செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1


  
              சித்தர் சிவவாக்கியர் அருளிய 


                            சிவவாக்கியம் 





அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும் 
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 

கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந் துதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

ஆன வஞ் செழுத்துளே அண்டமு மகண்டமும்
ஆன வஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன வஞ் செழுத்துளே அகாரமு மகாரமும்
ஆன வஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாத முண்மையே.

வடிவு கண்டுகொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே.

என்னிலே இருந்தஒன்றை யானறிந்த தில்லையே 
என்னிலே இருந்தஒன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டெனே.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமா யகண்டமாய் அனாதிமுன் னனாதியாய்
எனக்குள்நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே.

மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்

அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம வென்னும் நாமமே.

கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாமிதா மிதல்லவென்று வைத்துழலும் ஏழைகளாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாமிதாம் ராம ராம ராம வென்னும் நாமமே.

நானதேது நீயதேது நடுவில் நின்ற தேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம வென்ற நாமமே.

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த் திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ
மாத்திரைப் போது முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே.

தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனாவிலு மதில்லையே.

வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவனில்லை யில்லையே.

அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யுனும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.

அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி ஆனவாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?

சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே.

சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.

தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே.

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத் தறிந்து கூறவல்லிரேல்
அஞ்ச லஞ்சல் என்றுநாதன் அம்பலத்தி லாடுமே.

அஞ்சு மஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே
பிஞ்சு பிஞ்ச தல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சி லஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை ஆறுமில்லை அனாதியான தொன்றுமே.

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கையகன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாத முண்மையே.

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந் தழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே.

ஓட முள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்
ஓட முள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓட 
முடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே

ஆடு மில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே.

அண்ணலே அனாதியே அனாதிமுன் னாதியே
பெண்ணு மாணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.

பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.

அண்டர்கோன் இருப்பிடம் அறிந் துணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.

நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்
நெருப்பும்நீரு மும்முளே நினைத்துகூற வல்லிரேல்
கருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே.

பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே.

செய்யதெங் கிளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந் தென்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந் 
தென்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.

மாறுபட்ட மணிதுலக்கி வண்டி னெச்சில் கொண்டு போய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலுங் குளங்களுங் கும்பிடுங் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதுமழிவதும் இல்லை யில்லை யில்லையே.

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடலாகுமே.

பூசை பூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ யின்னதென் றியம்புமே

இருக்கநாலு வேதமும் எழுத்தை யறவோதிலும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரா னிரான்
உருக்கிநெஞ் சையுட்கலந்து உண்மைகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே.

கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே.

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயி
லெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.

ஓதுகின்ற வேத மெச்சில் உள்ளமந் திரங்க ளெச்சில்
மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழு மெச்சில்
மாதிருந்த விந்து மெச்சில் மதியுமெச்சில் ஒளியுமெச்சில்
ஏதிலெச் சிலில்ல தில்லை யில்லை யில்லை யில்லையே.

பிறப்பதற்கு முன்னெலாம் இருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால்.

அம்பலத்தை அம்புகொண்டுஅசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொ னம்ப லத்துளே தெளிந்ததே சிவாயமே.

சித்தமேது சிந்தையேது சிவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது
முத்தியேது மூலமேது மூலமந் திரங்களேது
வித்திலாத வித்திலே யின்னதென் றியம்புமே.

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தையித்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே.

சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மை என்ன தன்மையே.

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லை யில்லை யில்லையே.

தறையினில் கிடந்தபோ தன்றுதூமை யென்றிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை 
யென்றிலீர்

பறையறைந்து நீர்பிறந்த தன்று தூமை யென்றிலீர்
புரையிலாத ஈசரோடு பொருந்துமாற தெங்ஙனே.

தூமைதூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந் தனேகவேத மோதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்க ளானதே.

சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சத்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானதும் திரண்டுருண்ட தூமையே.

கைவ்வடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடந்த தும்முளே விரைந்து கூடலாகுமே.



ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.



இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கு மப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ.



நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்துவாழ்ந் திருந்திடும்
ஏறிலேறும் ஈசனும் இயங்குசக்ர தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.



தில்லைநா யகன்னவன் திருவரங் கனு மவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாள்வரே.



எத்திசைக்கு மெவ்வுயிர்க்கும் எங்களப்ப னென்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.



உற்றநூல்க ளும்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்க 
ளெய்துவீர்

செற்றமாவை யுள்ளரைச் செறுக்கறுத் திருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதியென்றும் வாழுமே.



போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்

ஓதடா அஞ்சுமூன்றும் மொன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராம வென்னும் நாமமே.



அகாரமென்ற வக்கரத்துள் அவ்வுவந்து தித்ததோ
உகாரமென்ற வக்கரத்தில் உவ்வுவந்து தித்ததோ
அகாரமு 
முகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ

விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.


அறத்திறங்க ளுக்கும்நீ அகண்ட ம்எண் திசைக்கும்நீ
திறத்திறங்க ளுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ உணர்வு நீஉட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.



அண்டம்நீ அகண்டம்நீ ஆதிமூல மானநீ
கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்ட கோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே.



மையடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்ல லுற்றிருப்பிர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.



கருவிருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்த சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே.



தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாட லெவ்விடந் தெளிந்த நீ ரியம்புவீர்
தீர்த்தமாக வும்முளே தெளிந்துநீ ரிருந்தபின்
தீர்த்தமாக வுள்ளதும் சிவாயவஞ் செழுத்துமே.



கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலா மிருந்துமே.



கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை யாறு மொன்றுமாய்ப் பயந்தவேத சுத்தராய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மாவிரே.



ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவிர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல்
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.



உழலும்வாச லுக்கிரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும்வாச லைத்துறந்து உண்மைசேர எண்ணிலிர்
உழலும் வாச லைத்துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.



மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம மாகலாம்
ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை வுண்மையே.



இருக்கவேணும் என்றபோ திருக்கலாய் இருக்குமோ
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன வஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தென்ப பதங்கெடீர்.



அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கலோர் எழுத்துமோ
விண்பரந்த மந்திரம் வேதநான்கு மொன்றலோ
விண்பரந்த மூலவஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.



சிவாய வென்ற அட்சரஞ் சிவனிருக்கும் அட்சரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாட மற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாய மிட்டழைக்குமே சிவாயவஞ் செழுத்துமே.



உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானுமல்ல
உரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே.



ஆத்துமா வனாதியோ ஆத்துமா வனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ
தாக்கமிக்க நூல்களும் சதாசிவ மனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே.



அறிவிலே பிறந்திருந் தாகமங்க ளோதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்
உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணைய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாற தெங்ஙனே.



இருவரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்க மாகிநின்ற உண்மை யொன்றை ஓர்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்தபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே.



கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினாற் சிவந்தவஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.



மண்ணிலே பிறக்கவும் வழக்கலா துரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவரென்ன துன்னதென்னவும்
கண்ணிலே கண்மணிஇருக்கக் கண்மறைந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின்கணால் விழிப்பதே.



மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.



மிக்கசெல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்
மக்கள் பெண்டீர்சுற்ற மென்று மாயைகாணு மிவையெலாம்
மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ.



ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றை சூடிஅம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.



மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந் துயிர்கழன்ற உண்மைகண்டுணர்கிலீர்.



பாடுகின்ற உம்பருக்குஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கன்மகூட்ட மிட்ட யெங்கள் பரமனே
நீடுசெம்பொன்னம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல்லி யாணனே.



கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லதேதும் இல்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேனகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.



பருகியோடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மல மதாகுமே
உருகியோடி எங்குமாய் ஓடுஞ் சோதி தன்னுளே
கருதடா உனக்குநல்ல காரண மதாகுமே.



சோதிபாதி யாகிநின்று சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை வோதுகின்ற பூரணா
வீதியாக வோடிவந்து விண்ணடியி னூடுபோய்
ஆதிநாதன் நாதனென்று அனந்தகால முள்ளதே.



இறைவனால் எடுத்தமாடத் தில்லையம்ப லத்திலே
அறிவினால் அடுத்தகாய மஞ்சினால் அமர்ந்ததே
கருவில்நாத முண்டுபோய் கழன்றவாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.



நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கியோடும் வாயுவை
அன்பினால் இருந்து நீரருகிருத்த வல்லிரேல்

அன்பர் கோயில்காணலாம் அகலும் எண்டிசைக்குளே
தும்பியோடி ஓடியே சொல்லடா சுவாமியே.



தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.



உடம்புயி ரெடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ
உடம்புயி 
ரெடுத்தபோது உருவமேது செப்புவீர்

உடம்புயி ரெடுத்தபோது உயிரிறப்ப தில்லையே
உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே.


அவ்வெனு மெழுத்தினால் அகண்டம் மேழு மாகினாய்
உவ்வெனு மெழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனு மெழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வு முவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.



மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்க ளாவது மறத்திலூற லன்றுகாண்
மந்திரங்க ளாவது மதத்தெழுந்த வாயுவை
மந்திரத்தை யுண்டவர்க்கு மானமேது மில்லையோ.



என்னவென்று சொல்லுவேன் இலக்கண மிலாததை
பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானுமல்ல இல்லையே.



ஆலவித்தி லாலொடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்ததே
பாருமித்தை வும்முளே பரப்பிரம்ம மாவிரே.



அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத் தறிந்தவர்க்கு எழுபிறப்ப திங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத் திருத்தினால்
அவ்வு முவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.



நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வை யொத்து நின்றதே சிவாய வஞ்செழுத்துமே.



இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே.



கடலிலே திரியும்ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கு மெங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைத்துநல்ல வுண்மையான துண்மையே.



மூன்று மண்டலத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பனு மெடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கு மில்லையே.



மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றுமஞ் சும்எழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்றதாயு மப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றுமண்டத்திலே சொல்லவெங்கு மில்லையே



சோறுகின்ற பூதம்போல் சுணங்குபோல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நவின் றெழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறுகோடி வேணியார் ஆறிலொன்றில் ஆவிரே.



வட்டமென்று வும்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டவக் கரத்துளே அடக்குமு மொடுக்கமும்
எட்டுமெட்டு மெட்டுமாய் இயங்குசக் கரத்துளே
எட்டலா முதித்த தெம்பி ரானை நானறிந்த பின்.



பேசுவானும் ஈசனே பிரமஞான மும்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கறார்

ஆசையான ஐவரை அடக்கியோ ரெழுத்திலே
பேசிடா திருப்பிரேல் நாதன்வந் தொலிக்குமே



நமசிவாய வஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய வஞ்சிலஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய வஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய வுண்மையை நன்குரைசெய் நாதனே.



பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரமெடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரமுருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரமெனக்கு நீயளித்த ஓம் நமசிவாயமே.



பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நித்தமும் நினைந்திட நினைத்த வண்ண மாயிடும்
பச்சைமண் ணிடிந்துபோய் பரந்ததும்பி யாயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்க பிரானிருந்த கோலமே.



ஒளியதான காசிமீது வந்ததங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விசுவநாத னானவன்
தெளியுமங்கை உடனிருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே.



விழியினோடு புனல்விளைந்த வில்ல வல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்ற தில்லையே
வெளிபரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும்
தெளியும் வல்ல ஞானிகாள் தெளிந்திருத்தல் திண்ணமே.



ஓம்நமசி வாயமே உணர்ந்மெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே.



அல்லல்வாசல் ஒன்பது மறுத்தடைந்த வாசலும்
சொல்லுவாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் வூடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்ப தில்லையே.



ஆதியானது தொன்றுமே அனேகனேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குச் சுத்தமா யிருப்பரே.



மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்களைந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்றமாயம் மென்னமாய மீசனே.



பாரடங்க வுள்ளதும் பரந்தவான முள்ளதும்
ஓரிடமு மின்றியே வொன்றிநின்ற வொண்சுடர்
ஆரிடமு மின்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே.



மண்கிடார மேசுமந்து மலையுளேறி மறுகுறீர்
எண்படாத காரியங்க ளியலுமென்று கூறுறீர்
தம்பிரானை நாள்கடோறுந் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வ தெங்ஙனே.



நாவிதூ ளழிந்ததும் நலங்குல மழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரமுங் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்கினால் ஐவரும் அடங்குவார்.



இல்லை யில்லை யில்லையென் றியம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டு மொன்றிநின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்ப தில்லையே.



காரகார காரகார காவலூழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களேழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராமவென்னும் நாமமே.



நீடுபாரி லேபிறந்து நேயமான மாயந்தான்
வீடுபேரிதென்றபோது வேண்டியின்பம் வேண்டுமோ
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம ராமவென்னும் நாமமே.



உயிரு நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்
உயிருடம் பொழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாய்கையாகி யொன்றை யொன்றுக் கொன்றிடும்
உயிரும்சத்தி மாய்கையாகி ஒன்றையொன்று தின்னுமே.



நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்ட மொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே.



விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரு மெம்முளே அமர்ந்து வாழ்வ துண்மையே.



விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்ப துண்மையே.



மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்ம மாகலாம்
ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை வுண்மையே.



மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கும் வாறுபோல்
என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுளேஅடங்குமே

கண்ணுள்நின்ற கண்ணில்நேர்மை கண்ணறிவி லாமையால்
என்னுள்நின்ற என்னையன்றி யானறிந்த தில்லையே.



இருக்கலா மிருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அகண்டம் ஏழகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே.



ஏகபோக மாகியே இருவரு மொருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாற தெங்ஙனே
ஆகிலும் அழகிலும் அதன்கணேய மானபின்
சாதிலும் பிறக்கிலு மில்லை யில்லை யில்லையே



வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்
காதில்நின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதிஅந்தமும் கடந்த தரியவீட தாகுமே.



பருத்திநூல் முறுக்கிவிட்டு பஞ்சிஓதும் மாந்தரே
துருத்திநூல் முறுக்கிவிட்டு துன்பம்நீங்க வல்லிரேல்
கருத்தில்நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கரவறும் சிவாயவஞ் செழுத்துமே.



சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே.



காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.



எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரிருப்பரோ

அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே



அறையறை இடைக்கிட அன்றுதூமை யென்கிறீர்
முறையறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை யென்கிறீர்
துறையறிந்த நீர்குளித்தால் அன்றுதூமை யென்கிறீர்
பொறையிலாத நீசரோடும் பொருந்துமாற தெங்ஙனே.



சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே
சுத்தமேது கட்டதேது தூய்மைகண்டு நின்றதேது
பித்தகாயம் உற்றதேது பேதமேது போதமே.



மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது
நாதமேது வேதமேது நற்குலங்க ளேதடா
வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா.



தூமையற்று நின்றலோ சுதீபமற்று நின்றது
ஆண்மையற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
ஆண்மையற்று ஆண்மையற்றுசஞ்சலங்க ளற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லுமற்று நின்றதே.



ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாற தேதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன
சீறுகின்ற மூடனேஅத் தூமைநின்ற கோலமே.



தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமையெங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந் துலகங் கண்டதே
தூமைதானும் ஆசையாய்த் துறந்திருந்த சீவனை
தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே.



வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலும் உள்ளதல்ல தில்லையே

வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணுமென்ற அப்பொருள் விரைந்துகாண லாகுமே.



சிட்டர் ஓது வேதமும் சிறந்த வாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானையா னறிந்தபின்.



நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாளிருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறுமாறு மாறுமாய் அகத்திலோர் எழுத்துமாய்
ஏறு சீரெழுத்தையோத ஈசன்வந்து பேசுமோ.



காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாய்ச்சிவந்த மாயமேது செப்பிடீர்
காலைமாலை அற்றுநீர் கருத்திலே வொடுங்கினால்
காலைமாலை யாகிநின்ற காலனில்லை யில்லையே.



எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்டலத்திலே எண்ணியாறு மண்டலம்
தொட்டமண்டலத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்டலத்திலே நாதன்ஆடி நின்றதே.



நாலிரண்டு மண்டலத்துள் நாதனின்ற தெவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்
சேரிரண்டு கண்கலந்து திசைகளெட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே.



அம்மையப்ப னப்புநீ ரறிந்ததே அறிகிலீர்
அம்மையப்ப னப்புநீ ரறிய அரனுமாய்
அம்மையப்பன் அப்புநீ ராதியாதி ஆனபின்
அம்மையப்பன் அன்னையன்றி யாருமில்லை ஆனதே.



உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே.



ஆதியுண்டு அந்தமில்லை அன்றிநாலு வேதமில்லை
சோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்தது தேதுமில்லை
ஆதியானமூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் ஆரறிவ தண்ணலே.



புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தர்காணு மத்தனே.



உதிரமான பால்குடித் தொக்கநீர் வளர்ந்ததும்
இரதமாய் இருந்ததொன் றிரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப் புலாலதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே.



உண்டகல்லை எச்சிலென்று உள்ளெறிந்து போடுறீர்
கண்டஎச்சில் கையலோ பரமனுக்கு ஏறுமோ
கண்டஎச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே
கொண்டசுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே.



ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே.



ஈணெருமை யின்கழுத்தில் இட்டபொட் டணங்கள் போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர் காள்
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணிஊணி நீர்முடிந்த உண்மைஎன்ன உண்மையே.



சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநாரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சும் தாம்இறந்து போனதே.



மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட் டறுப்பிரேல்

பாலனாகி வாழலாம் பரப்பிரம மாகலாம்
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாத முண்மையே.



செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலங்கிட
செம்பினில் களிம்புவிட்ட சேதியேது காணுமே.



நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல்
ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகால மும்முகந்து இருந்தவாறு தெங்ஙனே.



பிணங்குகின்ற தேதடா பிரஞ்ஞைகெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளிப் பிராணனை அறிகிலீர்
பிணங்குவோர் இருவினைப் பிணக்கறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே.



மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.



ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்களாற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.



அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது
மைக்கிடில் பிறந்திறந்து மாண்டுமாண்டு போவது
மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்த துண்மையே.



ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே
செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே.



நவ்வுமவ்வை யுங்கடந்து நாடொணாத சியின்மேல்
வவ்வுயவ்வு ளுஞ்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசுத்தி யுள்நிறைந்த துச்சியூ டுருவியே
இவ்வகை அறிந்த பேர் கள்ஈசன்ஆணை ஈசனே



அக்கரம் அனாதியோ வாத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ.



பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
சுத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலச் சிவமதாம்
பார்த்தபார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே.



நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.



நீரையள்ளி நீரில்விட்டு நீ நினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி விதத்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.



நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த் துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியைப்
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம தானவர்
அத்தலத்தில் இருந்தபேர்கள் அவரெனக்கு நாதரே.



கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தெவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற 
தெவ்விடம்

அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்ற தெவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர்.


கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்ற தப்புவில்

அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்ற வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுமே.



தாதரான தாதரும் தலத்திலுள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகு ஞானியை விரைந்துகல்லெறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே.



ஓடியோடி பாவியழைத் துள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரமில்லை என்றதும்
இழையறுந்து போனதும் என்னமாயம் ஈசனே.



சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு எண்ணும் வட்ட மேவியே
உதிரந்தான் வரைகள்எட்டும் எண்ணுமென் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே.



நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருவிருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே.



கோசமாய் எழுந்ததுங் கூடுருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாய வஞ் செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆகமம் நிறைந்துநின்ற ஐம்பத்தோ ரெழுத்துமே.



அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்கு தாமரையினும் பொருந்துவா ரகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்தஅஞ் செழுத்துமே
சிங்கநாதஓசையும் சிவாயமல்ல தில்லையே.



உவமையில்லாப் பேரொளிக்குள் உருவமான தெவ்விடம்
உவமையாகி அண்டத்துள் உருவிநின்ற தெவ்விடம்
தவமதான பரமனார் தரித்துநின்ற தெவ்விடம்
தற்பரத்தில் ஜலம்பிறந்து தாங்கிநின்ற தெவ்விடம்.



சுகமதாக எருதுமூன்று கன்றையீன்ற தெவ்விடம்
சொல்லுகீழு லோகமேழும் நின்ற வாற தெவ்விடம்
அளவதான மேருவும் அமைவதான தெவ்விடம்
அவனுமவளு மாடலால் அருஞ்சீவன் பிறந்ததே.



உதிக்குமென்ற தெவ்விடம் ஒடுங்குகின்ற தெவ்விடம்
கதிக்குநின்ற தெவ்விடங் கன்றுறக்க மெவ்விடம்
மதிக்கநின்ற தெவ்விடம் மதிமயக்க மெவ்விடம்
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.



திரும்பியாடு வாசலெட்டு திறமுரைத்த வாசலெட்டு
மருங்கிலாத கோலமெட்டு வன்னியாடு வாசலெட்டு
துரும்பிலாத கோலமெட்டு கத்திவந்த மருளரே
அரும்பிலாத பூவுமுண்டு ஐயனாணை வுண்மையே.



