ற சோலையிலிருந்த முச் சுடரிலே
நடுதியென்று நாதமோடி நன்குற அமைத்ததே.

அமையுமால் மோனமும் அரனிருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார்.

பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.

சோதிசோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
வாதிவாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.

சுடரதாகி எழும்பியெங்கும் தூபமான காலமே
இடரதாகிப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றவாதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.

நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றியற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்

வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே.

தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்துநின்ற சூக்ஷமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே.

தேசிகன் கழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.

உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.

உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோலக் கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹு விலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.

ஆறுமூலைக் கோணத்தில் அமைந்த வொன்ப தாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறுமென்று ஐவரங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பறந்ததே சிவாயமே.

பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும் ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே.

அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹு வும் ஹீயுமானதே.

ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே
தானந்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு மாறுபோல் விரிந்ததே சிவாயமே.

ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே.

வாயில் கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்த துந்தலைமன்னா யுறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே.

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் நீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரியால யங்கடந்து மூலநாடி ஊடுபோய்.

அடிதுவக்கி முடியளவும் ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.

மந்திங் கள்உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங் கள்ஆவது மரத்திலூற ல்அன்றுகாண்
மந்திரங் கள்ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணமேதும் இல்லையே.

மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ள்உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங் கள்ஆவது மனத்தின்ஐந் தெழுத்துமே.

உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேண்டும் மாந்தரே.

ஓரெழுத்து லிங்கமாய் ஓதுமட்ச ரத்துளே
ஓரெழுத்து யங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.

முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த அப்புனல்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றுமோர் எழுத்தினோடு சொல்ல ஒன்ம்இமில்லையே.

வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.

முப்புரத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம்அஞ் செழுத்துமாம்
தற்பரம் உதித்துநின்ற தாணுவெங்கும் ஆனபின்
இப்பறம் ஒடுங்குமோடி எங்கும் லிங்கமானதே.

ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்ட வெளியும் ஆனதே.

உருத்தரித்த போது சீவன்ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயமம் அஞ்செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலமேந்து நாதனே.

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது காரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலம் ஏந்துநாதனே.

ஆனவன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட் டுஅலர்ந்தது
ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதான தானதா அவலமாய் மறைந்திடும்.

ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரங் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே

எங்குமெங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகம் ஒன்றலோ
அங்குமிங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்குதா பரங்களும் தரித்துவாரது ஒன்றலோ
உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.

அம்பரத்தில் ஆடுஞ்சோதி யானவன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததும்
அம்பரக் குழியிலே அங்கமிட் டுருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடியாடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே.

விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகங் கண்டதோ
தட்டுருவ மாகிநின்ற சதாசிவத் தொளியதோ
வட்டவீடறிந்த பேர்கள் வானதேவ ராவரே.

வானவர் நிறைந்த சோதி மானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்துமன்னு மாணிக்கங்கள் ஆனவே.

பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள்நின்று வேரிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவனின்று இயங்கிடும்
பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம மானதே.

உச்சிகண்டு கண்கள் கட்டிஉண்மைகண்டது எவ்விடம்
மச்சுமாளி கைக்குள்ளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோக மாய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே.

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியுமங் கொம்பிலே உலர்ந்தது
ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம்
அட்சரத்தை யுந்திறந்த சோரமிட்ட லர்ந்ததும்
அட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்,
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தானமர்ந்தது ஒக்குமே.

கோயிலெங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயுவாயு ஒன்றலோ சிவனுமங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.

காதுகண்கள் மூக்குவாய் கலந்துவாரது ஒன்றலோ
சோதியிட் டெடுத்ததும் சுகங்களஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்துவாரது ஒன்றலோ
நாதவீடறிந்த பேர்கள் நாதராவர் காணுமே.

அவ்வுதித்த வட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்த உண்மையே.

அகார மென்னும் அக்கரத்தில் அக்கர மொழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தி அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.



         அடுத்த பதிவில் தொடரும் ..............