சனி, ஜூன் 07, 2014

திருமூலர் அருள் செய்த 


                                     திருமந்திரத்திலிருந்து ..........

                                                            




               சில மந்திரங்கள் 


யாவர்க்குமாம் இறைவற் கொருபச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு  வாயுறை  
யாவர்க்குமாம் உண்ணும்போ தொருகைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே 

மலர் கொண்டு தினமும் பூஜிக்க முடியாவிட்டாலும் ஒரு இலை கொண்டு ஈசனை பூஜிக்க யாவராலும் முடியும் . பசு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் ஒரு வாயளவு உண்ணக் கொடுத்தலும் யாவராலும் முடியும் . நாம் உண்ணும் போது இரந்து கேட்பவர்க்கும் ஒரு கைப்பிடி அன்னம் கொடுக்கவும் யாவராலும் முடியும் . பிறர் வருந்தாத இனிய சொல்லைக் கூறவும் யாவராலும் இயலக் கூடிய ஒன்றே ஆகும்.

தானொரு காலம் சயம்பு வென்றேத்தினும் 
வானொரு காலம் வழித்துணையாய் நிற்கும் 
தேனொரு பால்திகழ் கொன்றை அணிந்தவன் 
தானொரு வண்ணம் என்னன்பில் நின்றானே 

நாம் வாழும் காலத்திலே ஒருமுறையேனும் சுயம்புவடிவான ஈசனை தொழுது சிந்தையில் ஏத்தினால் எம்பெருமான் பெருவாழ்வு என்னும் மேலான வாழ்க்கைக்கு வழித்துணையாய் நிற்பான் . உலகாளும் அம்மையை ஒருபுறம் இருத்தி கொன்றை மலரை செஞ்சடையில் அணிந்தவன் என் அன்பின் வண்ணமாக என்னுள் நிலைத்து நின்றானே .

        
                    என்றும் இறை பணியில் 


                                                               திருவடி முத்து கிருஷ்ணன் 


                                                 சிவமே ஜெயம் !!

          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக