திங்கள், ஜூன் 30, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் ...

                                           சிவமயம் 
                                      சிவமேஜெயம் 

குருவே சரணம்        பட்டினத்தாரே சரணம்         குருவே துணை 







ஆதிசித்த நாதனை அநாதியான மூலனை 
ஆதியந்த மில்லாஎங்கள் ஆலமுண்ட கண்டனை 
மாதிலொரு பாதியனை மாயை அறுக்கும் ஈசனை 
சோதிரூப மானவனை எப்போதும் சிந்தித்திரு நெஞ்சே  .


நல்லாரைக் கூடிநயம்பட வாழாமல் தீங்கு செய்யும் 
பொல்லாரைக் கூடி பொழுதினை கழித்து பாரமாய் வாழுமிப் 
பொல்லாப் புலையனும் நாயினுங்கீழ் பிறப்பெடுத்தயென் 
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கயிலை நாதனே  .


போதும் பிறந்திறந்து அல்லல்படும் வாழ்வு இனியொரு 
போதும் பிறக்க இசைவியோ மட நெஞ்சே பிறந்தால் எப் 
போதும் ஆனந்தக் கூத்தனை சிந்தையில் நினைந்திரு அப் 
போதுபிற வாநிலையடைந்து பேரின்பத்தில் திளைத்திருப்பாய் . 


                                    
                                      - திருவடி முத்துகிருஷ்ணன் 


                                          சிவமேஜெயம் !! 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வியாழன், ஜூன் 26, 2014



அடியேன் எழுதிய பாடல்கள் ...............




அடைக்கலக் கண்ணிகள் 



அம்பலத்திலாடும் ஆண்டவனே உனக்கு அடைக்கலம் 

ஆடிய பொற்பாதமே ஆண்டு கொள்வாய் உனக்கு அடைக்கலம் 

இன்னல் தீர்ப்பவனே எங்கள் ஆலவாயனே உனக்கு அடைக்கலம் 

ஈசனே எந்தையே எம் சிந்தையில் உறைவாய் உனக்கு அடைக்கலம் 

உலகம்மை நாயகனே உமையொரு பாகனே உனக்கு அடைக்கலம் 

ஊழ்வினை அறுப்பவனே வல்வினை தீர்ப்பாய் உனக்கு அடைக்கலம் 

எந்நோய்க்கும் மருந்தானாய் இறைவா உனக்கு அடைக்கலம் 

ஏழை துயர் தீருமையா ஏகநாதா உனக்கு அடைக்கலம் 

ஐம்பூத நாயகனே ஐம்புலன்கள் அடக்குவாய் உனக்கு அடைக்கலம் 

சித்தனாகி பித்தனாகி அத்தனாகி நின்றாய் உனக்கு அடைக்கலம் 

மாலும் அயனும் முயன்றும் முடியா முடியே உனக்கு அடைக்கலம் 

மும்மலமெரித்து முன் வினை தீர்ப்பாய் உனக்கு அடைக்கலம் 

முப்புரமெரித்த முதல்வனே நின் இணையடி அடைக்கலம் 

நோய்க்கு விடுதியாமிவ் வுடலை சோதிமயமாக்குவாய் அடைக்கலம் 

அனைத்தையும் நொடிபொழுதில் ஆக்கி அழிக்க வல்லோய் அடைக்கலம்

ஆவியற்று நான் வீழுமுன்னம் எனை ஆண்டுகொள்வாய் அப்பனே 

              ஐயனே அரனே ஐயா அடைக்கலம் உனக்கே .
 
                                                             
                                                            - திருவடி முத்துகிருஷ்ணன் 

                                         சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


செவ்வாய், ஜூன் 24, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் ..................

                                              சிவமயம் 
                                        சிவமேஜெயம் 
குருவே சரணம்  பட்டினத்தாரே சரணம்  குருவே துணை 




 
               இந்த பாடல் தூத்துக்குடி மாநகரில் அருளாட்சி நடத்தி வரும் என் அப்பன் சங்கர ராமேஸ்வரர் . ஞானத்தை அருள தனி சந்நிதி கொண்டிருக்கும் வில்வேஸ்வரனுக்கும் அடியேன் எழுதிய பாடல்கள் . என் அப்பன் வில்வேஸ்வரர் அடியேன் கேட்டதை எல்லாம் அருளிச் செய்தார் . 



சங்கடங்கடல் போற்சூழ்ந்து வரின்மனமேதிரு மந்திரநகருறை 
சங்கரராமேஸ் வரனைசரண டைந்துபணி செய்து கிடப்பதே 
நங்கடனென்று சிவசிந்தனையை சிந்தையில் ஏற்றினால் 
பங்கயத்தோனெழுத் தென்னநாளுங் கோளுமென்ன நமக்கேதுமிலையே.


இரைக்கே அல்லும்பக லும்திரிந் தலைந்து
இறையை மறந்து மண்பொன் பெண்ணிற்கு வாழ்ந்து 
மறைந்து போகவிருக்கு மீனனை திருமந்திர நக 
ருறைந்தருள் செய்யும் வில்வேஸ்வரனே காத்தருள்வாய் .


உற்றவனாய் எனக்கே யிருந்துவழிநடத்தி நினதருள் 
பெற்றவனாய் மாற்றிநின் பற்றைத் தவிர வேறொன்றும் 
அற்றவனாய் உன்னடியார்க்கு தொண்டு செய்யும் பணியை 
கொற்றவனே நாயேனுக்கருள் செய்யே .    

                                     -  திருவடி முத்துகிருஷ்ணன்

                                  சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 




  
சதுரகிரி யாத்திரை அனுபவங்கள் .. ....................





சதுரகிரி மலைக்கு அடியேன் அடிக்கடி செல்வதுண்டு . அங்கு அடியேனுக்கு நேர்ந்த மறக்க முடியாத அனுபவங்களை நாளை முதல் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . 



           ஒவ்வொரு முறையும் தனித்தனி அனுபவங்கள் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் .                            


                                              சிவமேஜெயம் !! 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


     

திங்கள், ஜூன் 23, 2014


அடியேன் எழுதிய பாடல்களில் இருந்து ......

                                                       சிவமயம் 

                                                 சிவமேஜெயம் 

குருவே சரணம்     பட்டினத்தாரே சரணம்     குருவே துணை 






கிட்டியதை எண்ணி திருப்தி காணாமல் தனக்கு 
கிட்டாததை எண்ணி வருந்தி வீனாற் கழித்து 
எட்டாத கனிக்கே பேராவல் கொண்டு வாழ்வாரோடு 
ஒட்டாத வாழ்வை தருவாய் கயிலை நாதனே .


ஊழ் வினையா பாழ்வினையோ என்னுடன் வந்த 
முன் வினையோ பின்வினையோ உடனிருக்கும் 
நல் வினையோ தீவினையோ நான்செய்த வல்வினையோ 
நீள் சடைநாதனை எண்ணாமல் இருந்ததென் தொல்வினையே .




உண்ணா துறங்காதிருக்க மறந்தாயா மடநெஞ்சே மயக்கும் 
பெண்ணோடு கூடாமலிருக்க மறந்தாயா நற்கதியருளும் 
அண்ணாமலை யாரின்திருவடி மலர்களை போற்றி யிருக்க
என்னாமலிருந் தனையே பித்துப் பிடித்த என் நெஞ்சமே .   


                                                    - திருவடி முத்துகிருஷ்ணன் 



                                                    - திருவடி முத்துகிருஷ்ணன் 


    என்றும் இறை பணியில் 


                                                சிவமேஜெயம் !!

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



புதன், ஜூன் 18, 2014



சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் இருந்து சில பாடல்கள் .......







நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் 
நமசிவாய அஞ்சிலஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே.


நமசிவாய என்ற நாமத்தை எந்நேரமும் மனதில் தியானித்து நம்முள்ளே இருக்க வைத்தால் மாயை எனபடுவது அஞ்சி ஓடும் , நன்மைகள் பல கிட்டும் ஆகவே உண்மையான அந்த மந்திரத்தை
நீ மனதிற்குள் எப்போதும் தியானித்து கொண்டிருப்பாய் .

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.


ஒரு கல்லை நட்டுவைத்து அக்கல்லுக்கு பூமாலை போட்டு அதற்கு தெய்வமென்று பெயரிட்டு அதை சுற்றி வந்து முணமுணவென்று மந்திரங்கள் என்கிற பெயரில் எதோ சொல்லுகிறீர் .நீர் செய்வது எப்படி இருக்கிறதென்றால் ,சமையல் செய்யும் பாத்திரம் உணவின் சுவையை அறிவது போல் இருக்கிறது . எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அந்த பாத்திரத்துக்கு சுவை தெரிவது இல்லை அதே போல எவ்வளவு பூக்கள் போட்டாலும் மந்திரங்கள் எத்துனை ஓதினாலும் அதற்கு பயனில்லை. சிவம் என்பது தனியாக வெளியில் இல்லை சிவம் நம்மில் கலந்து இருக்கிறது அதை உணராமல் வெளியிலேயே தேடிகொண்டிருக்கின்றீரே , நீர் நட்டு வைத்த கல்லானது உம்மிடம் பேசுமோ என நம்மை சாடுகிறார். 


 என்றும் இறை பணியில் 

                  திருவடி முத்துகிருஷ்ணன் 

                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


   அடியேன் எழுதிய பாடல்கள் .. 


குருவே சரணம்       பட்டினத்தாரே சரணம்       குருவே துணை 

  
              
                                                                 சிவமயம்




ஊழ்வினையும் உறுத்தி உறுத்தி நம்மைச் 
சூழ்வினையே பெண்ணுருக் கொண்டு மாயையில் 
வீழ்செய்து புண்ணாங்குழி எனும்நரக வாயில்தள்ளி 
பாழ்செய்யும் இப்பிறவிப் பிணிபோக்குவாய் ஈசனே   


ஈசனே பிறந்திறந் துழலும் பிறவியின் 
நாசனே மீண்டும் பிறவா நிலையருளும் 
நேசனே பிறந்தால் உனைமறவா வரமருள்வாய் 
தேசனே நின்பதம் பற்றினேன் எனைக் காத்தருள்வாயே .


மெய்யை மெய்யென் றெண்ணி யிறுமாந்திருந்து
நெய்யிட்டு சோறெடுத்து மெய்வளர்த்து - இது 
பொய்யாய் போகுமென் றுணர்ந்து மெய்யோடு 
உய்வடையும் பேறெனக் கருள்வாய் வினைதீர்த்தவனே 

                                     
                                                -   திருவடி முத்துகிருஷ்ணன் 

                                      என்றும் இறை பணியில் 

                                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



செவ்வாய், ஜூன் 17, 2014

குருவே துணை        பட்டினத்தாரே சரணம்        குருவே சரணம் 









ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ  பட்டினத்தார் திருவடிகள் போற்றி !! 


ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ வாலை திருவடிகள் போற்றி !!


ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி !!



       தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனை

         சூதுற்ற பூதலத்திலிருத் தியென்னகண் டாயையா 

         போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால்

         காதற்ற ஊசிகொண் டுலகறிந்த்த உத்தமரே . 



                                                                 -  திருவடி முத்துகிருஷ்ணன் 



இந்த பாடல் என் குருநாதருக்கென அடியேன் அவரை தியானித்து எழுதின பாடல் . இதை என் பாடல்களில் முதற்பாடலாக பதிவு செய்கிறேன் .

                                                     என்றும் இறை பணியில் 


                                                 சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



திங்கள், ஜூன் 16, 2014

அடியேனிடமிருந்து ....................அன்பர்களுக்கு 

                                              சிவமயம் 






 குருவே துணை      பட்டினத்தாரே சரணம்     குருவே சரணம் 




                     இந்த இணையத்தின் இணைப்பில் இருக்கும் மதிப்பிற்குரிய அடியார்களுக்கு அடியேன் திருவடி முத்துகிருஷ்ணனின் பணிவான வணக்கங்கள் .


             எம் குருநாதர் ஐயா திரு பட்டினத்தார் அவர்களை குருவாக நினைத்து  என் தியான வாழ்க்கையை ஆரம்பித்தேன் . அவருடைய திருவருளால் அடியேன் பல சிவ தலங்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறேன் . அப்படி அடியேன் சென்ற தலங்களை பற்றி பல பாடல்களை எழுதியுள்ளேன் . இத்தனை நாள் அதை பதிவிட மனமில்லாமல் இருந்தேன் நண்பர்கள் பதிவிட சொன்ன காரணத்தினால் பாடல்களை பதிவு செய்ய விருக்கிறேன் . அடியேன் படிப்பறிவு இல்லாத காரத்தினால், தமிழறிவு மிக்க பெரியவர்கள் அதிலேதும் பிழைகள் இருந்தால் அடியேனை மன்னிக்கும் படி வேண்டுகிறேன் .


           இந்த பாடல்கள் முழுக்க முழுக்க தியானத்தில் இருக்கும் போது எழுதினேன் . என் வாழ்வில் கடந்து வந்த சங்கடங்கள் பல அதன் தாக்கமும் இதில் அடங்கி இருக்கும் . 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளேன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன் .தினசரி 3 பாடல்களாக பதிவு செய்கிறேன் .


                    பட்டினத்தார் திருவடிகளை போற்றி நாளை முதல் பதிவு செய்கிறேன் .

                                        நன்றி வணக்கம் .


                    என்றும் இறை பணியில்

                                                               திருவடி முத்துகிருஷ்ணன்

             
                                                சிவமேஜெயம் !!

 சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


வெள்ளி, ஜூன் 13, 2014



திருமூலர் அருள் செய்த
                          திருமந்திரத்திலிருந்து ...............










             
                           சில மந்திரங்கள் ..



கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத் தறியாரே .

சிவனை போற்றும் நூல்களை கல்லாத மனிதர்கள் தன்னிலை அறியும் அறிவை இழந்த மூடர்கள் ஆவர் . இவர்களைக் காணவும் அவர் கூறும் நன்மையில்லாத சொற்களை கேட்பதுவும் நம் கடமை இல்லை . இவர்களைப் போல் உள்ளவர்களே இவர்களுக்கு நல்லவராகத் தோன்றுவார் . நல்லவர் கூறும் நயமிக்க உயர்ந்த கருத்துக்களை செவி கொடுத்து கேட்கும் அறிவு அற்றவர்கள் ஆவார்கள் .

நடுவு நின்றார்க் கன்றி ஞானமு மில்லை
நடுவு நின்றார்க்கு நரகமு மில்லை
நடுவு நின்றார் நல்ல தேவருமாவர்
நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே .

தர்மத்தை போற்றி உயர்வையும் , தாழ்வையும் , இன்ப துன்பங்களையும் சமமாக பாவிக்கும் ஞானியர் மகான்களை தவிர பிற மனிதர்கட்கு ஞானம் வாய்ப்பதில்லை . அனைத்தையும் சமம் என கருதுபவர்கட்கு நரக வாழ்வுமில்லை,பிறந்து துன்பத்தை அனுபவிப்பதும் இல்லை . அவர்கள் மனித நிலையை கடந்து மேலான நிலையாம் தேவ நிலையை அடைவார்கள் . அவர்கள் நின்ற நிலையிலே அவர்களை பின்பற்றி நானும் இருக்கின்றேன் . 


                                        என்றும் இறைபணியில்

 
                                                         திருவடி முத்துகிருஷ்ணன் 

     
                                                       சிவமேஜெயம் !!

           சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்ற்வோம் !!