வியாழன், அக்டோபர் 20, 2011

சித்தர் பாடல்களில் இருந்து 11

ஞானகுரு பட்டினத்தார்
        பாடல்களில் இருந்து .....



மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே !



மான் போன்று மயக்கும் கண்களை உடைய மாதரின் பார்வையிலே தப்பித்து துறவு எனும் மேட்டை அடைந்து வந்தேன் . சிவமும் எனக்கு குருவாகி என்னை ஆண்டு கொண்டு என் உளம் குடியேறி அவன் உள்ளத்தில் என்னை குடியேற்றி விட்டான் . இனி எனக்கு பாதகமில்லை ஏனென்றால் இவ்வுலகம் அழிந்தாலும் எனக்கு திருவடிப்பேறு கிடைத்து விடும் , அழியாமல் போனாலும் திருவடிப்பேறு கிடைக்கும் என்பது பொய்யில்லை ஆனால் அழியப் போகிற இந்த நாற்றமெடுக்கும் உடம்போடு இருக்கவே அருவருப்பாக உள்ளது .



கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரிஏ கம்பவாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே.



 சாக்கிய நாயனார் எறிந்த கல்லை மலராக ஏற்றாய் .கண்ணப்ப நாயனார் காலால் மிதித்ததையும் குழந்தை தந்தையை மிதிப்பது போல சந்தோசமாக ஏற்றாய் ,அர்ஜுனன் உன்னை வில்லால் அடித்ததையும் ஏற்றாய் , தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து ஆலம் என்னும் கொடிய விஷத்தினால் செய்வதறியாது கலங்கியபோது அவ்விஷத்தை உண்டு அனைவரையும் காத்தாய் , முப்புரங்களை மெள்ளச் சிரித்தே எரித்தாய் அவ்வளவு பெருமை வாய்ந்த ஏகம்பவாணர் பாத பெருமைகளை பேசாமல் இருந்ததும் , பேசுபவர்களின் பேச்சு கேட்காமல் இருந்ததும் முற்பிறவியில் செய்த ஊழ்வினையே ஆகும் .


ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் - கடு அருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி !



எம்பெருமான் ஈசன் குடிகொண்டிருக்கும் திருவொற்றியூர் தெருவில் நடப்பவர்களின் பாதம் பட்ட மண்ணே ஒன்பது துவாரங்களை கொண்ட உடம்பென்னும் புண்ணிற்கு இடும் அருமருந்து என நான் அறிந்து கொண்டேன் .


எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ?



பிறந்த பிறவிகளில் , எத்தனை ஊரில் பிறந்தேனோ , எத்தனை வீடுகளில் குடியிருந்தேனோ , எத்தனை தாயாரோ , எத்தனை பெற்றவர்கள் எனக்கு பெயர் வைத்து அழைத்த போது என்ன வென்று கேட்டேனோ , இவ்வாறு என்னை சுழல வைத்து களைப்படைய வைப்பதுதான் ஏகம்ப நாதனே உனது திருவிளையாடலோ , இறைவா இப்பிறவி பிணியை ஒழித்து என்னை உனது திருவடிகளில் சேர்த்து இளைப்பாறுதல் தர மாட்டாயா .


அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும் 
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா - மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி
இசிக்குதையா காரோண ரே.

யானை முதல் சிறு எறும்புவரைக்கும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் திருவுளம் மகிழ்ந்து உணவளிக்கும் சிதம்பர தேசிகனே , எனக்கு மிகவும் பசி எடுக்குதே இந்த பாழ் வயிற்றை பிடித்து இழுக்குதே திருக் காரோணத்தில் எழுந்தருள் செய்யும் சிவபெருமானே .

பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?

பொய் பேசுவதை நிறுத்த மாட்டாய் , மாமிசம் உண்பதை தவிர்க்க மாட்டாய் திருக்காளத்தியில் உயையும் பெருமானை நினைக்க மாட்டாய் தருமம் செய்ய மாட்டாய் விஷத்தை விட கொடுமையான கோபத்தை ஒழிக்க மாட்டாய் பஞ்சாட்சரம் ஓத மாட்டாய் வீணாய் காலம் கழிக்கும் என் மனமே உனக்கு என்ன பெருமை கிடைத்து விடும் .

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா .

என்னை பல பிறவிகளில் பெற்ற , எண்ணற்ற தாயாரும் பெற்று உடல் தளர்ந்து விட்டார் , வலிய வினையினை உடைய நானும் கால் தளர்ந்து விட்டேன் , பிரமனும் எனை படைத்து ஓய்ந்து போனான் . போதுமையா இருப்பையூரில் வாழும் சிவபெருமானே அடுத்து இன்னுமோர் அன்னை வயிற்றில் பிறவாமல் என்னை காத்தருள் செய்ய வேண்டும் ஐயனே .

காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !

எமன் வருவதற்கு முன்னதாக கண்களில் பஞ்சடைத்து பார்வை குறையும் முன்னாக பால் உனது கடைவாயில் பட்டு வழிந்தோடும் முன்பாக உன் உடல் மீது உறவினர் விழுந்து அழும் முன்னால் மாயானம் கொண்டு ஊரார் சுடுவதற்கு முன்னால் குற்றால நாதனை துதித்து நற்கதியை அடைவாய் .

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம்

பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண் .



சிற்றம்பலத்திலாடும் சிவபெருமானும் சிற்றம்பலமும் நமதருகினில் இருப்பதை மறந்து ஒன்றும் இல்லாத மாயையை தேடி அலைந்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோமே ,மாயை ஒழிய உனது திருவடியைத் தேடாமல் இந்த மட நெஞ்சமானது தான் பிறந்த இடத்தின் மீது கொண்ட மோகத்தால் அந்த இடத்தை தேடி ஓடிகொண்டிருக்கிறது , கண்கள் பசியாறிய தனங்களையே நாடி தேடி கொண்டிருக்கிறது .


நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் - பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவம் தானே சுகம்.



ஞ்சினை உடைய நாகத்தினை அணிந்தவனை மனமுருகி தொழுவதும் , அவனை வணங்கும் ஆசையிலே அங்கேயே இருப்பதுவும் , பசித்தால் பிச்சை வாங்கி பசி போக்கி பின் ஆலய வாசலிலே உறங்குவதும் தான் சொல்வதற்கரிய சுகம் எனக்கு . 


விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.



இந்த உடலை விட்டு உயிர் நீங்க போகிறது . நீங்கினால் உடனே உடலைச் சுட்டு விடப் போகிறார் உறவினர்கள் பட்டதெல்லாம் போதும் இனியும் துன்பப் படாமல் இருக்க சிவபெருமானை சிந்தித்து சிந்தையிலே அவனை ஏற்றி எப்போதும் அவனை நினைந்து இருங்கள் . போற்றி வணங்குங்கள் அதுதான் பிறவிப்பிணி நீக்கி சுகமான பேரு வாழ்வு அளிக்கும் .


இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !



மன்னர் என்று வாழ்ந்து அவர் இறந்து போய்விடும் போது முன்னம் எரித்த சவத்தின் மீந்த எரி கட்டையில் கோவணத்தையும் உரிந்து அக்கட்டையின் மேல் உடலை உருட்டிப் போட்டது கண்டும் , நிலையில்லாத வாழ்வென்று அறிந்தும் இன்னும் பிறவி எடுக்க ஆசை கொள்வாயா மனமே .  


இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !



மனமே இவ்வுடலோடு வாழ்வது என்பது பொய் , உடலை விட்டு நீங்குவதுதான் உண்மை . வயிறாய் வளர்க்க வேண்டி பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பாயாக , பருத்த தொந்தி உனதென்று வளர்த்து கொண்டிருப்பாய் ஆனால் நாய் , நரி , பேய் , கழுகு தமக்கு விருந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும் . என் நெஞ்சமே ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் இரு .


 நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி 
   நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
   புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
   கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
   அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !

பொருள் தேடும் பொருட்டு நாக்கு பிளவு படும் அளவிற்கு பொய் உரைத்து நன்மை என்பது சிறிதும் இல்லாத பெண்களை மணந்து பின் அவர்களோடு இன்பம் துய்த்து அதன் மூலமாக அவள் கருவுற்று பின் திரும்பவும் ஆசை கொண்டு அதாவது பூமியிலே புற்று வைத்து புற்று பிளவு பட்டால் வெளி வரும் புற்றீசல் போன்று இப்படியே நிறைய குழந்தைகளை பெற்று மனைவியையும் குழந்தைகளையும்  காப்பதற்கும் வழிதெரியாமல் கைவிடவும் மனம் இல்லாமல் நீங்கள் செய்யும் கூத்து எப்படி இருக்கிறதென்றால் மரத்தை பிளந்து வைத்த ஆப்பை தன் காலை அந்த பிளவினுள் நுழைத்து ஆப்பையும் அசைத்து எடுத்து அந்த பிளவினில் கால் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் குரங்கின் நிலை போல இருக்கிறது .

மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும்
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும்
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான்
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.

எனக்கு குருவாக இருந்து சிவபெருமான் உபதேசித்த ஒரு வாக்கியத்தில் இந்த மண்ணும் உருகும்  மரமும் உருகும் மாய வாழ்வும் உருகும் மாயையின் காரியமாகிய மோகமும் உருகும் ஆண் பெண் பேத வகையும் உருகும் அண்ணலாகிய எம்பெருமானும் உருகுவார் அவர் இடம் அமர்ந்த உலக அன்னையாகிய உமையாளும் உருகுவாள் பாம்பின்மேற் பள்ளி கொள்ளும் பரந்தாமனும் உருகுவான் அனைத்தையும் உருக வைக்கும் ஒரு அமுத மொழியை உபதேசித்து என்னை ஆண்டு கொண்டு விட்டான் ஈசன் .  

பாடல்கள் முற்று பெற்றது .

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

            - திருவடி முத்துகிருஷ்ணன் 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக