சனி, செப்டம்பர் 09, 2017

சித்தர் பாடல்கள் ..

  சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்




          நந்தீஸ்வரக் கண்ணிகள்  . 


     சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சித்தராவார் . அவருடைய பாடல்களில் இறையை பற்றி சொல்லி இருப்பாரே தவிர மதத்தைப் பற்றி அல்ல. சித்த நிலை என்பதே அனைத்துங் கடந்த அற்புதமான நிலை அங்கு , மதம் , மொழி , இனம் என்று பாகுபாடு இல்லை அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சிவமே . அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தார்கள் . தாம் வேறு சிவம் வேறு என்றில்லாமல் சிவத்தோடு கலந்து இருந்தார்கள் . நந்தீஸ்வரக் கண்ணிகளில் அவர் சிவத்தைப் பாடியிருக்கும் ஆழகைக் காணலாம் வாருங்கள் .

ஆதியந்தங் கடந்தவுமை யாளருணா தாந்தச்
சோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே .                    

முடிமுடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே
அடிமுடியாய் நின்றநடு வணையேநந் தீஸ்வரனே .                

கர்த்தனே யானுன் கருணைத் திருவடிக்கே
எத்தனை தான்றெண்ட னிடுவேனந் தீஸ்வரனே .                        

தீர்க்க தெண்டனிட்டேன் திருவடியைப் போற்றி செய்தேன்
வாக்கு நடக்க வரமரு ணந்தீஸ்வரனே .                                            

மாசில் பரவெளியே மௌனமணி மாளிகையில்
வாயிற் பெருவழியே மகத்தே நந்தீஸ்வரனே .                              

மகத்தோனே ஞான மழையே யருள் வெள்ள
முகத்தோனே மோனே முனையேநந் தீஸ்வரனே                      

ஞானம் விளைவேற்று நல்ல சமுசாரிகட்கு
மோன மழையூற்று முகிலே நந்தீஸ்வரனே .                             

மும்மூல யோக முழுதுஞ் சித்தி செய்துதர
உன்னாலே யாகு  முயிரேநந் தீஸ்வரனே .                                     

சமர்க்கொடுத்து வென்றோங்கு சாம்பவியைக் கைப்படுத்தித்
தமர்விடுத்து நீக்கித் தருளாய் நந்தீஸ்வரனே .                              

நல்லோர்க்கு நீகாட்ட நல்குங் குணங்குடிவாழ்
வெல்லோர்க்கு நீகாட்ட வெளிதோ நந்தீஸ்வரனே .                 

இல்லினிடங் கூட்டியிதழ் விரியுஞ் செங்கமல
வல்லினிடங் காட்டி வைப்பாய் நந்தீஸ்வரனே .                       

சாமிதனை யுஞ்சுத்த சைதந்ய மானசிவ
காமிதனை யும்மென்று காண்பேனந் தீஸ்வரனே  .                   

உமையாளு மையாயு வந்தடிமை கொள்ளும்வண்ணம்
எமையாளு மையா விறையே நந்தீஸ்வரனே .                           

கேசரத்தைக் காட்டிக் கிளரொளியா தன்னருட்பால்
ஆதரித்தே பூட்ட வருள்வாய் நந்தீஸ்வரனே .                             

சத்தி சிவமுதலாகி சாம்பவியம் பாளருளிச்
செத்த சிவமுதலாச் சித்தா நந்தீஸ்வரனே .                                 

சித்தாளை யீன்ற சிறுபெண்ணாந் தாளிரண்டு
பொற்றாளை யென்றோ புணர்வே நந்தீஸ்வரனே .                 

பத்துவயதுடைய பாவையரை யன்றோ நீ
சித்தர்க்கெல்லாந் தாயாய்ச் செய்தாய் நந்தீஸ்வரனே .         

காமரூபி யாநித்ய கல்யாண சுந்தரியை
ஓமரூபி யையெற்கு முதவு நந்தீஸ்வரனே.                                       

கேசரியாடன் கருணை கிட்டினன்றோ வாசாம
கோசரவாழ் வெல்லாங் கொடுப்பாய் நந்தீஸ்வரனே .            

மூலவெளி சூட்டி மோனக் குணங்குடிக்கும் 
மேலை வழிகாட்டி விடுவாய் நந்தீஸ்வரபே .                            

கண்டப்பா லங்கடத்திக் கமலாசனத் தேற்றி 
அண்டப்பா லுங்கொடுத்தே யருள்வாய் நந்தீஸ்வரனே .      

செங்கமலப் பூடச் செல்வியர்தாஞ் சித்தம்வைத்தாற் 
றங்கமலை கூடத் தருவானந் தீஸ்வரனே .                               

போதகத்தைப் பூட்டிப் புருவமையத் தாயுமெற்கும் 
வாதிவித்தை காட்ட வருவாய் நந்தீஸ்வரனே .                       

ரசயோக சித்து நயனருளி னாலடிமை 
நிசயோக முற்று நிலைப்பே னந்தீஸ்வரனே .                           

மகாவித்தை காய்ப்பதற்கு மதியமிர்த வூரலுண்டே 
லகிரியுற்று நிற்பதற்கு லபிப்பாய் நந்தீஸ்வரனே .                

