வியாழன், ஜூன் 04, 2015



    மனதில் கோவில் கட்டிய
                  பூசலார் நாயனார் வரலாறு 







                 தொண்டை நாட்டில் உள்ள திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே அவதரித்தவர்  பூசலார் நாயனார் . இவர்  , பிறவி எடுத்தலே ஈசனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்யவே என்று கருத்தில் கொண்டு  பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்கு திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் திருக்கோவில் கட்டும் அளவிற்கு பொருள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு பொருள் தேடியும் போதுமான பொருள் கிட்டாத காரணத்தினால் மனம் வருந்தினார் . இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார் . மனதிலே கோவில் திருப்பணிக்கு தேவையான பொருள்களை சிறிதுசிறிதாக சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய மரம் , கல்  என அனைத்தையும் மனதில் வாங்கி வைத்துக் கொண்டார் . பணிசெய்வற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயில்  பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி பகல் இரவு பாராமல் தூக்கம் கொள்ளாமல்   அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் ஆகம விதிப்படி அருமையாக திருக்கோவில் பணியை சிரமேற்கொண்டு முடித்தார் . தாம் மனத்திலே கட்டிய திருக்கோவிலுக்கு ஆகம முறையினில் குடமுழுக்கும் சிவபெருமானை ஆங்கு எழுந்தருள் செய்ய நல்ல நாளையும் நிச்சயித்தார் .

                              இவரது திருப்பணி இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் , காடவர்கோண் என்னும் அரசன் காஞ்சி நகரத்திலே சிவபெருமானுக்கு அழகிய திருக்கோவில் கட்டினான் . அத்திருக் கோவிலுக்கு அவன் குடமுழுக்கு செய்யவிருந்த நாளும் , பூசலார் மனத்திலே எண்ணிய நாளும் ஒரே நாளாய் அமைந்தது.  பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அன்று இரவில் காடவர் கோமான் கனவில் எழுந்தருளி நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; நீ இங்கு செய்யத்துணிந்த தாபனத்தினை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்றொரு நாளில் செய்வாயாக’ என்று பணித்தருளி மறைந்தருளினார்.உறக்கம் கலைத்து எழுந்த அரசன்  இறைவர் உளமகிழும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பூசலார் நாயனாரைக் காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு இருந்தவர்களிடம்  ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டான் . அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர். 

                               மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து பூசலார் யார் அவர் எங்கே இருக்கிறார் என்று அவர் வசிப்பிடத்தை கேட்டு அறிந்து , பூசலார் இருக்குமிடத்திற்கு சென்று அவரை வணங்கி, தேவரீர் அமைத்த திருக்கோயில் எங்கு உள்ளது என்று வினவி  அத்திருக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இன்று தான் என சிவபெருமானார் தெரிவித்தருளத் தெரிந்து உம்மைக்கண்டு பணிதற்கு வந்தேன்’ என்றார். பூசலார், அரசன் சொன்னதைக் கேட்டு மனம் பதறி , இறைவர் என்னையும் பொருட்டாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் திருப்பணி  செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அதைக் கேட்ட மன்னன் காடவர்கோன் ஆச்சரியமும் , அதிசயமும் கொண்டு  பூசலாரை நிலமுற்றத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.


                          பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து  தினசரி பூசனைகள் எல்லாம் பெருஞ்சிறப்புடன் பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடிநீழலையடைந்தார்.

                  ஈசனை அடைய எதுவும் செய்ய வேண்டாம் தூய அன்பு இருந்தாலே போதும் நம் அருகில் அவன் என்றும் இருப்பான் நாமும் அவன் பதத்தில் என்றும் நிலைத்து இருப்போம் .

                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

     சிவத்தை போற்றுவோம் !!   சித்தர்களை போற்றுவோம் !!



           
                    




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக