செவ்வாய், ஜூன் 04, 2013

சித்தர் பாடல்களில் இருந்து .......

குருவே துணை !! குருவே சரணம் !! பட்டினத்தாரே சரணம் !!





தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு 
   பின்னாசை யேதுக்கடி - குதம்பாய் 
   பின்னாசை யேதுக்கடி”


தன்னையறிந்து தன்னிலை கண்டு எல்லோர்க்கும் தலைவனாம் சிவபெருமானை சேர்ந்து அவன் திருவடி நிழலில் இருந்து நிலையில்லா வாழ்வை பொய்யென்று உணர்ந்தவர்,அதன்பின் எந்த ஒரு ஆசையும் இல்லாது இருப்பார் . ஆனால் பொய் குருவானவர் அனைத்தையும் உணர்ந்தோம் என்று சொல்லிக்கொண்டு உலக இன்பங்களிலே திளைத்து இருப்பர் . என்பதை உணர்த்தவே குதம்பை சித்தர் இவ்வாறு கூறுகிறார். 

பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
     காரணம் இல்லையடி குதம்பாய்
     காரணம் இல்லையடி.


சீவனை சிவத்தோடு கலந்து நிலையான பேரின்பமாம் பரிபூரண நிலையை அடைந்துவிட்டோர் , மீண்டும் பூமிதன்னில் பிறக்க காரணம் ஏதுமில்லை என்று உறுதிபடக் கூறுகிறார் . பூரண நிலை அடைந்தவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிக்கு அப்பாற்பட்டு இருப்பார்கள் .  

                         - திருவடி முத்து கிருஷ்ணன் 

                     சிவமேஜெயம் ! 
   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!