திங்கள், ஜூலை 18, 2011

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள்

திருப்பாடல் திரட்டு


பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது


1. திருவேகம்பமாலை
2. 
திருத்தில்லை
3. 
முதலாவது கோயிற்றிருவகவல்
4. 
இரண்டாவது கோயிற்றிருவகவல்
5. 
மூன்றாவது கோயிற்றிருவகவல்
6. 
நான்காவது கச்சித் திருஅகவல்
7. 
அருட்புலம்பல் 
8. 
அருட்புலம்பல் 
  1. திருவேகம்பமாலை 
    அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
    துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
    மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
    இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1

    கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
    வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
    கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
    எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2

    கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
    அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
    ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
    எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3

    நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
    நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
    உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
    என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4

    நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
    அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
    இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
    எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5

    பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
    வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
    செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
    இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6

    பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
    இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
    குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
    இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

    அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
    சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
    பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
    என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

    மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
    வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
    தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
    தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10

    வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
    சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
    நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
    எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11

    காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
    மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
    தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
    ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12

    ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
    பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
    சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
    யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13

    சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
    கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
    பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
    ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14

    பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
    தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
    அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
    இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15

    பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
    துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
    வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
    இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16

    பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
    அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
    வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
    எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17

    வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
    தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
    மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
    ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18

    ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
    தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
    ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
    றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19

    அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
    தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
    செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
    இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20

    நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
    தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
    காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
    ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21

    ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
    போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
    கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
    ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22

    பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
    கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
    புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
    எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23

    நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
    சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
    போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
    ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24

    கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
    சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
    நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
    இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25

    வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
    தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
    தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
    ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26

    ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
    பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
    காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
    யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27

    சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
    பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
    அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
    எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28

    முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
    மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
    பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
    இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29

    பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
    மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
    பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
    இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30

    பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
    பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
    காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
    ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31

    நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
    பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
    சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
    எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32

    சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
    விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
    படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
    இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33

    நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
    சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
    கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
    ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

    சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
    திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
    மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
    எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35

    விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
    பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
    அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
    இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36

    எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
    வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
    சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
    எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37

    பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
    தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
    உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
    என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

    கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
    கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
    நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
    இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39

    கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
    தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
    நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
    என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

    ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
    பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
    சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
    ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

    வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
    கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
    அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
    இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42

    திருவேகம்பவிருத்தம்

    அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
    அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
    பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
    பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
    மூடனாயடி யேனும றிந்திலேன்,
    இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
    என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

    2. திருத்தில்லை 
    காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
    தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
    போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
    சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1

    சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
    ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
    நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
    ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2

    அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்
    நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
    குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
    விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3

    ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
    கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
    நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
    தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4

    பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி
    வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
    பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்
    சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5

    கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
    கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
    சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
    செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

    முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
    பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
    பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
    ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7

    காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்
    சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
    மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
    ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8

    ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
    பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்
    பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
    போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9

    ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள
    வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
    லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்
    தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10

    ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
    மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
    காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி
    யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11

    அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
    மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த
    நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்
    குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12

    தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்
    பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?
    மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?
    கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13

    உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்
    கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்
    கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று
    தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14

    வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
    தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி
    யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த
    கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15

    பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
    லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
    அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
    மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16

    தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்
    புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை
    அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்
    செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17

    நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
    பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்
    மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு
    காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18

    ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்
    போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்
    சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
    ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19

    அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
    நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
    கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
    எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20

முதலாவது கோயிற்றிருவகவல்

நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!

இரண்டாவது கோயிற்றிருவகவல் 

காதள வோடிய கலகப் பாதகக்
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5

தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10

நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15

மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20

ஈமக் கனலி லிடுசில விருந்து;
காமக் கனலிற் கருகுஞ் சருகு;
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25

பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை, காலைக்
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30

அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையு மமையும் பிரானே, யமையும் 35

இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38

மூன்றாவது கோயிற்றிருவகவல் 

பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5

இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10

ஆண மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20

எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45

அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50

எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக