வெள்ளி, ஜூலை 29, 2011

சைவ நூல்கள்


                             
   
சிவஞான முனிவர் அருளிய     சோமேசர் முதுமொழி வெண்பா

                                             காப்பு


மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்
முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்
கடம்பொழி முக்கட் களிறு.


                                1. கடவுள் வாழ்த்து

சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்
சோரவிலடை யாற்றளிந் தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு


                                2. வான்சிறப்பு

நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்
துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.


                            3. நீத்தார் பெருமை

அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்
சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.


                           4. அறன்வலியுறுத்தல்

தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்
தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.


                             5. இல்வாழ்க்கை

இல்வாழ் தரும னியற்சந் திரசேனன்
தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.


                        6. வாழ்கைத்துணை நலம்

மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசுயை சோமேசா - மேவுபிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.


                      7. புதல்வரைபெறுதல்

பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்
சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்
தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.


                           8. அன்புடைமை

தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து
தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்.


                          9. விருந்தோம்பல்

பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்
சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.


                         10. இனிவை கூறல்

இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்
துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


                        11. செய்நன்றி அறிதல்

பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்
கொள்வர் பயன்தெரி வார்.


                         12. நடுவு நிலைமை

வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.


                         13. அடக்கம் உடைமை

எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்
யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்
சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


                         14. ஓழுக்கம் உடைமை

தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்
துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்
ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.


                         15. பிறன் இல் விழையாமை

ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற
பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.


                        16. பொறை உடைமை

ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு
பொன்றுந் துணையும் புகழ்.


                         17. அழுக்காறாமை

அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்
துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.


                           18. வெஃகாமை

நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை
துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.


                              19. புறங்கூறாமை

கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே
தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தோறா தவர்.


                             20. பயன் இல  சொல்லாமை

சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே
துக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.


                              21. தீவினை அச்சம்

குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்
சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


                               22. ஒப்புரவு அறிதல்

பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்
தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை
செய்யா தமைகலா வாறு.


                                 23. ஈகை

மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்
தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.


                                24. புகழ்

போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்
தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்
ஈத லிசைபட வாழ்த லதுவல்லது
ஊதிய மில்லை யுயிர்க்கு.


                            25. அருள் உடைமை

மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்
சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த
பொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்
அற்றார்மற் றாத லரிது.


                             26. புலால் மறுத்தல்

மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.


                             27. தவம்

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.


                            28. கூடா ஒழுக்கம்

மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி
தூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.


                            29. கள்ளாமை

நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்
கள்ளமை காக்கதன் நெஞ்சு.


                               30. வாய்மை

பிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு
துள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.


                            31. வெகுளாமை

பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.


                             32. இன்னா செய்யாமை

பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்
துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்
பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.


                                    33. கொல்லாமை

வேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்
சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீங்கும் வினை.


                                 34.நிலையாமை

ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்
தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.


                                    35. துறவு

கோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்
தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.


                               36.மெய்யுணர்தல்

காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்
சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.


                                      37. அவா அறுத்தல்

தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது
தூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.


                                   38. ஊழ்

முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்
துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.


                               39.இறைமாட்சி

பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்
சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு.


                                     40. கல்வி

சம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப
தும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.


                               41. கல்லாமை

மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.


                              42. கேள்வி

ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே
தூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தி னூற்றாந் துணை.


                          43. அறிவுடைமை

அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்
துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்
அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவது
அஞ்ச லறிவார் தொழில்.


                        44. குற்றம் கடிதல்

ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்
சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்
வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


                      45. பெரியோரைத் துணைகோடல்

எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே
சுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.


                          46. சிற்றினம் சேராமை

அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்
சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.


                         47.தெரிந்து செயல்வகை

சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.


                           48. வலி அறிதல்

சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.


                             49. காலம் அறிதல்

வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு
தூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


                        50. இடனறிதல்

காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்
தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.


                      51. தெரிந்து தெளிதல் 

தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்
சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.


                         52. தெரிந்து வினையாடல்

தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்
தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.


                        53. சுற்றம் தழால்

ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்
சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.


                        54. பொச்சாவாமை

முப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே
துப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


                           55. செங்கோன்மை

மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்
சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.


                           56. கொடுங்கோன்மை

ஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்
துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.


                        57. வெருவந்த செய்யாமை

வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.


                            58. கண்ணோட்டம்

மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்
தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.


                              59. ஒற்று ஆடல்

வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்
சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்
எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.


                           60. ஊக்கம் உடைமை

வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


                              61. மடி இன்மை

பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி
தொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.


                              62. ஆள் வினை உடைமை

கூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே
தோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.


                         63. இடுக்கண் அழியாமை

என்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்
துன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.


                              64. அமைச்சு

கால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்
தூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லதமைச்சு.


                               65. சொல் வன்மை

நித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்
துய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்
ஆக்கமும் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு


                                 66. வினைத் தூய்மை

தக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்
எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று


                                67. வினைத் திட்பம்

செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்
துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி யன்னாருடைத்து.


                                68. வினைச் செயல் வகை

வெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித்
துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள
முடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.


                                       69. தூது

தன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதி
துன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும்
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது.


                        70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.


                                71. குறிப்பு அறிதல்

அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்
துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்
ஐயப் படாஅ தகத்த துணர்வானை
தெய்வத்தோ டொப்பக் கொளல்.


                               72. அவை அறிதல்

ஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்
சோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்
கற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்
சொற்றெறிதல் வல்லா ரகத்து.


                              73. அவை அஞ்சாமை

வாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்
சூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல
ஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.


                                  74. நாடு

மேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.


                                  75. அரண்

வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்
தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க ணில்லா தரண்.


                              76. பொருள் செயல்வகை

உக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்
றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.


                                77. படை

நீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே
தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.


                                78. படைச் செருக்கு

மன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்
துன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.


                                     79. நட்பு

வாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்
தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி
நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.


                                80. நட்பு ஆராய்தல்

போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்
தோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே
ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.


                                81. பழைமை

இல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்
தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.


                              82. தீ நட்பு

ஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்
தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்
ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.


                                83.கூடா நட்பு

தாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்
நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.


                              84. பேதைமை

வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்
துன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்.


                           85. புல்லறி ஆண்மை

இல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்
தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்
ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.


                                 86. இகல்

எத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்
துய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னை மென்னுஞ் செருக்கு.

                                  87. பகைமாட்சி

ஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்
தூநறும்பூ வாளியான் சோமேசா - மான
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார் மென்மேக பகை.


                          88. பகை திறம் தெரிதல்

நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்
சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.


                               89. உட்பகை

மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்
தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.


                            90. பெரியாரைப் பிழையாமை

கொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்
ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.


                         91. பெண் வழிச் சேரல்

கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்
சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி
இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.


                            92. வரைவு இல் மகளிர்

வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.


                              93. கள் உண்ணாமை

தக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்
தொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.


                                    94. சூது

முற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு
சொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம்
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு.


                                95. மருந்து

நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்
சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய
நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்


                                  96. குடிமை

மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்
துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்
வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைபிரித லின்று.


                                 97. மானம்

அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்
துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.


                             98. பெருமை

தண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்
சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.


                               99. சான்றாண்மை

வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்
தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.


                                 100. பண்புடைமை

உன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்
துன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று


                               101. நன்றி இல் செல்வம்

எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்
சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து


                                102.நாண் உடைமை

புண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்
துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்
நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்


                                 103. குடி செயல் வகை

மற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே
சுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி


                                      104. உழவு

வேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்
சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.


                                      105. நல்குரவு

நற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்
சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்
நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.


                                        106. இரவு

கஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து.


                                     107. இரவு அச்சம்

எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு
இரவி னிளிவந்த தில்.


                                     108. கயமை

ஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்
தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லாத வர்க்கு.


                                   109. தகை அணங்கு உறுத்தல்

வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்
தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்
உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.


                                 110. குறிப்பு அறிதல்

காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்
தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்
உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப்படும்.


                                111. புணர்ச்சி மகிழ்தல்

மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்
சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணானுலகு.


                                112. நலம் புனைந்து உரைத்தல்

ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்
தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு.


                             113. காதல் சிறப்பு உரைத்தல்

கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்
தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்
வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து.


                          114. நாணுத் துறவு உரைத்தல்

காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்
சோமநுதற் பரவை சோமேசா - ஆமே
கடலென்ன காமமுழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.


                            115. அலர் அறிவுறுத்தல்

ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை
சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்
கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.


                             116. பிரிவு ஆற்றாமை

வாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்
சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு
இன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்
இன்னா தினியார்ப் பிரிவு.


                              117. படர் மெலிந்து இரங்கல்

இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு
இன்பங் கடன்மற்றுக் காமம் அஃது அடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது.


                             118. கண் விதுப்பு அழிதல்

தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்
சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்
கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.


                                 119. பசப்பு உறு பருவல்

கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்
சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்
பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை துற்றா ரெனின்.


                                120. தனிப் படர் மிகுதி

பன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்
துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.


                               121. நினைந்து அவர்  புலம்பல்

தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்
துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்.


                               122. கனவு நிலை உரைத்தல்

அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்
சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல
நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதெ யினிது.


                           123. பொழுது கண்டு இரங்கல்

வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே
தூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.


                            124. உறுப்பு நலன் அழிதல்

ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்
சூதரா வான்மீகி சோமேசா - கோதில்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.


                         125. நெஞ்சொடு கிளத்தல்

அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்
துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே
இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.


                              126. நிறை அழிதல்

கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்
தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.


                           127. அவர் வயின் விதும்பல்

சந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்
சுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்.


                        128. குறிப்பு அறுத்தல்

சங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்
துங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.


                               129. புணர்ச்சி விதும்பல்

யோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்
தூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.


                           130. நெஞ்சொடு புலத்தல்

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்
தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே
நீயெமக் காகா தது.


                                         131. புலவி

கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்
றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.


                               132. புலவி நுணுக்கம்

சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே
தூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே
தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீர ராகுதி ரென்று.


                              133. ஊடல் உவகை

காயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்
தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்
ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்
கூடலிற் காணப் படும். 


இந்த சோமேசர் முதுமொழி வெண்பா அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133பாக்களால் தொகுக்கப்பட்ட அருமையான பாடல்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக