திங்கள், ஆகஸ்ட் 08, 2011

சித்தர் பாடல்கள் (சங்கிலிச் சித்தர் பாடல்)

                                சங்கிலிச் சித்தர் பாடல்


மூலக்க ணேசன் அடிபோற்றி .......... எங்கும்
முச்சுட ராகிய சிற்பரத்தில்
 வாலை 

திரிபுரை அம்பிகை பாதத்தை மனத்திற் 
கொள்வாய் ஆனந்தப் பெண்ணே.


எங்கள் குருவாம் திருமூலர் .............. பாதம்
எப்போதும் போற்றித் துதித்தே
சங்கைகள் அற்றமா சித்தர்கு ழாங்களின்
தாளைப் பணிவாய் ஆனந்தப் பெண்ணே.




ஓங்கார வட்டம் உடலாச்சு ............. பின்னும்
ஊமை எழுத்தே உயிராச்சு
ரீங்காரம் ஸ்ரீங்கார மான வகையதை
நீதா னறிவாய் ஆனந்தப் பெண்ணே



அகாரம் உகாரத் துடன்பொருந்த ................. அது
யகார மானது அறிந்துகொண்டு
சிகார மான தெளிவினி லேநின்று
தேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே



பஞ்ச பூ தங்களைக் கண்டறிந்தோர் ............... இகப்
பற்றினைச் சற்றும் நினைப்பாரோ
சஞ்சலம் இல்லாது யோக வழியதைத்
தானறிந் துய்வாயா ஆனந்தப் பெண்ணே



தவ நிலையை அறிந்தோர்க்கு ............... ஞானந்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே.



வாசி நிலையை அறிந்துகொண்டால் ............ தவம்
வாச்சுது என்றே மனது கந்து
தேசி எனும்பரி மீதேறி நாட்டம்
செய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே.



நந்தி கொலுவைத் தெரிந்தோர்கள் .............. வாசி
நாட்டம் விடார்கள் ஒருக்காலும்
உந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை
உற்றறிந் துய்வாய் ஆனந்தப் பெண்ணே.



மாலுந் திருவும் வசித்திருக்கும் ............... இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே.



எந்தெந்தப் பூசை புரிந்தாலும் ................ பரம்
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும்

சிந்தை அடங்கு முபாயம் சதாசிவன்
சீர்பாதம் அல்லவோ ஆனந்தப் பெண்ணே.



தானே தானாக நிறைந்து நின்ற .................. சிவ
தற்பரம் ஆகிய உற்பணத்தை
நானே நானென்று அறிந்து கொண்டு பர
நாட்ட மறிவாய் ஆனந்தப் பெண்ணே.



வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு ............. முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே



சரியை கிரியை கடந்தாலும் .................. யோகம்
சாதித்து நின்றருள் பெற்றாலும்
உரிய ஞானவி சர்க்கம் இலாவிடில்
ஒன்றும் பயனின்று ஆனந்தப் பெண்ணே.



தன்னை இன்னானெனத் தான்தெரிந்தால் ........... பின்னும்
தற்பர னைப் பார்க்க வேணுமோதான்
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்
அறிந்தவன் ஞானி ஆனந்தப் பெண்ணே.



எண்சாண் உடம்பும் இதுதாண்டி ................. எழில்
ஏற்கும் நவவாசல் உள்ளதடி
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டுத்
தலங்கள் தோணும் ஆனந்தப் பெண்ணே.



அஞ்சுபேர் கூடி அரசாள ....................... ஒரு
ஆனந்தக் கட்டடங்கட்டி வைத்த 
செஞ்சிக்
கோட்டையை இதுதானென
க் கண்டு 
தெரிந்துக் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே.



ஊத்தைச் சடலம் இதுதாண்டி ............... நீ
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி
பீத்தத் துருத்தி இதுதாண்டி நன்றாய்ப்
பேணித் தெளிவாய் ஆனந்தப் பெண்ணே.



ஆத்தாள் எந்தனைப் பெற்றுவிட்டாள் ........... என்தன்
அப்பனும் என்னை வளர்த்துவிட்டார்
வேத்தாள் என்று நினையாமல் இதன்
விபரங் கேட்பாய் ஆனந்தப் பெண்ணே.



இந்தச் சடலம் பெரிதென எண்ணி ........... யான்
இருந்து வீண்காலந் தான்கழித்துச்
சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில்
சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே.



மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு ......... பின்
மக்களைப் பெற்று வளர்த் தெடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்தப் பெண்ணே.



எல்லா பொருள்களும் எங்கிருந்து .............. வந்த
தென்றுநான் உற்றிதைப் பார்க்கையிலே
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்றுபின்
நன்றாய்த் தோணுதே ஆனந்தப் பெண்ணே



செத்தபின் கொண்டே சமாதிசெய்து ............... அப்பால்
சிலநாள்கள் கழித்தந்த மண்ணெடுத்து
உய்த்தோர் பாண்டம் ஆகச் சுட்டுப்பின்
உலகோர்க்குதவு ஆனந்தப் பெண்ணே.



சகல பொருள்களும் மண்ணாய் ............... இருப்பதைச்
சற்று நிதானித்துப் பார்க்கையிலே
பகவான் அங்கங்குஎள் ளெண்ணெய்யைப் போலவே
பற்றி இருப்பார் ஆனந்தப் பெண்ணே.



மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் ................. பார்த்து
வைத்த பொருளும் அழிந்துவிடும்
கண்ணினில் காண்பது அழிந்து விடுமென்று
கண்டறிந்து கொள் ஆனந்தப் பெண்ணே.



பெற்ற தாய் தந்தை சதமாமோ?...................  உடல்
பிறப்புச் சுற்றஞ் சதமாமோ?

மற்றுமுள் ளோர்கள் சதமாமோ கொண்ட
மனைவி சதமாமோவாய் ஆனந்தப் பெண்ணே.



யாரார் இருந்துஞ் சதமலவே ................. நம்
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது
ஊரார் ஒருவருஞ் சதமிலை என்பதை
உற்றுநீ காண்பாய் ஆனந்தப் பெண்ணே.



இந்த வழியைத் தெரிந்துகொண்டே ............... இவ்
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே
சொந்தம தாகஎன் பாட்டன் போகரிஷி
சொல்லை அறிவாய் ஆனந்தப் பெண்ணே.



வழி தெரியாது அலைந்தோர்கள் ................. இந்த
மாநிலந் தன்னில் கோடானகோடி
சுழிமுனை தன்னைத்தெரிந்து கொண்டால்பின்
சுகவழி கண்டோர் ஆனந்தப் பெண்ணே.



ஆசைஒ ழிந்தருள் ஞானம்கண்டு ............... வீண்
ஆண்மையைத் தான்சுட் டறுத்து த்தள்ளி
பாசத்தை விட்டுநீ யோகத்தைச் செய்திந்தப்
பாரினில் வாழ்வாய் ஆனந்தப் பெண்ணே.



இரவைப் பகலாய் இருத்தித் தெரிந்து ................ நீ
ஏக வெளியையும் கண்டறிந்த
விரைவாய் இந்த விதத்தெரிந்தால் இம்
மேதினி போற்றும் ஆனந்தப் பெண்ணே



பெற்றதாய் தந்தை இருந்தால் என் ............... கொண்ட
பெண்டீர் பிள்ளை இருந்தால் என்
நற்தவஞ் செய்யாது இருக்கில் நமனுக்கு
நாம்சொந்தம் காண்பாய் ஆனந்தப் பெண்ணே.



தீர்த்தம் ஆடிக் குளித்தாலும் ................. பல
தேவா லயம் சுற்றி வந்தாலும்
மூர்த்தி தரிசனஞ் செய்தாலும் நாலாம்
மோனம் உண் டோசொல் ஆனந்தப் பெண்ணே.



காடு மலைகள் அலைந்தாலும் .........கன்
மானுட் டானம் புரிந்தாலும்
ஓடுஞ்சித் தத்தை நிறுத்தார்க்குப் பர
உற்பனம் வாய்க்காது ஆனந்தப் பெண்ணே.



மாயா உலக மயக்கத்தையும் ................ நல்ல
வஞ்சியர் மீதுற்ற மோகத்தையும்
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு
சேருவது இல்லை ஆனந்தப் பெண்ணே.



நாலாவகைக் கலைகள் ............... அறிந்தாலும்
ஞான வழிகள் தெரிந்தாலும்
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா
வீடுறு வார்கள் ஆனந்தப் பெண்ணே.



சங்கிலி கண்டத் தணிந்துகொண்டு .............. நற்
தவயோகஞ் செய்துஅங்கு இருக்கையிலே
சங்கிலிச் சித்தனென்று என்பாட்டன் வந்து
சாற்றைத்தெரியும் ஆனந்தப் பெண்ணே.



               சங்கிலி சித்தர் பாடல் முற்றிற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக