வெள்ளி, ஜனவரி 19, 2018


சித்தர்கள் வரலாறு 

சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்


                           
                                                                                                  நம் சக்திக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன அவற்றுள் ஒன்று சித்தர்களின் பெருமைகளையம் அவர்தம் தவ வலிமையையும் அளவிட முடியாதது . நம் தாய் திருநாட்டில் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து வந்து இன்றளவும் தம் தவ சக்திகளை மக்களுக்கு பயன் பெறுமாறு செய்தனர் . தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை என்கிற தலத்தில் எம்பெருமான் கைலாசநாதர் சுயம்பு மூர்த்தியாக அருட்செய்யும் அந்த ஊரில் தோன்றிய ஒரு சித்தரை பற்றிய பதிவு இது .



                                       தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை என்ற ஊரில் உழவுத் தொழிலாளர் மரபிலே அவதரித்தார் சித்தர் சங்கு சுவாமிகள் . சுவாமிகள் சிறுவயது முதலே சிவானுபவம் மிக்கவராக விளங்கினார் . எந்நேரமும் சிவ சிந்தனையிலே இருப்பார் இவருடைய அருமை பெருமைகளை அவ்வூர் மக்கள் அறியவில்லை . மக்கள் இவரை பைத்தியம் என்றே நினைத்தார்கள் சங்கு சுவாமிகளை தங்களுடைய வேலைகளை செய்ய பணித்தும் வந்தார்கள் சுவாமிகளும் எல்லோரையும் தம்முடைய குடும்பத்தார் என்று எண்ணியும் யார் இட்ட பணியையும் முகம் கோணாமல் செய்து முடிப்பார் .

                         
                                   எல்லோருடைய வீடுகளில் வேலை செய்தாலும் இரவில் ஊருக்கு வெளியில் உள்ள தோப்புகளில் தனியாக உலாவுவார் . எப்போதும் வானத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருப்பார் , மழை பொழிந்தாலும் , வெயில் அடித்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார் . தனியாக சிரிப்பதும் , அழுவதுமாக இருப்பார் . அறுவடைக்காலங்களில் ஊர்மக்கள் நெற்கதிர்களை கட்டுகளாக கட்டி இவரை சுமக்க சொல்வார்கள் கிணற்றில் நீர் இறைக்க சொல்வார்கள் இன்னும் பல வேலைகளை சுவாமிகளை செய்யச் சொல்வார்கள் அவரும் செவ்வனே செய்து வந்தார் . 

                           ஒருநாள் சுவாமிகளின் சகோதரர் ஐயாவை நோக்கி , சங்கு நம் வயலில் நீர் பாய்ச்சி வை என்று கூறினார் . அதற்கு சுவாமிகள் நம் வயல் என்று தனியாக எங்கு உள்ளது என்று கேட்க , அடேய் உனக்கு புத்தி இல்லையா வா நம் வயலைக் காட்டுகிறேன் என்று கோபமாக அழைத்துச் சென்று வயலைக் காட்டி , விடிவதற்குள் இந்த வயல் முழுதும் நீர் பாயணும் புரிகிறதா வேகமாக ஏற்றம் இறை என்று கூறிவிட்டு போனார் . சித்தர் சங்கு சுவாமிகளும் எப்போதும் போல சிவ சிந்தனையோடு ஏற்றம் இறைக்க தொடங்கினார்.சுவாமிகளின் குணத்தை அறிந்த அடுத்த வயலுக்கு சொந்தக்காரன் தண்ணீர் மடையை தன் வயலுக்கு பாயுமாறு திருப்பிக் கொண்டான் . சுவாமிகள் இரவு முழுதும் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தார் அடுத்த வயல் முழுதும் நீர் நிரம்பியது  .

                        பொழுதும் புலர்ந்தது வயலை நோட்டமிட வந்த சுவாமிகளின் சகோதரர் இந்த காட்சியை கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் . டேய் மூடனே , உனக்கு அறிவு இருக்கிறதா நம் வயலுக்கு நீர் பாய்க்கச் சொன்னால் அடுத்தவன் வயலுக்கு நீர் பாய்ச்சிருக்கிறாய் என்று கடுமையான வார்த்தைகளால் சுவாமியை திட்டினார் . சுவாமிகள் , புன்னகை தவழ நீர் இறைத்துக் கொண்டே தம்பி ! அதுவும் நம்ம வயல் தானே ?" என்று முகம் மலர்ந்து கூறினார்  அவ்வளவுதான் ,  சுவாமிகளின் தம்பி , அருகில் இருந்த ஒரு பிரம்பை எடுத்து சங்கு சுவாமிகளை அடித்துவிட்டார் . அப்பொழுதும் அடிகள் சிரித்துக் கொண்டே தம்பி ! என்னை நீ அடிப்பதினால் உனக்கு கை வலிக்குமே என்றார் . உடனே அடித்தவருக்கு கை பயங்கரமாக வலிக்க ஆரபித்தது . உயிர் போகும் வழியால் கதறினார் . கருணையே வடிவான சங்கு சுவாமிகள் வருந்தாதே தம்பி வலி போய்விடும் என்றார் சொன்ன உடனே வலி நின்று விட்டது . 

                      ஆனால் அவன் அறிவு தெளிவு பெறவில்லை , இவன் சொன்னால் அப்படியே பலிக்கிறதே , இனி இவனிடம் நாம் எதுவும் வேலை சொல்லக்கூடாது என்று பயந்து ஒதுங்கினான் இந்த விஷயம் ஊர் மக்களுக்கும் தெரிய வர அவர்களும் சுவாமிகளை கண்டால் பயப்பட ஆரம்பித்தார்கள் அவரை வேலை வாங்கவும் இல்லை . சுவாமிகளும் ஊருக்கு வெளியில் ஆனந்தமாக நிட்டையில் ஆழ்ந்தார் . இப்படியே சில நாட்கள் கழிந்தன .
                               இந்நிலையில் , சிங்கம்பட்டி ஜமீன்தாரர் மகோதரம் எனப்படும் வயிறு வீக்க நோயால் அவதி பட்டு வந்தார் எத்தனையோ மருத்துவர்கள் வந்து பார்த்தும் பலவித மருந்துகள் கொடுத்தும் நோய் தீரவில்லை . எங்களால் முடியாது என்று வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் , ஜமீன்தாரர் ஒரு முடிவுக்கு வந்தார் யாரால் முடியாமல் போனால் என்ன ? சிதம்பரத்தில் ஆடும் என் அப்பன் இருக்கிறான் என்று சிதம்பரம் செல்ல தீர்மானித்தார் . பல்லக்கில் ஏறி தனது பணியாட்களுடன் தில்லை சென்றடைந்தார் வேரற்ற மரம் என ஆனந்தக்கூத்தனை விழுந்து வணங்கினார் .        
                                    ஆலயத்தில் 48 நாட்கள் தங்கி தில்லை நாதரை தொழுவதென முடிவு செய்து சிவகங்கையில் மூழ்கினார் பின் ஐயனை கண்ணாரக்கண்டு அழுது தொழுதார் . திருமுறைகளை பாராயனம் செய்து ஐந்தெழுத்து செபித்து சிரத்தையோடு வேண்டினார் . ஒருவேளை மட்டுமே உணவாய் பாலும் பழமும் அருந்தினார் இப்படியே 48 நாளும் செய்தார் . ஆனால் , நோய் தீர்ந்தபாடில்லை . 48 வது நாள் இரவு எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் ஆனால் ஜமீன்தார் மிகவும் கவலை கொண்டு ஐயனே! நாளை விடியலில் என்னுடைய நோய் தீரவில்லை என்றால் இந்த சிவகங்கையில் மூழ்கி இறப்பேன் இது உன்மீது ஆணை என்று அழுது கொண்டே கண்ணயர்ந்தார் . அப்போது ஈசன் அவரின் கனவில் தோன்றி அன்பனே ! வருந்தாதே பாண்டிய நாட்டிலே பசுவந்தனை என்னும் தலத்தில் சங்கு என்னும் நம் அன்பன் உள்ளான் பற்றற்றவன் அவனை சென்று பார் உன் நோய் மறைந்து விடும் என்று கூறினார் .                                                           

.                                          கனவு கலைந்து எழுந்தார், அப்பனால் ஆகாதது ஒன்று உண்டோ அவர்தம் தொண்டரின் பெருமையை உணர்த்தும் பொருட்டு என்னை பணித்தார் போலும் என்று அம்மையப்பனின் திருவடிகளை போற்றிக் கொண்டு பாண்டிய நாட்டை நோக்கி பயணித்தார் . சங்கு சுவாமிகளை மனதில் நினைத்துக்கொண்டே பசுவந்தனை வந்து சேர்ந்தார் . ஊருக்குள் பரிவாரங்களுடன் ஜமீன்தாரர் வருவதைக் கண்ட மக்கள் அவரை வரவேற்று வணங்கி நின்றனர் . அவர்களிடம் ஜமீன்தார் இங்கே சங்கு சுவாமிகள் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா ? என்று கேட்டார் . அதற்கு அவர்கள் சங்கு சுவாமிகள் என்று யாரும் இங்கில்லை , சங்கு என்று ஒருத்தன் இருக்கிறான் சுத்த சோம்பேறி , பைத்தியக்காரன் நீங்கள் தேடும் தகுதி உள்ளவன் இல்லை என்று கூறினார்கள் . 


                             உடனே ஜமீன்தார் நீங்கள் பித்தர் என்று கூறும் சங்கு சுவாமிகள் எங்கே இருக்கிறார் என்று கேட்க அவர்களும் , சுவாமிகள் தங்கி இருந்த பாழடைந்த மண்டபத்தை காட்டினார்கள் . அங்கு சங்கு சுவாமிகள் நிட்டையில் ஆழ்ந்திருந்தார் . அவராக கண்டவுடன் ஜமீன்தார் சுவாமிகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி தனது ஆனந்தக் கண்ணீரால் சுவாமிகளின் பாதங்களை கழுவினார் . பழங்களும் கற்கண்டுகளும் இன்னும் நிறைய ஐயாவின் முன் வைத்து பணிந்து நின்றார் . கண்விழித்தார் கருணையே வடிவாகக் கொண்ட சிவஞானி சங்கு சித்த சுவாமிகள் , அவர் ஜமீன்தாரை நோக்கி என்னப்பா தில்லைக்கூத்தன் உன்னை என்னிடம் அனுப்பி வைத்தாரா என்று கேட்க ! ஜமீன்தாரர் ஆம் ஐயனே என்று திருவடி பணிந்தார் , அவர் கொண்டு வந்த பழங்களில் ஒன்றை எடுத்த சுவாமிகள் அதை ஜமீன்தாரிடம் கொடுத்து உன்னைத் சொன்னார் . என்ன ஆச்சரியம் ! நோய் தீர்ந்தது "  சங்கு சித்தரை போற்றி தொழுது வலம் வந்தார் தன்னுடைய பல்லக்கில் ஏற்றி ஊர் முழுதும் அவரை பவனி வரச்செய்தார் . 

              ஊர்மக்கள் எல்லோரும் இந்த அதிசய நிகழ்வை கண்டு மெய் மறந்து நின்றனர் . இத்துனை நாள் அவர் அருகே இருந்தும் அவருடைய அருமை பெருமைகளை நாம் மதியாது இருந்து விட்டோம் என்று வெட்கினர் . பின் அனைவரும் சங்கு சுவாமிகளை பணிந்து போற்றினர் அவரும் எல்லோருக்கும் அருள் செய்தார் . அதன் பின் தான் சமாதி ஆகப் போகும் நாளை மக்களிடம் சொல்லி அந்நாளில் கயிலாச நாதரை தொழுது , ஜெப மாலையுடன் ஓரிடத்தில் அமர்ந்து தியானித்தார் . அவர் சொன்ன நேரத்தில் சமாதியானார் பக்தர்கள் எல்லோரும் அவர் சொன்னபடியே சமாதி அமைத்து வழிபாட்டு வருகின்றனர் . இன்றளவும் சங்கு சித்தர் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு கருணை சாகரமாய் அருள் பொழிந்து  கொண்டிருக்கிறார் . நாமும் சங்கு சுவாமிகளை வணங்குவோம் வளம் பெறுவோம் .



                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

   
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!








1 கருத்து:

  1. இதே போன்று சென்னை, கிண்டியில் ஸ்ரீ சாங்கு சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது

    பதிலளிநீக்கு