தானிருந்து மூலஅங்கி தணலெழுப்பு வாயுவால்
தேனிருந்து வரைதிறந்து தித்தியொன்று ஒத்தவே
வானிருந்த மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந்த தளவுகொண்ட யோகிநல்ல யோகியே.



முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லையாடல் என்பீர்காள்
அத்தனாடல் உற்றபோது அடங்கலாடல் உற்றதே.



ஒன்றுமொன்றும் ஒன்றுமே உலகனைத்து மொன்றுமே
அன்றுமின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வ மும்முளே அறிந்ததே சிவாயமே.



நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே.



வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படத்திலே சங்குசக் கரங்களாய்

விட்டதஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசீவன் விட்டவாற தெங்ஙனே.



கோயில்பள்ளி யேதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா
ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலாம் இறையையே.



நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொ னிரண்ட தாய்
வில்லினோசை ஒன்றுடன் விளங்கஊத வல்லிரேல்
எல்லையொத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.



மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத் திருப்பரே.



உருவுமல்ல ஒளியுமல்ல ஒன்றதாகி நின்றதே
மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர்காண வல்லிரே.



ஒரெழுத் துலகெலாம் உதித்த உட்சரத்துளே
ஈரெழுத் தியம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.



ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாத
மைந்து எழுத்துமாய்

ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே.



அன்னமிட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாந் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னமிட்ட பேரெல்லாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னமிட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே.



ஓதொணாமல் நின்ற நீருறக்கம் ஊணு மற்றநீர்
சாதிபேத மற்றநீர் சங்கையன்றி நின்றநீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதுமின்றி நின்ற நீரியங்குமாற தெங்ஙனே.



பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம்பிறந்து வானிடிந்து நின்ற தென்ன வல்லிரே.



துருத்தியுண்டு கொல்லருண்டு சொர்னமான சோதியுண்டு
திருத்தமாய் மனதிலுன்னித் திகழவூத வல்லிரேல்
பெருத்த தூணிலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயுமல்ல யில்லையே.



வேடமிட்டு மணிதுலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையே.



முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டுகொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லிரேல்
முட்டுமற்று கட்டுமற்று முடியினின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருத்தவீட தாகுமே.



அருக்கனோடு சோமனும் அதுக்கு மப்புறத்திலே
நெருக்கியேறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கியோ ரெழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்ப தில்லையே.



மூலவட்ட மீதிலே முளைத்த அஞ்செழுத் தின்மேல்
கோலவட்ட மூன்றுமாய் குலைந் தலைந்து நின்றநீர்
ஞாலவட்ட மன்றுளே நவின்றஞான மாகிலோ
ஏலவட்ட மாகியே யிருந்ததே சிவாயமே.



சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே

அச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய்
உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே.



பூவுநீரு மென்மனம் பொருந்துகோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கு மாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே.



உருக்கலந்த பின்னலோ உன்னை நானறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே.



சிவாய வஞ் செழுத்திலே தெளிந்துதேவர் ஆகலாம்
சிவாய வஞ் செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாய வஞ் செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள்
சிவாய வஞ் செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே.



பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம்வீசு மாறுபோல்
இச்சடமும் இந்தியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடஞ் சிவத்தை மொண்டுகர்ந்துஅமர்ந் திருப்பதே.



பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சி போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை.



அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட முங்கடந்த அனேகனேக ரூபமாய்
சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச்
சொல்லியாற் றேனில் வேறு துணைவரில்லை யானதே.



ஐயிரண்டு திங்களா யடங்கிநின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு மாகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாய மானதும் சொல்லுகின்ற தூமையே.



அங்கலிங்க பீடமும் அசவைமூன் றெழுத்தினும்
சங்குசக்க ரத்தினும் சகலவா னகத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயமில்ல தில்லையே.



அஞ்செழுத்து மூன்றெழுத்து மென்றுரைத்த வன்பர்காள்
அஞ்செழுத்து மூன்றெழுத்து மல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்து அவ்வின்வண்ண மானதே சிவாயமே.



ஆதரித்த மந்திர மமைந்த வாகமங் களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.



                                    அடுத்த பதிவில் தொடரும் .................    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக