புதன், ஜூலை 06, 2011

64 திருவிளையாடல்

           இந்திரன் தோஷம் தீர்த்தப் படலம்!



                         ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது, அந்த ஊர் பற்றிய விபரங்களை விபரமறிந்தவர்களிடம் கேட்டோ, இணையத் தளங்கள் மூலம் அறிந்தோ செல்வது அங்கு சென்று வர எளிதாக இருக்கும். புராணங்களைப் படிக்கும் முன்பும் அப்படியே. புராணக்கதைகளை மட்டும் படித்தால் போதாது. அதை எழுதியவர் யார், அவரைப் பற்றிய விபரம், எந்தச் சூழ்நிலையில் எழுதினார், அவரை எழுதத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டால், படிப்பவர்களுக்கு அதுபற்றிய முழுமையான விபரமும் தெரியவரும். திருவிளையாடல் புராணம் இன்று துவங்குகிறது. 


கூடல்மாநகராம் மதுரையில் சிவபெருமான் செய்த அற்புதலீலைகளை ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லியுள்ளார்கள். வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது. வேதாரண்யத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகனே பரஞ்சோதி. தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். நீறிட்ட உடலுடன் வேதாரண்யத்து பெருமானை துதித்து வந்த பதஞ்சலி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரையம்பதிக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமான் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் இனிய பாடல்களை வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். இது 64 படலங்களைக் கொண்டது. முதல் 18 படலங்கள் மதுரை காண்டம் என்றும், 19 முதல் 48 வரையான படலங்கள் கூடற்காண்டம் என்றும், 49 முதல் 64 வரையான படலங்கள் திருவாலவாய் காண்டம் என்றும் பெயர் பெற்றுள்ளன.


பிரம்மா ஒருமுறை ஒரு தராசுத் தட்டில் கைலாயத்தை ஒரு தட்டிலும், மதுரையம்பதியை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தார். அப்போது, மதுரை இருந்த தட்டு தாழ்ந்தது. கயிலையை விட மதுரை மிகச்சிறந்த தலம் என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய பெருமை பெற்ற மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்ற பரஞ்சோதி முனிவர் தயாராகி விட்டார். மக்கள் அனை வரும் சுந்தரேஸ்வர பெருமானின் திவ்ய லீலைகளைக் கேட்பதற்கு வரவேண்டும் பாண்டிய மன்னரின் சார்பில் பறையறைந்து தெரிவிக்கப் பட்டது. தேரோடும் வீதிகளை மக்கள் கோமயம் தெளித்து சுத்தமாக்கினர். அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. வாழை மரத் தோரணங்களை மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு கட்டினர். இன்றைய சித்திரை திருவிழாவுக்கு நகரை அலங்கரிப்பது போல், மக்கள் வெகு விமரிசையான ஏற்பாடுகளை அவரவர் செலவில் செய்தனர். இந்த விபரத்தையறிந்து வெளியூர்களில் இருந்தெல்லாம் சிவனடியார்கள் மதுரையை மொய்த்தனர். எங்கும் சிவாய நம என்ற திருமந்திரம் ஒலித்தது. திருவிளையாடல் புராண அரங்கேற்றத்தை நடத்த பெரிய மண்டபம் வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தனர் அமைச்சர்கள். கோயிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் அமரலாம், மண்டபத்துக்கு வெளியேயும் மக்களை கூடச் செய்யலாம் என்ற அடிப் படையில் மண்டபத்தை சீரமைத்தனர். அலங்கார மேடை ஒன்றில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, பரஞ் சோதியார் எழுதிய திருவிளையாடல் புராண ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. பரஞ்சோதியார் விழா மேடைக்கு வந்தார். அப்போது திருச்சங்குகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. பாண்டிய மன்னர் பரஞ்சோதியாரை எதிர்கொண்டு வரவேற்று, பொன்னாடை போர்த்தினார். அனைவரும் அன்னை மீனாட்சியின் சன்னதிக்குச் சென்றனர். கற்பூர ஒளியில் மரகதவல்லி மீனாட்சி தகதகவனெ ஜொலித்து ஆசிர்வதித்தாள். அடுத்து சுந்தரேஸ்வரப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அரங் கேற்றம் மிகச்சிறப்பாக அமைய வேண்டினார் பரஞ்சோதி முனிவர். பின்னர் மண்டபம் திரும்பி, விநாயகப் பெருமானை மனதில் எண்ணி கணீர் என்ற குரலில் திருவிளையாடல் புராணத்தை சொல்ல ஆரம்பித்தார்.


சக்தியாய் சிவமாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தியாகிய சொற்பொரு ணங்குள
சித்தி யானை தன் செய்பொற் பாதமே!
என்று விநாயகரை வணங்கிப் பாடினார்.
தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பைச் சொன்னார்.  இந்தக் குளத்தைப் பார்த்தால் தர்மம் செய்த புண்ணியம் சேரும். தீர்த்தத்தைத் தொட்டால் செல்வம் பெருகும். மூழ்கி எழுந்தால் மோட்சம் கிடைக்கும் என்றார்.



இந்திரன் பழிதீர்த்தப் படலம்


            ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும். அவன் தேவேந்திரன் என்றாலும், அவனுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. குறிப்பாக, தலைமை பொறுப்பில் உள்ளவன், சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனது பொறுப்பில் பலர் இருக்கிறார்களே என்ற அக்கறை வேண்டும். இல்லாவிட்டால், பதவி பறிபோய் விடும். தேவேந்திரனுக்கும் ஒருநாள் அப்படியொரு நிலை வந்தது. பூலோகத்தில் புண்ணியம் செய்தவர்களே தேவர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் அடைய நினைத்த இன்பமெல்லாம் அங்கே கிடைக்கும். அதற்காக எதற்கும் ஒரு நேரம், காலம் உண்டல்லவா! அங்கும் நல்லநேரம், கெட்ட நேரமெல்லாம் உண்டு. தேவேந்திரனுக்கு ஒருநாள் கெட்ட நேரம் வந்தது பெண்களின் வடிவில்! தேவலோகத்தில் தேவர்கள் கூடிக்களித்திருக்க, நாட்டியத்தை ரசிக்க அப்சரஸ்கள் எனப்படும் தேவகன்னியர் உண்டு. அவர்களில் ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த தேவேந்திரன், பல அப்சரஸ்களின் அழகில் மயங்கி லயித்துக் கிடந்தான். அந்த நேரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி அங்கு வந்தார். இவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டபத்தில் மஞ்சள் உடை உடுத்தி வடக்கு நோக்கி ஒரு சிற்பம் இருக்குமே! அந்த குரு பகவான் தான்! இவரது பார்வை ஒரு இடத்தில் பட்டாலே நல்லது நடக்கும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.


தேவேந்திரனுக்கு தான் கெட்ட நேரமாயிற்றே! இல்லாவிட்டால், பொறுப்புள்ள பதவியிலுள்ள ஒருவன், பெண்களுடன் பொது இடத்தில் கூடிக் களிப்பானா? மறைவிடத்து விஷயங்கள் பொது இடத்தில் நடந்தால், யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்! பிரகஸ்பதி, தேவேந்திரன் நிகழ்த்திய கூத்தைப் பார்த்து, அப்படியே கண்ணைப் பொத்திக் கொண்டார். குரு பார்வையை மூடினால், நிலைமை என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவேந்திரனுக்கு ஆரம்பமானது கெட்ட நேரம்.பிரகஸ்பதி, அப்படியே திரும்பிப் போய் விட்டார். தேவேந்திரன் தன் ஆட்டபாட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அந்தரங்க அறைக்குள் செல்லும் வேளையில், தேவர்களில் சிலர் அவனைப் பார்த்தனர். தேவேந்திரா! குருநாதர் பிரகஸ்பதி வந்திருந்தார். தாங்கள் அந்நேரத்தில் இருந்த நிலை கண்டு, கண் பொத்தி வெளியேறி விட்டார். உடனடியாக அவரைச் சந்தித்து, மன்னிப்பு கேளுங்கள். குருவின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களுக்கு மட்டுமல்ல! தங்களை நம்பியிருக்கும் எங்களுக்கும் சிரமம் வந்து சேரும், என்றனர். தேவேந்திரன் கதிகலங்கி விட்டான். குரு நிந்தை செய்தோமே! என்ன நடக்கப் போகிறதோ? உடனே அவரை சென்று பார்த்து வருகிறேன், என்று அவரது இல்லத்துக்கு தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி விரைந்தான்.


குரு அங்கே இருந்தால் தானே! சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? குடும்பத்தினர் அல்லது முன்னோர் செய்த பாவத்தின் விளைவே அது. இவர்கள் மீது குருவின் பார்வை பட வேண்டுமானால், பெரும் பரிகாரங்களை எல்லாம் செய்தாக வேண்டும்! தேவேந்திரனின் பார்வையில், குரு படவே இல்லை. தனது தலைமை சீடனே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? பெண் பித்தர்களான இவர்களுக்கு போய் பாடம் எடுத்தோமே என்ற வேதனையில் குரு மறைவான இடத்துக்குப் போய் விட்டார். தேவேந்திரன் அவரைத் தேடியும் காணாமல், அவன் பிரம்மாவைப் பார்க்க ஓடினான். குரு அபச்சாரம் செய்து விட்டதை அவரிடம் சொன்னான். பிரம்மா ஒரு யோசனை சொன்னார். தேவேந்திரா! குரு நிந்தனை கொடிய பாவம். இதற்கு தகுந்த பரிகாரம் செய்தால் தான் அவர் உனக்குத் தென்படுவார். அந்த பரிகாரத்தையும் நான் சொல்கிறேன் கேள். துவஷ்டா என்ற அசுரன் ஒரு மகனைப் பெற்றிருக்கிறான். அவனது பெயர் விஸ்வரூபன். அவனுக்கு மூன்று முகம். மிகவும் கொடியவன். ஆனால், ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகக் கடைபிடிப்பவன். அவனை உன் தற்காலிக குருவாக ஏற்றுக்கொள். வேறு வழியில்லை, என்றார். குரு பார்வை இல்லாவிட்டால் கெட்ட நேரம் விடவே விடாது. இந்திரன் அதற்கு விதிவிலக்கா என்ன! பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.


தன்னிலும் உயர் பதவியிலுள்ள, வேதநாயகனான நான்முகன் சொன்ன யோசனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தேவலோகத்துக்கு ஒரு அசுரனை குருவாக நியமிக்கச் சொல்கிறாரே! இவருக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணியபடியே சென்றான். இருப்பினும், அவரது யோசனையை செயல்படுத்தாவிட்டால் அவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும். மேலும், தேவலோகத்துக்கு ஒரு குருவும் நிச்சயம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் விஸ்வரூபனை சந்தித்து அவனை வணங்கினான். என்ன இந்திரா! தேவலோகாதிபதி என்னைத் தேடி வந்திருக்கிறாய்! என்ன விஷயம்? என்றான். தங்களை குருவாக ஏற்க வந்துள்ளேன். தாங்கள் தேவலோக குரு பதவியை ஏற்க வேண்டும், என்றான். விஸ்வரூபனுக்கும் இதில் மனமில்லை. அசுரனான நாம், தேவர்களுக்கு குருவாக இருப்பதாவது! இருப்பினும், தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டு வைக்கலாமா! சிங்கமாக இருந்து இந்த தேவர்களை ஒரு வழி செய்து விட வேண்டும். ஏழு உலகிலும் அசுரக்கொடி பறக்க இதை விட அருமையான சந்தர்ப்பம் ஏது? என்று எண்ணி யவனாய், பதவி ஏற்க சம்மதித்தான். ஆக, மாணவனுக்கும் மனமில்லை, குருவுக்கும் வஞ்சக எண்ணம் என்ற ரீதியில் தேவர்கள் அசுரர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கினர்.


ஒரு வழியாக விஸ்வரூபன் தேவர்களுக்கு குருவானான். தேவேந்திரனுக்கு தன் குலகுரு பிரகஸ்பதிக்கு செய்த துரோகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவரது அதிருப்தியில் இருந்து விடுபட்டு பாவம் நீங்குவதற்காக யாகம் ஒன்றை நடத்த எண்ணம் கொண்டான். தன்னுடைய விருப்பத்தை விஸ்வரூபனிடம் தெரிவித்தான். புதிய குரு விஸ்வரூபன் யாகம் நடத்த ஒப்புதல் கொடுப்பது போல நடித்து, இதையே சந்தர்ப்பமாக்கி தேவேந்திரனை கொன்று தேவலோகத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். ஒருவருக்கு குரு பார்வை இல்லாவிட்டால் துன்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேவேந்திரனுக்கு இந்த யாகத்தின் மூலம் பெரும் துன்பம் வந்து சேர இருந்தது. யாகம் துவங்கியது.


 விஸ்வரூபன் யாகத்திற்கு தலைமை வகித்தான். யாக குண்டத்தில் நெய்யை வார்க்கும்போது, தேவர்குலம் தழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரக்கர் குலம் தழைக்க வேண்டும் என்று சொல்லி நெய்யை ஊற்றினான். மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. தேவேந்திரன் சுதாரித்துக் கொண்டான். தன் ஞானதிருஷ்டியால் எதிரே அமர்ந்திருக்கும் விஸ்வரூபன் குரு என்ற போர்வையில் தனக்கு எதிராக மந்திரங்களை உச்சரிக்கிறான் என்பதை தெரிந்துகொண்டான். அவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வஜ்ராயுதத்தை எடுத்து விஸ்வரூபன் மீது வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு தப்பியவர்கள் யாருமில்லை. விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்தது. அந்த தலைகள் மூன்று பறவைகளாக உருமாறி வானில் பறந்தது. எப்படியோ விஸ்வரூபனின் ஆவி பிரிந்துவிட்டது. ஏற்கனவே பிரகஸ்பதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட இந்திரன், இப்போது புதிய குருவான விஸ்வரூபனையும் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றிக் கொண்டது. ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அதற்கு மாபெரும் பரிகாரங்களை செய்தாக வேண்டும். அந்த பரிகாரங்களை எல்லாம் தேவர்கள் செய்தனர். இதன் மூலம் அந்த தோஷம் நீங்கியது. ஆனால் அசுரர்களின் பகையை அவன் அதிகமாக சம்பாதித்துக்கொண்டான். விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா. இவர் தன் மகனைக்கொன்ற தேவேந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டார். இதற்காக யாகம் ஒன்றை துவங்கினார். அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனது கண்களிலும் வாயிலும் விஷவாயு வெளிப்பட்டது. அவன் துவஷ்டாவை வணங்கிநின்றான்.


தலைவனே! உன் கட்டளைக்கு அடிபணிந்து உன் முன்னால் நிற்கிறேன். உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு துவஷ்டா, சீடனே! உனக்கு விருத்திராசுரன் என பெயர் சூட்டுகிறேன். நீ இப்போது இருப்பதைவிட பலமடங்காக உன் உருவத்தை வளர்த்துக்கொள்ளும் வரத்தையும் தருகிறேன். உன் உருவம் வளர வளர கோபமும் அதிகமாகும். அந்த கோபத்தை பயன்படுத்தி நீ தேவர்குலத்தை அழிக்க வேண்டும். குறிப்பாக என் மகன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனின் உயிர் எனக்கு வேண்டும். உடனே புறப்படு! என ஆணையிட்டார். விருத்திராசுரன் தனது நாற்பது கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை தாங்கி இந்திரனை தேடி புறப்பட்டான். விருத்திராசுரன் தன்னை நோக்கி வருவதை இந்திரன் அறிந்துகொண்டான். அவன் தனது வாகனமாகிய வெள்ளை ஐராவதத்தில் அமர்ந்து புறப்பட்டான். இருவரும் வானவெளியில் சந்தித்தனர். கடும் போர் ஏற்பட்டது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அதை விருத்திராசுரன் மீது அவன் எறிந்தான். ஆனால் அது அவனை எதுவுமே செய்யவில்லை. தன் கையிலிருந்த இரும்பு தடியால் வஜ்ராயுதத்தை தடுத்து நிறுத்திவிட்டான் விருத்திராசுரன்.


 மேலும் அந்த தடியால் இந்திரனையும் தாக்கினான். இந்திரன் மயங்கி விழுந்துவிட்டான். இந்திரன் இறந்துவிட்டான் என நினைத்த விருத்திராசுரன், துவஷ்டாவிடம் திரும்பி சென்றுவிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் இந்திரனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் விருத்திராசுரனால் ஆபத்து ஏற்படும் என பயந்துபோன இந்திரன் சத்யலோகத்திற்கு வந்துசேர்ந்தான்.அங்கு பிரம்மாவை வணங்கி, விருத்திராசுரனை கொல்வதற்குரிய வழி பற்றி கேட்டான். பிரம்மா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. தேவேந்திரனே! விருத்திராசுரனை கொல்லும் வழியை நான் அறியமாட்டேன். அசுரர்களை கொல்லும் சக்தி ஸ்ரீமந் நாராயணனுக்கே இருக்கிறது. நாம் அவரிடம் சென்று யோசனை கேட்டு வரலாம் என சொல்லி வைகுண்டம் சென்றனர்.


 அங்கே திருமால் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்தார். பரந்தாமனாகிய பெருமாளை இருவரும் பாடித்துதித்தனர். திருமால் அவர்களிடம், என்ன காரணத் திற்காக வந்தீர்கள்? என கேட்டார்.அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.


வேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். 


ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது.


 பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான்.


மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை.


ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. 


குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது.


 அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார். ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான்.


 அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான்.


 உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான். குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான்.


 பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர். 




நன்றி : தினமலர் 
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக