வியாழன், மே 28, 2015

சதுரகிரி மலை யாத்திரையின் ஆச்சர்யங்கள் ...


                    


                அடியேன் சதுரகிரியை ஆளும் என் அப்பனை பார்க்க பலமுறை சென்று வந்துள்ளேன் . அடியேன் சென்று வந்தேன் என்பதை விட அப்பன் என்னை அழைத்து தன் தரிசனம் கொடுத்தான் என்பதே நிதர்சனம் . ஏனெனில் நாம் நினைத்தால் அவனை காண முடியாது அவன் நினைத்தால் மாத்திரமே அது சாத்தியம் .

            ஒருமுறை மூன்று நண்பர்களுடன் அடியேன் அங்கு சென்று இருந்தேன்

வழக்கமாக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தான் மலை ஏற ஆரம்பிப்போம் அன்று தூத்துக்குடியில் இருந்து கிளம்ப கால தாமதம் ஆகிவிட்டது. நாங்கள் நால்வரும் தாணிப்பாறை அடையும் போது இரவு 8 மணி நல்ல மழை பெய்து கொண்டிருந்தது . அங்கு இருந்த கடைக்காரரிடம் மேலே ஆட்கள் போகிறார்களா என்று கேட்டோம் அவர்கள் இல்லை மழை பெய்து கொண்டிருப்பதால் வெள்ளம் போகிறது நீங்கள் இங்கு தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என்று சொன்னார்கள் . எனக்கு சிறிது கஷ்டமாக இருந்தது ஏன் என்றால் கண்டிப்பாக இரவு மேலே தங்கி விட்டு தான் வர வேண்டும் என்று நினைத்தோம் இப்படி ஆகிவிட்டதே .
           
            பரவாயில்லை ஈசனும்  எண்ணற்ற சித்தர்களும் வாழும் இந்த மலையில் பயப்பட என்ன இருக்கிறது என்று அவர்கள் பொறுப்பு  நடக்க ஆயத்தமானோம் . குருநாதர் பட்டினத்தாரை மனதில் நினைத்துக் கொண்டு சித்தர்களை வணங்கி மலை ஏற ஆரம்பித்தோம் . முதலில் வரும் பிள்ளையார் கோவிலில் கணேசனை வணங்கி பின் ராஜகாளியம்மன் கோவிலில் இருக்கிறோம் மழை விடுவதாயில்லை . அப்போது அங்கு  பைரவரின் வாகனங்கள் 8 இருந்தது . அடியேன் சிறு வயது முதலே நாயைக் கண்டால் மிகவும் பயம் , மழை பெய்து கொண்டிருக்கிறது இதுவும் துரத்த ஆரம்பித்தால் எங்கே ஓடுவது என்று கேட்டேன் என்னுடைய நண்பர் சொன்னார்  ஐயா அது ஒன்றும் செய்யாது என்றார் .

              அதே போல அதில் வெள்ளையாக இருந்த பைரவர் எங்கள் அருகில் வந்து நின்றார் கொஞ்சம் மன பயத்தை விலக்கி எப்படி மலை ஏறுவது என்று சிந்தனை சித்தர்கள் தான் எங்களை சிறப்பாக மலை மேல் சேர்க்க வேண்டும் என மனதில் தியானித்துக் கொண்டு இருக்கும் போது நிறைய டார்ச் வெளிச்சம் தெரிந்தது . நிறைய பேர்கள் வருகிறார்கள் என்று யூகித்துக் கொண்டோம் . 15 பேர் இருப்பார்கள் எங்களை பார்த்து கேட்டார்கள் நீங்கள் இங்கே தங்கலா மேலே வருகிறீர்களா என்று . நாயேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி எப்படியும் மேலே போய் விடுவோம் மனதில் தெம்பும் வந்தது . நாங்கள் நால்வரும் அவர்களோடு  நடக்க ஆரம்பித்தோம் எங்களிடம் அவர்கள் இயல்பாக பேசவில்லை ஆனால் அவர்களுக்கு மத்தியில் நாங்கள் நடந்து கொண்டு இருக்கிறோம் . முதல் நீரோடையை கடப்பதற்கு தயாரானோம் அதில் நீர்வரத்து அதிகமாக இருந்தது உள்ளே இறங்கினால் இழுத்துக் கொண்டு போகும் அளவிற்கு , காட்டாறு வெள்ளம் என்பதை அன்று தான் பார்க்கிறோம் . கொஞ்சம் பயம் என்று பொய் சொல்ல அடியேன் விரும்பவில்லை . 


                 மிகுந்த பயம் ஆனால் வெளிக்காட்டாது இருந்தேன் எல்லாம் ஈசன் செயல் என்று அப்போது அந்த கூட்டத்தில் இருந்த பெரியவர் எல்லோரும் கைகளை இருக்க பற்றிக்கொண்டு மொத்தமாக நடப்போம் என்று கூறி அதை கடந்து வந்து எங்களை கரை சேர்த்தார் என்னால் நம்ப முடியவில்லை என்ன நடந்தது என்று எல்லாம் ஈசன் செயல் என்று இப்போது தைரியமாக நடக்க ஆரம்பித்தோம் . அடுத்த நீரோடை அதிலும் மிகவும் பாதுகாப்பாக எங்களை கூடி வந்தார்கள் . பின் சங்கிலிப் பாறை சங்கிலிக்கு மேலே நீர் ஓடிக் கொண்டிருந்தது அங்கு போனவர்களுக்கு தெரியும் அந்த சங்கிலி எவ்வளவு உயரத்தில் பிணைக்க பட்டிருக்கும் என்று . ஒருவர் பின் ஒருவராக மறு முனைக்கு சென்றோம் . இப்போது அவர்கள் எங்களை நோக்கி பார்த்து மேலே போங்கள் என்றார்கள் . நாங்கள் அவர்களிடம் நீங்கள் மேலே வரவில்லையா ஐயா என்றோம் அவர்கள் இல்லை நாங்க இங்கே தங்கல் விடிந்த பின் வருகிறோம் என்று கூறினார்கள் . எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யம் , எல்லாம் அப்பனின் செயல் என்று குருநாதர் பட்டினத்தாரையும் , சித்தர்களையும் மனதில் நினைத்துக் கொண்டே மலை ஏறினோம் .   

                     
               எனக்கு இருந்தாலும் சிறிது பயம் இருந்தது அதைப் போக்கும் விதமாக இப்போது எங்கள் முன்னே நாங்கள் கோவிலில் பார்த்த அந்த வெள்ளை பைரவர் நின்று கொண்டிருந்தார் எங்கள் ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை . அவர் முன்னே நடக்க நாங்கள் அவரை பின் தொடர்ந்து சென்றோம் . இரட்டை லிங்கத்தை தரிசனம் செய்து அங்கே 30 நிமிடங்கள் தேவாரப் பாடல்கள் என்னுடைய நண்பர் பாடினார் . அந்த 30 நிமிடங்களும் அந்த பைரவர் எங்களுக்காக காத்திருந்து நாங்கள் நடக்க ஆரம்பிக்கையில் எங்களுக்கு முன்னே நடக்க ஆரம்பித்தார் மேலே மலையை சென்று அடைந்ததும் பைரவரை  பார்த்தோம் அவர் எங்களை பார்த்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தார் நாங்கள் மலையை சென்று அடையும் போது இரவு 11.30 மணி . வழக்கமாக நாங்கள் மலை ஏறுவதற்கு 1.30 - 1.45 நிமிடங்கள் தான் ஆகும் . ஆனால் இன்று ஈசன் எங்களுக்காக நிறைய அனுபவங்களை தந்து எங்களை காத்து அருள் செய்தான் என் அப்பனின்  கருணையை என்னவென்று சொல்வது . சுந்தர மகாலிங்கத்திற்கு நன்றியை சொல்லிவிட்டு மலையில் தங்கி அவனை கண்குளிர தரிசனம் செய்து விட்டு அந்த அனுபவத்தை மனதில் நினைத்தபடி மறு நாள் காலையில் இறங்கினோம் . 



                     இன்னும் அனுபவங்கள் தொடரும் ........

                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

  சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                             
                                   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக