வெள்ளி, ஜூன் 10, 2011

பட்டினத்தார் பாடல்கள்

 


உடல் கூற்று வண்ணம்


ஒரு மடமாது மொருவனுமாகி இன்பசுகந் தரும் 
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து 
ஊறுசுரோனித மீதுகலந்து

 பனியிலோர் பாதிசிறு துளிமாது பண்டியில்வந்து 
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடமிதென்று 
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற 

உருவமுமாகி உயிர்வளர் மாதமொன்பதும் ஒன்றும் 
நிறைந்துமடந்தை உதரமகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்தி 
உதைந்துகவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி 
ஓரறிவீரறி வாகிவளர்ந்து

ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட 
வந்துதவழ்ந்து மடியிலிருந்து மழலைபொழிந்து
வாவிருபோவென நாம விளம்ப 

உடைமணியாடை அறைவடமாட உன்பவர்தின்பவர்தங்
களொடுஉண்டு தெருவிலிருந்தபுழுதி அளைந்துதேடியபால
ரோடோடி நடந்து ஐவயதாகி விளையாடியே 

உயர்தருஞான குருபதேசம் முத்தமிழின் கலையும்
கரைகண்டு வளர்பிரைஎன்று பலரும்விளம்ப 
வாழ்பதினாறு ப்ராயமுவந்து 

மயிர்முடிகோதி அருபதநீல வண்டிமிர் தண்தொடை 
கொண்டைபுனைந்து மணிபொனிலங்கு பணிகலணிந்து
மாதகர் போதகர் கூடிவணங்க

மதன சொரூபன் இவனென மோகமங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரிவிழிகொண்டு சுழியஎறிந்து
மாமலர் போல் அவர்போவது கண்டு 

மனது பொறாமல் அவர்பிறகோடி மங்கலசெங்கல 
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழமுதுண்டு 
தேடியமாமுதல் சேரவழங்கி     

ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும் 
வம்பிலிழந்து மதனசுகந்த விதனமிதென்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து

வளமையுமாறி இளமையுமாறி வன்பல்விழுந்து இருகண்   
களிருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிராத 
குரோதமடைந்து செங்கையினிலோர் தடியுமாகியே 

வருவதுபோவது ஒருமுதுகூனு மந்தி எனும்படி 
குந்தி நடந்து மதியுமழிந்து செவிதிமிர் வந்து 
வாயறியாமல் விடாமல் மொழிந்து 

துயில்வரும் நேரமிருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும் 
உலர்ந்துவறண்டு துகிலுமிழந்து சுனையுமழிந்து 
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு 

கலியுகமீதிலிவர் மரியாதை கண்டிடுமென்பவர்  
சஞ்சலமிஞ்ச கலகல வென்று மலசலம் வந்து 
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவுமிராமல் உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும் 
உலைந்துமருண்டு திடமும்உலைந்து மிகவுமலைந்து
தேறிநல் ஆதரவேதன நொந்து    

மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமுமென்று 
தெளிந்து இனியென  கண்டம் இனியென தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற 

கடன்முறை பேசுமென உரைநாவுறங்கி விழுந்துகை கொண்டு
மொழிந்து கடைவழி கஞ்சியொலுகிட வந்து பூதமும்நாலு
சுவாசமும் நின்று நெஞ்சுதடுமாறி வரும்நேரமே 

வளர்பிறை போலெயிறுமு ரோமமும்சடையும் சிறு 
குஞ்சியும்விஞ்ச மனதுமிருண்ட வடிவமுமிலங்க
மாமலைபோல் எமதூதர்கள் வந்து 

வலைகொடுவீசி உயிர்கொடுபோக மைந்தரும்வந்து 
குனிந்தழ நொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து 

பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர் பந்தரிடுமென வந்துபறையிட முந்தவே 
பிணம் வேக விசாரியுமென்று 

பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழுவும் 
சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமனிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை  

வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகிநடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து 

விறகிடமூடி அழல்கொடு போடவெந்து விழுந்து முறிந்து 
நிணங்கள் உருகி எலும்புகருகி அடங்கி ஓர்பிடிநீறு
 மிலாத உடம்பை நம்புமடியேனை இனியாளுமே.

                    ஒரு மனிதன் கருவில் உருவாகி பிறந்து வாழ்ந்து இறந்து போவது வரை ஐயா பட்டினத்தார் மிக அழகாக சொல்லி இருக்கிறார். ஓர் பிடி நீறும் இல்லாத உடம்பில் எத்தனை ஆசைகள். இந்த பாடல் படித்து பார்த்த உடனே எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பாடல் . இவ்வளவுதான் மனித வாழ்வு இந்த வாழ்வினிலே நம்மால் முடிந்த அளவு நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாமலிருப்போம் எந்நேரமும் சிவசிந்தனையிலே இருப்போம் .சிவசிந்தனை ஒன்றுதான் நம்பிறப்பறுக்கக் கூடியது .

  சிவத்தைப் போற்றுவோம் !! சித்தர்களைப் போற்றுவோம் !!

      தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன் 












  
  







1 கருத்து:

  1. பொன்.செல்லப்பன்3:08 PM, டிசம்பர் 13, 2012

    அற்புதம் தங்களின் தொகுப்பு மிக அற்புதம்

    பதிலளிநீக்கு