வியாழன், நவம்பர் 03, 2011

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)3

 சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்



சத்தியாவ துன்னுடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளிதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தி யைந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளி
சத்திசிவமு மாகிநின்று தண்மையாவ துண்மையே.



சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே.



அக்கர மனாதியல்ல ஆத்துமா வனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியல்ல
தக்கமிக்க நூல்களும் சாஸ்திர மனாதியல்ல
ஒக்க நின் றுடன் கலந்த உண்மைகா ணனாதியே.



மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது
உண்மையாக நீயுரைக்க, வேணுமெங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந் திருந்ததே.





அடக்கினால் அடங்குமோ அண்ட மஞ் செழுத்துளே
உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென் றுணர்ந்துநீ
சடக்கில்ஆறு வேதமும் தரிக்கஓதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ.



உண்மையான சக்கரம் உபாயமா யிருந்ததும்
தண்மையான காயமும் தரித்தரூப மானதும்
வெண்மையாகி நீறியே விளைந்து நின்ற தானதும்
உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே.



எள்ளகத்தில் எண்ணெய்போல வெங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடு மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்ம்மையே.



வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுவுண்டு அங்குஎன்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே.



வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.



அத்திறங்க ளுக்குநீ அண்டம்எண் டிசைக்கும் நீ
திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ


உறக்கும்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே.



ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் நின்றுநீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர்
நாடிநாடி உம்முளே நவின்றுநோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்துகூட லாகுமே.



சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவமுமாகி நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள் பிரானிருந்த கோலமே.



அகாரமான தம்பலம் மனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே.



சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகையாய்
செக்கிலாமல் எண்ணெய்போல் சிங்குவாயு தேயுவும்
உக்கிலே ஒளிகலந்து யுகங்களுங் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே.



வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீ
அருள் கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தேர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே.



நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலமுண்ட கண்டனும் அயனுமந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.



சுற்றமென்று சொல்வதுஞ் சுருதிமுடிவில் வைத்திடீர்
அத்தன்நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்திமுற்றி அன்பர்கள் பரத்திலொன்று பாழது
பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே.



எங்ஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசனேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கமண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றதே.



அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதிற் பிறவாத பூசை ஏத்தியே
நற்றவம் புரிந்துயேக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்பதே சரிதை கண்டுகொள்ளும் உம்முளே.



பார்த்து நின்ற தம்பலம் பரனாடு மம்பலம்
கூத்துநின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலஞ்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே.



சென்று சென்றிடந்தொறும் சிறந்த செம்பொனம்பலம்
அன்றுமின்றும் நின்றதோர் அனாதியானது அம்பலம்
என்று மென்று மிருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றியொன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே.



தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
எந்தைநீ இறைவநீ என்னையாண்ட ஈசனே.



எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாண லாகுமே.



மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ளும்முளே மதிக்கநீறு மும்முளே
மந்திரங்க ளாவது மனத்தினைந் தெழுத்துமே.



எட்டுயோக மானதும் இயங்குகின்ற நாதமும்
எட்டுவக்க ரத்துளே உகாரமும் அகாரமும்

விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்டவக்ஷ ரத்துளே அமர்ந்ததே சிவாயமே.



பிரான்பிரா னென்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.



ஆதியில்லை அந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே.



அம்மையப்பன் அப்பனீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை யானபின்
அம்மையப்பன் நின்னையன்றி யாருமில்லை யில்லையே.



நூறுகோடி மந்திரம் நூறுகோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்ததாய்
சீரைஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.



முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானதும்
அந்தவோ ரெழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே.



கூட்டமிட்டு நீங்களும் கூடிவேத மோதுறீர்
ஏட்டகத்துள் ஈசனு மிருப்பதென் னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்து ளாடிடும் அம்மையாணை உண்மையே.



காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே.




கொள்ளொணாது குவிக்கொணாது கோதறக் குலைக்கொணாது
அள்ளொணாது அணுகொணாது வாதிமூல மானதைத்
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பணன்
வில்லொணாது பொருளையான் விளம்புமாறது எங்ஙனே.



ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே.


ஒட்டுவைத்து கட்டிநீ உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டுமிட்ட அவ்விலே வைத்துணர்ந்து பாருமே.



இந்தவூரில் இல்லையென்று எங்குநாடி ஓடுறீர்
அந்தவூரில் ஈசனும் அமர்ந்துவாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயிலவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.



புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்த்திடில்
அக்குமணி கொன்றை சூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே.



பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர்கண் பற்றியே
பின்புமாங் கிஷத்தினால் போக மாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள் தான் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்விரே.



விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசலொன்று
கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே.



ஆகுமாகு மாகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லிரேல

பாகுசேர் மொழியுமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர்.



உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல்
தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும்
கன்மதன்மம் ஆகுமீசர் காட்சிதானும் காணுமே.



பாலனாக வேணுமென்று பத்திமுற்றும் என்பரே
நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில் வன்னிமூட்டியந்த நீருண
ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே.



எய்துநின்னை அன்பினால் இறைஞ்சியேத்த வல்லிரேல்
எய்துமுண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறுமது திண்ணமே.



திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல்அன் புளன்புருகி அறிந்து நோக்க லாயிடும்
மண்ணமதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே.



இருப்பன்எட்டெட் டெண்ணிலே இருந்து வேறதாகுவன்
நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான்
கருப்புகுந்து காலமே கலந்துசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.



கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.



தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம் பெறும்
தெளிந்த நற்கிரியை பூசை சேரலாஞ் சாமீபமே
தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கினும் சேரலாம் சாயுச்யமே.



சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மை யென்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலுஞ் செய்தொழில் திடப்படே.



திறமலிக்குநாலு பாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குழியதனைக் காட்டியுட் குறித்துநோக்க வல்லிரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப் பதமடைவரே.



அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதங்க ள்அல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்
உடலில் மூல நாடியை உயரவேற்றி ஊன்றிடே.



ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுர்தம் வந்திறங்கிடும்
நான்றி தென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வ தாகவே.



ஆகமூல நாடியில் அனலெழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாகமேரு நாடியேகர் ஏகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.



அறிந்துநோக்கி உம்முளே அயன்தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு உம்முளே.



சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு
ஆதிசக் கரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே.



திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கன்மவாதனை யெலாம்
பருதிமுன் இருளதாயப் பறியும் அங்கி பாருமே.



பாரும்எந்தை ஈசர்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்டது இல்லையே.



கண்டிலாது அயன்மாலென்று காட்சியாகச் சொல்கிறீர்
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல்
பண்டுமுப் புரமெரித்த பக்திவந்து முற்றுமே.





முற்றுமே அவனொழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றுநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காணலா யிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.



கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.



எழுப்பிமூல நாடியை இதப்படுத்த லாகுமே
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லிரேல்
கழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில்அப்புறம்
அழுத்திஓ ரெழுத்துளே அமைப்பதுண்மை ஐயனே.



அல்லதில்லை யென்று தானாவியும் பொருளுடல்
நல்லஈசர் தாளிணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.



ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.



உலாவும்உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத் திருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றமுர்தம் உண்டுதாம்
குலாவும்எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.



கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே.



நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தி னுள்ளிருந்த வொன்பதொழிந் தொன்றிலத்
தூங்கவீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.



நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையே
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
நினைக்குள் நானெக்குள் நீ நினைக்குமாறது எங்ஙனே.



கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னை நானுணர்ந்தது
விரிக்கிலென் மறைக்கிலென் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ.



ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர்
ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானமற்ற தில்லைவேறு நாமுரைத்தது உண்மையே.



கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்
அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்
விருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே.



கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன்இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.



வாயில்எச்சில் போகவே நீர்குடித்து துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்னது எவ்விடம்
வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுசொல்.



தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்த தெவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே.



மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில்
சாதிபேத மாய்உருத் தரிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.



வகைகுலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்கு லங்களான நேர்மைநாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுமொன்று கண்டிலீர்
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே.



ஓதும்நாலு வேதமும் உரைத்தசாஸ் திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும்ஆக மங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேத மாகியே பிறந்துழன் றிருந்ததே.



உறங்கிலென் விழிக்கிலென் உணர்வுசென்றொடுங் கிலென்
திறம்பிலென் திகைக்கிலென் சிலதிசைகள் எட்டிலென்
புறம்புமுள்ளும் எங்ஙணும் பொதிந் திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்ப தேது மில்லையே.



அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்குகிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கு மூடரே.


திட்டம்தீட்டம் என்றுநீர் தினமுழுகு மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாய மானது
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.



மூலநாடி தம்முளே முளைத்தெழுந்த வாயுவை
நாளுநாளு நம்முளே நடுவிருந்த வல்லிரேல்
பாலனாகும் உம்முடன் பறந்து போகலாய்விடும்
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.



உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிட அறிந்துணர்ந்து பாருமே.



வன்னிமூன்று தீயினில் வாழுமெங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.



தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர்
உண்டுழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ் வாழுமெங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே.



அரியதோர் நமச்சிவாயம் அதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுகோடி அளவிடாத மந்திரம்
தெரியநாலு வேதம்ஆறு சாத்திர புராணமும்
தேடுமாறும் அயனுஞ்சர்வ தேவதேவ தேவனே.



பரமுனக்கு எனக்குவேறு பயமுமில்லை பாரையா
கரமுனக்கு நித்தமுங் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரமெனக்கு நீயளித்த உண்மையுண்மை உண்மையே.



மூலவட்ட மீதிலே முளைந்தஐந் தெழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்றஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.



என்னகத்தில் என்னை நானெங்கும் ஓடிநாடினேன்
என்னகத்தில் என்னையன்றி ஏதுமொன்று கண்டிலேன்
வின்னெழும்பி விண்ணகத்தின் மின்னொடுங்கு மாறுபோல்
என்னகத்துள் ஈசனோ டியானுமல்ல தில்லையே.



நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியும் நவின்றஞான போதமாய்
ஆலமுண்ட கண்டனும் அயனும் அந்தமாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சிலே தரித்ததேசி வாயமே.



முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கிவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம்நமசி வாயமே.



மூலமண்ட லத்துளே முச்சதுர மாயமாய்
நாலுவாசல் என்விரலில் உடுத்தித்த மந்திரம்
கோலியென்றும் ஐந்துமாய்க் குளிர்ந்தலந்து நின்றநீ
மேலுமேலு நாடினேன் விழைந்ததே சிவாயமே.



இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கஞானம் எவ்விடம்
அடங்குகின்றது எவ்விட மறிந்து பூசை செய்யுமே.



புத்தகங்க ளைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் தெங்ஙனென்றே அறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்துநோக்க வல்லிரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும் போக மாகுமே.



அருளிலே பிறந்துதித்து மானயரூப மாகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள தேதுவன்னியின் மறைந்ததே சிவாயமே.


கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா
உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்தபின்
தருக்கலந்த சோதியைத் தெளிந்துயா னறிந்தபின்
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டுமற்று இருந்ததே.



தன்மசிந்தை யாமளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயிலுழன்று கருத்தமிழ்ந்த கசடரே
சென்மசென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேண்டுமே.



கள்ளவுள்ள மேயிருந்து கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளமுள் ளறுத்தபோது கதியிதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.



காணவேண்டு மென்று நீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணுமென்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவன் தான்சிவம தாகுமே.



அணுவினொடு அகண்டமாய் அளவிலாத சோதியைக்
குணம தாகஉம் முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலையெண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.



எச்சிலெச்சில் என்றுநீரிடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சிலெச்சில் அல்லவோ தூயகாய மானதும்
வைத்தஎச்சில் தேனலோ வண்டினெச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே.



தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடுந் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளினின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல்
தீர்த்தலிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே.



ஆடுகொண்டு கூடுசெய்து அமர்ந்திருக்கும் வாறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசையென்ன பூசையென்ன பூசையே.



என்னைஅற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னையற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனதுநாட்டம் எனதுநாவி லுதவி செய்வீரீசனே.



எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகபோக மாகியே
நல்லவின்ப மோனசாகரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தமுண்டு நானழிந்து நின்றநாள்.



ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரே
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே.



நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என்பயன்
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
வத்தனுக் கிதேற்குமோ அறிவிலாத மாந்தரே.



எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.



உண்மையான மந்திர மொளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.



பன்னிரண்டு நாளிருத்திப் பஞ்சவண்ணம் ஒத்திட
மின்னியவ் வெளிக்குள்நின் றுவேரெடுத் தமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன்நின் றியங்கிடும்
பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்ம மாவரே.

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரந் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே.



முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித் துளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.



அண்ணலார் அநாதியாய் அநாதிமு னநாதியாய்
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதாகு முன்னலோ
கண்ணிலானில் சுக்கிலங் கருத்தொடுங்கி நின்றபின்
மண்ணுளோரு விண்ணுளோரு வந்தவாற தெங்கனே.



எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
முத்தியான விந்துளே முளைத்தெழுந்து செஞ்சுடர்
சித்தினில் தெளிந்தபோது தேவர் கோயில் சேர்ந்தனன்
அத்தனாடல் கண்டபோது அடங்கியாடல் உற்றதே.



வல்லவாசல் ஒன்பது மருத்தடைத்த வாசலும்
சொல்லும் வாசல்ஓரைந்துஞ் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.



ஆதியான தொன்றுமே அனேகரூப மாயமாய்ப்
பேதபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆதியோடு கூடிமீண் டெழுந்து சன்ம மானபின்
சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே.



வண்டுபூ மணங்க ளோடு வந்திருந்த தேனெலாம்
உண்டுளே அடங்குவண்ண மோதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.



ஓரெழுத்து லிங்கமாக வோதுமக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.



தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூட லாகுமே.



குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கடோறும் மூழ்கிறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டையேந்து கையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன்றொழப் பணிந்து வாழ லாகுமே.



கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெயுண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.



உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்படங்கி நின்றிடும்
மெள்ளவந்து கிட்டநீர் வினவவேண்டு மென்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேண்டு மாந்தரே.



நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ.



நானும்அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில்உள்ள சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான தானதான தானனா.



நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போதது நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே.



பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா !
தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே.



உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.



பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?



சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதிவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்.



வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.



பரம்இலாதது எவ்விடம்? பரம் இருப்பது எவ்விடம்?
அறம் இலாத பாவிகட்குப் பரம்இலை அஃது உண்மையே;
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே.



மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே !
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.



சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் !
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே;
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே.



மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் வேந்தனாகி
மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம் கூந்தலம்மை
கோணல் ஒன்றும் குறிக்கொணாது இஃதுஉண்மையே.



சருகருந்தி நீர் குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் !
சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.



காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ?
கூடுவிட்டு அகன்றுஉன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.



கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.



தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.



ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே.



நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர் தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் !
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே.


வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.



யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.



காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.



நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார்.



காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே.



முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.



செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே.



எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் !
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.



கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே.



இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே
நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே.



சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள் !
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே.



மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும்; இன்பம் அற்ற பாவிகள்.



சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.

             சிவவாக்கியம் முற்றுபெற்றது .

தொகுப்பு : திருவடி முத்து கிருஷ்ணன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக