திங்கள், செப்டம்பர் 26, 2011

விவேகானந்தரின் பொன் மொழிகள்




விவேகானந்தரின் பொன் மொழிகள் 


செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத்  தவிர்க்க வேண்டும்.

முப்பத்து முக்கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.

பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்ததாக தான் இருக்கும்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

 இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

 அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.


மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு.
நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.

மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதத்தைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்டவேண்டும்.
மதங்கள் எல்லாமே உண்மையானவை தாம்! ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது பொருளற்றது. ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்

இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.

என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.

எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள்.


 லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.

மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும் .

எழுங்கள், விழியுங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளர்களாக இருங்கள்.

தொடர்ந்து மனதில் புனிதமான எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.
பிரதிபலன் எதையும் கருதாமல் நாம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த நல்லெண்ணமே பாவ புண்ணிய பலன்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.

சமநிலையில் இருந்து பிறழாதவர்கள், நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும் உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள்.



வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.


                                       

                                                 - விவேகானந்தர் 



வெள்ளி, செப்டம்பர் 02, 2011

குதம்பை சித்தர் பாடல்கள்

குதம்பை சித்தர் பாடல்கள் 


பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக்
காரண மில்லையடி - குதம்பாய்
காரண மில்லையடி.



போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
சாங்கால மில்லையடி - குதம்பாய்
சாங்கால மில்லையடி.



செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதா னில்லையடி - குதம்பாய்
முத்திதா 
னில்லையடி.



வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
கஸ்திசற் றில்லையடி - குதம்பாய்
கஸ்திசற் 
றில்லையடி.



பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்க ளில்லையடி - குதம்பாய்
குற்றங்க 
ளில்லையடி.



காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி - குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.



வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி - குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.



எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி - குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.



அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி - குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.



ஆவித் துணையாகும் ஆராவமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி - குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.



தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் - குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.



அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே - குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.



விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி - குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.



விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி - குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.



பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
முத்தி சற்றில்லையடி - குதம்பாய்
முத்தி சற்
றில்லையடி.



எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி - குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.



எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ - குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.



காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே - குதம்பாய் 
நாணாமல் ஏத்தடியே.



அணுவாய் பல்லண்டமா யானசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ - குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.



மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே - குதம்பாய்
காணிக்கை நன்மனமே.



சிவபெருமான் பெருமை கூறல் 


தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
மூவரு மாவாரடி - குதம்பாய்
மூவரு மாவாரடி.



சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
வித்தாகும் வத்துவடி - குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.



உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் - குதம்பாய்
திருவாகி நின்றது காண்.



நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் - குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.



புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
சிவனாலே யாகுமடி - குதம்பாய்
சிவனாலே யாகுமடி.



அவனசையா விடின் அணுவசை யாதென்றல்
புவனத்தி லுண்மையடி - குதம்பாய்
புவனத்தி 
லுண்மையடி.



காரணஞ் சித்தென்றுங் காரியஞ் சத்தென்றும்
ஆரணஞ் சொல்லுமடி - குதம்பாய்
ஆரணஞ் சொல்லுமடி.



காரணம் முன்னென்றுங் காரியம் பின்னென்றுந்
தாரணி சொல்லுமடி - குதம்பாய்
தாரணி சொல்லுமடி.



ஆதிசகத் தென்று அநாதி மகத் தென்று
மேதினி கூறுமடி - குதம்பாய்
மேதினி கூறுமடி.



ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி -குதம்பாய்
மந்திரம் போற்றுமடி.



யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
சேனையைத் தந்தானடி - குதம்பாய்
சேனையைத் தந்தானடி.



மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
எண்ணளவு வில்லையடி - குதம்பாய்
எண்ணளவு வில்லையடி.



ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி - குதம்பாய்
சோதியாய் நின்றானடி.



சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி - குதம்பாய்
தேவன் அவனாமடி.



சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
சத்தியம் உள்ளானடி - குதம்பாய்
சத்தியம் உள்ளானடி.



எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள்
பொங்கமா யுள்ளானடி - குதம்பாய்
பொங்கமா யுள்ளானடி.



தீர்க்க ஆகாயம் தெரியா தன்மைபோல்
பார்க்கப் படாதானடி - குதம்பாய்
பார்க்கப்படா தானடி.



ஆத்துமந் தன்னை அரூபமா எண்ணினாய்
கூத்தனவ்வா றல்லவோ - குதம்பாய்
கூத்தனவ்வா றல்லவோ.



அண்டத்தைத் தேவனளிக்க எண் ணும்போதே
அண்டமுண் டாயிற்றடி - குதம்பாய்
அண்டமுண் டாயிற்றடி.



வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள்
தானவர் செய்தாரடி - குதம்பாய்
தானவர் செய்தாரடி.



ஒன்று மில்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை
நின்றிடச் செய்தானடி - குதம்பாய்
நின்றிடச் செய்தானடி.



கருவி களில்லாமற் காணும்பல் லண்டங்கள்
உருவுறச் செய்தானடி - குதம்பாய்
உருவுறச் செய்தானடி.



எல்லா உயிர்களும் எந்த உலகமும்
வல்லானைப் போற்றுமடி - குதம்பாய்
வல்லானைப் போற்றுமடி.



என்றும் அழியாமை எங்கும்  நிறைவாகி
நின்றது பிரமமடி - குதம்பாய்
நின்றது பிரமமடி.



கண்டத்தை யாள்கின்ற காவலர் போற்சோதி
அண்டத்தை யாள்கின்றதே - குதம்பாய்
அண்டத்தை யாள்கின்றதே.



அண்டம் உண் டாகு முன்னாக அநாதியாய்க்
கண்டது பிரமமடி - குதம்பாய்
கண்டது பிரமமடி.



எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும்
அந்தமாய் நின்றானடி - குதம்பாய்
அந்தமாய் நின்றாடின.



தணிவான புத்தியால் தாணு அறியாதோர்
அணுவேனு மில்லையடி - குதம்பாய்
அணுவேனு மில்லையடி.



மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில்
தோன்றா துலகமடி - குதம்பாய்
தோன்றா துலகமடி.



சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே
யாரலே யாகுமடி - குதம்பாய்
யாரலே யாகுமடி.



முக்தியை அடையும் வழி  


எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு முத்தியடி - குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி.



பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி - குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி.



பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி - குதம்பாய்
சந்தத முத்தியடி.



ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி - குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.



மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
வந்தெய்தும் முத்தியடி - குதம்பாய்
வந்தெய்தும் முத்தியடி.



அந்தக் கரணம் அடங்க அடக்கினால்
சொந்தம் பிரமமடி - குதம்பாய்
சொந்தம் பிரமமடி.



தாய்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்
வாய்க்கும் பதவியடி - குதம்பாய்
வாய்க்கும் பதவியடி.



சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால்
சித்திக்கும் முத்தியடி - குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி.



கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை
ஒன்றினால் முத்தியடி - குதம்பாய்
ஒன்றினால் முத்தியடி.



கைக்கனி போலவே காசறு பிரமத்தில்
சொக்கினால் முத்தியடி - குதம்பாய்
சொக்கினால் முத்தியடி.



நித்திய வத்துவை நீங்காது நாடினால்
முத்திதான் சித்திக்குமே - குதம்பாய்
முத்திதான் சித்திகுமே.



உடலை பழித்தல் 


பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை யேதுக்கடி - குதம்பாய்
வாசனை யேதுக்கடி.



துற்கந்த மாய்மலஞ் சோரும் உடலுக்கு
நற்கந்த மேதுக்கடி - குதம்பாய்
நற்கந்த மேதுக்கடி.



நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி - குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி.



சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
மேலை மினுக்காமடி - குதம்பாய்
மேலை மினுக்காமடி.



பீவாச முள்ளவள் பீறலு உடம்புக்குப்
பூவாச மேதுக்கடி - குதம்பாய்
பூவாச மேதுக்கடி.



போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி.



சீயு நிணமுந் திரண்ட உடம்பினை
ஆயுவ தேதுக்கடி - குதம்பாய்
ஆயுவ 
தேதுக்கடி.



காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
வாகன மேதுக்கடி - குதம்பாய்
வாகன மேதுக்கடி.



கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
பூவணை யேதுக்கடி - குதம்பாய்
பூவணை யேதுக்கடி.



பரத்தயரைப் பழித்தல் 


நெடுவரை போலவே நீண்ட கனதனம்
நடுவாக வந்ததடி - குதம்பாய்
நடுவாக வந்ததடி.



கையால் அழைப்பது போல் உனது கண்
மையால் அழைப்பதென்ன - குதம்பாய்
மையால் அழைப்பதென்ன.



முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்தபல்
உதிர்ந்து கிடக்குமடி - குதம்பாய்
உதிர்ந்து கிடக்குமடி.



கழறும் கிளிமொழி காலஞ் சென்றாலது
குளறி அழியுமடி - குதம்பாய்
குளறி அழியுமடி.



வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே - குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே.



பொருக்கின்றி மேனியில் பூரித்தெழுந்த தோல்
சுருக்கம் விழுந்திடுமே - குதம்பாய்
சுருக்கம் விழுந்திடுமே.



கொள்ளையாகக் கொழுத்தே எழுந்த கண்
நொள்ளைய தாய்விடுமே - குதம்பாய்
நொள்ளைய தாய்விடுமே.



மஞ்சு போலாகி வளர்ந்திடுங் கூந்தலும்
பஞ்சுபோ லாகிடுமே - குதம்பாய்
பஞ்சுபோ லாகிடுமே.



பொன்னாலே செய்யாடி போன்ற உன்கன்னங்கள்
பின்னாலே ஒட்டிவிடும் - குதம்பாய்
பின்னாலே ஒட்டிவிடும்.



நல்லாய் உன் ங்கமும் நன்கு நிமர்ந்தாலும் 
வில்லாய்ப்பின் கூனிவிடும் - குதம்பாய்
வில்லாய்ப்பின் கூனிவிடும்.



முந்தி நடக்கின்ற மொய்ம்பும்சின் னாளையில்
குந்தி யிருக்கச் செய்யும் - குதம்பாய்
குந்தி 
யிருக்கச் செய்யும்.



பிறக்கும்போ துற்ற பெருமையைப் போலவே
இறக்கும்போ தெய்துவிடும் - குதம்பாய்
இறக்கும்போ தெய்துவிடும்.



விலக்க வேண்டியவை 


கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு ஏதுவடி - குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி.



கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி - குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி.



பொருளாசை யுள்ள இப்பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி - குதம்பாய்
இருளாம் நரகமடி.



கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும்
வற்புள்ள பாவமடி - குதம்பாய்
வற்புள்ள பாவமடி.



தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி - குதம்பாய்
கீழாம் நரகமடி.



சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு
நித்தம் நரகமடி - குதம்பாய்
நித்தம் நரகமடி.



எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்
தப்பா நரகமடி - குதம்பாய்
தப்பா நரகமடி.



பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி - குதம்பாய்
ஏழாம் நரகமடி.



காயம் எடுத் தாதி கர்த்தரை எண்ணார்க்குத்
தீயாம் நரகமடி - குதம்பாய்
தீயாம் நரகமடி.



அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
துன்பாம் நரகமடி - குதம்பாய்
துன்பாம் நரகமடி.



பொய்க் குருக்களை பழித்தல்


செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல்வழியே - குதம்பாய்
எங்காகும் நல்வழியே.



மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச்
சாத்திர மேதுக்கடி - குதம்பாய்
சாத்திர மேதுக்கடி.



வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை யேதுக்கடி - குதம்பாய்
பெண்ணாசை யேதுக்கடி.



ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்
கப்பறை யேதுக்கடி - குதம்பாய்
கப்பறை யேதுக்கடி.



சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான்தோ லேதுக்கடி - குதம்பாய்
மான்தோ லேதுக்கடி.



நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
தாடிசடை யேனோ - குதம்பாய்
தாடிசடை யேனோ.



நாதற்கு உறவாகி நற்தவம் சார்ந்தோர்க்குப்
பாதக் குறடுமுண்டோ - குதம்பாய்
பாதக் குறடுமுண்டோ.



தபநிலை கண்டாதி தன்வழி பட்டோர்க்குச்
செபமாலை யேதுக்கடி - குதம்பாய்
செபமாலை யேதுக்கடி.



பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு
லங்கோ டேதுக்கடி - குதம்பாய்
லங்கோ டேதுக்கடி.



பொருள் நிலையாமை 


தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ - குதம்பாய்
நாடி வருவதுண்டோ.



போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ - குதம்பாய்
சாம்போது தான்வருமோ.



காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
தூசேனும் பின்வருமோ - குதம்பாய்
தூசேனும் பின்வருமோ.



உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
பெற்றார்துணை யாவரோ - குதம்பாய்
பெற்றார்துணை யாவரோ.



மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பணி யேதுக்கடி - குதம்பாய்
பொய்ப்பணி யேதுக்கடி.



விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை யேதுக்கடி - குதம்பாய்
மண்ணாசை யேதுக்கடி.



சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி -குதம்பாய்
யானையும் நில்லாதடி.



செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி - குதம்பாய்
தங்காது அழியுமடி.



கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வாராதடி - கும்பாய்
கூடவே வாராதடி .



நம்முடன் வருபவை 


நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே - குதம்பாய்
செல்வன நிச்சயமே.



செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே - குதம்பாய்
எய்த வருவனவே.



முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே - குதம்பாய்
பத்தியும் பின்வருமே.



பற்றை துறத்தல் 


இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
நிச்சய மாகுமடி - குதம்பாய்
நிச்சய மாகுமடி.



வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி.



ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
ஓசையைக் கேட்டிலையோ - குதம்பாய்
ஓசையைக் கேட்டிலையோ .



தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே
பாக்கிய வான்களடி - குதம்பாய்
பாக்கிய வான்களடி.



இன்பங்கள் எய்திட விச்சை உறாதார்க்குத்
துன்பங்கள் உண்டாமடி - குதம்பாய்
துன்பங்கள் உண்டாமடி.



துறவிகள் ஆளாசை துறந்து விடுவரேல்
பிறவிகள் இல்லையடி - குதம்பாய்
பிறவிகள் இல்லையடி.



  தவத்தின் பெருமை கூறல்


கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி - குதம்பாய்
நல்ல விரதமடி.



தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள்
அவநிலை யாவாரடி - குதம்பாய்
அவநிலை யாவாரடி.



தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச்
சிவமது கைவசமே - குதம்பாய்
சிவமது கைவசமே.



காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் - குதம்பாய்
ஏமன் பயப்படுவான்.



யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகந்தான் இல்லையடி - குதம்பாய்
மோகந்தான் இல்லையடி.



காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்
கோலங்கள் உண்டாமடி - குதம்பாய்
கோலங்கள் உண்டாமடி.



ஐம்புலன் வென்றே அனைத்துந் துறந்தோர்கள்
சம்புவைக் காண்பாரடி - குதம்பாய்
சம்புவைக் காண்பாரடி.



பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
மெய்யவர் ஆவாரடி - குதம்பாய்
மெய்யவர் ஆவாரடி.



யான்என தென்னும் இருவகைப் பற்றற்றோன்
வானவன் ஆவானடி - குதம்பாய்
வானவன் ஆவானடி.



அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு
நகுபிறப்பு இல்லையடி - குதம்பாய்
நகுபிறப்பு இல்லையடி.



பற்றறில் துன்பமும் பற்றறும் இன்பமும்
முற்றாக எய்துமடி - குதம்பாய்
முற்றாக எய்துமடி.



அறிவுநிலை கூறல்


பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி - குதம்பாய்
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி.



பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய 
அறிவு பெரிதாமடி - குதம்பாய்
அறிவு பெரிதாமடி.



தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால்
தத்துவ ஞானமடி - குதம்பாய்
தத்துவ ஞானமடி.



அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று
கண்டது அறிவாமடி - குதம்பாய்
கண்டது அறிவாமடி.



முக்குற்றம் நீக்கமுயலும் மெய்ஞ் ஞானமே
தக்கமெய்ஞ் ஞானமடி - குதம்பாய்
தக்கமெய்ஞ் ஞானமடி.



போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல்
போதம தாகுமடி - குதம்பாய்
போதம தாகுமடி.



சாதி வேறுபாட்டை சாடுதல் 


ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் - குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம்.



பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன - குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வதென்ன .



பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய்ப் படைத்தாரடி - குதம்பாய்
தீர்ப்பாய்ப் படைத்தாரடி.



பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது
கற்பனை யாகுமடி - குதம்பாய்
கற்பனை யாகுமடி.



சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல்
தொட்டிடும் வத்தல்லவே - குதம்பாய்
தொட்டிடும் வத்தல்லவே.



ஆதி பரப்பிரமம் ஆக்கு மக்காலையில்
சாதிகள் இல்லையடி - குதம்பாய்
சாதிகள் இல்லையடி.



சாதிவேறு என்றே தரம்பிரிப் போருக்குச்
சோதிவே றாகுமடி - குதம்பாய்
சோதிவே றாகுமடி.



நீதிமானென்றே நெறியாய் இருப்பானே
சாதிமா னாவானடி - குதம்பாய்
சாதிமா னாவானடி.



சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை யென்று
ஓதி உணர்ந் தறிவாய் - குதம்பாய்
ஓதி உணர்ந் தறிவாய்.



 சமயங்களை சாடுதல்


தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
புன்புத்தி யாகுமடி - குதம்பாய்
புன்புத்தி யாகுமடி.



கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
புல்லறி வாகுமடி - குதம்பாய்
புல்லறி வாகுமடி.



அண்டத்தைக் கண்டு அநாதியில் என்பவர்
கொண்ட கருத்தவமே - குதம்பாய்
கொண்ட கருத்தவமே.



பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும்பா டாண்மதம்
கண்ணின்மை ஆகுமடி - குதம்பாய்
கண்ணின்மை ஆகுமடி.



சூரியன் தெய்மாய்ச் சுட்டுஞ் சமயந்தான்
காரிய மல்லவடி - குதம்பாய்
காரிய மல்லவடி.



மனம்தெய்வ மென்று மகிழ்ந்து கொண்டாடிய
இனமதி ஈனமடி - குதம்பாய்
இனமதி ஈனமடி.



பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை யாகுமடி - குதம்பாய்
கற்பனை யாகுமடி.



நீண்ட குரங்கை நெடிய பருந்தினை
வேண்டப் பயன்வருமோ - குதம்பாய்
வேண்டப் பயன்வருமோ .



மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்
பொய்த்தேவைப் போற்றுமடி - குதம்பாய்
பொய்த்தேவைப் போற்றுமடி.



மந்திரநிலை கூறல் 


நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலாம்
மேற்பற்றிக் கண்டறி நீ - குதம்பாய்
மேற்பற்றிக் கண்டறி நீ.



சட்கோணத்து உள்ளந்தச் சண்முக வக்கரம்
உட்கோணத் துள்ளறி நீ - குதம்பாய்
உட்கோணத் துள்ளறி நீ.



ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே
சிந்தையுள் கண்டறி நீ - குதம்பாய்
சிந்தையுள் கண்டறி நீ.



வாதநிலை கூறல் 


ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாமடி - குதம்பாய்
வீறான முப்பாமடி.



விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
வந்தது வாதமடி - குதம்பாய்
வந்தது வாதமடி.



அப்பினைக் கொண்டந்த உப்பினைக் கட்டினால்
முப்பூ வாகுமடி - குதம்பாய்
முப்பூ வாகுமடி.



உள்ளக் கருவியே உண்மை வாத மன்றிக்
கொள்ளக் கிடையாதடி - குதம்பாய்
கொள்ளக் கிடையாதடி.



பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி - குதம்பாய்
மண்ணாலே இல்லையடி.



ஐந்து சரக்கொடு விந்துநா தம் சேரில்
வெந்திடும் லோகமடி - குதம்பாய்
வெந்திடும் லோகமடி.



  வாசி நிலை கூறல்


முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
எப்பிணி தீர்ப்பாரடி - குதம்பாய்
எப்பிணி தீர்ப்பாரடி.



எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற்
விட்டோடும் நோய்கள் எல்லாம் - குதம்பாய்
விட்டோடும் நோய்கள் எல்லாம்.



நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
ஓடிவிடும் பிணியே - குதம்பாய்
ஓடுவிடும் பிணியே.



சத்தவகை தாது தன்னை அறிந்தவன்
சுத்த வயித்தியனே - குதம்பாய்
சுத்த வயித்தியனே.



வாயு ஒருபத்தும் வாய்த்த நிலைகண்டோன்
ஆயுள் அறிவானடி - குதம்பாய்
ஆயுள் அறிவானடி.



ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில்
மாயும் வியாதியடி - குதம்பாய்
மாயும் வியாதிபடி.



  காயகற்பநிலை கூறல் 


பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
கற்பாந்தம் வாழ்வாரடி - குதம்பாய்
கற்பாந்தம் வாழ்வாரடி.



வேவாத முப்பூவை வேண்டி உண் டார்பாரில்
சாவாமல் வாழ்வாரடி - குதம்பாய்
சாவாமல் வாழ்வாரடி.



விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்து விடார்களடி - குதம்பாய்
வெந்து விடார்களடி.



தொல்லைச் சடம்விட்டுச் சுட்ட சடம்கொண்டோர்
எல்லையில் வாழ்வாரடி - குதம்பாய்
எல்லையில் வாழ்வாரடி.



தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர்
மேற்பைநஞ் சுண்பாரடி - குதம்பாய்
மேற்பைநஞ் சுண்பாரடி.



மாற்றினை ஏற்ற வயங்கும்நெடி யோர்களே
கூற்றினை வெல்வாரடி - குதம்பாய்
கூற்றினை வெல்வாரடி.



 தல யாத்திரை பழித்தல்


கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
ஏயும் பலன் வருமோ - குதம்பாய்
ஏயும் பலன் வருமோ .



சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற
சுத்தத் தலங்களுண்டோ - குதம்பாய்
சுத்தத் தலங்களுண்டோ .



மெய்த்தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர்
பொய்த்தலத் தெய்வத்துண்டோ - குதம்பாய்
பொய்த்தலத் தெய்வத்துண்டோ .



சிற்பர்கள் கட்டுந் திருக்கோயில் உள்ளாகத்
தற்பரம் வாழ்வதுண்டோ - குதம்பாய்
தற்பரம் வாழ்வதுண்டோ .



தன்னால் உண்டாம்சிட்டி தன்னாலே சிட்டித்த
புன்கோயில் உள்ளவன்யார் - குதம்பாய்
புன்கோயில் உள்ளவன்யார் .



அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி - குதம்பாய்
இன்பான கோயிலடி.



ஈசன் இருப்பிடங் கூறல்


தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
மன்னும் தலத்தெய்வதென் - குதம்பாய்
மன்னும் தலத்தெய்வதென் .



இருந்த இடத்தில் இருந்தே அறியாமல்
வருந்தித் திரிவதென்னோ - குதம்பாய்
வருந்தித் திரிவதென்னோ .



காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ - குதம்பாய்
ஈசனைக் காணுவையோ .



பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்
தேவனைக் காணுவையோ - குதம்பாய்
தேவனைக் காணுவையோ .



உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும்
வள்ளலைக் காணுவையோ - குதம்பாய்
வள்ளலைக் காணுவையோ .



போரினில் ஊசி பொறுக்கத் துணிதல்போல்
ஆரியன் தேடுதலே - குதம்பாய்
ஆரியன் தேடுதலே.



சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு
வேதனை யாகுமடி - குதம்பாய்
வேதனை யாகுமடி.



வேதனை நீங்கி விடாது தொடர்ந் தோரே
நாதனைக் காணுவர்காண் - குதம்பாய்
நாதனைக் காணுவர்காண்.



நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர்
நீடொளி காணுவரே - குதம்பாய்
நீடொளி காணுவரே.



   அஞ்ஞானத்தை பழித்தல் 


மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாளேது கோளேதடி - குதம்பாய்
நாளேது கோளேதடி.



தீட்டால் உடம்பு திறங்கொண்டிருக்கையில்
தீட்டென்று சொல்வதென்னை - குதம்பாய்
தீட்டென்று சொல்வதென்னை .



செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்
சத்தம் அறிவாரடி - குதம்பாய்
சத்தம் அறிவாரடி.



தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே - குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே.



பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால்
வெள்ளறி வாகுமடி - குதம்பாய்
வெள்ளறி வாகுமடி.



பந்தவினைக்கு ஈடாடிப் பாரிற் பிறந்தோர்க்குச்
சொந்தமது இல்லையடி - குதம்பாய்
சொந்தமது இல்லையடி.



பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
தீர்ப்பாக எண்ணிடுவாய் - குதம்பாய்
தீர்ப்பாக எண்ணிடுவாய்.



அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்குச்
சொந்தமோ முத்தியடி - குதம்பாய்
சொந்தமோ முத்தியடி.



வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்
சோதித்துத் தள்ளடியோ - குதம்பாய்
சோதித்துத் தள்ளடியோ.



தன்பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
வன்பாவம் நீக்குவரோ - குதம்பாய்
வன்பாவம் நீக்குவரோ .



வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
மீள்வழி இல்லையடி - குதம்பாய்
மீள்வழி இல்லையடி.



வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
போதனை ஆகுமடி - குதம்பாய்
போதனை ஆகுமடி.



யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
ஆகாத செய்கையடி - குதம்பாய்
ஆகாத செய்கையடி.



சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம்
போற்றும் அறிவீனமே - குதம்பாய்
போற்றும் அறிவீனமே.



ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
ஞானம்இல் லாமையடி - குதம்பாய்
ஞானம்இல் லாமையடி.



அஞ்சனம் என்றது தறியாமல் ஏய்க்குதல்
வஞ்சனை ஆகுமடி - குதம்பாய்
வஞ்சனை 
ஆகுமடி.



மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
தீய தொழி லாமடி - குதம்பாய்
தீய தொழி லாமடி.



கருவை அழித்துக் கன்மத்தொழில் செய்குதல்
திருவை அழிக்குமடி - குதம்பாய்
திருவை அழிக்குமடி.



மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
சூரண மாக்குமடி - குதம்பாய்
சூரண மாக்குமடி.



பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே
வெய்ய மயக்கமடி - குதம்பாய்
வெய்ய மயக்கமடி.



மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்குப்
பொய்க்குறி யேதுக்கடி - குதம்பாய்
பொய்க்குறி யேதுக்கடி.



நாயாட்ட மாய் நகைத்துழல் மூடர்க்குப் 
பேயாட்ட மேதுக்கடி - குதம்பாய்
பேயாட்ட மேதுக்கடி.



மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி.



வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச்
சேதம் மிகவருமே - குதம்பாய்
வேதம் மிகவருமே.



வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய மேதுக்கடி - குதம்பாய்
பட்டய மேதுக்கடி.



மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
கற்பங்க ளேதுக்கடி - குதம்பாய்
கற்பங்க ளேதுக்கடி.



காணாமற் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு
வீணாசை யேதுக்கடி - குதம்பாய்
வீணாசை யேதுக்கடி.



வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்கு
சஞ்சல மேதுக்கடி - குதம்பாய்
சஞ்சல மேதுக்கடி.



ஆதார மான அடிமுடி கண்டோர்க்கு 
வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய்
வாதாட்ட மேதுக்கடி.



நித்திரை கெட்டு நினைவோ டிருப்போர்க்கு
முத்திரை யேதுக்கடி - குதம்பாய்
முத்திரை யேதுக்கடி.



தந்திர மான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திர மேதுக்கடி - குதம்பாய்
மந்திர மேதுக்கடி.



சத்தியமான தவத்தி லிருப்போர்க்கு
உத்திய மேதுக்கடி - குதம்பாய்
உத்திய மேதுக்கடி.



நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய்
வாட்டங்க ளேதுக்கடி.



முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு
சத்தங்க ளேதுக்கடி - குதம்பாய்
சத்தங்க ளேதுக்கடி.



உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோருக்கு
இச்சிப்பிங் கேதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங் கேதுக்கடி.



வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்த மேதுக்கடி - குதம்பாய்
மோகாந்த மேதுக்கடி.



சாகாமற் றாண்டி தனிவழி போவார்க்கு
ஏகாந்த மேதுக்கடி - குதம்பாய்
ஏகாந்த மேதுக்கடி.



அந்தரந் தன்னி லசைந்தாடு முத்தர்க்குத்
தந்திர மேதுக்கடி - குதம்பாய்
தந்திர மேதுக்கடி.



ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு
ஞானந்தா னேதுக்கடி - குதம்பாய்
ஞானந்தா னேதுக்கடி.



சித்திரக் கூட்டத்தைத் தினந்தினங் காண்போர்க்குப்
பத்திர மேதுக்கடி - குதம்பாய்
பத்திர மேதுக்கடி.



முக்கோணந் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோண மேதுக்கடி - குதம்பாய்
சட்கோண மேதுக்கடி.



அட்டதிக் கெல்லால் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை யேதுக்கடி - குதம்பாய்
நட்டணை யேதுக்கடி.



முத்திபெற் றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்திய மேதுக்கடி - குதம்பாய்
பத்திய மேதுக்கடி.



அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்
பல்லாக் கேதுக்கடி - குதம்பாய்
பல்லாக் கேதுக்கடி.



அட்டாங்கயோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்க மேதுக்கடி - குதம்பாய்
முட்டாங்க மேதுக்கடி.



வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தா னேதுக்கடி - குதம்பாய்
யோகந்தா னேதுக்கடி.



மாத்தானை வென்று மலைமே லிருப்போர்க்குப்
பூத்தான மேதுக்கடி - குதம்பாய்
பூத்தான மேதுக்கடி.



செத்தாமரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்குக்
கைத்தாள மேதுக்கடி - குதம்பாய்
கைத்தாள மேதுக்கடி.



கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்போர்க்குக்
கொண்டாட்ட மேதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்ட மேதுக்கடி.



காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்க ளேதுக்கடி - குதம்பாய்
கோலங்க ளேதுக்கடி.



வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காய மேதுக்கடி - குதம்பாய்
உண்காய மேதுக்கடி.



மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பா லேதுக்கடி.



பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு
முட்டாக் கேதுக்கடி - குதம்பாய்
முட்டாக் கேதுக்கடி.



தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி - குதம்பாய்
தேவார மேதுக்கடி.



தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு 
பின்னாசை யேதுக்கடி - குதம்பாய்
பின்னாசை யேதுக்கடி.



பத்தாவுந் தானும் பதியோ டிருப்போர்க்கு
உத்தார மேதுக்கடி - குதம்பாய்
உத்தார மேதுக்கடி.



                            குதம்பை சித்தர் பாடல் முற்றிற்று