புதன், ஜூலை 20, 2011

தெரிந்து கொள்ள வேண்டியது

அண்ணாமலை...அண்ணாமலை....திருவண்ணாமலை


அண்ணாமலையின் கிளி கோபுரத்தின் வழியே உள்ளே சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டபம். மகிழ மரத்தைக் காணலாம். இம் மகிழ மரத்தின் கீழ் நின்று பார்த்தால் திருக்கோயிலின் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேரத் தரிசிக்கலாம். திருவண்ணாமலை திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தால் ஆயிரத்தெட்டு லிங்கங்களையும், நூற்றெட்டு லிங்கங்களையும், நடராசர் சன்னதியையும் காணலாம். மூன்றாம் பிரகாரத்தில் அண்ணாமலையார் தவயோகியாக சூட்சும வடிவில் உள்ளார். இதன் காரணமாக இங்கு அமர்ந்து தியானம் செய்தால் ஆழ்ந்த அமைதி பெறலாம்.

மாணிக்கவாசகர் கோயில்கள்
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனிச் சன்னதி அமைந்த சில கோயில்கள்.
1. ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை) ஆத்மநாதர் கோயில் - மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்த தலம்.
2. மதுரை திருவாதவூர் - மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
3. சின்னமனூர் (தேனி மாவட்டம்) - தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் பொருட்டு அமைக்கப்பட்ட கோயில். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன், அம்பாள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர்.
4. உத்தரகோசமங்கை மங்களநாதர் - சிவன், மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.
5. சிதம்பரம் நடராஜர் - மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல இறைவனே, திருவாசகத்தை எழுதிய திருத்தலம். சிவனுடன் மாணிக்கவாசகர் ஐக்கியமான இங்கு, தில்லைக்காளி கோயில் அருகில் இவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.








நிவேதனம் படைப்பது ஏன்?



தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலை நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, லட்டு, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள், நிவேதனம் என்பதன் பொருள் அறியாமல் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அதற்கு அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலையைப் போட்டு பத்தி, சாம்பிராணி காட்டி நிவேதனம் செய்வது விசேஷநாட்களுக்கு மட்டும் தான் கருதுகிறார்கள். இந்த நிவேதனத்தை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?


நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.


ருத்ராட்ச மாலையை அணியும் முறை


குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது  - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.



ருத்ராட்ச வடிவங்கள்
ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்



ருத்ராட்சையின் பிற பெயர்கள்


ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.


ருத்ராட்ச சிவலிங்கம்


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.


ருத்ராட்சத்தால் ஆன அம்மன்


கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.



நந்தியில் காதில் கோரிக்கை வைக்கலாமா?



ஆகமங்களில் ஆலய அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் ஆலய மூர்த்திகளைத் தொடக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது.  பலர் நந்தி பகவானின் காதுகளில் தங்களின் பிரார்த்தனைகளைக் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். எனினும், அவ்வாறு செய்யும்போது தவறுதலாக நாம் நந்தியெம்பெருமானைத் தீண்டுவதாக அமைய நேரியடலாம். அது மட்டுமல்லாமல் நமது காற்று அவரின்மேல் பட்டாலோ, துர்நாற்றம் அவரின்மேல் பட்டாலோ அதனால் நமக்கு தோஷம் ஏற்படும். ஆகவே, இவற்றைத் தவிர்க்க நாம் நந்தியெம்பெருமானின் இடதுபுறம் வடக்கு நோக்கி நின்றுகொண்டு கைகூப்பி மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் நமது கோரிக்கைகளை மனதினால் தெரிவிக்கலாம். கண்டிப்பாக அவை, பரம்பொருளான சிவபெருமானால் அனுக்கிரகிக்கப்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.





சமையல் செய்யும்போது கவனிக்க வேண்டியது

சமையல் செய்யும்போது, மனதில் ஏதோ குடும்பப் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டு பொங்கினால், அந்த உணவால், சாப்பிடுகின்ற அத்தனை பேர் மனமும் பாதிக்கும். எந்த உணர்வுடன் அந்த உணவு சமைக்கப்பட்டதோ, அதே உணர்வு தான் சாப்பிட்ட அனைவருக்கும் ஏற்படும். ஆனால், இறைநாமத்தை சொல்லிய படியோ, பக்தி பாடல்களை பாடிய படியோ சமைத்தால், நிச்சயம் அந்த உணவிற்கு தனி சக்தி ஏற்படும். அது, சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நன்மையைத் தரும். பெண்கள் சமையல் செய்யும்போது சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே சமைக்கலாம். குழந்தை படிக்கவில்லையே.... வந்தவுடன் அவனை உதைக்க வேண்டும், கணவரின் போக்கு சரியில்லையே, அவரை இன்று ஒரு கை பார்த்து விட வேண்டும், மனைவி சம்பளத்தை ஒழுங்காக தரமாட்டேன் என்கிறாள், இன்று உண்டா இல்லையா என மல்லுக்கட்ட வேண்டும் என்ற எண்ணங்களுடன் சமைக்காமல், இறை கீதங்களை மனநிறைவுடன், நிஜமான பக்தியுடன் பாடியபடியே சமைத்தால், காலப்போக்கில் உணவே, மருந்தாகி, அத்தனை பேர் மனமும் திருந்திவிடும். பக்திக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது.




நன்றி : தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக