பாயப்புலி பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில மாயைப் பெரும்படைக்கேஇலக் காவெனை வைத்தனையோ நீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணை தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே. 1. தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்து நிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங் கற்பரந் தாங்குக் கரைந்திட வானொத்த காட்சிநல்கும் பொற்பர மாயென் வினைக்கருந் தாதைப் பொடிசெய்ததே. 2. செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே. 3. அத்தனைச் சிற்றம் பலவனை யென்னுயி ராகிநின்ற சுத்தனைச் சுத்த வெளியா னவனைச் சுகவடிவாம் நித்தனை நித்த நிராதார மாகிய நின்மலனை எத்தனை நாள்செல்லு மோமன மேகண் டிறைஞ்சுதற்கே. 4. கண்டா ருளத்தினிற் காலூன்றிப் பெய்யுங் கருணைமுகில் அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனிதன்னைக் கொண்டாடி னார்முனங் கூத்தாடும் மத்தன்றன்கோலமெல்லாம் விண்டாலம் மாவொன்றுங் காணாது வெட்ட வெறுவெளியே. 5. வெளியான நீயென் மனவெளி யூடு விரவின்ஐயா ஒளியாருங் கண்ணும் இரவியும் போல்நின் றுலாவுவன்காண் அளியாருங் கொன்றைச் சடையாட அம்புலி யாடக்கங்கைத் துளியாட மன்றுள் நடமாடும் முக்கட் சுடர்க்கொழுந்தே. 6. கொழுந்தா துறைமலர்க் கோதையர் மோகக் குரைகடலில் அழுந்தாத வண்ணம்நின் பாதப் புணைதந் தருள்வதென்றோ எழுந்தா தரவுசெய் எம்பெரு மான்என் றிறைஞ்சிவிண்ணோர் தொழுந்தா தையேவெண் பொடிபூத்த மேனிச் சுகப்பொருளே. 7. சுகமாகு ஞானந் திருமேனி யாநல்ல தொண்டர்தங்கள் அகமேபொற் கோயில் எனமகிழ்ந் தேமன்றுள் ஆடியகற் பகமேஉன் பொன்னடி நீழல்கண் டாலன்றிப் பாவிக்கிந்தச் செகமாயை யான அருங்கோடை நீங்குந் திறமிலையே. 8. நீங்கா துயிருக் குயிராகி நின்ற நினையறிந்தே தூங்காமல் தூங்கின்அல் லாதே எனக்குச் சுகமும்உண்டோ ஓங்கார மாம்ஐந் தெழுத்தாற் புவனத்தை உண்டுபண்ணிப் பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே. 9. சிவமாதி நான்முகக் கோவந்த மாமறை செப்புகின்ற நவமாய் இலக்கிய ஒன்றே இரண்டற்ற நன்மைபெறா தவமே தரும்ஐம் புலப்பொறிக் கேயென் னறிவுபொல்லாப் பவமே விளைக்கவென் றோவெளி மானெனப் பாய்ந்ததுவே. 10. ஆறொத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய் வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளமொன்று தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே ஊறிப் பரந்தண்ட கோடியெல் லாம்நின் றுலாவியதே. 11. நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக் கிடக்கினுஞ் செவ்வி திருக்கினும் நல்லருட் கேள்வியிலே தொடக்கும்என் நெஞ்சம் மனமற்ற பூரணத் தொட்டிக்குளே முடக்குவன் யான்பர மானந்த நித்திரை மூடிடுமே. 12. எண்ணாத தெண்ணிய நெஞ்சே துயரொழி என்னிரண்டு கண்ணே உறங்குக என்னாணை முக்கட் கருணைப்பிரான் தண்ணார் கருணை மவுனத்தி னால்முத்தி சாதிக்கலாம் நண்ணாத தொன்றில்லை யெல்லா நலமு நமக்குளவே. 13. நானென் றொருமுத லுண்டென்ற நான்தலை நாணஎன்னுள் தானென் றொருமுதல் பூரண மாகத் தலைப்பட்டொப்பில் ஆனந்தந் தந்தென் அறிவையெல் லாமுண் டவசநல்கி மோனந் தனைவிளைந் தால்இனி யாதுமொழிகுவதே. 14. தானந் தவஞ்சற்றும் இல்லாத நான்உண்மை தானறிந்து மோனம் பொருளெனக் கண்டிடச் சற்குரு மோனனுமாய்த் தீனன் தனக்கிங் கிரங்கினை யேஇனிச் சிந்தைக்கென்றும் ஆனந்தந் தானல்ல வோபர மேசச்சி தானந்தமே. 15. எனக்கோர் சுதந்திர மில்லையப் பாஎனக் கெய்ப்பில்வைப்பாய் மனக்கோ தகற்றும் பரம்பொரு ளேஎன்னை வாழ்வித்திட நினக்கே பரம்நின்னை நீங்காத பூரண நீள்கருணை தனக்கே பரமினிச் சும்மா விருக்கத் தகுமென்றுமே. 16. இடம்பெறு வீடும்மின் னார்செய் சகமும் இருநிதியும் உடம்பைவிட் டாருயிர் போம்போது கூடி உடன்வருமோ மடம்பெறு மாயை மனமே இனியிங்கு வாமவுனி திடம்பெற வைத்த மவுனஞ் சகாயந் தெரிந்துகொள்ளே. 17. நாற்றச் சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையைச் சோற்றுப் பசையினை மும்மல பாண்டத் தொடக்கறையை ஆற்றுப் பெருக்கன்ன கன்மப் பெருக்கை அடர்கிருமிச் சேற்றைத் துணையென்ற நாய்க்குமுண் டோகதி சேர்வதுவே. 18. பொய்யா ருலக நிலையல்ல கானற் புனலெனவே மெய்யா அறிந்தென்ன என்னால் இதனை விடப்படுமோ கையால் மவுனந் தெரிந்தேகல் லால்நிழற் கண்ணிருந்த ஐயாஅப் பாஎன் அரசேமுக் கண்ணுடை ஆரமுதே. 19. ஆரா அமுதென மோனம் வகித்துக்கல் லால்நிழற்கீழ்ப் பேராது நால்வ ருடன்வாழ்முக் கண்ணுடைப் பேரரசே நீரா யுருகவுள் ளன்புதந் தேசுக நிட்டையைநீ தாரா விடின்என் பெருமூச்சுத் தானத் தனஞ்சயனே. 20. வாயுண்டு வாழ்த்த மவுனஞ்செய் போது மவுனஅருள் தாயுண்டு சேயென்ன என்னைப் புரக்கச் சதானந்தமாம் நீயுண்டு நின்னைச் சரண்புக நானுண்டென் நெஞ்சம்ஐயா தீயுண் டிருந்த மெழுகல வோகதி சேர்வதற்கே. 21. கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச் சொல்லால் துதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன் கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே. 22. முன்னிலைச் சுட்டொழி நெஞ்சேநின் போதம் முளைக்கில்ஐயோ பின்னிலைச் சன்மம் பிறக்குங்கண் டாயிந்தப் பேய்த்தனமேன் தன்னிலை யேநில்லு தானே தனிச்சச்சி தானந்தமாம் நன்னிலை வாய்க்கும்எண் சித்தியுங் காணும் நமதல்லவே. 23. சொல்லால் மவுன மவுனமென் றேசொல்லிச் சொல்லிக்கொண்ட தல்லால் மனமறப் பூரண நிட்டையி லாழ்ந்ததுண்டோ கல்லாத மூடன் இனிஎன்செய் வேன்சகற் காரணமாம் வல்லாள னான மவுன சதானந்த மாகடலே. 24. ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள்மவுன காரண மூலங்கல் லாலடிக் கேயுண்டு காணப்பெற்றால் பாரணங் கோடு சுழல்நெஞ்ச மாகிய பாதரசம் மாரண மாய்விடும் எண்சித்தி முத்தியும் வாய்ந்திடுமே. 25. சித்த மவுனி வடபால் மவுனிநந் தீபகுண்ட சுத்த மவுனி யெனுமூவ ருக்குந் தொழும்புசெய்து சத்த மவுன முதல்மூன்று மவுனமுந் தான்படைத்தேன் நித்த மவுனமல் லாலறி யேன்மற்றை நிட்டைகளே. 26. கண்டேன் நினதருள் அவ்வரு ளாய்நின்று காண்பதெல்லாம் உண்டே யதுவும் நினதாக்கி னேன்உவட் டாதஇனபம் மொண்டே அருந்தி இளைப்பாறி னேன்நல்ல முத்திபெற்றுக் கொண்டேன் பராபர மேயெனக் கேதுங் குறைவில்லையே. 27. மேற்கொண்ட வாயுவுங் கீழ்ப்பட மூலத்து வெந்தழைச் சூற்கொண்ட மேக மெனவூமை நின்று சொரிவதைஎன் னாற்கண்ட தன்று மவுனோப தேசிய ளிக்கையினிப் பாற்கண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே. 28. சொல்லால் தொடர்பொரு ளால்தொட ராப்பரஞ் சோதிநின்னை வல்லாளர் கண்ட வழிகண்டி லேன்சக மார்க்கத்திலுஞ் செல்லாதென் சிந்தை நடுவே கிடந்து திகைத்துவிம்மி அல்லான தும்பக லானதும் வாய்விட் டரற்றுவனே. 29. அறியாத என்னை அறிவாயும் நீயென் றகம்புறமும் பிறியா தறிவித்த பேரறி வாஞ்சுத்தப் பேரொளியோ குறியாத ஆனந்தக் கோவோ அமுதருள் குண்டலியோ சிறியேன் படுந்துயர் கண்டுகல் லால்நிழற் சேர்ந்ததுவே. 30. எல்லாம் உதவும் உனையொன்றிற் பாவனை யேனுஞ்செய்து புல்லா யினும்ஒரு பச்சிலை யாயினும் போட்டிறைஞ்சி நில்லேன்நல் யோக நெறியுஞ்செ யேன்அருள் நீதியொன்றுங் கல்லேன்எவ் வாறு பரமே பரகதி காண்பதுவே. 31. ஒன்றுந் தெரிந்திட இல்லைஎன் னுள்ளத் தொருவஎனக் கென்றுந் தெரிந்த இவைஅவை கேள்இர வும்பகலுங் குன்றுங் குழியும் வனமும் மலையுங் குரைகடலும் மன்றும் மனையும் மனமாதி தத்துவ மாயையுமே. 32. பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை விழுகின்ற பாவிக்குந் தன்தாள் புணையை வியந்தளித்தான் தொழுகின்ற அன்பர் உளங்களி கூரத் துலங்குமன்றுள் எழுகின்ற ஆனந்தக் கூத்தனென் கண்மணி யென்னப்பனே. 33. அழுக்கார்ந்த நெஞ்சுடை யேனுக்கை யாநின் அருள்வழங்கின் இழுக்காகு மென்றெண்ணி யோஇரங் காத இயல்புகண்டாய் முழுக்காத லாகி விழிநீர் பெருக்கிய முத்தரெனுங் குழுக்காண நின்று நடமாடுந் தில்லைக் கொழுஞ்சுடரே. 34. ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண் டவர்செய்இந்த்ர சாலம் படைத்துத் தளர்ந்தனை யேயென்றுந் தண்ணருள் கூர் கோலம் படைத்துக்கல் லாலடிக் கீழ்வைகுங் கோவுக்கன்பாங் காலம் படைக்கத் தவம்படை யாதென்கொல் கல்நெஞ்சமே. 35. சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம் அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால் வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந் தோஎன் விதிவசமே. 36. தினமே செலச்செல வாழ்நாளும் நீங்கச் செகத்திருள்சொப் பனமே யெனவெளி கண்டே யிருக்கவும் பாசபந்த இனமே துணையென் றிருந்தோம் நமன்வரின் என்செய்குவோம் மனமே நம்போல வுண்டோசுத்த மூடரிவ் வையகத்தே. 37. கடலெத் தனைமலை எத்தனை அத்தனை கன்மமதற் குடலெத் தனையத் தனைகடல் நுண்மணல் ஒக்குமிந்தச் சடலத்தை நான்விடு முன்னே யுனைவந்து சாரஇருட் படலத்தை மாற்றப் படாதோ நிறைந்த பராபரமே. 38. நினையும் நினைவும் நினையன்றி யில்லை நினைத்திடுங்கால் வினையென் றொருமுதல் நின்னையல் லாது விளைவதுண்டோ தனையுந் தெளிந்துன்னைச் சார்ந்தோர்க ளுள்ளச்செந் தாமரையாம் மனையும்பொன் மன்றமும் நின்றாடுஞ் சோதி மணிவிளக்கே. 39. உள்ளத் தையுமிங் கெனையுநின் கையினில் ஒப்புவித்தும் கள்ளத்தைச் செய்யும் வினையால் வருந்தக் கணக்குமுண்டோ பள்ளத்தின் வீழும் புனல்போற் படிந்துன் பரமஇன்ப வெள்ளத்தின் மூழ்கினர்க் கேயெளி தாந்தில்லை வித்தகனே. 40. கள்ளம் பொருந்தும் மடநெஞ்ச மேகொடுங் காலர்வந்தால் உள்ளன் பவர்கட்குண் டோஇல்லை யேயுல கீன்றஅன்னை வள்ளம் பொருந்து மலரடி காணமன் றாடும்இன்ப வெள்ளச்செம் பாதப் புணையேயல் லாற்கதி வேறில்லையே. 41. தன்மய மானசு பாவத்தில் மெள்ளத் தலைப்படுங்கால் மின்மய மான சகம்யா துரைத்தென் வெளியில்உய்த்த சின்மய முத்திரைக் கையேமெய் யாகத் தெளிந்தநெஞ்சே நின்மயம் என்மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே. 42. ஆரிங் கலையுஞ் சுருதியுங் காண்டற் கரியவுனைத் தோயும் படிக்குக் கருணைசெய் வாய்சுக வான்பொருளே தாயும் பிதாவுந் தமருங் குருவுந் தனிமுதலும் நீயும் பரையுமென் றேயுணர்ந் தேனிது நிச்சயமே. 43. அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயமென்று சொல்லுஞ்சொ லின்னந் தெரிந்ததன் றோதுதிப் பார்கள்மனக் கல்லுங் கரைக்கும் மவுனா உனது கருணைஎன்பால் செல்லும் பொழுதல்ல வோசெல்லு வேனந்தச் சிற்சுகத்தே. 44. எல்லாஞ் சிவன்செயல் என்றறிந் தாலவன் இன்னருளே அல்லாற் புகலிடம் வேறுமுண் டோஅது வேநிலையா நில்லாய் உன்னால்தமி யேற்குக் கதியுண்டிந் நீள்நிலத்தில் பொல்லா மயக்கத்தி லாழ்ந்தாவ தென்ன புகல்நெஞ்சமே. 45. ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகைபொங்குங் களியே களிக்குங் கருத்தே கருத்தைக் கவளங்கொண்ட வெளியே வெளியின் விளைசுக மேசுகர் வீறுகண்டுந் தெளியேன் தெளிந்தவரைப் போற்றிடேன் என்ன செய்குவனே. 46. மறக்கின்ற தன்மை இறத்தலொப் பாகும் மனமதொன்றில் பிறக்கின்ற தன்மை பிறத்தலொப் பாகும்இப் பேய்ப்பிறவி இருக்கின்ற எல்லைக் களவில்லை யேஇந்தச் சன்மஅல்லல் துறக்கின்ற நாளெந்த நாள்பர மேநின் தொழும்பனுக்கே. 47. காட்டிய அந்தக் கரணமும் மாயைஇக் காயமென்று சூட்டிய கோலமும் நானா இயங்கத் துறையிதனுள் நாட்டிய நான்றனக் கென்றோர் அறிவற்ற நான்இவற்றைக் கூட்டிநின் றாட்டினை யேபர மேநல்ல கூத்திதுவே. 48. பொல்லாத மாமர்க் கடமன மேஎனைப் போல்அடுத்த எல்லாவற் றையும்பற்றிக் கொண்டனை யேயென்னை நின்மயமா நில்லாய் அருள்வெளி நீநான்நிற் பேன்அருள் நிட்டையொரு சொல்லாற் பதிந்து பரிபூர ணானந்தந் தோய்குவனே. 49. வாராய்நெஞ் சேயுன்றன் துன்மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டிங் காராய் அடிக்கடி சுற்றுகின் றாயுன் அவலமதிக் கோரா யிரம்புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓகெடுவாய் பாரா யுனைக்கொல்லு வேன்வெல்லு வேன்அருட் பாங்குகொண்டே. 50. மாதத்தி லேயொரு திங்களுண் டாகி மடிவதைநின் போதத்தி லேசற்றும் வைத்திலை யேவெறும் புன்மைநெஞ்சே வேதத்தி லேதர்க்க வாதத்தி லேவிளங் காதுவிந்து நாதத்தி லேயடங் காதந்த வான்பொருளே நாடிக்கொள்ளே. 51. எங்கும் வியாபித் துணர்வாய் உனக்கென் இதயத்துள்ளே தங்குந் துயரந் தெரியாத வண்ணந் தடைசெய்ததார் அங்கங் குழைந்துள் ளுருகுமன் பாளர்க் கணைகடந்து பொங்குங் கருணைக் கடலேசம் பூரண போதத்தனே. 52. வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயைமல மெய்யையும் மெய்யென்று நின்னடி யார்தம் விவேகத்தையும் ஐயமில் வீட்டையும் மெய்ந்நூலை யும்பொய்ய தாகஎண்ணும் பொய்யர்தம் நட்பை விடுவதென் றோபரி பூரணமே. 53. அளியுங் கனியொத் தருவினை யால்நொந் தயர்வுறுவேன் தெளியும் படிக்குப் பரிபாக காலமுஞ் சித்திக்குமோ ஒளியுங் கருணையும் மாறாத இன்பமும் ஓருருவாய் வெளிவந் தடியர் களிக்கநின் றாடும் விழுப்பொருளே. 54. அடையார் புரஞ்செற்ற தேவேநின் பொன்னடிக் கன்புசற்றும் படையாத என்னைப் படைத்திந்தப் பாரிற் படர்ந்தவினைத் தடையால் தளையிட்டு நெஞ்சம்புண் ணாகத் தளரவைத்தாய் உடையாய் உடைய படியன்றி யான்செய்த தொன்றிலையே. 55. ஆடுங் கறங்குந் திரிகையும் போல அலைந்தலைந்து காடுங் கரையுந் திரிவதல் லால்நின் கருணைவந்து கூடும் படிக்குத் தவமுய லாத கொடியர்எமன் தேடும் பொழுதென்ன செய்வார் பரானந்த சிற்சுடரே. 56. கற்றும் பலபல கேள்விகள் கேட்டுங் கறங்கெனவே சுற்றுந் தொழில்கற்றுச் சிற்றின்பத் தூடு சுழலின்என்னாங் குற்றங் குறைந்து குணமே விடுமென்பர் கூட்டத்தையே முற்றுந் துணையென நம்புகண் டாய்சுத்த மூடநெஞ்சே. 57. நீயென நானென வேறில்லை யென்னும் நினைவருளத் தாயென மோன குருவாகி வந்து தடுத்தடிமைச் சேயெனக் காத்தனை யேபர மேநின் திருவருளுக் கேயென்ன செய்யுங்கைம் மாறுள தோசுத்த ஏழையனே. 58. ஆத்திரம் வந்தவர் போல்அலை யாமல் அரோகதிட காத்திரந் தந்தென்னை யேஅன்னை போலுங் கருணைவைத்திம் மாத்திரம் முன்னின் றுணர்த்தினை யேமவு னாஇனிநான் சாத்திரஞ் சொன்ன படிஇய மாதியுஞ் சாதிப்பனே. 59. 28. உடல்பொய்யுறவு உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக் கடவாரார் தண்ணருளே கண்டாய் - திடமுடனே உற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப் பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ். 1. பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின் சீராக நிற்குந் திறங்கண்டாய் - நேராக நிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால் கற்குநெறி யாதினிமேற் காண். 2. மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும் பொய்யான தன்மை பொருந்துமோ - ஐயாவே மன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமை என்னும்நிலை எய்துமா றென். 3. அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங் குறியேற் கறிவென்ற கோலம் - வறிதேயாம் நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென் றேயெனக்கோர் நாமமிட்ட தே. 4. ஏதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப் போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்-வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடி னாயேயுன் புந்தியென்ன போதமென்ன போ. 5. சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும் விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக் கட்டுக்குள் ஆவதென்றோ காண். 6. கற்கண்டோ தேனோ கனிரசமோ பாலோஎன் சொற்கண்டா தேதெனநான் சொல்லுவேன் - விற்கண்ட வானமதி காண மவுனிமவு னத்தளித்த தானமதில் ஊறும்அமிர் தம். 7. கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால் வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ-நாட்டமுற்று மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான் பொய்யாம் பிறப்பிறப்புப் போம். 8. மாயா சகத்தை மதியாதார் மண்முதலா யேயான தத்துவத்தில் எய்துவரோ-நேயானு பூதிநிலை நிற்கப் பொருந்துவர்கள் அன்னவர்தம் நீதியையே ஓர்மனமே நீ. 9. இகமுழுதும் பொய்யெனவே ஏய்ந்துணர்ந்தா லாங்கே மிகவளர வந்தஅருள் மெய்யே-அகநெகிழப் பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச் சேரீர் அதுவே திறம். 10. ஆரணங்கள் ஆகமங்கள் யாவுமே ஆனந்த பூரணமே உண்மைப் பொருளென்னுங்-காரணத்தை ஓராயோ உள்ளுள்ளே உற்றுணர்ந்தவ் வுண்மையினைப் பாராயோ நெஞ்சே பகர். 11. நேராயம் மெளனநிலை நில்லாமல் வாய்பேசி ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர்-தேரீர் திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால் கரையுங் கரையுமனக் கல். 12. அற்ப மனமே அகிலவாழ் வத்தனையுஞ் சொற்பனங்கண் டாயுண்மை சொன்னேன்நான்-கற்பனையொன் றில்லா இடத்தே எனைச்சும்மா வைத்திருக்கக் கல்லாய்நீ தானோர் கவி. 13. ஏதுந் திருவருளின் இச்சையாம் என்றென்றெப் போதும் பொருந்தும் புனிதர்பால்-தீதுநெறி செல்லுமோ செல்லாதே செல்லுமிடம் இன்பமலால் சொல்லுமோ வேதத் தொனி. 14. கல்லேறுஞ் சில்லேறுங் கட்டியே றும்போலச் சொல்லேறப் பாழ்த்த துளைச்செவிகொண்-டல்லேறு நெஞ்சனென நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே வஞ்சனல்லேன் நீயெ மதி. 15. அப்பொருளும் ஆன்மாவும் ஆரணநூல் சொன்னபடி தப்பில்லாச் சித்தொன்றாஞ் சாதியினால்-எப்படியுங் தேரில் துவிதஞ் சிவாகமமே சொல்லுநிட்டை ஆருமிடத் தத்துவித மாம். 16. வேத முதலாய் விளங்குஞ் சிவவடிவாம் போத நிலையிற் பொருந்தாமல்-ஏதமிகு மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சேஇத் தேகாதி மெய்யோ தெளி. 17. நோக்கற் கரிதான நுண்ணியவான் மோனநிலை தாக்கற் குபாயஞ் சமைத்தபிரான்-காக்குமுயிர் அத்தனைக்கும் நானடிமை ஆதலினால் யானெனதென் றித்தனைக்கும் பேசஇட மில். 18. ஒன்றுமற நில்லென் றுணர்த்தியநம் மோனகுரு தன்துணைத்தாள் நீடுழி தாம்வாழ்க-என்றென்றே திக்கனைத்துங் கைகுவிக்குஞ் சின்மயராந் தன்மையர்க்கே கைக்குவரும் இன்பக் கனி. 19. மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன இனத்தாரே நல்ல இனத்தார்-கனத்தபுகழ் கொணடவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி கண்டவரும் அன்னவரே காண். 20. கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப் பண்ணொளிக்கும் உள்ளளியாம் பான்மையினை-நண்ணிடவுன் சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே றித்தனைக்கும் ஆதரவும் இல். 21. அறியாமை சாரின் அதுவாய் அறிவாம் நெறியான போததுவாய் நிற்குங்-குறியால் சதசத் தருளுணர்த்தத் தானுணரா நின்ற விதமுற் றறிவெனும்பேர் மெய். 22. குருலிங்க சங்கமமாக் கொண்டதிரு மேனி கருவொன்று மேனிநம்பாற் காட்டா-தருளென்று கண்டவர்க்கே ஆனந்தங் கண்டுகொள லாம்அலது கொண்டவர்க்கிங் கென்னகிடைக் கும். 23. புலியின் அதளுடையான் பூதப் படையான் பலியிரந்தும் எல்லாம் பரிப்பான்-மலிபுனல்சேர் பொன்முடியான் முக்கட் புனிதன் சரண்புகுந்தோர்க் கென்முடியா தேதுமுள தே. 24. சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை நாமெனவே அல்லும் பகலும் அரற்றுவதென்-நல்லசிவ ஞானமயம் பெற்றோர்கள் நாமில்லை என்பர்அந்தோ மோனமய மான முறை. 25. ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக வோர்சொல் விளம்பினர்யார்-வையகத்தோர் சாற்றரிதென் றேசற்றார் தன்னனையாய் முக்கண்எந்தை நாற்றிசைக்கும் கைகாட்டி னான். 26. காதற்றுப் போனமுறி கட்டிவைத்தால் ஆவதுண்டோ தீ தற்ற காயமும்அச் செய்கையே-போதமாய் நிற்பரல்லால் இச்சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினுந் தற்பரமாக் கண்டிருப்பார் தாம். 27. வெள்ளங் குலாவுசடை வெள்ளக் கருணையினான் கள்ளங் குலாவுவஞ்சக் கள்ளனேன் - உள்ளத்தில் இல்லனென்றால் அன்னவன்றான் எங்கும் வியாபகத்தான் அல்லனென்றுஞ் சொல்லவழக் காம். 28. தத்துவப்பே யோடே தலையடித்துக் கொள்ளாமல் வைத்த அருள்மோன வள்ளலையே-நித்தம்அன்பு பூணக் கருதுநெஞ்சு போற்றக் கரமெழும்பும் காணத் துடிக்குமிரு கண். 29. தொல்லைவினைக் கீடாய்ச் சுழல்கின்ற நானொருவன் எல்லையிலா நின்கருணை எய்துவனோ-வல்லவனாம் மோன குருவே முழுதினையுந் தானுணர்ந்த ஞான குருவே நவில். 30. மூன்றுகண்ணா முத்தொழிலா மும்முதலா மூவுலகுந் தோன்றக் கருணைபொழி தோன்றலே-ஈன்றஅன்னை தன்னைப்போல் அன்பு தழைத்தோய் ஒருதெய்வம் உன்னைப்போ லுண்டோ வுரை. 31. நேசிக்குஞ் சிந்தை நினைவுக்குள் உன்னைவைத்துப் பூசிக்குந் தான்நிறைந்து பூரணமாய்-யோசித்து நின்றதல்லால் மோனா நிருவிகற்ப நிட்டைநிலை என்றுவரு மோஅறியே னே. 32. அறிவில் அறியாமை அற்றறிவாய் நின்று பிறிவறஆ னந்தமயம் பெற்றுக்-குறியவிழ்ந்தால் அன்றைக் குடல்வேண்டேன் ஐயாஇவ் ஆக்கையையே. என்றைக்கும் வேண்டுவனே யான். 33. உடலைப் பழ்¢த்திங் குணவுங் கொடாமல் விடவிடவே நாடுவரோ மெய்யைப்-படபடென வேண்டுவேன் இந்தவுடல் மெய்யுணராப் பொய்யன்நான் ஆண்டநீ தானே அறி. 34. அறியாயோ என்னையுநீ ஆண்டநீ சுத்த வெறியாய் மயங்கவுமேன் விட்டாய்-நெறிமயங்கிக் குன்றுஞ் செடியுங் குறுகுமோ ஐயாவே கன்றுகெட்டால் தாயருகே காண். 35. ஏதுக் குடற்சுமைகொண் டேனிருந்தேன் ஐயனே ஆதிக்க மோன அருள்தாயே-சோதியாம் மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே பின்னமற நில்லாத பின். 36. பின்னும் உடற்சுமையாப் பேசும் வழக்கதனால் என்னபலன் நாமுற் றிருந்தோமே-அன்னதனால் ஆனந்தந் தானேதாம் ஆகுமெம் ஐயனே ஏனிந்தத் துன்பம் இனி. 37. துன்பக் கடலில் திளைந்ததெலாந் தீர்ந்ததே இன்பக் கடலில் இருமென்ன-அன்பில் கரைந்து கரைந்துருகிக் கண்ணருவி காட்ட விரைந்துவரும் ஆனந்தே மே. 38. கரைந்து கரைந்துருகிக் கண்ணீரா றாக விரைந்தே நிருவிற்கப மெய்த-நிரந்தரமும் நின்னையே ச்¢ந்திக்க நீகொடுத்தாய் மோனாநான் என்னைமுழு துங்கொடுத்தே னே. 39. அல்லும் பகலும்பே ரன்புடனே தானிருந்தால் கல்லும் உருகாதோ கல்நெஞ்சே-பொல்லாத தப்புவழி என்நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த எய்ப்பிலே ஆனந்த மே. 40. கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம் மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே-அடுத்தேனே பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல் இற்றேனே ஏழைஅடி யேன். 41. பெற்றோம் பிறவாமை பேசாமை யாயிருக்கக் கற்றோம் எனவுரைக்கக் காரியமென்-சற்றேனும் நீக்கற்ற இன்ப நிலைபொருந்தி ஏசற்று வாக்கற்றாற் பேசுமோ வாய். 42. காலன் தனையுதைத்தான் காமன் தனையெரித்தான் பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடலை-ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க் கென்னே நடக்கை யினி. 43. விண்ணருவி மேன்மேல் விளங்குவபோ லேஇரண்டு கண்ணருவி வெள்ளமொடு கைகூப்பித்-தண்ணயிர்த வெள்ளமே ஆனந்த வெற்பே எனத்தொழுவோர் உள்ளமே ஞான வொளி. 44. பிள்ளைமதிச் செஞ்சடையான் பேசாப் பெருமையினான் கள்ளவிழும் பூங்கொன்றைக் கண்ணியான்-உள்ளபடி கல்லாலின் கீழிருந்து கற்பித்தான் ஓர்வசனம் எல்லாரும் ஈடேற வே. 45. புலனைந்துந் தானே பொரமயங்கிச் சிந்தை அலமந் துழலும் அடிமை - நலமிகுந்த சித்தான மோன சிவனேநின் சேவடிக்கே பித்தானால் உண்டோ பிறப்பு. 46. நிறைகுடந்தான் நீர்கொளுமோ நிச்சயமா மோன முறையுணர்ந்தார் யாதை முயல்வார்-பிறையணிந்த மிக்ககயி லாயமலை வித்தகனே வேதியனே செக்கரணி மேனியனே செப்பு. 47. துங்கமழு மானுடையாய் சூலப் படையுடையாய் திங்களணி செஞ்சுடையாய் சேவுடையாய்-மங்கையொரு பாலுடையாய் செங்கட் பணியாய்என் சென்னியின்மேல் காலுடையாய் நீயே கதி. 48. இனிய கருணைமுகில் எம்பிரான் முக்கட் கனியமிர்த வாரியின்பக் கட்டி-தனிமுதல்வன் நித்தன் பரமன் நிமலன்நிறை வாய்நிறைந்த சுத்தன் நமக்கென்றுந் துணை. 49. நீதியாய்க் கல்லாலின் நீழலின்கீ ழேயிருந்து போதியா உண்மையெல்லாம் போதித்தான் - ஏதில் சனகாதி யாய தவத்தோர்க்கு ஞான தினகரனாம் மவுன சிவன். 50. தேகச் செயல்தானுஞ் சிந்தையுட னேகுழையில் யோகநிலை ஞானிகளுக் கொப்புவதோ-மோகநிலை அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீயற்ற எல்லையிலே சும்மா இரு. 51. சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே இம்மாயா யோகமினி ஏனடா-தம்மறிவின் சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம நிட்டா சிறுபிள்ளாய் நீ. 52. நீயற்ற அந்நிலையே நிட்டையதில் நீயிலையோ வாயற் றவனே மயங்காதே போயற் றிருந்தாலும் நீபோகாய் என்றுமுள்ளாய் சும்மா வருந்தாதே இன்பமுண்டு வா. 53. வாவாவென் றின்பம் வரவழைக்குங் கண்ணீரோ டாவாவென் றேயழுத அப்பனே-நீவாடா எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி நில்லாய் அதுவே நிலை. 54. நில்லாப் பொருளை நினையாதே நின்னையுள்ளோர் சொல்லாப் பொருட்டிரளைச் சொல்லாதே-கல்லாத சிந்தை குழைந்துசுகஞ் சேரக் குருவருளால் வந்தவழி நல்ல வழி. 55. வழியிதென்றும் அல்லா வழியிதென்றுஞ் சொல்லில் பழிபழியாம் நல்லருளாற் பார்த்தோர்-மொழியுனக்கே ஏற்றிருக்கச் சொன்னவன்றே எங்கும் பெருவெளியாம் பார்த்தவிட மெல்லாநீ பார். 56. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆருந் துறக்கை அரிதரிது-நேரே மனத்துறவும் அப்படியே மாணா இவற்றில் உனக்கிசைந்த வாறொன்றே ஓர். 57. ஓராம லேஒருகால் உன்னாமல் உள்ளளியைப் பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராதோ பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளந் தத்திக் கரைபுரண்டு தான். 58. தானான தன்மைவந்து தாக்கினால் அவ்விடத்தே வானாதி மாயை வழங்காதோ-ஞானாகேள் உன்னுள்ளே தோன்றா வுறவாகி நின்றதென என்னுள்ளே யென்று மிரு. 59. என்னையுன்னை இன்னதிது என்னாமல் நிற்குநிலை தன்னையரு ளென்ற தருணத்தில்-அன்னைபெற்ற பிள்ளைக்குஞ் சொல்லாத பெற்றிகண்டாய் ஐயனே உள்ளத்தின் உள்ளே உணர். 60. சொன்னவர்தாம் நிட்டை தொகுத்திரார் நிட்டையிலே மன்னினவர் போதியார் மாமவுனன்-தன்னுள் விருப்பாகக் கைகாட்டி மிக்கவட நீழல் இருப்பான் நிருவிகற்பத் தே. 61. இந்த நிருவிகற்பத் தெந்தை யிருக்கநிட்டை சிந்தைநீ தேறாய் செகமனைத்தும்-வந்ததொடர்ப் பாடுகெட அன்றோவோர் பாத்திரத்துக் காடல்அல்லால் ஆடுவதேன் ஆட்டு மவன். 62. அவனே பரமும் அவனே குருவும் அவனே அகில மனைத்தும்-அவனேதாம் ஆனவரே சொன்னால் அவனே குருவெனக்கு நான்அவனாய் நிற்பதெந்த நாள். 63. நாளவங்கள் போகாமல் நாள்தோறும் நந்தமையே ஆளவந்தார் தாளின்கீழ் ஆட்புகுந்தாய்-மீளஉன்னைக் காட்டாமல் நிற்குங் கருத்தறிந்தால் நெஞ்சேஉன் ஆள்தானான் ஐயமில்லை யால். 64. யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்றருணைக் கோன்றா னுரைத்தமொழி கொள்ளாயோ-தோன்றி இழுக்கடித்தாய் நெஞ்சேநீ என்கலைகள் சோர அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய். 65. எங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே தங்குஞ் சுகநீ சலியாதே-அங்கிங்கென் றெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப் பண்ணாதே யானுன் பரம். 66. மெய்யைப்பொய் என்றிடவும் மெய்யணையாப் பொய்ந்நெஞ்சே பொய்யைத்தான் மெய்எனவும் போகுமோ-ஐயமறத் தன்மயத்தை மெய்யெனவே சார்ந்தனையேல் ஆனந்தம் என்மயமும் நின்மயமு மே. 67. பூங்கா வனநிழலும் புத்தமுதுஞ் சாந்தபதம் வாங்காத ஆனந்த மாமழையும்-நீங்காவாஞ் சொல்லிறந்து மாண்டவர்போல் தூமவுன பூமியினான் இல்லையென நின்ற இடம். 68. இடம்கானம் நல்லபொரு ளின்பம் எனக்கேவல் அடங்காக் கருவி அனைத்தும்-உடனுதவ மந்தார தாருவென வந்து மவுனகுரு தந்தானோர் சொற்கொண்டு தான். 69. தானந் தவம்ஞானஞ் சாற்றரிய சித்திமுத்தி ஆனவையெல் லாந்தாமே யாகுமே-மோனகுரு சொன்னவொரு சொல்லாற் சுகமா யிருமனமே இன்ன மயக்கமுனக் கேன். 70. உன்னை உடலை உறுபொருளைத் தாஎனவே என்னை அடிமைக் கிருத்தினான்-சொன்னஒரு சொல்லை மறவாமல் தோய்ந்தால்நெஞ் சேஉன்னால் இல்லை பிறப்பதெனக் கே. 71. எனக்கும் உனக்கும்உற வில்லையெனத் தேர்ந்து நினைக்கஅரி தானஇன்ப நிட்டை-தனைக்கொடுத்தே ஆசான் மவுனி அளித்தான்நெஞ் சேஉனையோர் காசா மதியேன்நான் காண். 72. ஆனந்த மோனகுரு வாமெனவே என்னறிவின் மோனந் தனக்கிசைய முற்றியதால்-தேனுந்து சொல்லெல்லாம் மோனந் தொழிலாதி யும்மோனம் எல்லாம்நல் மோனவடி வே. 73. எல்லாமே மோனநிறை வெய்துதலால் எவ்விடத்தும் நல்லார்கள் மோனநிலை நாடினார்-பொல்லாத நானெனஇங் கொன்றை நடுவே முளைக்கவிட்டிங் கேனலைந்தேன் மோனகுரு வே. 74. மோன குருவளித்த மோனமே யானந்தம் ஞானம் அருளுமது நானுமது-வானாதி நின்ற நிலையுமது நெஞ்சப் பிறப்புமது என்றறிந்தேன் ஆனந்த மே. 75. அறிந்தஅறி வெல்லாம் அறிவன்றி யில்லை மறிந்தமனம் அற்ற மவுனஞ்-செறிந்திடவே நாட்டினான் ஆனந்த நாட்டிற் குடிவாழ்க்கை கூட்டினான் மோன குரு. 76. குருவாகித் தண்ணருளைக் கூறுமுன்னே மோனா உருநீ டுயிர்பொருளும் ஒக்கத்-தருதியென வாங்கினையே வேறும்உண்மை வைத்திடவுங் கேட்டிடவும் ஈங்கொருவர் உண்டோ இனி. 77. இனிய கருப்புவட்டை என்னாவி லிட்டான் நனியிரதம் மாறாது நானுந்-தனியிருக்கப் பெற்றிலேன் மோனம் பிறந்தஅன்றே மோனமல்லால் கற்றிலேன் ஏதுங் கதி. 78. ஏதுக்குஞ் சும்மா இருநீ எனவுரைத்த சூதுக்கோ தோன்றாத் துணையாகிப்-போதித்து நின்றதற்கோ என்ஐயா நீக்கிப் பிரியாமல் கொன்றதற்கோ பேசாக் குறி. 79. குறியுங் குணமுமறக் கூடாத கூட்டத் தறிவறிவாய் நின்றுவிட ஆங்கே-பிறிவறவுஞ் சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோனநின்பால் கைம்மாறு நானொழிதல் காண். 80. நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால் என்னாணை வானதான் எனநிறைய மாட்டாய்நீ-ஊன்றாமல் வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து துய்த்துவிடும் ஞான சுகம். 81. ஞானநெறிக் கேற்றகுரு நண்ணரிய சித்திமுத்தி தானந் தருமந் தழைத்தகுரு-மானமொடு தாயெனவும் தந்தென்னைத் தந்தகுரு என்சிந்தை கோயிலென வாழுங் குரு. 82. சித்துஞ் சடமுஞ் சிவத்தைவிட இல்லைஎன்ற நித்தன் பரமகுரு நேசத்தாற்-சுத்தநிலை பெற்றோமே நெஞ்சே பெரும்பிறவி சாராமல் கற்றோமே மோனக் கரு. 83. 29. ஏசற்ற அந்நிலை ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய் மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால் பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே. 1. பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும் ஆழாழி இன்பத் தழுந்தப் படியாயோ தாழாயோ எந்தையருள் தாள்கீழ்நெஞ் சேஎனைப்போல் வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாயே. 2. இருப்பாய் இருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக் குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோ அருட்பாய் நமக்காக ஆளவந்தார் பொன்னடிக்கீழ் மருட்பேயர் போலிருக்க வாகண்டாய் வஞ்சநெஞ்சே. 3. வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்து கொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோ அஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாகடற்கீழ் நெஞ்சமே என்போல நீயழுந்த வாராயோ. 4. வாரா வரவாய் வடநிழற்கீழ் வீற்றிருந்த பூராயம் ந்ம்மைப் புலப்படுத்த வேண்டியன்றோ ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து பாராயோ அவ்வுருவைப் பார்க்கநிறை வாய்விடுமே. 5. வாயாதோ இன்பவெள்ளம் வந்துன் வழியாகப் பாயாதோ நானும் பயிராய்ப் பிழையேனோ ஓயாமல் உன்னி உருகுநெஞ்சே அந்நிலைக்கே தாயான மோனனருள் சந்திக்க வந்திடுமே. 6. வந்த வரவை மறந்துலகாய் வாழ்ந்துகன்ம பந்தமுற உன்னைப் படிப்பிக்கக் கற்றவர்யார் இந்தமதி ஏன்உனக்கிங் கென்மதிகேள் என்னாலே சந்ததநெஞ் சேபரத்திற் சாரின்இன்பம் உண்டாமே. 7. இன்பமய மாயுலக மெல்லாம் பிழைப்பதற்குன் அன்புநிலை என்பார் அதுவும்நினை யன்றியுண்டோ உன்புலத்தை ஓரின்அருட் கொப்பாவாய் நெஞ்சேநீ தென்புலத்தா ரோடிருந்து செய்பூசை கொண்டருளே. 8. அருளேயோ ராலயமா ஆனந்த மாயிருந்த பொருளோடு யானிருக்கப் போயொளித்த நெஞ்சேநீ மருள்தீர் முயற்கோடோ வான்மலரோ பேய்த்தேரோ இருள்தீர நீயுறைந்த தெவ்விடமோ காணேனே. 9. எவ்விடத்தும் பூரணமாம் எந்தைபிரான் தண்ணருளே அவ்விடத்தே உன்னைநெஞ்சே ஆராயிற் கண்டிலனே அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமுஞ் செவ்விடமே நீயுஞ் செனனமற்று வாழியவே. 10. 30. காடுங்கரையும் காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவா யுயிர்க்குயிராய் ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்தீரே. 1. சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 2. காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய் ஏக வுருவாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனிஎடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 3. 31. எடுத்த தேகம் எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீ எனக்கொன் றில்லை எனமோன நன்னெறி கொடுத்த போது கொடுத்ததன் றோபினுங் குளறி நானென்று கூத்தாட மாயையை விடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலை விலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத் தடுத்த வாறும் புகலாய் சிரகிரித் தாயுமான தயாபர மூர்த்தியே. 1. நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின் நூலிற் சொன்ன முறைஇய மாதிநான் தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந் தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய் ஓயுஞ் சன்மம் இனியஞ்சல் அஞ்சலென் றுலகங்கண்டு தொழவோர் உருவிலே தாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித் தாயு மான தயாபர மூர்த்தியே. 2. 32. முகமெலாம் முகமெ லாங்கணீர் முத்தரும் பிடச்செங்கை முகழ்ப்ப அகமெ லாங்குழைந் தானந்த மாகநல் லறிஞர் இகமெ லாந்தவம் இழைக்கின்றார் என்செய்கோ ஏழை சகமெ லாம்பெற நல்லருள் உதரமாச் சமைந்தோய். 1. 33. திடமுறவே திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக் கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோ அடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல் படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே. 1. ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால் வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோ பூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல் பாராதி வைத்த பதியே பராபரமே. 2. வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும் ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோ ளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன் பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே. 3. உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்ற கள்ளக் கருணையையான் காணுந் தரமாமோ வெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும் பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் பராபரமே. 4. வாவிக் கமலமலர் வண்டாய்த் துவண்டுதுவண் டாவிக்குள் நின்றவுனக் கன்புவைத்தார்க் கஞ்சலென்பாய் பூவிற்கும் வான்கடையிற் புல்விற்போர் போலஒன்றைப் பாவிக்க மாட்டேன் பதியே பராபரமே. 5. விண்ணாறு வெற்பின் விழுந்தாங் கெனமார்பில் கண்ணாறு பாய்ச்சிடுமென் காதல்வெள்ளங் கண்டிலையோ தண்ணாறு சாந்தபதத் தற்பரமே நால்வேதப் ப்ண்ணாறும் இன்பப் பதியே பராபரமே. 6. கூடியநின் சீரடியார் கூட்டமென்றோ வாய்க்குமென வாடியஎன் நெஞ்சம்முக வாட்டமும்நீ கண்டிலையோ தேடியநின் சீரருளைத் திக்கனைத்துங் கைகுவித்துப் பாடியநான் கண்டாய் பதியே பராபரமே. 7. நெஞ்சத்தி னூடே நினைவாய் நினைவூடும் அஞ்சலென வாழுமென தாவித் துணைநீயே சஞ்சலமாற் றினைஇனிமேல் தாய்க்குபசா ரம்புகன்று பஞ்சரிக்க நானார் பதியே பராபரமே. 8. புத்திநெறி யாகஉனைப் போற்றிப் பலகாலும் முத்திநெறி வேண்டாத மூடனேன் ஆகெடுவேன் சித்திநெறிக் கென்கடவேன் சீரடியார்க் கேவல்செயும் பத்திநெறிக் கேனும்முகம் பார்நீ பராபரமே. 9. கண்டறியேன் கேட்டறியேன் காட்டும்நினை யேஇதயங் கொண்டறியேன் முத்தி குறிக்குந் தரமுமுண்டோ தொண்டறியாப் பேதைமையேன் சொல்லேன்நின் தொன்மை பண்டறிவாய் நீயே பகராய் பராபரமே. 10. 34. தன்னை தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும் ம்ன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சே பொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவே என்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1. 35. ஆக்குவை ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள நீக்குவை நீக்க மில்லா நினைப்பொடு மறப்பு மாற்றிப் போக்கொடு வரவு மின்றிப் புனிதநல் லருளா னந்தந் தாக்கவுஞ் செய்வா யன்றோ சச்சிதா னந்த வாழ்வே. 1. 36. கற்புறுசிந்தை கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர் இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந் தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம் பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே. 1. முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய் விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும் இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழை பொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே. 2. தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம்போர்த்த பாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல் ஆதர வடைய உள்ளன் பருளகிலை யாயின் மற்றியார் போதனை செய்ய வல்லார் பூரணா னந்த வாழ்வே. 3. நாதனை நாதா தீத நண்பனை நடுவாய் நின்ற நீதனைக் கலந்து நிற்க நெஞ்சமே நீவா என்றால் வாதனை பெருக்கி என்னை வசஞ்செய்து மனந்துன் மார்க்க போதனை செய்தல் நன்றோ பூரணா னந்த வாழ்வே. 4. எண்ணிய எண்ண மெல்லாம் இறப்புமேற் பிறப்புக் காசை பண்ணிஎன் அறிவை எல்லாம் பாழக்கி எனைப்பா ழாக்குந் திண்ணிய வினையைக் கொன்று சிறியனை உய்யக் கொண்டால் புண்ணியம் நினக்கே யன்றோ பூரணா னந்த வாழ்வே. 5. பத்திநீ பத்திக் கான பலனுநீ பலவாச் சொல்லுஞ் சித்திநீ சித்தர் சித்தித் திறமுநீ திறமார் மோன முத்திநீ முத்திக் கான முதலுநீ முதன்மை யான புத்திநீ எனக்கொன் றுண்டோ பூரணா னந்த வாழ்வே. 6. தாயினும் இனிய நின்னைச் சரணென அடைந்த நாயேன் பேயினுங் கடைய னாகிப் பிதற்றுதல் செய்தல் நன்றோ தீயிடை மெழுகாய்நொந்தேன் தெளிவிலேன விணே காலம் போயின தாற்ற கில்லேன பூரணா னந்த வாழ்வே. 7. 37. மலைவளர்காதலி பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கமுண் டெக்காலமும் பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம படரெனுந் திமிர மணுகாக் கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு காயசித் திகளுமுண்டு கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில் கருத்தொன்றும் உண்டாகுமேல் நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர ஞானஆ னந்தஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நானெனும் அகந்தைதீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியே மதுசூ தனன்தங்கையே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 1. தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே சிற்றிடையி லேநடையிலே சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே சிறுபிறை நுதற்கீற்றிலே பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த பொடியிலே அடியிலேமேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்திதனை நுழைய விட்டு நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின்னடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான ஞேயத்தி லேயுன்இருதாள் மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ வளமருவு தேவை அரசே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 2. பூதமுத லாகவே நாதபரி யந்தமும் பொய்யென் றெனைக்காட்டிஎன் போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத போகபூ ரணவெளிக்குள் ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை எல்லாஞ்செய் வல்லசித்தாம் இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்துய்வனோ வேதமுத லானநல் லாகமத் தன்மையை விளக்கும்உள் கண்இலார்க்கும் மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும் வீறுவா தம்புகலுவாய் வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை மாமருந் துக்கமிர்தமே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 3. மீடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும் மெய்யெலாம் உள்ளுடைந்து வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய் வேதனைக ளுறவேதனுந் துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான் தொடரிட்ட தொழில்க ளெல்லாந் துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன தொண்டர்பணி செய்வதென்றோ அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில் அரிவையோர் பரவைவாயில் அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள் அடியீது முடியீதென வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே வளமருவு தேவைஅரசே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 4. பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகிஎழில் புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள புஷ்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்திஎன்றுன் நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே நானுச்ச ரிக்கவசமோ ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ அகிலாண்ட கோடிஈன்ற அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபமயிலே வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ் வளமருவு தேவைஅரசே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 5. பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல பரிபாகம் வரவும்மனதில் பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப் பாவியேன் பாபரூப தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ் சிந்தியேன் பேரின்பமோ சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ் சிந்திக்கு தென்செய்குவேன் மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றுமாற் சரியமோதான் முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின் மூசுவரி வண்டுபோல மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ வளமருவு தேவைஅரசே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 6. தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந் தொக்கினுட் சிக்கிநாளுஞ் சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச் சூறையிட் டறிவைஎல்லாம் நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின் நட்பேற உள்ளுடைந்து நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே நானிலந் தனில் அலையவோ வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று விரையேறு மாலைசூடி விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற வெருட்டிய கருங்கூந்தலாய் வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான் மனதுக் கிசைந்தமயிலே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 7. பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள் புந்திமுத லானபேய்கள் போராடு கோபாதி ராட்சசப் பேய்களென் போதத்தை யூடழித்து வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன் விதித்தானிவ் வல்லலெல்லாம் வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய வித்தையை வியந்தருள்வையோ நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நற்சமய மானபயிர் தழையவரு மேகமே ஞானஆ னந்தமயிலே வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய மகிமைபெறு பெரியபொருளே வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. 8 38. அகிலாண்ட நாயகி வட்ட மிட்டொளிர்பி ராண வாயுவெனு நிகள மோடுகம னஞ்செயும் மனமெ னும்பெரிய மத்த யானையைஎன் வசம டக்கிடின் மும் மண்டலத் திட்ட முற்றவள ராச யோகமிவன் யோக மென்றறிஞர் புகழவே ஏழை யேனுலகில் நீடு வாழ்வன்இனி இங்கி தற்கும்அனு மானமோ பட்ட வர்த்தனர் பராவு சக்ரதர பாக்ய மானசுப யோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராய ணஞ்செய்மதி யூகமும் அட்ட சித்தியுந லன்ப ருக்கருள விருது கட்டியபொன் அன்னமே அண்ட கோடிபுகழ் காவை வாழும்அகி லாண்ட நாயகியென் அம்மையே. 1. 39. பெரியநாயகி காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடி கன்மப் புனற்குளூறுங் கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக் காயத்துள் எனையிருத்திச் சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத் துருத்திக்குள் மதுஎன்னவே துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள் தோயநீ பாய்ச்சல்செய்து நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனை நாட்டிப் புலப்பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று நாடுசிவ போகமான பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோ பெரியஅகி லாண்டகோடி பெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவு பெரியநா யகியம்மையே. 1. 40. தந்தைதாய் தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை சகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதே இந்திரசா லங்கனவு கானல் நீராய இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே. 1. என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம் யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்கா அன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரி ஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். 2. அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றை அறியாத சிறியேன்நான் அதனால் முத்திக் கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங் கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். 3. கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக் கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன் விண்டேன்என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம் விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா லன்றோ. 4. ஓவென்ற சுத்தவெளி யொன்றே நின்றிங் குயிரையெல்லாம் வம்மினென உவட்டா இன்பத் தேவென்ற நீகலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவாமோ செகவி லாசம். 5. செகத்தையெல்லாம் அணுவளவுஞ் சிதறா வண்ணஞ் சேர்த்தணுவில் வைப்பைஅணுத் திரளை எல்லாம் மகத்துவமாப் பிரமாண்ட மாகச் செய்யும் வல்லவா நீநினைத்த வாறே எல்லாம். 6. சொல்லாலே வாய்து டிப்பதல்லால் நெஞ்சந் துடித்திருகண் நீரருவி சொரியத் தேம்பிக் கல்லாலே இருந்தநெஞ்சுங் கல்லால் முக்கட் கனியேநெக் குருகிடவுங் காண்பேன் கொல்லோ. 7. 41. பெற்றவட்கே பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம் உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும் உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1. ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகி அப்பனே ஆனந்த அடிக ளேநீ வாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய் வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. 2. நீயேஇங் கெளியேற்குந் தாக மோக நினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலே பேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோ பெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். 3. பாராயோ என்துயரம் எல்லாம் ஐயா பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன் வாராயோ இன்னமொரு காலா னாலும் மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி டாயோ. 4. வைத்திடுங்கா லைப்பிடித்துக் கண்ணின் மார்பில் வைத்தணைத்துக் கொண்டுகையால் வளைத்துக் கட்டிச் சித்தமிசைப் புகஇருத்திப் பிடித்துக் கொண்டு தியக்கமற இன்பசுகஞ் சேர்வ தென்றோ. 5. சேராமற் சிற்றினத்தைப் பிரிந்தெந் நாளுந் திருவடிப்பே ரினத்துடனே சேரா வண்ணம் ஆராக நான்அலைந்தேன் அரசே நீதான் அறிந்திருந்தும் மாயையிலேன் அழுந்த வைத்தாய். 6. வைத்தபொருள் உடலாவி மூன்றும் நின்கை வசமெனவே யான்கொடுக்க வாங்கிக் கொண்டு சித்தமிசைப் புகுந்ததுதான் மெய்யோ பொய்யோ சிறியேற்கிங் குளவுரையாய் திகையா வண்ணம். 7. திகையாதோ எந்நாளும் பேரா னந்தத் தெள்ளமுதம் உதவாமல் திவலை காட்டி வகையாக அலக்கழித்தாய் உண்டு டுத்து வாழ்ந்தேன்நான் இரண்டுகால் மாடு போலே. 8. மாடுமக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்தகன தனமேடை மாட கூடம் வீடுமென்பால் தொடர்ச்சியோ இடைவி டாமல் மிக்ககதி வீடன்றோ விளங்கல் வேண்டும். 9. விளங்கவெனக் குள்ளுள்ளே விளங்கா நின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே களங்கரகி தப்பொருளே யென்னை நீங்காக் கண்ணுதலே நாதாந்தக் காட்சிப் பேறே. 10. நாதமே நாதந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேய மேநல் வேதமே வேதமுடி வான மோன வித்தேயிங் கென்னையினி விட்டி டாதே. 11. 42. கல்லாலின் கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங் கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால் சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை துரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றோ. 1. அன்றோஆ மோஎனவுஞ் சமய கோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே நின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கே நின்னருள்கொண் டறிவதல்லால் நெறிவே றுண்டோ. 2. நெறிபார்க்கின் நின்னையன்றி அகிலம் வேறோ நிலநீர்தீக் கால்வானும் நீய லாத குறியாதும் இல்லையென்றால் யாங்கள் வேறோ கோதையொரு கூறுடையாய் கூறாய் கூறாய். 3. கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக் குணமிலா மனமெனும்பேய்க் குரங்கின் பின்னே மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமேநின் மகிமை நன்றே. 4. நன்றெனவுந் தீதெனவும் எனக்கிங் குண்டோ நானாகி நீயிருந்த நியாயஞ் சற்றே இன்றெனக்கு வெளியானால் எல்லாம் வல்ல இறைவாநின் அடியருடன் இருந்து வாழ்வேன். 5. வாழ்வெனவுந் தாழ்வெனவும் இரண்டாப் பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்க மான பாழ்வலையைக் கிழித்துதறிச் செயல்போய் வாழப் பரமேநின் ஆனந்தப் பார்வை யெங்கே. 6. எங்கேயெங் கேஅருளென் றெமையி ரந்தான் ஏழையிவன் எனவுமெண்ணி யிச்சை கூரும் அங்கேயங் கேயெளிவந் தென்னை ஆண்ட ஆரமுதே உனைக்காண்பான் அலந்து போனேன். 7. போனநாட் கிரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்துநாள் அத்தனையும் போக்கி னேன்என் ஞானநா யகனேநின் மோன ஞான நாட்டமுற்று வாழ்ந்திருக்கும் நாளெந் நாளோ. 8. நாள்பட்ட கமலமென்ன இதயம் மேவும் நறுந்தேனே துன்மார்க்க நாரி மார்கண் வாள்பட்ட காயமிந்தக் காய மென்றோ வன்கூற்றும் உயிர்பிடிக்க வருமந் நீதி. 9. நீதியெங்கே மறையெங்கே மண்விண் எங்கே நித்தியராம் அவர்களெங்கே நெறிதப் பாத சாதியெங்கே ஒழுக்கமெங்கே யாங்க ளெங்கே தற்பரநீ பின்னுமொன்றைச் சமைப்ப தானால். 10. ஆனாலும் யான்எனதிங் கற்ற எல்லை அதுபோதும் அதுகதிதான் அல்ல வென்று போனாலும் யான்போவன் அல்லால் மோனப் புண்ணியனே வேறுமொரு பொருளை நாடேன். 11. பொருளேநின் பூரணமே லிட்ட காலம் போக்குவர வுண்டோதற் போத முண்டோ இருள்தானுண் டோஅல்லால் வெளிதான் உண்டோ இன்பமுண்டோ துன்பமுண்டோ யாமங் குண்டோ. 12. உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல் ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக் கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக் காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. 13. தேவரெலாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செ விக்கே மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான். 14. முற்றுமோ எனக்கினியா னந்த வாழ்வு மூதறிவுக் கினியாய்நின் முளரித் தாளில் பற்றுமோ சற்றுமில்லை ஐயோ ஐயோ பாவிபடுங் கட்கலக்கம் பார்த்தி லாயோ. 15. பார்த்தனவெல் லாமழியும் அதனாற் சுட்டிப் பாராதே பார்த்திருக்கப் பரமே மோன மூர்த்திவடி வாயுணர்த்துங் கைகாட் டுண்மை முற்றியென தல்லல்வினை முடிவ தென்றோ. 16. என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும் பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே. 17. பொருந்துசகம் அனைத்தினையும் பொய்பொய் யென்று புகன்றபடி மெய்யென்றே போத ரூபத் இருந்தபடி யென்றிருப்ப தன்றே யன்றோ எம்பெருமான் யான்கவலை யெய்தாக் காலம். 18. காலமே காலமொரு மூன்றுங் காட்டுங் காரணமே காரணகா ரியங்கள் இல்லாக் கோலமே எனைவாவா என்று கூவிக் குறைவறநின் அருள்கொடுத்தாற் குறைவோ சொல்லாய். 19. சொல்லாய தொகுதியெல்லாங் கடந்து நின்ற சொரூபானந் தச்சுடரே தொண்ட னேனைக் கல்லாகப் படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான்உறவு கலக்க மாட்டேன். 20. கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர் கடவுளுனைக் காணவே காய மாதி புலம்காணார் நானொருவன் ஞானம் பேசிப் பொய்க்கூடு காத்ததென்ன புதுமை கண்டாய். 21. கண்டிலையோ யான்படும்பா டெல்லாம் மூன்று கண்ணிருந்துந் தெரியாதோ கசிந்துள் ளன்பார் தொண்டரடித் தொண்டனன்றோ கருணை நீங்காச் சுத்தபரி பூரணமாஞ் சோதி நாதா. 22. சோதியாய் இருட்பிழம்பைச் சூறை யாடுந் தூவெளியே எனைத்தொடர்ந்து தொடர்ந்தெந் நாளும் வாதியா நின்றவினைப் பகையை வென்ற வாழ்வேஇங் குனைப்பிரிந்து மயங்கு கின்றேன். 23. மயக்குறுமென் மனமணுகாப் பாதை காட்டி வல்வினையைப் பறித்தனையேவாழ்வே நானென் செயக்கடவேன் செயலெல்லாம் நினதே என்று செங்கைகுவிப் பேன்அல்லாற் செயல்வே றில்லை. 24. வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா. 25. அம்மாஈ ததிசயந்தான் அன்றோ அன்றோ அண்டநிலை யாக்கிஎன்னை அறிவாம் வண்ணஞ் சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுகமயமாய் இருப்பதல்லாற் சொல்வான் என்னே. 26. என்னேநான் பிறந்துழல வந்த வாறிங்(கு) எனக்கெனஓர் செயலிலையே ஏழை யேன்பால் முன்னேசெய் வினையெனவும் பின்னே வந்து மூளும்வினை யெனவும்வர முறையேன் எந்தாய். 27. தாயான தண்ணருளை நிரம்ப வைத்துத் தமியேனைப் புரவாமல் தள்ளித் தள்ளிப் போயான தென்கொல்ஐயா ஏக தேசம் பூரணத்துக் குண்டோதான் புகலல் வேண்டும். 28. புகலரிய நின்விளையாட் டென்னே எந்தாய் புன்மையறி வுடையஎன்னைப் பொருளாப் பண்ணி இகல்விளைக்கும் மலமாயை கன்மத் தூடே இடருறவுஞ் செய்தனையே இரக்க மீதோ. 29. இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம் இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால் கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய் கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ. 30.

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் . ஸ்ரீ பட்டினத்தார் குடில் வண்ணார் பேட்டை தாளமுத்து நகர் தூத்துக்குடி - 628002 9944091910 , 8220981910 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். GPAY நம்பர் 9944091910 NAME : K MUTHUKRISHNAN BANK : AXIS BANK A/C NO : 920020052430287 BRANCH : TUTICORIN, IFSC CODE :UTIB0000105
வெள்ளி, மே 27, 2011
தாயுமானவர் பாடல்கள் 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக