புதன், அக்டோபர் 19, 2011

சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)

ராமலிங்க சுவாமிகள் ஞானம் 
பாங்கியர்க்கு அறிவுறுத்தல் 

அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே - அவர்
ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே

ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமாரே - மிக
ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே

இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமாரே - நட
மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே

ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமாரே - நட
னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே

உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமாரே - இன்ப
உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே

ஊனவுல கைக்கருதேன் பாங்கிமாரே - மன்றில்
உத்தமருக் குறவாவேன் பாங்கிமாரே

கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமாரே - என்றன்
கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே

கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமாரே - மூன்று
கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமாரே

கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமாரே - மனங்
கரையாரென் னளவிலே பாங்கிமாரே

கள்ளமொன்று மறியேனான் பாங்கிமாரே - என்னைக்
கைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே

கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமாரே - இன்று
கைநழுவ விடுவாரோ பாங்கிமாரே

கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமாரே - என்றன்
கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே

காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமாரே - என்றன்
காதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே

காவலையெல் லாங்கடந்து பாங்கிமாரே - என்னைக்
கைகலந்த கள்ளரவர் பாங்கிமாரே

காணவிழைந் தேனவரைப் பாங்கிமாரே - கொண்டு
காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே

கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமாரே - நான்
கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமாரே

கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமாரே - நான்
கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே

கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமாரே - அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே

கீதவகை பாடிநின்றார் பாங்கிமாரே - அது
கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே

கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமாரே - மனக்
கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமாரே

கீடமனை யேனெனையும் பாங்கிமாரே - அடிக்
கேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே

குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமாரே - கொள்ளுங்
கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமாரே

குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமாரே - என்னைக்
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே

குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமாரே - உள்ள
குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே

கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமாரே - நங்கள்
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே

கூறரிய பதங்கண்டு பாங்கிமாரே - களி
கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே

கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமாரே - அது
கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே

        வெண்ணிலா கண்ணிகள் 

தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே

நாதமுடி மேலிருந்த வெண்ணிலாவே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலாவே - நானுந்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலாவே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே

தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலாவே - நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலாவே

போதநடு வூடிருந்த வெண்ணிலாவே - மலப்
போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே - அரு
ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலாவே

அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலாவே - யெங்கள்
ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலாவே

வேதமுடி மேலிருந்த வெண்ணிலாவே - மல
வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலாவே

குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலாவே - அந்தக்
குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலாவே - அந்த
ஆதியந்த மாவதென்ன வெண்ணிலாவே

வித்திலாம லேவிளைந்த வெண்ணிலாவே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலாவே

முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலாவே - அந்த
மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே

நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலாவே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலாவே

ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலாவே - என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலாவே

வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலாவே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலாவே

ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலாவே - அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலாவே

ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலாவே - அது
ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலாவே

அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே - அவர்
ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே

அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே - அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலாவே

அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலாவே - எங்கும்
ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே

அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலாவே - ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலாவே

அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே - என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே

             காட்சிக்கண்ணி 

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் 
அற்புத காட்சியடி - அம்மா 
அற்புத காட்சியடி !

சோதிமலை யொன்று தோன்றிற் றதிலொரு
வீதியுண்டாச்சுதடி - அம்மா 
வீதியுண்டாச்சுதடி !

வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்ததடி - அம்மா
மேடை இருந்ததடி !

மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்ததடி - அம்மா
கூடம் இருந்ததடி !

கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்ததடி - அம்மா
மாடம் இருந்ததடி !

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வனடி - அம்மா
என்னென்று சொல்வனடி !

ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுதடி - அம்மா
சீர்நீலம் ஆச்சுதடி !

பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுதடி - அம்மா
பவளம தாச்சுதடி !

மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுதடி - அம்மா
மாணிக்கம் ஆச்சுதடி !

பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுதடி - அம்மா
பேர்மணி ஆச்சுதடி !

வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுதடி - அம்மா
வெண்மணி ஆச்சுதடி !

புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுதடி - அம்மா
பொன்மணி ஆச்சுதடி !

பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுதடி - அம்மா
படிகம தாச்சுதடி !

ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பமடி - அம்மா
இசைந்தபொற் றம்பமடி !

பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வனடி - அம்மா
புதுமைஎன் சொல்வனடி !

ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவடி - அம்மா
என்னள வல்லவடி !

ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்களடி - அம்மா
ஆகவந் தார்களடி !

வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றனடி - அம்மா
வல்லபம் பெற்றனடி !

வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேனடி - அம்மா
மணிமுடி கண்டேனடி !

மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேனடி - அம்மா
மற்றது கண்டேனடி !

கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்ததடி - அம்மா
கோயில் இருந்ததடி !

கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றனடி - அம்மா
கூசாது சென்றனடி !

கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடிபல் கோடியடி - அம்மா
கோடிபல் கோடியடி !

ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ணம் ஆகுமடி - அம்மா
ஐவண்ணம் ஆகுமடி !

அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
அப்பாலே சென்றனடி - அம்மா
அப்பாலே சென்றனடி !

அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
ஐவர் இருந்தாரடி - அம்மா
ஐவர் இருந்தாரடி !

மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயில் உற்றேனடி - அம்மா
மணிவாயில் உற்றேனடி !

எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - அம்மா
இருவர் இருந்தாரடி !

அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேனடி - அம்மா
அன்பொடு கண்டேனடி !

அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாளடி - அம்மா
அம்மை இருந்தாளடி !

அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி - அம்மா
அமுதமும் உண்டேனடி !

தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேனடி - அம்மா
சந்நிதி கண்டேனடி !

ந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவாரடி - அம்மா
சாமி அறிவாரடி !

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி - அம்மா
அற்புதக் காட்சியடி !

          சிவதரிசனம் காணல்

திருவுடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருவுடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருவுடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே

சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
தூயவனே நேயவனே சோதிவுரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மையப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே

துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல் வல்லேனோ
அரியபெரும் பொருளா முன் அருட்சோதி எனக்கே
அளித்தனையே லறிந்துகொள்வே னளித்திடுக விரைந்தே

மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
இறப்பறியாத் திருநெறியில் என்னைவளர்த் தருளும்
என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
பெருங்கருணை அரசேநீ தருந்தருண மிதுவே

முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
தனதுசுதந் தரமே இங்கெனது சுதந்தரமோ
என்னுழைப்பால் என்பயனோ இரங்கி அருளாயேல்
யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
பொன்னுழைப்பால் பெறலு மரிதருள் இலையேல் எல்லாம்
பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே

விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே

மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேனோருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நானொரு பாவமு மறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே

பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணமிது தானே

கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே

காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே

சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கி யழியாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே

  தொகுப்பு : திருவடி முத்துகிருஷ்ணன் 

1 கருத்து:

  1. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    பதிலளிநீக்கு