திங்கள், மே 25, 2015

திருநாளைப் போவார் என்னும் நந்தனார் வரலாறு 





                      சோழ வள நாட்டில் உள்ள ஆதனூரில் பிறந்தவர் திருநாளைப் போவார் என்னும் நந்தனார் . தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் மெய்யான சிவபதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார் . பண்ணையில் கூலி வேலை மற்றும் கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என வேலை செய்து அதில் வரும் வருமாத்தில் சிவாலய பணிக்கு செலவுகள் செய்தார் இருந்தாலும் நந்தனாருக்கு பெரிய மனவருத்தம் இருந்தது . தான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் ஈசனை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியவில்லையே என்பது அது. அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அதனால் கோவில் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை மனதால் வணங்கி வருவார். எப்படியாவது ஆலயத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வேண்டி வந்தார். 
                   
                            சிவபெருமானை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், அதெல்லாம் புண்ணியம் செய்தவர்களுக்கு தான் கிடைக்கும். நமக்கு அந்த பாக்கியம் இல்லை. நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். நீ தேவையில்லாத நினைப்பினால் பிழைப்பை கெடுத்துக்கொள்ளதே.” என்று நந்தனாரின் சமுதாயத்தினரே சொன்னார்கள்.நந்தனார் எந்நேரமும் சிவ சிந்தனையிலே இருந்து அவர்களின் குல வழக்கத்தை சாடியதால் சில பொறாமைக்காரர்கள் நந்தனாரை பற்றி தவறாக அவரின் முதலாளியிடம் கூறி வந்தார்கள் . அதை கேட்டு முதலாளியும் நந்தனாரை கண்டித்தார் .இப்படி இருக்கின்ற போது தில்லை நாதனை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் எழுந்தது . 

                    தனது முதலாளியிடம் தனது ஆசையை கூறி விடுப்பும் , பண உதவியும் செய்யுமாறு கேட்டார். உன்னால் அந்த ஊருக்குள் கூட செல்ல முடியாது பிறகு எவ்வாறு சுவாமியை தரிசனம் செய்வாய் என்று அவரை உதாசீனப்படுத்தி விட்டு , சரி இந்த வேலையை முடித்து விட்டு போ என்பார் நந்தனாரும் நாளை கண்டிப்பாக செல்வேன் என்று அனைவரிடமும் கூறி ஆனந்தம் கொள்வார் முதலாளியும் தினமும் இதைப் போல எதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருந்தார் . நந்தனாரும் தினமும் நாளைப் போவேன் என்கிற வார்த்தையையே சொல்லிக் கொண்டு இருந்தார் .
                       இப்படி இருக்கும் பொது திருப்புன்கூர் சென்று இறைவனை தரித்து விட்டு வரலாம் என்று திருப்புன்கூர் சென்றார் . அங்கு வெளியே நின்று சுவாமியை தரிசிக்க முடியாமல் நந்தி மறித்துக் கொண்டு இருந்தது கண் கலங்கி அப்பனிடம் முறையீடு செய்தார்.  தன்னை நாடி வந்த தம் குழந்தையின் கண்ணீரைக் கண்டபின் அப்பன் சும்மா இருப்பானா , உடனே நந்தியை விலகுமாறு ஆணையிட்டார் . நந்தி விலகியது ஈசனை கண்ணாரக் கண்டு ஆனந்தித்தார் . அதைக் கண்ட பக்தர்களும் இவருடன் வந்தவர்களும் இவரின் பக்தியைக் கண்டும் ஈசனின் கருணையைக் கண்டும் திகைத்து நின்றார்கள் . இன்றளவும் நந்தி அங்கே விலகி தான் நிற்கிறது .   

                          சிதம்பரம் போக வேண்டும் என்கிற இவரின் தாகம் அதிகம் ஆகியது அப்பனை தரிசிக்காமல் அன்ன ஆகாரம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார் . தனது முதலாளியிடம் ஐயா அடியேன் சிதம்பரம் போக வேண்டும் என்று கேட்டார் , அவரும் நந்தனார் இப்படியே தினமும் கேட்பது நாம் ஒரு வேலை கொடுப்பதே வாடிக்கை ஆகிவிட்டது இந்த முறை நீ போகலாம் நந்தா என்றார் மகிழ்ச்சி பெரும் கடலில் தத்தளித்தார் நந்தனார் ஆனால் அந்த சந்தோசம் முதலாளியின் அடுத்த வார்த்தையில் காணாமல் போனது . தன்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தையும் பண்படுத்தி பயிர் செய்து அறுவடையை முடித்து விட்டு தாரளாமாக போ நானும் உதவி செய்கிறேன் என்றார் . இதைக் கேட்ட நந்தனார் மிகவும் மனம் நொந்தார் அப்பனே இது என்ன சோதனை உன்னை அடியேன் காணவே முடியாத என்று கதறினார் . 

             அந்த நிலத்தை பார்த்தார் இதை எப்போது உழுது பயிர் செய்து அறுவடை முடிப்பது என்று நிலத்திலே மயங்கி விழுந்தார் . அந்த நேரத்தில் தான் தில்லையாடும் பெம்மான் ஒரு அற்புதம் நிகழ்த்தினார் பயிரெல்லாம் விளைந்து அறுவடை முடிந்து இருந்தது இதைக் கண்விழித்துப் பார்த்த நந்தனார் பேரானந்தம் கொண்டார் இந்த செய்தி ஊர் முழுவதும் தெரிந்தது . முதலாளியும் கேள்விப் பட்டு ஓடி வந்து பார்த்தார் ஈசன் மேல் நந்தனாருக்கு உள்ள பக்தியைக் கண்டு நந்தனாரிடம் மன்னிப்பு கேட்டு உடனே சிதம்பரம் செல்க என்று கேட்டுக் கொண்டார் . தான் தில்லை அப்பனை தரிசிக்க போகிறோம் என்று ஆனந்தத்தில் சிதம்பரம் சென்றார் . ஆனால் தம் பிறப்பை எண்ணி வருந்தி சிதம்பரத்திற்கு வெளியே நின்றார் , பசுவை தேடி வந்த கன்று போல ஓடி வந்து வெளியே நிற்கும் தம் பக்தனைக் கண்டு ஈசனே தில்லை வாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி நம் பக்தன் திருநாளைப் போவார் என்னும் நந்தன் தம் பிறப்பை எண்ணி வருந்தி வெளியே நிற்கிறான் அவனை பூரண கும்ப மரியாதையோடு என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார் . மறுநாள் அனைவரும் திரண்டு பூரண கும்பத்தோடு நந்தனாரை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போது ஒரு அந்தணர் எதிர்ப்பு தெரிவித்தார் .

         

















               கனவில் ஈசன் சொன்னார் என்பதற்காக தாழ்ந்த குலத்தவரை கோவிலுக்குள் அனுமதிப்பதா , திருநாளைப் போவார் என்று இறைவனே அழைத்ததாக நீங்கள் சொல்லும் இவர் அக்னியில் இறங்கி திரும்ப வரட்டும் அப்புறம் பார்க்கலாம் . இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானர் , ஆனால் நந்தனார் மட்டும் எந்த பதட்டமும் இல்லாமல் எனக்காக எவ்வளவோ அற்புதங்கள் நிகழ்த்திய என் அப்பன் இதையும் செய்வார் . நீங்கள் தீ மூட்டுங்கள் என்றார் திருநாளை போவார். தீ மூட்டப் பட்டது அருகில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு அனலாய் எரிந்தது . இதையெல்லாம் பற்றி துளியும் கவலை இல்லாதவர் நந்தனார் ஈசனை நினைந்து அவன் நாமத்தை சொல்லிக் கொண்டே நெருப்பினுள் இறங்கினார் . பல அற்புதங்கள் நிகழ்த்தி நந்தனாரை இங்கு வரவழைத்த ஈசன் நந்தானாரின் பெருமைகளை உலகமே அறியும் படி பெரும் அதிசயம் நடத்தினார் நெருப்புக்குள் இறங்கிய நந்தனாரின் மேனியில் சிறு காயங்களின்றி பட்டாடையுடன் தெய்வீக தோற்றத்துடன் வெளியே வந்தார் இதைக்கண்டவுடன் அங்கு இருந்தவர் எல்லோரும் வாயடைத்து நின்றனர் . 
                          எத்தனையோ கஷ்டங்கள் பட்ட தம் பக்தனை , குழந்தையை இனியும் தன்னால் பிரிந்திருக்கலாகாது என்று எண்ணம் கொண்ட தில்லைக் கூத்தன் தன்னோடு நந்தனாரை கலக்க திருவருள் செய்தார் . கூடி இருந்தவர்கள் எல்லாம் மெய்சிலிர்த்து நின்றனர் . 
                   ஈசனை அடைய சாதியும் சமயமும் அவசியம் இல்லை அவர் மேல் தூய்மையான அன்பு இருந்தால் போதும் நாமும் அவனை அடையலாம் என்பதை நமக்கு உணர்த்தும் இந்த நந்தனார் சரித்திரம் . 


       திருநாளைப் போவார் என்னும் நந்தனார்க்கு அடியேன் 


                     சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

  
    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக