வியாழன், ஜனவரி 12, 2017

மார்க்கண்டேயன் வரலாறு 

      


விதியை மதியால் வென்ற மார்க்கண்டேயன் 


        மிருகண்டு முனிவர் தவத்தில் சிறந்தவர் . இவர் திருக்கடையூரை அடுத்துள்ள ஊரில் வாழ்ந்து வந்தார் . அவர்தம் மனைவியார் பெயர் மருத்துவதி தன் கணவராகிய மிருகண்டு முனிவர்க்கு உற்ற துணையாய் இருந்து இருவரும் இனிய இல்லறம் நடத்தி வந்தார்கள் . இத்தம்பதியர்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கினார்கள் எந்நேரமும் சிவசிந்தனையிலேயே வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு மழலைச் செல்வம் வாய்க்கப் பெறவில்லை . இருவரும் ஈசனை நோக்கி தவம் செய்தார்கள் அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்த ஈசனார் , இப்பிறவியில் உங்களுக்கு மக்கட்பேறு கிடையாது இருந்தாலும் அளிக்கிறேன் என்று இரண்டு நிபந்தனை விதித்தார் . என்னவென்றால் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடிய தீக்குணங்கள் நிறைந்த குழந்தை வேண்டுமா , அழகும் , அறிவும் நல்ல ஒழுக்கமும் நிறைந்து 16 வயதுவரை வாழும் குழந்தை வேண்டுமா என்று கேட்டு முடிவை அவர்களிடம் விட்டு விட்டார் .

                 அவர்கள் இருவரும் பெருமானே நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தாலும் அக்குழந்தையால் எங்களுக்கு என்ன மாண்பு இருக்கும் ஆகவே 16 வயது வாழும் நல்ல ஒழுக்கமான குழந்தையே எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள் , பரமனும் அப்படியே வாய்க்கப் பெறுவதாக என்று வரம் அளித்தார் . அதன்படியே மருத்துவதி அம்மையார் அழகான ஆண்மகவை பெற்றெடுத்தார் , வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல மார்க்கண்டேயன் வளரும் பருவத்திலேயே மிகவும் அறிவுடையவனாக திகழ்ந்தான் . சிவ பக்தியில் தனது பெற்றோரையும் விட சிறந்து விளங்கினான் கல்வி வேள்விகளில் மிகவும் சிறந்தவனாக விளங்கினான் .


                 நாட்கள் கடந்தது மார்க்கண்டேயன் 16 வயதை எட்டும் நாள் வந்தது இருவரும் மனம் வாடிப்போனார்கள் , பெற்றோர் வாட்டத்துக்கு காரணம் என்னவென்று கேட்டான் மைந்தன் . இருவரும் ஈசனிடம் வாங்கிய வரத்தை கூற இது வருந்த வேண்டியது இல்லை எனக் கூறி திருக்கடையூரை வந்தடைந்தான் . திருக்கடையூரில் அருள் பாலிக்கும் அமிர்தகடேஸ்வரை சரணம் என்று மிகப்பெரும் சரணாகதி நிலையில் தன்னை அவர்க்கு அர்ப்பணித்து இறுக்கப் பற்றிக்கொண்டான் எம தூதர்கள் வந்து அவன் உயிரை எடுக்க அருகில் போனார்கள் நெருங்க முடியவில்லை அவர்கள் எமதர்மனிடம் சென்று தங்களால் இயலவில்லை என நடந்ததை கூறினார்கள் . ஒரு பாலகனின் உயிரை உங்களால் எடுக்க முடியவில்லையா எனக் கடிந்து அவனே தனது எருமை வாகனத்தில் புறப்பட்டான் . திருக்கடையூரை அடைந்து அங்கே கண்டவனுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி , இறைவனை கட்டிக்கொண்டிருக்கும் இவனை நாம் எப்படி அழைத்துப் போக என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது உயிரை எடுக்கும் நேரம் வந்தது கால தாமதம் வேண்டாம் என்று பாசக் கயிறை மார்க்கண்டேயனை நோக்கி வீச அது மார்கண்டேயனையும் அவன் கட்டிக்கொண்டிருந்த எம்பெருமான் மீதும் வீழ கோபத்துடன் ஈசனார் சிவலிங்கத்தில் வெளிப்பட்டார் , காலனே , என்னை சரணம் என்று அடைந்திருக்கும் இச்சிறுவன் மீது பாசக்கயிற்றை வீசுவதா என்று கடிந்து தன்னுடைய இடக்காலால் உதைத்தார் , பின் மார்க்கண்டேயனை நோக்கி குழந்தாய் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று அருள் புரிந்தார் .

                   எமன் இல்லாததால் பூமியில் பாரம் அதிகமாகியது , பாரம் தாங்காத பூமா தேவியார் சிவபெருமானிடம் முறையிட செவி சாய்த்த எம்பெருமான் , தன் கடமையை சரியாக செய்த எமனை உயிர்ப்பிக்க செய்து தர்மராஜன்  என்னும் பட்டத்தை வழங்கி அவனுக்கு ஆசி புரிந்தார் . 

               இங்கு விதி வெல்லவில்லை விதியை வெல்வது எது ? சிவசிந்தனையும் சிவபக்தியுமே விதியை வெல்லும் அவனடியை தஞ்சமென்று சரணடைந்து இருத்தலே பிறவிக்கு நலம் பயக்கும் . மதி சூடியவனை இறுக்கப் பற்றினால் விதியை வெல்லலாம் என்னும் மதி மார்கண்டேயனுக்கு இருந்ததால் மார்க்கண்டேயர் என்றும் இருக்கும் சிரஞ்சீவியாக இருக்கிறார் . நாமும் சிவனையன்றி வேறொரு நினைப்பை ஒழித்து எந்நேரமும் சிவசிந்தனையில் இருந்து அவன் திருவடி நிழலில் ஏகாந்த இன்பத்தில் திளைத்து இறவா நிலையை அடைந்து இன்புற்று இருப்போம்.  நல்லது . சிவமேஜெயம் .


                     சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


வெள்ளி, ஜனவரி 06, 2017

அரிச்சந்திரன் முற்பிறவி ...







 ஸ்ரீ விசுவாமித்திர மகரிஷி 




                 உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் .



                   காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள்  மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு  சுயம்வரம்  செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பினான் . அதனை ஏற்று வந்த மன்னர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனனும் ஒருவன் மிகுந்த அழகும் கம்பீரமும் உடையவன் .


            சுயம்வரநாளும் வந்தது வந்திருந்த அனைவரையும் வரவேற்று தன்னுடைய நிபந்தனையை கூறினான் , கூண்டினுள் அடைக்கப்பட்ட சிங்கத்தைக் காட்டி இதை யார் வெற்றி கொள்வாரோ அவருக்கு என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான் . அந்த சிங்கத்தின் தோற்றம் பார்ப்பவரை அச்சப்பட வைத்தது யாவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திரிலோசனன் சிறுத்தும் அச்சமின்றி கூண்டுக்குள் சென்றான் காண்பவரையும் திகைக்க செய்யும் அளவுக்கு பலமான சண்டை சிங்கத்துக்கும் அவனுக்கும் நடந்தது முடிவில் சிங்கத்தை வென்றான் திரிலோசனன் .


                அறிவித்தபடி மதிவானி , மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேதங்கள் முழங்க ஆன்றோர் ஆசிகளுடன் திரிலோசனனை மணம் புரிந்தாள் . அனைவரும் ஆனந்தத்துடன் இருந்த அதே நாளில் திரிலோசனன் மாலை வேளையில் கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவன் மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து வாளால் அவனை வெட்டிக் கொன்று விட்டான் . இந்த துயரத்தைக் கேள்விப்பட்ட மன்னனும் மக்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர் , மதிவானி மயக்கம் அடைந்தாள் , மயக்கம் தெளிந்த பின் எழுந்தவள் துக்கம் தாளாது இனியும் நாம் உயிரோடு இருத்தல் ஆகாது என முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொள்ள கங்கையில் குதித்தாள்  .


         

                                                 அப்போது அங்கு நீராட வந்த கௌதம முனிவர் நீரில் தத்தளிக்கும் மதிவானியை காப்பாற்றி கரை சேர்த்தார் . மதிவானி முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள் . கௌதம முனிவர் தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என ஆசிர்வதித்தார் . இதைக் கேட்ட மதிவானி முனிவரிடம் நடந்ததைக் கூற அவரும் என் வாக்கு பொய்க்காது மகளே , நடந்ததை மறந்து தவத்தில் ஈடுபடு உன் இந்த பிறவி முடிந்து அடுத்த பிறவியில் இதே மாங்கல்யத்துடன் நீ பிறப்பெடுப்பாய் இந்த மாங்கல்யம் யார் கண்களுக்கும் புலப்படாது . உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குளத்தில் பிறப்பான் , உன் சுயம்வர நேரத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் அவனுக்கு புலப்படும் . நீங்கள் திருமணம் புரிந்து பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என்று அருளாசி செய்தார் .
                 


                                         கௌதம முனிவரின் ஆலோசனையின் படி அவரின் ஆசியோடு அவரின் ஆசிரமத்திலேயே தன தவத்தை மேற்கொண்டாள் . சில காலத்தில் அவளுடைய இந்த பிறவிக்கு முடிவுக்கு வந்தது . அடுத்த பிறவியில் மதிவானி , சந்திரமதியாகவும் , திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர் . சந்திரமதி சுயம்வர நாளில் யார் கண்ணுக்கும் புலப்படாத மாங்கல்யம் அரிச்சந்திரனுக்கு தெரிய அரிச்சந்திரன் சந்திரமதியை மனம் புரிந்தான் . இனிதான இல்லறத்தின் பொருட்டு ஒரு ஆன் மகவை ஈன்றெடுத்தாள் சந்திரமதி அக்குழந்தைக்கு லோகிதாசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் .


                      இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் தன்னுடைய சபையினால் பூமியில் உள்ள மன்னர்களில் யார் சிறந்தவன் என்று கேட்க அங்கு இருந்த வசிஷ்ட முனிவர் , சந்தேகமென்ன என் சிஷ்யன் அரிச்சந்திரன் சிறந்தவன் தன தலையே போனாலும் சத்தியத்தை விடாதவன் அவனே சிறந்தவன் என்றார் . அதை மறுத்த விஸ்வாமித்திரர் , சந்தர்ப்பங்கள் வந்தால் அரிச்சந்திரன் சத்தியத்தை மீறுவான் அதை நான் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறினார் .


                         கூறியதைப்போல அரிச்சந்திரன் வாழ்க்கையில் பெரும் புயலென துன்பங்களைத் தந்தார்.  அவனுடைய ஆட்சி இழந்து மனைவி , மகனை பிரிந்து மயானத்தில் பிணம் எரிக்கும் நிலைக்கும் சென்றான் அப்படி இருந்த போதிலும் தன்னுடைய சத்தியத்தை அவன் காத்து நின்றான் . மகிழ்ந்த விசுவாமித்திர மகரிஷி அவனுக்கு அருள் செய்து இழந்த அனைத்தையும் அவனுக்கு வழங்கி ஆசி புரிந்தார் . அவனும் நல்லாட்சி புரிந்து நற்கதியை அடைந்தான் . அது சரி எதற்காக தவத்தில் சிறந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் .



            முற்பிறவியில் திரிலோசனனான அரிச்சந்திரன் , விசுவாமித்திர மகரிஷியிடம் தனக்கு பிறவா நிலையை அருள வேண்டும் சுவாமி என்று பணிந்து நின்றான் . அதற்கு அவர் , திரிலோசனா ! உன் ஊழ்வினையின்கண் நீ பல பிறப்பெடுக்க வேண்டி உள்ளது அவை அனைத்தையும் ஒரே பிறவியில் நீ அனுபவித்து சத்தியம் தவறாமல் வாழ வேண்டும் முடியுமா ? என்று கேட்டார் சம்மதித்த திரிலோசனன் , அரிச்சந்திரனாக பிறப்பெடுத்து தன்னுடைய வினைகளையெல்லாம் ஒரே பிறவியில் அனுபவித்து பிறவாத பெரும் பேரை அடைந்தான் . அவனை துன்புறுத்த அவனுக்கு சோதனைகள் இல்லை அவன் வினைகளை கழிக்கவே சோதனைகளை தந்தார் விசுவாமித்திர மகரிஷி .



                 

                    அரிச்சந்திரன் அளவுக்கு துன்பபட்டவர் யாரும் இல்லை , அவனும் தன்னுடைய வினையை கழிக்க துன்பத்தை மகிழ்சசியாய் ஏற்று கொண்டதைப்போல நாமும் நம் துன்பங்களை எல்லாம் வினைகளை ஒழிக்க ஈசன் தந்தது என்று மகிழ்வுடன் ஏற்று அவன் பாதமே தஞ்சம் என்று இருந்தால் எந்த துன்பமும் , தீவினையும் நம்பால் அணுகாது சத்தியம் .


     சித்தர்கள் , மகான்கள் , முனிவர்கள் இவர்களின் ஆசியும் அருளும் இருந்தாலே நாம் நம் வினைகளை அகற்றி அப்பன் அருகில் ஆனந்தமாக 

இருக்கலாம் . நல்லது . சிவமேஜெயம் . 



                      சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்  




                              ஓம் ஸ்ரீ  பட்டினத்தாரே சரணம் !!

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!