புதன், ஜனவரி 31, 2018

கோ பூஜை ( கோ சேவை )      
                                                     
 

  கடவுள் நம்பிக்கை ஒன்றே இக்கலியுகத்தில் மனிதனை கரையேற்ற சிறந்தவழி . தெய்வ வழிபாடுகள் தான் மனிதனின் தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை விதைக்கும் . எத்துணை துன்பம் நேரினும் அவனே துணை என்று வாழ்ந்தவர்களை எம்பெருமான் ஆட்கொண்டு அருளினார் என்பது பல அருளாளர்களின் அனுபவ பூர்வமான உண்மை


                                                     அதே போல நம்முடைய இந்துக்களின் வழிபாடுகளில் மிக முக்கியமானது இந்த கோ பூஜை . ஒவ்வொரு மனிதனுக்கும் பலப்பல தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் , நாகதோஷம் , காலசர்ப்பதோஷம் , களத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் , புத்திர தோஷம் , நவக்கிரக தோஷம் என்றுஇன்னும் நிறைய . இதை போன்ற தோஷங்கள் நம்பால் அணுகாதிருக்க பிரதோஷ காலத்தில் நம் அப்பனை தில்லையில் நடம்புரியும் ஆனந்தக் கூத்தனை வழிபடுவதால் நமக்கு எந்த துன்பமும் இல்லை . சிவ வழிபாட்டிற்கு அடுத்து நம்முடைய எல்லாத் துன்பங்களையும் நீக்க வல்லது கோ பூஜை .


                   கோ பூஜையில் கலந்து கொண்டு பசுவை வழிபடுவதால் நம்முடைய எல்லா தோஷங்களும் துன்பங்களும் நிச்சயம் விலகும். ஏனெனில் கோமாதா என்று சொல்லக் கூடிய பசுவின் உடல் பாகங்களில் அத்துணை தேவர்களும் , முகத்தில் எம்பெருமானும் , பின்புறத்தில் திருமகளும் அருள் புரிகிறார்கள் அத்துணை சிறப்பு வாய்ந்த பசுவினை பூஜித்தால் நமக்கு வாழ்வில் எல்லா தோஷங்களும் நீங்கி அனைவருடைய அருளோடு சகல செல்வங்களும் நம் இல்லத்தில் குடி கொள்ளும் நம் சந்ததியையே வாழ வைக்கும் அத்துணை சிறப்பு வாய்ந்தது கோ பூஜை


                       
பசு தெய்வாம்சம் நிறைந்தது அதனை நன்மலர் கொண்டு அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும் . பசு வசிக்கும் இடத்தில் தியானம் செய்வது மிகவும் நல்லது . கோமியத்தை தீர்த்தமாக வீட்டை சுற்றி தெளிக்க தீய சக்திகள் நம்மை அண்டாது மனக்குழப்பங்கள் நீங்கி மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் . மிக எளிமையான முறையில் நம் தோஷங்கள் , பாவங்கள் , துன்பங்கள் அகல ஒரே வழி பசுவிற்கு உணவளிப்பது. பசுவுக்கு புண்ணாக்கு , நாற்றுக்கட்டு என்று வயிறு நிறையும் உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது  . நல்லது சிவமேஜெயம்.


                           
 சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

   
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!

வெள்ளி, ஜனவரி 26, 2018

 இராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்ரம் 




சிவதாண்டவம்

சுருண்டகா டடர்சடை படர்நதி விரைந்துமே
விழுந்திடும் விதம்தனில் புனித்துமே பணிந்திடும்
பெருத்த பாம்பவன்கழுத் திலாரமா யிருந்திடும்
உடுக்கையில் எழுந்தடம் டமாரடம் டமாரமும்
எடுத்தகா லிரண்டுமம் பலத்திலாடும் தாண்டவம்
இடர்ப்பொடித் தடித்துமங் கலம்தனைத் தரும்சிவன்
நடம்தனில் மனம்லயித் திடும்குதூ கலம்பெரும் 1

எழுந்தகங்கை நீரலை விழுந்துமங்கு வரிசையாய்
அதிர்ந்தவை கிணற்எனச் சடைதனில் நகர்கையில்
நுதல்தனில் சுழல்தழல் தரும்ஒளிப் பிழம்பினில்
சிரத்தினில் திகழ்மணிப் பிறைமதி ஜொலிக்கையில்
வரம்தரும் அவன்எவன் சிவந்தவன் அவன்சிவன்
கரம்தொழும் விதம்எழும் எழில்தனில் பெரும்சுகம்
தனைதினம் விழைமனம் எனக்குமே இருந்திடும் 2

அண்டம்கொண்ட உயிர்கள்தங்கும் சுத்தசித்த மானவன்
கொண்டதுணை மலையவளின் மனம்மகிழும் நாயகன்
அடங்கிடாதத் துன்பமன்பி னாலடக்கு வானிவன்
இடைவிடாம லங்குமிங்கு மெங்குமேநி றைபவன்
தடைப்படாம லென்றுமெந்தன் நெஞ்சினிலே உறைபவன்
நடந்திடவே எதுவுமணுவும் அசைந்திடவே காரணன்
உடைந்திடாத வண்ணம்நெஞ்சில் துஞ்சுகின்ற ஓர்சிவன் 3

உடம்பினில் உயிர்தனில் படும்அவன் புவன்சிவன்
சிரம்தனில் கரும்சிவப் பினில்படம் எடுத்திடும்
சரம்எனப் படும்விதம் கழுத்தினின்று ஆடிடும்
படம்ப்ரதி பலித்திடும் புரம்எரித்த ஜோதியும்
தகதகக்கு மானவானைத் தோலினான ஆடையும்
பார்த்துநான் களிப்புற பிறந்ததிங்கு அற்புதம்
சேர்ந்துநான் மனம்தொழக் கிடைப்பதே குதூகலம் 4

பிறைநுதல் தனில்மணி எனதிகழ்ந் தொளிர்ந்திடும்
சடைதனை முடித்திடக் கயிறுமான பாம்பொடும்
விடைதனில் மிளிர்ந்திடும் அவன்பதம் தனில்பணிந்
திடும்கட வுளர்களின் தலைப்படும் மணம்எழும்
மலர்தனில் எழும்பொடிப் படிந்துமே கருத்திடும்
அலர்ந்திடும் மலர்எனப் படும்விதம் அவன்பதம்
துலங்கிடும் செழிப்பினைச் சதம்தரும் சதாசிவம் 5

பிறைநுதல் எழும்கனல் தனில்மதன் எரித்தவன்
விரைமுனி ஜனங்களும் உயர்உறைத் தலைவரும்
தரைதனில் சிரம்படத் தொழும்உயர் சிவன்இவன்
நுரைத் தவெண் பிறைமதி நுதல்தனில் தரித்தவன்
திறந் தகண் ஒளிர்வதில் மனம்தனைக் கவர்ந்தவன்
விரிந்திடும் சடைமுடி தனைநினைப் பவன்தனை
சிறந்திடும் விதம்பெரும் சித்தனாக்கு மத்தனாம் 6

மூன்றுகண்ணின் ஓர்சிவன் முக்கண்ஜோதி ஒளியவன்
சென்றுமீண்டும் மீண்டும்நான் கண்டுநோக்கு மார்வலன்
முயன்றுயாரும் வென்றிடாத வண்ணமுள்ள மன்மதன்
கனன்றுதீ தகிக்குமாறு கொன்றுதீர்த்த ஓர்சிவன்
சென்றுமே களித்தவன் அழைத்துவந்த பார்வதி
முலைநுனி தனில்இடும் கவின்மிகுத் திகழ்கலை
இணையிலா விதத்தினில் திறம்படப் படைத்தவன் 7

மேலும்கீழு மானவண்டம் தன்னையாளு கின்றவன்
கல்லும்மண்ணும் சூலுமுயிரும் தாங்கிநின்று காப்பவன்
தெளிந்ததூய வெண்மதி நுதல்தனில் தரிப்பவன்
சிவப்பிலான தோலிலான துகிலினிற்ச் சிவந்தவன்
விழித்திடா திருக்குமேக வண்ணவான் கறுப்புமாய்
அழித்திடா திருக்குவண்ணம் கொண்டசென்னி விடமுமாய்
அமைந்திடா திருந்துவீழும் கங்கைகொண்ட சடையனாம் 8

கழுத்திலாடு கின்றநீல அன்றலர்ந்த தாமரை
சுழன்றுமாடு மேழுலகாய்த் தோன்றுகின்ற தேநிறை
எழில்மதன் அழித்துமுப் புரம்அழித்து மாசுறு
கெடும்மதி யரக்கனந்த கன்தனை யழித்துவல்
மதம்பிடி கஜம்தனை அழித்துபல் பிறப்பறு
சிதம்பரம் தனைத்துதிப் பவர்மனம் சுடர்பெறும்
யமன்தனை அடக்குநல் சிவன்பதம் தினம்தொழு 9

கடம்பினில் எழும்மலர் தரும்இனிப் பினில்எழும்
கவர்ச்சியில் வரும்பெரும் பூச்சிகள் இடைப்படும்
மகிழ்ச்சியில் விடைதனில் உறும்சிவன் பதம்தனை
நினைத்துமே வணங்குவேன் மனத்தினின்று மேத்துவேன்
பவம்தனைக் களைபவன் யமன்தனைக் கடந்தவன்
சிவன்தனை நினைத்தவன் சிறப்பினை அடைந்தவன்
சிவன்பதம் நினைத்துமே மனம்மகிழ்ப் படுத்துவேன் 10

தவித்திடப் பகைவரை அழித்துமே களித்திட
திமித்தக திமித்தகத் தெரித்துமே ஒலித்திட
அதற்கென களித்துமே சிவன்நடம் புரிந்திட
நுதற்படும் திறந்தகண் தனிற்படும் சிவந்ததீ
கழுத்தினில் சுருண்டுமே நெளிந்தபாம் புநாசியின்
தொடர்ந்திடும் விதம்தனில் சீறிவீசு காற்றினில்
படர்ந்திதுமே நெளிந்துமே தெரிந்திருக்கும் வானிலே 11

வென்றிடாத அரசனும் தின்றிடாத ஏழையும்
கன்றுமேயும் புல்லும்நன்கு மலருகின்ற கமலமும்
சென்றிருக்கும் நண்பரும் கொன்றுருத்தும் பகைவரும்
நன்குஒளிரும் வைரமும் குவித்தமேட்டுக் குப்பையும்
நஞ்சுகொண்ட சர்ப்பமும் நெஞ்சுகந்த மாலையும்
துஞ்சுகின்ற உயிர்கள்தன்னின் வேறுவேறு வழிகளும்
ஒன்றுஎன்றி ருக்கும்சிவனை என்றுநானும் போற்றுவேன் ? 12

குன்றுநின்ற மங்கலன் சென்றுமேத்த ஓர்கலன்
என்றுமென் பவங்களைப் போக்குகின்ற வன்தனை
சென்றுமந்த கங்கைபாய் வெற்றிடத்தி ருந்துமென்
சிரத்திலென் கரம்எடுத் துகூப்பிநின் றுபோற்றியே
புரம்எரித் தகண்நுதற் பிறைதரும் கவின்தனில்
பவம்அழித் துபோக்கியென் சிதம்தனில் சிவம்சிவம்
என்றுநானு மோதுவேன் என்மனத்தி லேத்துவேன் 13

சிறந்தவிந்த தோத்திரம் வழங்குகின்ற தேவரம்
மறந்திடாது மாற்றிடாது பெற்றதூய நெஞ்சுரம்
தனில்நினைப் பவர்மனம் தனைச்சிவம் அடைந்திடும்
இதைநினைப் பவர்பவம் கணம்தனில் மறைந்திடும்
பக்திகொண்ட சித்தசுத்தம் தந்திருக்கும் சுத்தசத்வம்
கத்திபோன்ற பாவம்போக்கும் புத்திதன்னில் வந்துநிற்கும்
சத்தியத்தின் தந்தைநல்கும் நித்தியத்தின் முத்திஆகும் 14

சிறந்தவானின் ஆதவன் மறைந்துசென்ற போதிலே
சிரம்தனில் சிவன்பதம் தனைநினைத் துபூசையில்
வரம்பெறும் அருள்பெறும் சிறந்தவந்த பக்தரின்
மனம்தனில் சிவன்நடம் கொடுக்குமிந்த தோத்திரம்
பெரும்பொருள் தரும்திரு மகள்அருள் தரும்ரதம்
கஜங்களும் நிறைகளும் உரத்திலோடும் பரிகளும்
விரைந்துமே அளித்திடும் நிலைத்துமே இருந்திடும் 15

சிறந்த சிவ பக்தன் இராவணன் பாடிய இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்களுக்கு சிவபெருமான் அருளோடு திருமகள் அருளும் கிடைக்கப்பெற வேண்டும் எம்பெருமானிடம் இராவணன் வேண்டி கொண்ட அருமையான பாடல் .  

                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

      சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!