குப்பை வழலையெனுங் கோழையெலாங் கக்கவைத்துக் 
கற்ப வழலை வரக்காட்டு நந்தீஸ்வரனே  .                                 

கற்ப வழலைவரக் காட்டிகற்ப முண்டதற் பின் 
பற்ப வழலைமுறை பகர்வாய் நந்தீஸ்வரனே .                        

சூதமுத னீற்றிச் சொன்னமதி யமிர்தப்ர 
சாதமாதி லூற்றித் தருவாய் நந்தீஸ்வரனே .                             

அற்பமாந் தேகமதா யடியே னெடுத்தவுடல் 
கற்பதேக மாகக்கணிப்பாய் நந்தீஸ்வரனே .                                

உமைநம்பி னோர்வாழு மோங்கு குணங்குடியார்க் 
கெமனுட் பிணையாரு மெதிரோ நந்தீஸ்வரனே .                     

முநீஸ்வரரி லொன்றாய் முடித்தருள்வா யாகிலனைச் 
சநீஸ்வரக் கூடச் சாட்டாய் நந்தீஸ்வரனே .                                 

காலனும் போய்விடுவான் காலங் கடந்துசிறு 
பாலனும் மாய்விடுவேன் பரமே நந்தீஸ்வரனே .                      

கவன மணிமுதலாய்க் கட்டியென் கைகளிக்க 
மவுன மணித்தாய்க்கு வகுப்பாய் நந்தீஸ்வரனே .                    

மாயை வலைவீசி மாயக்காம லென்றன் மேல் 
நேய வலைவீசி  நிகழ்த்து நந்தீஸ்வரனே .                                    

தோகை யிளமின்னார் சுகபோகமும் பசியும் 
பேச்சு வழிசொன்னாற் போதும் நந்தீஸ்வரனே .                         

பெண்ணா யுலகமெலாம் பிணக்காட தாக்கியையோ 
மண்ணாய் வடிவதென்ன மாயும் நந்தீஸ்வரனே .                     

சையோகப் பித்தை வெல்லச் சமர்த்தோடு கச்சைகட்டு 
மெய்யோகப் புத்திசொல்ல வேண்டும் நந்தீஸ்வரனே .         

பாஷாண்டி கடோறும் பலனொன்று மின்றிவெறும் 
வேஷாண்டி யாக்கிவிடு காண் நந்தீஸ்வரனே .                         

பிணம்பிடுங்கித் தின்னும் பேய்போற் சிலதுளையர்
பணம்பிடுங்கித் தின்பதென்ன பாவம் நந்தீஸ்வரனே .            

பணமுடியா னென்றும் பவம்பிடியா னென்றுமெனை 
குணங்குடியா னென்றும் குறிப்பாய் நந்தீஸ்வரனே .              

உன்னையன்றி யேழை யோரே னொருவரையும்         
அன்னையென்று மாளவருள் வாய்நந்தீஸ்வரனே .               

ஆத்தாளைத் தேடியலைந் தலைந்து விண்பறக்குங் 
காத்தாடியானே னென்கண்ணே நந்தீஸ்வரனே .                       

மான்பிறந்த கன்றாய் மயங்குதற்கென் றாய்வயிற்றி 
லேன்பிறந்த கன்றா யிருந்தே னந்தீஸ்வரனே                           

ஏனோ வெனையீன்றா ளெந்தாய்வ் வாறுசெயத் 
தானோ வினுமென் செயத்தானோ நந்தீஸ்வரனே .                

தாய்தாயே யென்றே தலைப்புரட்டக் கொண்டுவெறு 
வாய்வாயை மென்றோடி வாடினே னந்தீஸ்வரனே .            

தாயை விட்டுப் பிள்ளை தவிப்ப தறிந்தவுடன் 
சேயையிட்டம் வைத்தணைக்கச் செய்வாய் நந்தீஸ்வரனே . 

கன்றினுக் கேயிரங்குங் காலியென வென்றனை தான் 
என்றுமெனக் கிரங்க விசைப்பாய் நந்தீஸ்வரனே .                   

மாயை மணமுடித்து மயக்கா தெனையீன்ற 
தாயை மணமுடித்து தருவாய் நந்தீஸ்வரனே .                        

தற்பரத்தி னல்வெளியே சர்வபரி பூரணமே 
சிற்பரத்தி னேரொளியே சிவமே நந்தீஸ்வரனே .                       

முத்தரெலாம் வாழியெங் கண்மோனமணித் தாயருளுஞ்    
சித்தரெலாம் வாழி சுத்த சிவமே நந்தீஸ்வரனே .                       

குற்றம் பலநீக்கிக் குணங்குடியென்றே மேவுஞ் 
சிற்றம்பலம் வாழ்சிவமே நந்தீஸ்வரனே .                                    


             சித்தர் குணங்குடியார் அருளிச் செய்த நந்தீஸ்வரக் கண்ணிகள்  முற்று பெற்றது .   

                           சித்தர் குணங்குடியார் சீர்பதம் போற்றி !!

                     
                    சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!!     சித்தர்களை போற்றுவோம் !!!

சிவமேஜெயம் அறக்கட்டளை 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் 
ஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி - 2
9944091910 , 9842154171

       







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக