சனி, டிசம்பர் 20, 2014

நாம் அறிய வேண்டியவை ......

          சித்தர் பாடல்களில் இருந்து .....


   
                    சிவவாக்கியர் இயற்றிய 

                  சிவவாக்கியத்தில் இருந்து ...



                சில வாக்கியம்  


பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்களுங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?


பிறக்கும் அனைத்து உயிர்களும் ஓர் நாள் இறந்து போகும் என்று அறியாத பேதை மக்கள் தாம் இறக்காது சேர்த்து வைத்த சொத்துக்களை அனுபவித்து இருப்போம் என்று பெருமை பேசித் திரிவர் . ஆனால் நடப்பது என்ன , அவர் வயிறு நிறைய உணவை உண்டு வளர்த்த உடலானது அழியும் போது ஈசனை அறிய மாட்டார் . 


தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குல தெய்வமுங்கள் உருக்குலைப்ப துண்மையே.


நீங்கள் பேணி காத்து வளர்த்த இந்த உடல் நோய்வாய்ப்பட்டால் அந்த நோய் தீர்க்க வேண்டி துர்தேவதை எனப்படும் பிடாரி கோவிலில் பொங்கல் வைத்து , ஆடு கோழி முதலிய உயிரினங்களை பலி கொடுத்து நீர் பண்ணும் பூசையை ஏற்று உங்கள் நோய் தீர்க்கும் என்று நீர் நினைத்தால் அது தவறு . குலதெய்வம் என்று நீங்கள் நினைக்கும் தெய்வம் , பிணி , தரித்திரம் அனைத்துமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சுறு போல உங்களை உருக்குலைத்து உங்கள் வாழ்வையும் குலைத்து விடும் இது மறுக்க முடியாத உண்மை .    



ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்ப துண்மையே.



 தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையாது சதா சர்வகாலமும் 
பிறர் பொருளின் மீது ஆசை கொண்டு , அவருக்கு தீங்கு  செய்தாகிலும் அவரிடமிருந்து அதை அபகரிக்க நினைப்பவர்கள் , அனுதினமும்  பூஜை,ஆச்சார அனுஷ்டானம்  புரிந்தாலும் , அவர்க்குச் சிறிதும் அதனால் நன்மை இல்லை. மாறாக நரகங்கள் ஏழும்  அவருக்காக  காத்திருக்கிறது என்பது தான் உண்மை . 


                              என்றும் இறை பணியில் 

                                                     - திருவடி முத்து கிருஷ்ணன் 


                                            சிவமேஜெயம் !!!


   சிவத்தை போற்றுவோம் !!!  சித்தர்களை  போற்றுவோம் !!!